பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினரை வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 1989, வன்கொடுமைகளில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பது, பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பது, எதிர்காலத்தில் வன்கொடுமைகள் நிகழாமல் தடுப்பது என்று அனைத்துக் கோணங்களில் இருந்தும் சிந்திக்கப்பட்டு சிறப்பாக உருவாக்கப்பட்ட சட்டமாகவே அமைந்திருக்கிறது.
வன்கொடுமைகளும் தண்டனைகளும்
வன்கொடுமைகளின் வகைகளை சட்டம் பட்டியலிடுகிறது. சட்டத்தில் குறிப்பிடப்படாத வடிவங்களையும் இது கருத்தில் கொள்கிறது. கடுமையான தண்டனைகளை விதிக்கிறது. வழக்கை புலன் விசாரணை செய்யும் அதிகாரியாக துணை காவல் கண்காணிப்பாளர் ஒருவரை, ஒவ்வொரு வன்கொடுமை வழக்கிற்கும் காவல்துறை கண்காணிப்பாளர் எழுத்து மூலமான உத்தரவின் பேரில் நியமிக்க வேண்டும். அந்த அதிகாரி திறமை மிக்கவராக மட்டுமல்லாமல் சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் புரிந்து, நீதி உணர்வுடன் செயல்படுபவராக இருக்க வேண்டும். புலன் விசாரணையை 60 நாட்களுக்குள் முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவரது கடமைகளை சட்டம் வரையறுத்துள்ளது. சட்டப்படி நடக்கத் தவறிய அதிகாரியை தண்டிக்க வகை செய்யும் பிரிவும் இதில் இருக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் (anticipatory bail) கிடையாது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர், தான் விரும்பும் வழக்குரைஞரை நியமிக்கலாம். வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும்.
பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்தல்
வன்கொடுமை நடந்த உடனே பாதிக்கப்பட்ட பட்டியலினத்தவர்கள் தான் ஊரை விட்டு ஓடி ஒளியும் நிலை ஏற்படுகிறது. ஆனால் இந்த சட்டப்படி வன்கொடுமை செய்பவர்கள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்களை வெளியேற்றம்(Externment) செய்ய சட்டம் வழி செய்கிறது. நடைமுறையில் பட்டியலினத்தவருக்காக போராடும் அமைப்புகளின் தலைவர்கள்தான் வன்கொடுமை நடந்த இடத்திற்குள் நுழைய விடாமல் வெளியேற்றப்படுவார்கள். இதற்கு மாறாக சமீபத்தில் தென்காசியில் பட்டியலின குழந்தைகளுக்கு தின்பண்டங்களை விற்பனை செய்ய மறுத்த கடைக்காரர் இந்த பிரிவை பயன்படுத்தி அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அதே போல வன்கொடுமை செய்யும் பிரிவினர் அல்லது கிராமத்தினருக்கு கூட்டு அபராதமும் விதிக்க முடியும். வன்கொடுமை செய்பவர்களிடம் இருக்கும் ஆயுதங்களை பறிமுதல் செய்வது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆயுதம் வைத்துக் கொள்ளவும் அரசு அனுமதி வழங்கலாம். ஆனால், நடைமுறையில் இதை கனவில் கூட நாம் நினைத்துப் பார்க்க முடியாது.
குற்றத்தை நிரூபிக்கும் கடமை
இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு என்பது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகவே உள்ளது. 100 குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பலாம்; ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் அமைந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் தன்னைப் பாதுகாக்க துரும்பைக் கூட அசைக்க வேண்டியதில்லை. அரசுத் தரப்பு வழக்கில் ஒரு சிறிய ஓட்டையைக் கண்டுபிடித்தால் கூட போதும், சந்தேகத்தின் பலனைப் பெற்று விடுதலை அடைந்து விடலாம். ஆனால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி குற்றத்தை அரசுத் தரப்பு நிரூபிப்பதற்கு பதிலாக குற்றம் சாட்டப்பட்டவர், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். இது இச்சட்டத்தின் ஒரு தனித்துவமான அம்சம்.
பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள்
நமது சட்ட அமைப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்படுவதில்லை. புகார் கொடுத்தவுடன் அவருக்கும் வழக்குக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு விடும். தன் வழக்கில் என்ன நடக்கிறது என்பது அவருக்கே தெரியாது. நீதிமன்றத்தில் சாட்சி சொல்வதோடு அவருடைய பங்கு நிறைவு பெறும். தீர்ப்பைக் கூட அவருக்கு தெரிவிக்க வேண்டிய கடமை சட்டத்திற்கு இல்லை. ஆனால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இதற்கென்று தனிப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கின் ஒவ்வொரு நிலையிலும் என்ன நடக்கிறது என்ற தகவல் பாதிக்கப்பட்டவருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அவருடைய கருத்தையும் கேட்க வேண்டும். வழக்கிற்கு தேவையான ஆவணத்தையோ சாட்சியையோ சம்மன் செய்வதற்கு நேரடியாக நீதிபதியிடம் அவர் மனு செய்யலாம். குற்றம் சாட்டப்பட்டவரின் மிரட்டல்களில் இருந்து அவரைப் பாதுகாப்பது அரசின் கடமை.
சட்டம் மற்றும் நீதி நிர்வாகத்தில் நிலவும் சாதிய கண்ணோட்டத்திற்கு சில உதாரணங்கள்கீழ வெண்மணி வழக்கில் நீதிமன்றம் குற்றவாளியை சட்டரீதியான காரணத்தின் அடிப்படையில் விடுதலை செய்யவில்லை. குற்றவாளிகள் நில பிரபுக்கள்; பெரும் பணக்காரர்கள்; அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இத்தனை பேரை தீ வைத்து கொளுத்தி இருப்பார்கள் என்று நம்புவது கடினமாக இருக்கிறது என்ற அடிப்படையில் தான் விடுதலை செய்தது. மேலவளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் பட்டப் பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்ட நீதிபதிகள் சம்பவத்தின் சாதியப் பின்னணியை அங்கீ கரிக்க மறுத்தார்கள். ஏனென்றால் இது “தேர்தல் விரோதமாம்.” திண்ணியத்தில் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் தொகுப்பு வீடு ஒதுக்க லஞ்சம் வாங்கியதை வெளிப் படுத்தியதற்காக மனித மலத்தை தின்ன வைத்த கொடூர சம்பவத்தில், நிர்வாகம் மற்றும் நீதித்துறையின் உணர்வுப் பூர்வமற்ற அணுகுமுறை குற்றவாளிகளை தப்பிக்க வைத்தது. இந்த சம்பவத்திற்கு காரணம் “முன்விரோ தமாம்”. சாதி ஆணவப் படுகொலைக்கு கணவரை பலி கொடுத்த சூரக்கோட்டை அபிராமி வழக்கில் குற்றவாளியை கொலைக் குற்றத்திற்காக தண்டித்த நீதிமன்றம் அதற்கு சாதிய பின்னணி இல்லை என்றும் அது ஒரு “காதல் பிரச்சனை” என்றும் கூறியது. மகாராஷ்டிராவில் கயர்லாஞ்சியில் பட்டியலினத்தைச் சார்ந்த போத்மாங்கே என்பவரின் மனைவி, மகள் மற்றும் மகன்கள் ஆதிக்க சாதியினரால் கொடூரமான சித்திரவதைக்கும் பாலியல் வன்முறைக்கும் உட்படுத்தப் பட்டு, அவயவங்கள் வெட்டப்பட்டு, ஆற்றில் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் இந்திய தண்டனைச் சட்டப்படி மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். நீதிமன்றம் இதற்கு சாதியப் பின்னணி இல்லை என்றும் இது ஒரு தனிப்பட்ட “பழிவாங்கும் நடவடிக்கை” என்றும் கூறியது. களத்தில் எதிர் கொள்ளும் சவால்கள் |
வாச்சாத்தி - உத்தபுரம்- மார்க்சிஸ்டுகளின் மாபெரும் தலையீடுபட்டியலின மக்களுக்காக பிற அமைப்புகள் போராடுவதற்கும் மார்க்சிஸ்டுகள் போராடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர வைத்தது உத்தபுரம் மற்றும் வாச்சாத்தி நிகழ்வுகள். வாச்சாத்தியில் பழங்குடி மக்கள் மீதான கும்பல் வன்கொடுமை நடந்ததை கண்டறிந்து, புகார் கொடுத்து, அரசு இயந்திரம் முழுமையும் குற்றவாளிக்கு துணை போன நிலையில், பல கட்ட போராட்டங்களை நடத்தி, அந்த மக்களுக்கு நீதி வாங்கித் தந்தவர்கள் மார்க்சிஸ்டுகள். உத்தபுரத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் கள ஆய்வில் வெளிவந்த தீண்டாமை சுவர் தகர்க்கப்பட்டதும், தலித் மக்கள் மீது காவல்துறை காட்டு மிராண்டித்தனமான தாக்குதலை ஏவி விட்டபோது நீதிமன்ற வழக்கு தொடுத்து அவர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தர உறுதுணையாக இருந்ததும் மார்க்சிஸ்டுகள். இரண்டு சம்பவங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட வெகுஜன அமைப்பு கள், இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள், சிபிஎம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பி னர்கள், வழக்குரைஞர்கள் என பல தரப்பினர் அணிவகுத்து, பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களோடு கைகோர்த்து சற்றும் சளைக்காமல் பல காலம் நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் போராடியதன் விளைவா கத்தான் நீதி கிடைத்தது. தமிழகத்தில் பட்டியலின மக்கள் வன்கொடுமைக்கு ஆளாகும் போதெல்லாம் சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாக வும் நீதிக்கான போராட்டத்தை சமரசம் செய்யாமல் நடத்தும் மார்க்சிஸ்டுகளின் பங்களிப்பை வரலாறு மறக்காது. |
பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள்
ஒவ்வொரு வன்கொடுமைக்கும் தண்டனை மட்டுமல்ல, பொருளாதார ரீதியான நிவாரணத்தையும் சட்டம் வழங்குகிறது. இதைத்தவிர மருத்துவ உதவி, சட்ட உதவி, வேலை வாய்ப்புகள் ஆகியவை வழங்கப்பட வேண்டும். இதற்கான ஒரு திட்டத்தை அரசு வகுக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இதைத் தவிர வழக்கு புலன் விசாரணையின் போதும் நீதிமன்ற விசாரணையின் போதும் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் வந்து செல்வதற்கு பயணப்படி, தினப்படி, ஊதிய இழப்புக்கான தொகை ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும்.
வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள்
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சர்வே நடத்தி வன்கொடுமை நடப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ள பகுதிகளை பட்டியலிட வேண்டும். அந்தப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை அரசு சாரா மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் அரசு நிதி உதவியுடன் மேற்கொள்ள வேண்டும். இந்த சட்டத்தை செயல்படுத்துவதற்கான சிறப்பு அதிகாரிகள் மற்றும் குழுக்கள் ஒவ்வொரு மட்டத்திலும் அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வன்கொடுமை சம்பவத்திலும் ஒவ்வொரு கட்டத்திலும் கீழிருந்து மேல் வரை அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு, பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பின்னர் அதற்கு தகுந்த மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
காவல் மற்றும் நிர்வாகத் துறையில் பட்டியலினத்தவர்
காவல் மற்றும் நிர்வாகத் துறைகளில் நிலவும் சாதியக் கண்ணோட்டம் சட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒரு தடைக்கல்லாக இருப்பதை கருத்தில் கொண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஒரு தொலைநோக்குப் பார்வையோடு பிரிவு 13-ஐ இணைத்துள்ளது. இதன்படி பட்டியலினத்தைச் சார்ந்த அரசு ஊழியர்கள், காவல் மற்றும் நிர்வாகத் துறைகளில் போதுமான அளவில் ஒவ்வொரு மட்டத்திலும் இடம் பெற வேண்டும். ஆனால் இதற்கு நேர் விரோதமாகத்தான் நடைமுறை இருக்கிறது. உதாரணமாக, வன்கொடுமை நடக்க சாத்தியக்கூறுகள் உள்ள ஒரு மாவட்டத்தில் காவல்துறையின் ஐஎஸ் பிரிவில் பலகாலமாக பட்டியல் இனத்தவர் இடம் பெறுவதில்லை. இந்த ஐ எஸ் பிரிவு மாவட்ட காவல்துறை உயரதிகாரிக்கு (பெரும்பாலும் வடமாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு) கள நிலவரம் குறித்த தகவல்களைத் தரும் ஒரு முக்கியப் பிரிவு. ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர் இந்த பிரிவுக்கு நியமிக்கப்பட்ட போது ஒரே வாரத்தில் சுவற்றில் அடித்த பந்தாக திருப்பி அனுப்பப்பட்டார்.
சிறப்பான சட்டம் செயலிழக்க காரணங்கள்
இந்தச் சட்டம் முறையாக செயல்படுத்தப்படாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அரசு, காவல் மற்றும் நீதித்துறையில் நிலவும் சாதிய பாரபட்ச கண்ணோட்டம்; அதிகாரிகளின் உணர்வுப்பூர்வமற்ற அணுகுமுறை; முறையற்ற / தவறான புலன் விசாரணை; திறமையற்ற முறையில் அலட்சியத்துடன் வழக்கு நடத்தும் தன்மை; நீதிமன்ற காலதாமதம்; பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க தவறுதல் என அடுக்கிக் கொண்டே போகலாம். மேலும் ஆளுகின்ற ஆட்சியாளர்கள், தேர்தலில் கிடைக்கும் வாக்குகளுக்காக, சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற அரசியல் உறுதி (political will) இன்றி இருப்பதும் ஒரு பிரதான காரணம். அரசு எந்திரம் வன்கொடுமை நடப்பதையே மறுப்பது என்பது நடைமுறையாக இருக்கிறது. வன்கொடுமை நடக்கும் போது சட்டத்தை பின்பற்றாமல், ஆர்டிஓ தலைமையில் சமாதானக் குழு அமைத்து பாதிக்கப்பட்டவர்களின் உரிமைக் குரல்களை நெரித்து, மயான அமைதியை நிலைநாட்டுவது தான் பல இடங்களில் நடக்கிறது.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர் புகார் கொடுக்கும் போதே ஆதிக்க சாதியினர் அவர் மீது எதிர்ப்பு புகார் (counter complaint) கொடுப்பதும், காவல் துறை இரண்டு தரப்பினர் மீது வழக்கு போடும் முறையும் நீடிக்கிறது. பாதிக்கப்பட்டவர் தன் மீது போடப்பட்ட வழக்கில் கைதாகும் சூழ்நிலை ஏற்படும்போது வன்கொடுமைக்கான புகாரை வாபஸ் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். பாதிக்கப்பட்ட மக்களால் இந்தச் சட்டத்தை பிரயோகம் செய்ய முடியாத நிலையில், சட்டம் துஷ்பிரயோகம் செய்யப் படுகிறது என்ற பிரச்சாரம் அடிப்படையற்றது, உள்நோக்கம் கொண்டது.