articles

“ஆகாயச் சிவப்பில் ஐக்கியம் ஆனார்” - * நவகவி

செந்தமிழ் நாட்டின்
சிவப்பு வைகறைகளுக்கு
கூடுதல் அடர்த்தியை தினமும்
கொடுத்து வந்த போராளி....இன்று
அந்திச் சிவப்போடு 
ஐக்கியம் ஆகிவிட்டார்.

செந்தமிழ் பூமியில்
சிங்கங்கள் இல்லாத குறையை தன்
சிம்ம கர்ஜனை மூலம்
தோழர் என் எஸ் பேச்சின்
தொனி நிவர்த்தி செய்தது.

வயோதிகச் சாயல் அற்ற அந்த
வாலிபக் குரலை 
சங்கரய்யாவின் சரீரத்தில் தேடாதீர்!

உழைப்பாளர் பணி புரியும்
உலைக்களக் கொதிப்பிலும்,
விவசாயி வியர்வையின்
வெப்பச் சூட்டிலும்,
சூல் கொண்டிருந்தது அவரின்
சொல்!

செங்கொடி பறக்கும்
இரும்புக் கம்பத்தை தொடும் போதெல்லாம்
தோழர் சங்கரய்யாவின்
உருக்கு இதயத்தின் உறுதியையும்
உயர்ந்தோங்கும் அவர் லட்சியத்தையும்
தொடுகிற உணர்வு தோன்றும் நமக்கு !

சாதாரண மனிதரின் உருவம் போல் தான்
சரித்திர மனிதரின் உருவமும் உள்ளது!
ஆண்டவன் படச் சிரசில் உள்ளது போல்
அவர்களின் சிரசைச் சுற்றி ஒளிவட்டம் 
இல்லை தான்....எனினும் அதை
சிரசை சுற்றித் தேடாதீர்....அவர்களின்
சிந்தனையில் செயலில் தேடுங்கள்!

தோழர் என் எஸ் சின் ஒளிவட்டத்தை
தூய வாழ்வுத் தடத்தில் அவர் பதித்த 
சுவடுகளில் தேடுங்கள் !