articles

img

செங்கொடியை உயர்த்துவோம் சித்தாந்தப் போர் தொடுப்போம்! - டி.கே.ரங்கராஜன்

இந்தியாவில் நாம் நூறாவது மே தினத்தை கொண்டாடுகிறோம். கடந்த நூற்றாண்டின் இதே நாளில் தான், அதாவது 1923 ஆண்டின்  மே முதல் நாளில் ஹிந்துஸ்தான் லேபர் கிசான் கட்சி யின் சார்பில் முதன் முதலாக தமிழக மண்ணில் சென்னை மாநகரில் செங்கொடியை ஏற்றி வைத்தார் சிந்தனை சிற்பி சிங்காரவேலர்.  சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எதிரில் உள்ள கடற்கரையிலும் மெரீனா கடற்கரையிலும் இரண்டு இடங்களில் மே தின கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. செங்கொடி யேற்றிய பின்னர் கூடியிருந்த தொழிலாளர்களிடையே சிங்காரவேலர் ஆற்றிய உரை மிக முக்கியமான தாகும். தங்கள் உழைப்பால் அனைத்தையும் உரு வாக்கும் தொழிலாளர்கள் கொண்டாடும் மேதினம் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை அக்கூட்டத்தில் முன்வைத்த தோடு, முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் நலன்களை பாதுகாப்பதே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி களின்  விருப்பமாக இருப்பதால், தொழிலாளர்கள் தங்கள் வர்க்கத்தின் நலன்களை பாதுகாப்பதற்காக அரசியலாக ஒன்றுபட வேண்டும் எனும் உணர்ச்சி மிகு அறைகூவலையும் விடுத்தார். 

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து முழுமை யான அரசியல் விடுதலை எனும் முழக்கத்தோடும், பொருளாதார சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி எனும் கோரிக்கையோடும் இந்திய தொழிலாளி வர்க்கம் தனது போராட்டங்களை முன்னெடுத்த நாட்கள் அவை.  நாகை மற்றும் திருச்சி பொன்மலையில் ரயில்வே தொழிலாளர்களின் போராட்டம், சென்னை, கோவை மதுரை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பஞ்சாலைத் தொழிலாளர்களின் எழுச்சி, கிராமப்புறங்களில் நடைபெற்ற ஜமீன் ஒழிப்பு, இனாம்  ஒழிப்பு, குத்தகைதாரர் உரிமை போராட்டங்கள், விவசாயத் தொழிலாளர்களின் கூலி உயர்வு போராட்டங்கள், சென்னையில் டிராம்வே போராட்டம் என மாநிலம் முழுவதும் வலுவான வர்க்கப் போராட்டங் கள் அன்றைய காலகட்டத்தில் வெடித்து எழுந்தன.  வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, சிங்காரவேலர், சர்க்கரைசெட்டியார், முகுந்த்லால் சர்க்கார், ஆர்.கே.பிள்ளை, டி.கே.நாயுடு, பி. நடேசமுதலியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தொழிலாளர்கள் அமைப்புகளுக்கு கடந்த நூற்றாண்டில் தலைமை தாங்கியதோடு, தொழிலாளர்களின் போராட்டங் களுக்கு உரமூட்டியவர்களாகவும் இருந்தனர். 

இத்தகைய வலுவான போராட்டங்களின் விளைவாக, கடந்த நூறாண்டுகளில் இந்தியத் தொழி லாளி வர்க்கம், குறிப்பாக தமிழகத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகள் பலவற்றை பாதுகாத்துக் கொண்டதையும், வர்க்க உணர்வைப் பெறுவதிலும் பெருமளவு முன்னேறி வந்துள்ளனர். நவீன தொழில்களிலும் தொழிற்சாலைகளிலும் இன்று தொழிலாளர்கள் தொழிற்சங்க அமைப்புகளுக்கு பின்னால் அணிதிரள்வதையும், அடக்குமுறைகளை எதிர்கொண்டு உரிமைகளுக்காக போராடுவதையும் காணும் போது தொழிலாளர்கள், சுரண்டலுக்கு எதிராகப் போராடுகிற ஒரு வர்க்கமாக வலுப்பெறு வதையும் காண முடிகிறது. ஒரு மேம்பட்ட வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர்களால் தான், அவர்களின் வலுவான வர்க்கப் போராட்டத்தால்தான் இந்த சுரண்டல் சமூக அமைப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும் என்பதை உணர்த்துகிற நாளாக, உழைப்பவர்களின் திருநாளாக இந்த மே தினக் கொண்டாட்டங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டி யுள்ளது.  தொழிலாளர்களின் வர்க்க உணர்வை மேம் படுத்துவதும், அதன் மூலம் வர்க்கப்போராட்டங்களை முன்னெடுப்பதுமே தொழிலாளர் வர்க்கத்தின் முதன்மையான கடமைகள் என்பதைத்தான் மே தினத்தின் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. 

வர்க்க உணர்வை வலுப்படுத்துவோம்

சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை தலைமை யேற்று நடத்தவிருக்கிற தொழிலாளி வர்க்கத்திற்கு வர்க்க உணர்வென்பது மிக முக்கியமானதாகும். இத்தகைய வர்க்க உணர்வை தொழிலாளர்கள் எவ்வாறு பெறுகிறார்கள்? மார்க்சின் கூற்றுப்படி, தொழிலாளர்கள் முதலில் முதலாளித்துவத்திற்கு எதிரான பொதுவான குறைகளைப் பகிர்ந்து கொள்வதில் விழிப்புணர்வு அடைகிறார்கள்.  பிறகு  அதன் தொடர்ச்சியாக உற்பத்தியில் ஈடுபடுகிற போதும், சுரண்டல் முறையைப் புரிந்து கொள்வதன் மூலமாகவுமே தங்களை ஒரு பாட்டாளி வர்க்கமாகவும், வர்க்க உணர்வு கொண்டவர்களாகவும் உணர் கிறார்கள். ஆகவே வர்க்க உணர்வு என்பது  கூட்டுப்  போராட்டங்களிலிருந்து பிறந்த ஒன்றாகும் என்கிறார் மார்க்ஸ். எனவே முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராக முகிழ்த்து எழுகிற கூட்டுப் போராட்டங்களின் ஊடாகவே தொழிலாளி வர்க்கம் மேம்பட்டதொரு வர்க்க உணர்வைப் பெற்று வர்க்கமாக மாறமுடியும். 

நவீன உற்பத்தி முறை பெருகியிருக்கிற இக்காலத்தில் அதிகரித்து வரும் சுரண்டலையும், அதன் நுட்பமான வடிவங்களையும் தொழிலாளர் வர்க்கம் முழுமையாக உட்கிரகித்துக் கொள்வ தோடு, விரிவான போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமாக வர்க்க உணர்வை மேலும் வலுப்படுத்த முடியும். இன்றைய நவீன உற்பத்தி முறையை பின்நவீன முதலாளித்துவம் எனவும், கணினி கால முதலாளித்துவம் எனவும் பலர் வியாக்யானம் செய்வதோடு, செயற்கை நுண்ணறிவு, இயந்திரங்கள் மூலம் உற்பத்தி ஆகியவை அதிகரித்துள்ளதால் மார்க்ஸ் அன்று சொன்னபடி உபரி உழைப்பு என்பதோ  நேரடியான உழைப்புச் சுரண்டல் என்பதோ தற்போது  இல்லை என வாதிடத் துவங்கியுள்ளனர். ஆனால்  அதில் உண்மையில்லை. ஏனெனில் நவீன உற்பத்தி முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில்தான் உண்மையில் பாட்டாளிகளின் எண்ணிக்கை மிக அதிகளவில் உயர்ந்திருக்கிறது என்பதோடு, பல்வேறு வடிவங்களிலான சுரண்டலும் அதிகரித்திருக்கிறது. எனவே சுரண்டலுக்குள்ளாகும் அனைத்துப் பகுதி யினரையும் அணிதிரட்டி வலுவான கூட்டுப் போராட்டங்களை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்தினரிடையேயான வர்க்க உணர்வையும் நம்மால் மேம்படுத்திட முடியும். 

இருமுனைகளில் நிகழும் வர்க்கப் போராட்டம்

வர்க்கப் போராட்டம் என்றால் என்ன..? முத லாளித்துவ சமூகத்தில், இன்றைய நவீன உற்பத்தி  முறையில் இரு பெரும் வர்க்கங்கள் தங்கள் நலனை  பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சிகளோடு எதிரும் புதிருமாக அணிதிரள்வதில் இருந்து தான்  வர்க்கப் போராட்டம் எனும் கோட்பாடு உருவாகிறது. எதிரெதிர் முனைகளில் அணிவகுத்துள்ள முத லாளித்துவ வர்க்கமும், தொழிலாளி வர்க்கமும் பரஸ்பரம் வர்க்கப் போராட்டங்களில் பங்கேற்கின் றன. பாட்டாளி வர்க்கம் மட்டுமே நடத்துகிற போராட்டங்களை தான் புரட்சிகர நடவடிக்கைகளாக, வர்க்கப் போராட்டமாக கருதும் நிலை உள்ளது. ஆனால் சொத்துடைமை வர்க்கம் தனது நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு போராட்டத்தை நிரந்தரமாக நடத்திக் கொண்டேயிருப்பதாக மார்க்ஸ் சுட்டிக்காட்டுகிறார். அது ஒற்றை வடிவத்திலானதாக இருக்காது. மாறாக பல்வேறு நுட்பமான வடிவங்களில் வெளிப்படும் என்பதை தொழிலாளி வர்க்கம் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக கலாச்சார, பண்பாட்டுத் தளங்களிலும் அல்லது வேலையற்றோர் பட்டாளத்தைப் பெருக்குவதன் மூலமாகவும், தொழிலாளர்களிடையே பதிலி, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பிரிவினரை உருவாக்குவதிலும் இன்னவும் பலவாறாகவும் முதலாளித்துவம் தனது வர்க்க நலன்களை பாது காப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதை நாம்  காண்கிறோம். முதலாளித்துவத்தின் இத்தகைய  அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்கொள் வதற்கான பன்முக முயற்சிகளையும் உள்ளடக்கிய தாக நமது வர்க்கப் போராட்டங்கள் அமைய வேண்டும். எனவே வர்க்கப் போராட்டம் என்பதை ஒரு விரிவான கண்ணோட்டத்திலிருந்து தொழிலாளர்கள் உணர்வது அவசியமானதாகிறது. குறிப்பாக தொழி லாளி வர்க்கம் போராடுவது எந்தவொரு ஒரு தனிப்பட்ட முதலாளியையும் எதிர்த்து அல்ல, மாறாக சுரண்ட லையும் அதன் மூலம் கிடைக்கும் உபரியையும் அபகரித்துக் கொள்ளத் துடிக்கும் முதலாளித்துவ வர்க்கத்தையே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய நவீன முதலாளித்துவ வர்க்கம்  தன்னுடைய லாபக்குவிப்பிற்காக நவ தாராளமயம், தனியார்மயம் என்பதை முன்வைக்கிற போது அவற்றையும் எதிர்த்து வலுவாகப் போராட வேண்டியது தொழிலாளி வர்க்கத்தின் கடமைகளில் ஒன்றாக ஆகிறது.    

மார்க்சின் அறைகூவல்

சமூக மாற்றத்தில் தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை முதன் முதலாக உணர்ந்து உரைத்தவர் மாமேதை மார்க்ஸ் ஆவார். நவீன பாட்டாளி வர்க்கத்தின் சாயலுடன் கூடிய வர்க்கங்கள்  எதுவும் உருவாகாத காலத்திலேயே, அதாவது ஆசிய, ஆப்பிரிக்கக் கண்டத்தில் நவீன தொழில்கள் எதுவும் அறிமுகமாகாத காலத்தில், ரஷ்யா பண்ணை யடிமை முறையில் மூழ்கிக் கிடந்த காலத்தில் தான்  மார்க்ஸ் தொழிலாளி வர்க்கத்தை ஒர் உலகளாவிய வர்க்கமாக முதன்மைப் படுத்தினார். நவீன உற்பத்தியில் சுரண்டலுக்கு உள்ளாவதும், உற்பத்திக்  களத்தில் கூட்டாக செயல்படுவதுமான பொதுவான தன்மை தொழிலாளி வர்க்கத்திற்கு உண்டு என்ப தாலும், தனிப்பட்ட உற்பத்தி என எதையும் சொந்தம்  கொண்டாட முடியாததாலும், சுரண்டல் முறையி லிருந்து தங்களையும் இந்த சமூக அமைப்பையும் விடுவிக்க வேண்டிய புரட்சிகரக் கடமை அவர்களுக்கு உள்ளதாலும்தான் தொழிலாளர்களை ஒரு புரட்சிகரமான வர்க்கமாகக் கண்டார் மாமேதை மார்க்ஸ். 

தொழிலாளி வர்க்கத்தால் மட்டுமே இந்தச் சுரண்டல் அமைப்பிற்கு எதிராக வலுவாகப் போராட முடியும். சுரண்டலிலிருந்து மொத்த சமூகத்தையும் விடுவிப்பதன் மூலமே தொழிலாளி வர்க்கம் தன்னையும் விடுவித்துக் கொள்ள இயலும். ஆகவே தான்

“உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்..
நாம் இழப்பதற்கு எதுவுமில்லை, நம்மை
பூட்டியிருக்கும் அடிமைச் சங்கிலியைத் தவிர..
ஆனால், அடைவதற்கோர் பொன்னுலகம் உண்டு..” 

 எனும் அறைகூவலையும் முன்வைத்தார். மார்க்ஸ் முன்வைத்த இத்தகைய வரையறையையும், அறைகூவலையும் மேலெழுந்ததொரு முழக்கமாக பார்க்காமல், அதற்குப் பின்னால் ஒரு தத்துவார்த்தப் பின்புலமும் உள்ளதென்பதையும் தொழிலாளர் களாகிய நாம் உணர வேண்டும்.  நம்மைச் சுற்றிலும் அன்றாடம் நிகழ்கிற மாற்றங்களை உள்வாங்குவ தோடு, அதற்கேற்ற பொருத்தமான முழக்கங்களை முன்வைப்பதும், வலுவான போராட்டங்களுக்குத் திட்டமிடுவதுமே இந்த மே தினம் நமக்குச் சுட்டிக் காட்டும் கடமைகளாகும்.