articles

img

இந்திய மோடியின் அமெரிக்க முகம் -ஜி.ராமகிருஷ்ணன்

கடந்த 9 ஆண்டுகால ஆட்சியின்போது ஒரு முறை கூட பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தாத பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் 23 அன்று வேறுவழியே இல்லாமல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இணைந்து பத்திரி கையாளர்களை சந்திக்க  வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த பத்திரிகையாளர் சந்திப்பு  உண்மையில் அவருக்கு பெரும் தர்மசங்கடமா கத்தான் இருந்தது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பையே கூட மிகவும் சிரமப்பட்டு, மோடியிடம் அனுமதி வாங்கித்தான் ஏற்பாடு செய்ய முடிந்ததாக அசோசியேடட் பிரஸ் தெரிவிக்கிறது. இந்த சந்திப்பின் போது அமெரிக்க நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மோடி, ஜனநாயகம் என்பது எமது நாடி நரம்புகளில் எல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது. எங்களது நாட்டில் எந்தவிதமான பாகுபாட்டிற்கும் துளியளவும் இடமில்லை என்று கூறினார். 

இந்த கேள்வியை எழுப்பியவர்,அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான வால்ஸ்ட்ரீட் ஜர்னலின் பத்திரி கையாளரான சப்ரினா சித்திக் என்ற பெண் ஆவார். இந்தியாவில் முஸ்லிம்கள் மற்றும் இதர சிறுபான்மை மக்களின் உரிமைகளை மேம்படுத்த உங்களது அர சாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை என்ன? என்பது தான் சப்ரினாவின்  கேள்வி.இந்த கேள்விக்குத்தான் மேற்கண்ட மழுப்பலான  பதிலை அளித்தார். 

வெள்ளை மாளிகை  கண்டனம்

ஆனால் பிரதமர் மோடியை பார்த்து இப்படிப் பட்ட கேள்வியை எழுப்பியதே குற்றம் என்று ஆர்எஸ்எஸ்-பாஜகவின் கும்பல்கள் சப்ரினா சித்திக்கை வசைபாடத் துவங்கின. ஆர்எஸ்எஸ்-பாஜகவின் சமூக ஊடக கூலிப்படைகள் அவருக்கு சமூகவலைத்தளங்களில் பகிரங்க மிரட்டல் விடுத்த னர். ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்தனர். இது அமெரிக்க அரசாங்கத்திற்கே எரிச்சலை ஏற்படுத்திவிட்டது. வெள்ளை மாளிகையின் சார்பிலும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் சார்பிலும், பெண் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக் மீதான இந்துத்துவா கும்பல்களின் சமூக வலைத் தள துன்புறுத்தல்களுக்கு கடும் கண்டனம் தெரி விக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்  சப்ரினாவுக்கு மிரட்டலாகவும் உருட்டலாகவும் பதிலளித்த மோடி மற்றும் கும்பல்களால் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் தனது நெருங்கிய நண்பர் என்று மோடியால் கூறப் பட்டவருமான பாரக் ஓபாமாவின் கடுமையான விமர்சனத்திற்கு பதிலளிக்க முடியவில்லை. மோடி யின் பயணத்தையொட்டி, சிஎன்என் தொலைக் காட்சிக்கு பேட்டியளித்த ஒபாமா, பெரும்பான்மையாக இந்துக்கள் வாழும் இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்களின் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி பைடன் பிரதமர் மோடியிடம் பேச வேண்டும் என குறிப்பிட்டார். “பிரதமர் மோடியை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், நீங்கள் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்கவில்லை என்றால், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இந்தியா பிரிந்துபோவதற்கான வலுவான சூழல் உள்ளது; அது இந்தியாவின் நலன்களுக்கு முற்றிலும் முரணானதாக மாறிவிடும் என்று கூறியிருப்பேன் “ எனவும் தெரிவித்தார். 

பம்மலும் பதுங்கலுமாய்  ஒரு பதில்

மோடி அரசாங்கத்தை அதிர்ச்சியடையச் செய்தது ஒபாமாவின் விமர்சனம். இந்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங்கும் நிர்மலா சீதாராம னும் அதற்கு பதில் சொல்லும் பொருட்டு பம்மியும் பதுங்கியும் ஏதோ சொல்லி வைத்தனர்.  ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது முஸ்லிம் நாடுகள் மீது  போர் தொடுத்தவர்தானே ;அவரது ஆட்சிக்காலத்தில்தான் சிரியா முதல் ஏமன் வரை முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகள் மீது குண்டு மழை பொழியப்பட்டது என்று நிர்மலா சீதாராமன், ஒபாமா குண்டுமழை பொழிந்தபோதும் தற்போது பைடன் அதே முஸ்லிம் நாடுகளில் ஒபாமாவின் வேலையை தொடர்கிற போதும் மோடி அரசு இவர்க ளது இளைய பங்காளியைப்போல  இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து, பொருமித்தள்ளினார். 

பிரத்யேக வரவேற்பும்  கடும் எதிர்ப்பும்

ஒரு பக்கம் பிரதமர் மோடிக்கு பைடன் நிர்வாகம் வழக்கத்திற்கு மாறான பிரத்யேக வரவேற்பு அளித்தாலும், மறுபக்கம் அதே அமெரிக்காவில் மோடியின் வருகைக்கு கடும் எதிர்ப்பு நிலவியது. மோடியின் வருகையைக் கண்டித்து நியூயார்க் டைம்ஸ்  நாளேடு தலையங்கம் எழுதியிருந்தது. அந்த தலை யங்கம் இப்படி கூறுகிறது : “மிஸ்டர் மோடி மற்றும் அவரது வலதுசாரி இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் இந்தியா, அந்த நாட்டின் அரசி யலமைப்புச்சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப் பட்டுள்ள குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் மற்றும் ஜனநாயக சுதந்திரங்கள் மிகக்கடுமையான முறையில் அரிக்கப்பட்டு வருவதை எதிர்கொண்டி ருக்கிறது. திருவாளர் மோடியும் அவர்களது கூட்டாளி களும் மத சிறுபான்மை மக்களுக்கு எதிராக அவர் களை குறிவைத்து தாக்குவது மற்றும் பாகுபாடு காட்டுவது ஆகிய கொள்கைகளை அமல்படுத்து வதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.இந்தியாவில் குறிப்பாக 20 கோடி அளவிற்கு உள்ள முஸ்லிம்கள் இந்த தாக்குதலுக்கு  உள்ளாகியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, மோடியும் அவரது கூட்டாளிகளும் அர சியல் எதிரிகளை தண்டிக்கவும் விமர்சனக் குரல்களை ஒழித்துக்கட்டவும் ஆட்சி அதிகாரத்தை  பிரயோகிக்கிறார்கள். அரசியல் எதிரிகள் மற்றும் எதிர்ப்புக்குரல் எழுப்புவோர் தொடர்ந்து கடும்  சோத னைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பிரதான செய்தி ஊடகங்கள் அருகி வருகின்றன.நீதிமன்றங்கள் மற்றும் இதர ஜனநாயக நிறுவனங்களின் சுயேச்சை தன்மை தொடர்ந்து அரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவற்றையெல்லாம் சட்டத்தை உறுதியாக அமல் படுத்துவதாக கூறி பாஜக செய்துகொண்டிருக்கிறது

கடந்த மார்ச் மாதம் திருவாளர் மோடியின் சொந்த மாநிலத்தில் உள்ள நீதிமன்றம் எதிர்க்கட்சித் தலை வரான ராகுல்காந்தி மீது, அவர் பிரதமரை அவ தூறாக பேசியதாகக்கூறி 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. ராகுல்காந்தி சிறையில் அடைக் கப்படவில்லை என்ற போதிலும், இந்த தீர்ப்பானது அவரை நாடாளுமன்றத்திலிருந்து நீக்குவதற்கு இட்டுச்சென்றது; அநேகமாக அவர் மீண்டும் போட்டி யிடாதவாறு அவர் தடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு கடந்த ஜனவரியில் மோடி அரசு,பிபிசி செய்தி நிறுவனம் தயாரித்து வெளியிட்ட ஆவணப்படத்தை எவரும் பார்க்க முடியாதவாறு அவசரகால சட்டவிதி களை பயன்படுத்தி முடக்கியது. அந்த பிபிசி ஆவணப்படமானது, 20 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் மோடி முதலமைச்சராக இருந்த போது நடந்த மிகக்கொடூரமான பிளவுவாத வன்முறை வெறியாட்டத்தில் திருவாளர் மோடிக்கு முக்கியப்பங்கு உண்டு என்பதை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தும் விதத்தில் ஆய்வு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

நியூயார்க் டைம்ஸ்-இன் எச்சரிக்கை

இவற்றையெல்லாம் மனதிற்கொண்டு நியூயார்க் டைம்ஸ் ஏட்டின் இந்த ஆசிரியர் குழு, ‘  மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்களின்  எதிர்ப்புக்குரலை தடுக்கும்பொருட்டு அவசரநிலை சட்டங்களை பிரயோகிப்பார்களேயானால், ஜனநாயகம் என்பது புதைகுழியில்தான் தள்ளப்படும்’ என்று எச்சரிக்க விரும்புகிறது”.  மிகக்கடுமையான வார்த்தைகளால் மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளது நியூயார்க் டைம்ஸ் ஏடு. 

மணிப்பூர் தோல்வியும்  பொது சிவில் சட்ட திசை திருப்பலும்

இந்தியாவில் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் மட்டுமல்ல, ஒரு மாநிலமே பற்றியெரி யும்போதிலும் கூட அதைப்பற்றி, அமெரிக்கா செல்வ தற்கு முன்பும் பின்பும் சரி சற்றும் கவலைப் படவில்லை பிரதமர் மோடி.50 நாட்களாக நீடிக்கும் கலவரத்தை கட்டுப்படுத்துங்கள் என்று மணிப்பூரைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள், பிரதமரை சந்தித்து நேரில் முறையீடு செய்ய 10 நாட்க ளாக முயற்சித்தும் மன்றாடியும் அனுமதி கிடைக்க வில்லை.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 355 ஆவது பிரிவு, “ஒவ்வொரு மாநிலத்தையும் வெளிநாட்டு ஆக்கி ரமிப்பிலிருந்தும் உள்நாட்டில் எழும் இடர்களிலி ருந்தும் பாதுகாக்க வேண்டியது ஒன்றிய அரசாங்கத் தின் கடமை ஆகும்” என்று உத்தரவாதம் அளிக்கப் பட்டுள்ளது. அரசியலமைப்புச்சட்டத்தின் இந்த  உத்தர வாதத்தை அமலாக்கி மணிப்பூர் கலவரத்திற்கு முடிவுகட்டுவதில் மோடி அரசு அப்பட்டமாக தோல்வியடைந்துள்ளது.  இத்தகைய முக்கியமான கடமையை ஆற்றுவ தற்குப் பதிலாக,மோடி  திடீரென பொது சிவில் சட்டத்தை அமலாக்க வேண்டியது அவசியம் என பேசத் துவங்கியுள்ளார். இதைப்பற்றி பேசுவதற்கு முன்பு எதிர்க்கட்சிகளுடன் அவர் ஆலோசிக்க வில்லை. சம்பந்தப்பட்ட அனைத்துத்தரப்பு மக்கள் பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தவில்லை. மாறாக சிறுபான்மை மக்களை தனிமைப்படுத்தி, முற்றிலும் தேர்தல் ஆதாயத்தை மனதில் கொண்டு இந்த பேச்சை துவக்கியிருக்கிறார்.

அமெரிக்க கூட்டாளியாக நெருக்கமும் அம்பானி, அதானிக்கான வர்த்தகமும்

இவை ஒருபுறமிருக்க, மோடியின் அமெரிக்கப் பயணமும் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பும் இந்தியாவிற்கு கிடைத்த பெருமை என்று ஆர்எஸ்எஸ்-பாஜக ஊதுகுழல்கள் வழக்கம் போல துதிபாடி வருகின்றன. ஆனால் உண்மை யில் மோடியின் அமெரிக்கப்பயணம் முற்றிலும் விஷம மானது. ஆசியப்பிராந்தியத்தில், அமெரிக்காவின் நலன்களுக்கு சவால்விடும் விதத்தில் பெரும் வளர்ச்சியை எட்டியுள்ள சீனாவையும் அதற்கு ஆதர வாகவும் நட்பாகவும் செயல்படும் ரஷ்யாவையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பைடன் நிர்வாகம், தனது சூழ்ச்சிகரமான நோக்கத்திற்கு கூட்டாளியாக இந்தியாவை பயன்படுத்திக் கொள்ள திட்டமிடுகிறது . அத்தகைய சூழ்ச்சிக்கு இந்தியாவை இரையாக்குகிறது மோடி அரசு. பைடனுடன் மோடி நடத்திய பேச்சுவார்த்தையின் சாராம்சம் அது தான். இந்தோ-ஆசிய பிராந்தியத்தில் சீனாவை சுற்றி வளைக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ‘ குவாட்’ ராணுவ கூட்டணியில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவும் கைகோர்த்துள்ளது. இந்த கூட்டணியை வலுப்படுத்துவதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு சேவகம் செய்யும் இளைய கூட்டாளியாக இந்தியாவை இன்னும் வலுவான முறையில் அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் வேலையைத்தான் மோடியின் இந்த பயணம் செய்திருக்கிறது. இதன் ஒருபகுதியாக ஜிஇ-எப் 414 ரக போர்விமான இன்ஜின்களை கூட்டாக உற்பத்தி  செய்வது என்பது உள்பட முக்கிய ராணுவ உடன்பாடு களை இந்தப் பயணத்தில் மேற்கொண்டதன் மூலம் அமெரிக்காவின் பிரதான ராணுவ கூட்டாளியாக இந்தியாவை மாற்றியிருக்கிறார் பிரதமர் மோடி. 

அமெரிக்காவின் மேலாதிக்கத்தை வலுப்படுத்து வதற்கு உதவியுள்ளதோடு, இந்த வாய்ப்பை  பயன்படுத்தி இந்தியாவில் தனது கூட்டுக்களவாணி களாக உள்ள அம்பானி,அதானி போன்ற பெரும் முதலாளிகளையும் அழைத்துச் சென்று வர்த்தக மற்றும் லாப வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் மோடி. இதற்கான விரிவான திட்டத்தை 2022 ஆம் ஆண்டே அமெரிக்கா தயாரித்து விட்டது என்பதை அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டக னின் அறிக்கை ஒன்று உறுதி செய்கிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட வரவேற்பும் நாடாளுமன்றத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட மரியாதையும், கடந்த சில ஆண்டுகளாக சீனாவைத் தனிமைப்படுத்துவதற்காக அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் உரிய பலனை தரவில்லை என்பதை உணர்ந்தும், இந்தி யாவை முழுமையாக இந்த வேலையில் இறக்க வேண்டும் என்ற திட்டத்தோடும் நடந்தவைதான்.

அதனால்தான், பைடன்-மோடி சந்திப்புக்கு பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இந்த சந்திப்பின் மைய நோக்கமே, இந்திய பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா மிக முக்கிய கூட்டாளியாக செயல்படும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே, இந்தோ-ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் நீண்ட கால ராணுவ சூழ்ச்சித் திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒரு செயல்திட்ட பயணம்தான் மோடியின் அமெரிக்க பயணம்.