articles

img

‘உழைக்கத் தயார்! எனக்குரிய வேலை எங்கே?’ - பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

விலைவாசி உயர்வு - வேலையின்மை

மோடி அரசின் நாசகர கொள்கைகளை 
அம்பலப்படுத்தி செப்டம்பர் 1 - 7
சிபிஐ(எம்) பிரச்சார இயக்கம்
- சிறப்புக் கட்டுரை -

‘‘இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’’ என்றார் காந்தி. ஆனால், இன்றைய நிலையில் கிராமங்கள் வாழவில்லை என்று உறுதியாக சொல்ல முடியும்.  ‘‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்      வாய்நாடி வாய்ப்பச் செயல்’’ - என்பது குறள். ஆனால் இன்றைய ஒன்றிய  ஆட்சியாளர்கள் இந்த குறளுக்கொப்ப நடந்து கொள்பவர்கள் அல்ல என்பதே வெள்ளிடைமலை.

வெறும் 27 ரூபாய் வருமானம்

இந்தியாவில் விவசாயத்தைச் சார்ந்துள்ள வர்களின் எண்ணிக்கை 2019-2020ல் 45.65 சதவீதம் ஆகும். தற்போது அது மேலும் குறைந்திருக்கும். ஆண்டுதோறும், விவசாயத்தை விட்டு விவசாயிகள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் விவசாயத்தின் மூலம் வருமானம் ஒரு நாளைக்கு வெறும் 27 ரூபாய் அல்லது ஒரு மாதத்திற்கு 816.05 ரூபாய் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் எப்படி கிராமங்கள் உயிர்வாழும்? விவசாயிகள் எப்படி விவசாயத்தில் நீடிப்பார்கள்? ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவளக் குறியீடு  2021-22 அறிக்கையில், உலகில் உள்ள 191 நாடு களில் இந்தியா 132வது இடத்தில் உள்ளது என்று  குறிப்பிட்டுள்ளது. பசிக்கொடுமை உள்ள 121 நாடுகளில் இந்தியா 107வது இடத்தில் உள்ளது. 74 சதவீத  இந்திய மக்களுக்கு சத்தான உணவு கிடைக்க வில்லை என்று ஐ.நா அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த விபரங்களிலிருந்து, இந்தியாவில் உள்ள பெரும்பகுதியான மக்களின் வாழ்க்கை எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை நம்மால் உணர முடியும். இதற்கு காரணம் வேலையின்மை, போதுமான வருமானமின்மை என்பது தான்.

வேலைக்காக இடம்பெயரும் 10 கோடிப் பேர்

2022 டிசம்பரில் நாட்டின் ஒட்டுமொத்த வேலை யின்மை 8.30 சதவீதம். இது கிராமப்புறங்களில் 7.44 சதவீதமாக இருக்கிறது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மைய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதன் காரணமாக வேலைதேடி இடம் பெயர்ந்து செல்வது நாடு முழுவதும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. நகரங்களிலிருந்து வேறு நகரங்களுக்கும், கிராமங்களிலிருந்து வேறு மாநிலங்களில் உள்ள கிராமங்களுக்கும் சுமார் 10 கோடிப் பேர் இவ்வாறு இடம் பெயர்ந்து வேலை தேடிச் செல்கின்றனர்.

விவசாயத் தொழிலாளர் தற்கொலை

விவசாயத்தில் நவீனமயம், புதிய தொழில்நுட்பம்,  நவீனமான இயந்திரங்களை பயன்படுத்துவது, விவசாய பரப்பளவு குறைவது போன்ற காரணங் களால் விவசாயத்துறையில் வேலைவாய்ப்பு என்பது குறைந்து வருகிறது. சராசரியாக ஆண்டுக்கு 50 முதல் 55 நாட்கள் தான் விவசாயத்தில் வேலை கிடைக்கிறது. வேலையின்மையினாலும், போதுமான வருமானம் இல்லாததாலும் விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலை அதிகரித்துக் கொண்டுள்ளது. ஆனால், இது விவசாயிகளின் தற்கொலை அளவிற்கு நாட்டின் கவனத்தை பெறவில்லை என்பது மற்றொரு துயரம். 

வேலை உறுதித் திட்டத்திற்கு ஆபத்து

இந்த நிலையில் தான், இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்த முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் குடும்பத்திற்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை உத்தரவாதம் செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நடைமுறைக்கு வந்தது. நாடு முழுவதும் விரிவாக்கப்பட்ட இந்த திட்டத்தை நாசமாக்கும் வகையில் தான் ஆட்சிக்கு வந்த நாள் முதல் ஒன்றிய பாஜக அரசின் அணுகுமுறையாக இருக்கிறது. நிதி  ஒதுக்கீட்டை குறைப்பது, புதிது புதிதாக நிபந்தனை கள் விதிப்பது என்று, இத்திட்டத்தில் வேலை அட்டை பெற்றவர்களில் சுமார் 5 கோடிப் பேர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்டனர். தற்போது குறிப்பிட்ட காலத்திற்குள் ஆதாருடன் இணைக்கப்படாதவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற மிரட்டலை பாஜக அரசு விடுத்துள்ளது. வறுமை ஒழிப்பிலும், இடம் பெயர்தலை குறைப்பதிலும் முக்கியமான பங்கை இத்திட்டம் வகித்தது என்பதில் சந்தேகமில்லை. இத்திட்ட தொழிலாளர்களில் பெண்கள் 56 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. 2021-22ல் சராசரியாக 49 நாட்களும், 2022-23ல் 42 நாட்களும் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது.  2021-22ல் 98000 கோடி, 2022-23ல் 73,000 கோடி, 2023-24ல் 60,000 கோடி. இதனால் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை தர முடியாதது மட்டுமல்லாமல் ஆண்டுக்கு 100 நாள் என்பதும் சாத்தியமில்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. இத்திட்டப் பயனாளிகளில் பெரும்பகுதியானவர்கள் பெண்கள்,  பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குயினர் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இத்திட்டத் திற்காக ஒதுக்கப்பட்ட பணம் கிராமப் பொருளா தாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமப்புற மக்களை பொருளதார பாதுகாப்பற்ற நிலையிலிருந்து ஓரளவு அவர்களை விடுவித்திருக்கிறது. 

எனவே, வேலை என்பதை சட்டப்படி உரிமையாக்கியுள்ள இந்த திட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் மேம்படுத்தப்பட்டு, சட்டப்படி 100 நாள் வேலை வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். மேலும் வேலை நாட்களை அதிகப்படுத்த வேண்டும். சட்டக்கூலி முழுமையாக கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக திட்டப் பயனாளிகள் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டும். 

பொருளாதார பயங்கரவாதம்

மோடி ஆட்சியின் பொருளாதார பயங்கரவாத தாக்குதல் என்று சொல்லத்தக்க அளவிற்கு நவீன தாராளமயக் கொள்கையை ஒன்றிய பாஜக அரசு மிகத் தீவிரமாக அமல்படுத்தி வருவதை நாடறியும், இதனால் நிரந்தரமான, சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை என்பது கனவாகப் போய்க் கொண்டி ருக்கிறது. வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி என்பது தான் நவீன, தாராளமயக் கொள்கையின் சாதனை. நாட்டிலுள்ள மொத்த தொழிலாளர்களில் 93 சதவீதம் பேர் முறைசாரா தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு எந்தவிதமான சட்டப்பாது காப்பும், வேலை உத்தரவாதமும் இல்லை. இப்பிரி வினரில் கணிசமானவர்கள் கிராமப்புற உழைப்பாளி  மக்களாவர். கட்டுமானப் பணி, பெரிய கடைகளில்  வேலைக்கு செல்வது, சுமைப்பணி, கல்குவாரிகள்,  செங்கல்சூளைகள், அரிசி ஆலைகளில், உணவக ங்களில் என மாற்று வேலைக்கு சென்று கடும் உழைப்பை செலுத்துகின்றனர். முதலாளிகளின் லாபத்தை உத்தரவாதப்படுத்தும் வகையில் சட்டங் களையும், திட்டங்களையும் உருவாக்கும் அரசு  உழைப்பாளர்களின் நலனைப் பற்றி கிஞ்சித்தும் கவ லைப்படாமல் அவர்களை மேலும் சுரண்டுவதற்கான சட்டங்களை இயற்றி உழைக்கும் மக்களுக்கு எதி ரான அரசு என்பதை நிலை நாட்டியிருக்கிறது பாஜக!

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற முறையில் அரசு திட்டங்களை வகுப்பதில்லை.  குறிப்பாக, கிராமப்புறங்களில் வேளாண்மை துறை மூலம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க  முடியும். வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவது, அதன் மூலம் ஏற்றுமதி உள்ளிட்ட வாய்ப்புகளை உருவாக்க முடியும்.  வேளாண் சார்ந்த தொழில்களை துவக்குவது, தரிசு நிலங்களை விவசாயத்திற்கு லாயக்கானதாக மாற்று வது, அதற்கேற்ப பாசனத்திட்டங்களை செயல்படுத்து வது, இன்றைய விலைவாசி உயர்வு, பண வீக்கத்திகேற்ப கூலியை உயர்த்துவது போன்ற நட வடிக்கை மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கவும், வருமானத்தை பெருக்கவும் முடியும். ஆனால், ஆளும் பாஜக அரசுக்கு அத்தகைய கொள்கை இல்லை  என்பதுதான் பிரச்சனை. கார்ப்பரேட் முதலாளி களுக்காக ஆட்சி நடத்தும் இவர்களின் கொள்கை மாறாது. எனவே, இவர்களை ஆட்சியிலிருந்து மாற்று வது தான் ஒரே வழி!

கண்டு கொள்ளாமல் கடந்து செல்லாதீர்!

செவ்விந்தியர் என்று அழைக்கப்படும் அமெரிக்க பழங்குடிகள் வெள்ளையர்களுக்கு விடுத்த எச்சரிக்கை:

‘‘கடைசி மரமும் வெட்டப்பட்ட பின்னர் தான் கடைசி ஆறும் நஞ்சுகளால் நிரப்பப்பட்ட         பின்னர் தான் கடைசி மீனும் பிடிக்கப்பட்ட பின்னர் தான் பணத்தை சாப்பிட முடியாது என்பதை  நீங்கள் உணர்வீர்கள்’’

பஞ்சம், பட்டினி, வறுமை, வாழ்வாதாரம் பறி போதல், தேசத்தின் சொத்துக்களை பெரும் முத லாளிகளுக்கு தாரை வார்த்தல் போன்ற இப்போதைய ஆட்சியாளர்களின் தேசவிரோத, மக்கள் விரோத செயல்களில் கண்டுகொள்ளாமல் கடந்து சொல்லும் மக்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும். நாட்டின் பெரும்பகுதியான மக்கள் வேலையின்மை, வறுமை, பசி என வாழவும் பெருமுதலாளிகள் மேலும்  மேலும் சொத்துக்களை குவித்து ஏற்றத்தாழ்வு எல்லை யற்றதாக போய்க் கொண்டிருக்கிறது. ‘உழைக்கத் தயார்! எனக்குரிய வேலை எங்கே?’ என்ற முழக்கம் தான் நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக் கிறது. அந்த குரலுக்கு வடிவம் கொடுக்கும் வகை யில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செப்ட ம்பர்- 7 மறியல் போருக்கு அழைப்புவிடுத்திருக்கிறது. எனவே, பாஜக ஆட்சியில் ஏற்பட்டுள்ள ஆபத்தை உணர்ந்து உழைக்கும் மக்கள் அனைவரும் இப்போராட்டத்தில் பங்கேற்பது அவசியம். இதில் பங்கேற்பதன் மூலம், ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டுவோம். புதியதோர் உலகம் அமைக்க புறப்படுவோம்!