articles

img

வெண்மணித் தீயில் வெந்தது நீதியும்தான்! - டி.கே.ரங்கராஜன், சிபிஐ(எம்) மூத்த தலைவர்

சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் எண்ணற்ற அடக்குமுறைகளைச் சந்தித்திருக்கிறார்கள். இந்தியா முழுவதும் நடந்துள்ள அந்த அடக்குமுறைகளின் கொடுமைகள் மிகப் பெரியதொரு தனி வரலாறு ஆகும். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் 1968 டிசம்பர் 25அன்று கீழத் தஞ்சையில் வெண்மணி கிராமத்தில் நடந்த கோரப் படுகொலையை இன்று நினைத்தாலும் நெஞ்சத்தை உலுக்குகிறது. நிலப்பிரபுத்துவம் எவ்வளவு கொடூரமானது என்பதற்கான உண்மை யான சித்திரத்தை வெண்மணிப் படுகொலை நம் கண்முன்னால் நிறுத்துகிறது. இந்தக் கொடூரம் நடந்த போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 8ஆவது அகில இந்திய மாநாடு கொச்சியில் நடந்து கொண்டிருந்தது. மாநிலம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி தலை வர்கள் மாநாட்டிற்குச் சென்றிருந்தார்கள். இங்கு யாரும் இல்லை. ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் பெரும்பாலான தலைவர்களும் மாநாட்டுக்குச் சென்றிருந்தார்கள். தலைவர்கள் யாரும் இல்லாத நேரத்தை நிலப்பிரபுக்கள் தேர்வு செய்தார்கள். விவசாயத் தொழி லாளர்கள் கேட்ட கூலி உயர்வைத் தருவதற்கு அவர்கள் தயாராக  இல்லை. செங்கொடி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு அடங்காமல் இருக்கிறார்கள் என்பது நிலப்பிரபுக்களின் உச்சக் கட்ட ஆத்திரமாக இருந்தது.  

கொடூரத்தின்  அடிப்படை

ஆண்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவது, பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்குவது போன்ற கொடுமைகள் நடந்த காலம் அது. இதை எதிர்த்துப் போராடிய ஒரே இயக்கம் செங்கொடி இயக்கமே. இந்த இயக்கத் தின் வர்க்கப் போராட்டத்தை நிலப்பிரபுக்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அத்தகைய மகத்தான போராட்ட இயக்கத்தின் உறுப்பி னர்களாக இருந்தவர்கள்தான் வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள். செங்கொடியை இறக்குமாறு நிலப்பிரபுக்கள் விடுத்த மிரட்டலை அவர்கள் ஏற்கவில்லை. கூலி  உயர்வு கோரிக்கையை மிராசுதார்கள் ஏற்கவில்லை. செங்கொடியை இறக்கவோ, கூலி உயர்வு கோரிக்கையை கைவிடவோ விவசாயத் தொழி லாளர்கள் தயாராக இல்லை. இதுதான் அடிப்படையான மோதல்.  இந்த மோதலின் உச்சகட்டமாகத்தான் நிலப்பிரபுவான இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு, தனது கையாட்களோடு இத்தொழி லாளர்கள் மீது கொடிய தாக்குதலை நடத்தினார்; அவர்களிடமிருந்து உயிர்தப்பும் பொருட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 44 பேர் ராமை யாவின் குடிசைக்குள் தஞ்சமடைந்தனர். அந்தக் குடிசையை கோபால கிருஷ்ண நாயுடுவும் அவரது அடியாட்களும் தீ வைத்து எரித்து 44 உயிர்களையும் தீக்கிரையாக்கி படுகொலை செய்தனர். உள்ளத்தை உலுக்கும் பயங்கரம் அது.

வெண்மணிப் படுகொலை குறித்து ஆய்வு செய்த மானுடவியல் ஆய்வாளர் கேத்தரின் கோப் இப்படி விவரிக்கிறார்:

“டிசம்பர் 25 இரவு வெண்மணி தலித் மக்கள் குடியிருப்புக்குள் நிலப் பிரபுக்கள் தங்களது கார்களில் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து 300க்கும் மேற்பட்டோர் டிராக்டர்களில் அரிவாள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தனர். விவசாயத் தொழிலாளர்களை ஒடுக்கு வதற்காகவே அமைக்கப்பட்டிருந்த கிசான் போலீஸ் படையின் வேன் களில் கோபால கிருஷ்ண நாயுடுவின் அடியாட்கள் வந்தனர். கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தி யும் கோரத் தாண்டவமாடினர். உயிருக்குப் பயந்து ஒரு சிறு குடிசைக்குள் பெண்கள், குழந்தைகள் ஒளிந்தனர். கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரையும் எரித்துக் கொன்றனர்”.

கண்டுகொள்ளாத முதலாளித்துவ கட்சிகள்

இந்தக் கொடிய சம்பவம் குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்த பின்னர் பெரும் அதிர்ச்சி பரவியது. உலகம் முழுவதும் பல பத்திரிகைகளில் இது எழுதப்பட்டது. 1986இல் தொழிற்சங்க மாநாடு ஒன்றுக்காக நான் செக்கோஸ்லோவேகியா நாட்டிற்கு சென்றி ருந்தேன். என்னுடன் ஏஐடியுசி தலைவர் ஆர்.டி.கோவிந்தராஜன் அவர்க ளும் வந்திருந்தார். அங்குள்ள மாணவர்களிடம் உரையாடிக் கொண்டி ருந்த போது அவர்கள் வெண்மணியில் நடந்த படுகொலை தொடர்பாக அதிர்ச்சியோடு கேட்டார்கள். அதைப் பற்றி விளக்குமாறு கேட்டார்கள். அப்போது வெண்மணி நிகழ்வைப் பற்றி தோழர் ஆர்.டி. கோவிந்தராஜன் உள்ளத்தை உருக்கும் வகையில் ஒரு பாடலாகவே பாடினார். அந்தப் பாடலைக் கேட்டு அந்த மாணவர்கள் உள்ளம் குமுறி அழுதார்கள். வெண்மணி வீர காவியத்தை கூலி உயர்வுக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம் என்ற முறையில் பல ஏடுகள் பதிவு செய்தன.

இதை சாதாரண ஒரு மோதல் சம்பவமாக ஜனநாயக எண்ணம் கொண்ட மக்கள் பார்க்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் முதலாளித்துவக் கட்சிகள் எதுவும் இதை கண்டுகொள்ளவில்லை. படுகொலை அரங்கேறிய பின்பு, தகவல் அறிந்து கொச்சி மாநாட்டி லிருந்து தஞ்சை மண்ணுக்கு தலைவர்கள் ஓடோடி வந்தனர். உள்ளம் கொதித்தனர். தமிழகமெங்கும் கண்டன இயக்கம் கொந்த ளிப்புடன் நடந்தது. தோழர் பி.ராமமூர்த்தி அவர்கள் அன்றைய முதல்வர் அண்ணாவை நேரில் சந்தித்து முறையிட்டார். அவரும் இப்படிப்பட்ட ஒரு சூழல் அங்கு ஏற்பட்டிருப்பது குறித்து தனது வருத்தத்தையும் கவலையையும் தெரிவித்தார். அதற்குப் பிறகுதான், விவசாயத் தொழி லாளர்களின் கூலி உயர்வுக்காக கணபதியாபிள்ளை கமிஷன் அமைக்கப்பட்டது.இந்த வழக்கு காவல்துறையிலும் ஒழுங்காகப் பதிவு செய்யப்பட வில்லை. நீதிமன்றங்களும் இந்த வழக்கை முறையாகக் கையாள வில்லை. பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நீதி நிற்கவில்லை. 

நீதித்துறை குறித்து  இ.எம்.எஸ். என்ன சொன்னார்?

1970 ஜூலை 31 அன்று ஒரு முக்கியமான வழக்கில் உச்சநீதி மன்றம், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்களுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து தண்டனை வழங்கியது. இந்த வழக்கின் விவாதம் மிக முக்கிய மானது. அப்போது தோழர் இ.எம்.எஸ். கேரளாவின் முதலமைச்சர். அவர் நீதிமன்றத்தை விமர்சித்துவிட்டார் என்றும் நீதிமன்ற அவமதிப்பு செய்துவிட்டார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் டி.நாராயணன் நம்பியார் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.  வேறொரு வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை,  செய்தியாளர் கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் இ.எம்.எஸ். விமர்சித்தி ருந்ததை எதிர்த்தே நாராயணன் நம்பியார் இந்த வழக்கை தொடுத் திருந்தார். இஎம்எஸ், அந்த செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு வெளியிட்ட செய்தியை ஆதாரமாக இணைத்திருந்தார். அந்தச் செய்தி இப்படிக் கூறுகிறது:

“மார்க்சும் ஏங்கெல்சும் - நீதித்துறை என்பது ஒடுக்குமுறையின் ஒரு கருவி என்றே கருதினார்கள். இன்றும் அது அப்படித்தான் இருக்கிறது. அரசு என்ற கட்டமைப்பு மாறாமல் இதில் எந்த மாற்றமும் ஏற்படாது; இதே நிலைதான் தொடரும் என்று முதலமைச்சர் இஎம்எஸ் நம்பூதிரி பாட் தனது செய்தியாளர் சந்திப்பில் கூறினார். மேலும், நீதிபதிகள் வர்க்க வெறுப்பு, வர்க்க நலன்கள் மற்றும் வர்க்கப் பெருமிதங்கள் ஆகியவற்றால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்; வழிநடத்தப்படு கிறார்கள்; வழக்கு விசாரணைகளில் பகட்டு உடை அணிந்த பானை வயிறு கொண்ட பணக்காரர்களுக்கும் கந்தல் ஆடை அணிந்த எழுத்தறிவில்லாத ஏழைக் குடியானவர்களுக்கும் இடையிலான சாட்சியங்கள் ஆராயப்படுகிற போது, நீதிபதிகள் செல்வாக்குப் படைத்தவர்களின் பக்கம் தன்னியல்பாகவே நிற்கிறார்கள் என்றும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக முதலமைச்சர் கூறுகையில், நீதிபதிகளை தேர்தல் மூலம் தேர்வு செய்வதே பொருத்தமான ஏற்படாக இருக்கும்; ஆனால் அடிப்படையான அரசுக் கட்டமைப்பு மாற்றப்படாத வரை இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது என்றும் கூறினார்”.  -இந்தச் செய்தியை முன்னிறுத்தி வழக்கு தொடுத்த நாராயணன் நம்பியார், அரசியல் அமைப்புச் சட்டம் தொடர்பாகவும், முதல்வராக பதவியேற்ற போது தோழர் இஎம்எஸ் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வது தொடர்பாகவும் கூறிய கருத்துக்களையும் முன் வைத்து, நீதித்துறை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை தோழர் இ.எம்.எஸ். அவமதித்துவிட்டார் என்று வழக்கில் குறிப்பிட்டார். இஎம்எஸ் மட்டுமல்ல, ஏ.கே.கோபாலன், இம்பிச்சிபாவா ஆகிய கம்யூனிஸ்ட் தலைவர்களும் கூட நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக விமர்சித்து வருகிறார்கள் என்றும் அந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் முதல மைச்சர் இஎம்எஸ்-சுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் ஒரு மாதம் சாதாரண சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து இஎம்எஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதி இதயத்துல்லா தலைமையிலான அமர்வு விசாரித் தது. மேல் முறையீட்டிலும், நீதிமன்றத்தை, நீதிபதிகளை இஎம்எஸ் விமர்சித்தது தவறுஎன்றே அந்த அமர்வு கூறியது. ஆனால் ஒரு ரூபாய் மட்டும் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

ஆளும் வர்க்கத்தின் கருவி

இந்த வழக்கின் சாராம்சம் என்னவென்றால், தோழர் இஎம்எஸ் சொன்னது போலவே நீதித்துறை என்பதும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதிதான் என்பதே. நீதிமன்றம் குறித்தோ நீதிபதிகள் குறித்தோ விமர்சிப்பதை இன்றைய முதலாளித்துவ நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப் பட்டுள்ள பேச்சுரிமை என்ற பகுதி, எதை வேண்டுமானாலும் சொல்ல லாம் என்று பொருள்படாது என வியாக்கியானம் செய்கிறார்கள். வெண்மணி உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்ற விவ சாயிகள் மற்றும் தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள் தொடர்பு டைய வழக்குகளில் நீதிமன்றங்களின் அணுகுமுறை ஆளும் வர்க்கத் தின் கருவி என்ற நிலையிலிருந்தே வெளிப்பட்டது என்பதே உண்மை. வெண்மணி வழக்கில் நடந்தது இதை நமக்கு இன்னும் தெளிவாக உணர்த்துகிறது. வெண்மணிக்குப் பிறகும் நடக்கக்கூடிய ஏராளமான தொழிலாளர் போராட்டங்களிலும் நீதி கிடைப்பதில்லை. நீதிமன் றங்கள் எப்போதுமே வசதி படைத்தவர்களுக்காக, நிலப்பிரபுக் களுக்காக, முதலீட்டாளர்களுக்காகவே இருக்கிறது என்பதே இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் அனுபவம்.

குற்றத்தைச் சமப்படுத்திய அரசு அதிகாரம்

44 தலித் விவசாயத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட வழக்கில் இரிஞ்சூர் கோபால கிருஷ்ண நாயுடு மற்றும் 22 பேர் குற்றவாளி களாக சேர்க்கப்பட்டனர். அதேபோன்று விவசாயத் தொழிலாளர்க ளுடனான மோதலில் உயிரிழந்த கோபாலகிருஷ்ண நாயுடுவின் அடியாள் இருக்கை பக்கிரிசாமி கொலைவழக்கில் தோழர் தேவூர் கோபால் மற்றும் 22 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். 44 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கிலும், ஒருவர் உயிரிழந்த வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை யை சமப்படுத்தியதன் மூலம் குற்றத்தின் தன்மையையும் சமப்படுத்த அரசு அதிகாரம் முயன்றது. இந்த வழக்கை விசாரித்த நாகை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி முதல் வழக்கில் தோழர் தேவூர் கோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித் தார். இன்னொரு தோழருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை மற்றும் 6 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

நிலவுடமையாளர்க்கு விடுதலை;விவசாயத் தொழிலாளர்க்கு ஜாமீன் கூட மறுப்பு

44 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கோபாலகிருஷ்ண நாயுடு வுக்கும் அவரை சார்ந்த 7 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை  விதிக்கப்பட்டது. 44 பேரை உயிரோடு எரித்துக் கொன்ற மாபாவிக ளுக்கு குறைந்தபட்சம் ஆயுள் தண்டனை கூட விதிக்கப்படவில்லை.  இரு தரப்பினரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கு விசாரணையின்போது கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்டோருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் முதல் வழக்கில் தண்டனை பெற்ற எட்டு விவசாயத் தொழிலாளர்க ளுக்கும் கடைசி வரை ஜாமீன் மறுக்கப்பட்டது. விசாரணையின்போதும் அவர்கள் சிறையிலேயே இருந்தனர். விவசாயத் தொழிலாளர்களுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உயர்நீதிமன்றம் அப்படியே உறுதி செய்தது. ஆனால் 44 பேர் கொல்லப்பட்ட வழக்கில் கோபாலகிருஷ்ண நாயுடு உட்பட தண்டிக்கப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ‘மதிப்புமிக்க நிலவுடமையாளர்கள் நேரடியாகச் சென்று இத்தகைய கொலையை செய்தி ருக்கமாட்டார்கள்’ என்று அந்த நீதிபதிகள் நற்சான்றிதழ் வழங்கினர்.  கடைசி வரை நீதிமன்றங்களில், வெண்மணிப் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. நாகப்பட்டினம் செசன்ஸ் நீதிமன்றம் முதல் உயர்நீதி மன்றம் வரை இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆளும் வர்க்கத்தின் கருவியாக சிந்தித்தார்களே தவிர, கந்தல் உடை அணிந்த ஏழைக் குடியானவர்களின் துயரத்திற்கு நீதி வழங்க முன்வரவில்லை.

அடித்தளத்தைத் தகர்க்காமல்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தற்போதைய முதலாளித்துவ நிலப் பிரபுத்துவ அரசியல் சமூக பொருளாதாரக் கட்டமைப்பில் ஆளும் வர்க்க அடக்குமுறைக் கருவிகளிடம் நீதி கிடைத்துவிடும் என்று நம்பி இறைஞ்சி நிற்பது இல்லை. இன்றைக்குள்ள அரசியலமைப்புச் சட்ட வரை யறைக்கு உட்பட்டு தனது வர்க்கத்தின் நலனைக் காக்க நீதிமன்றத்தி லும் போராடுகிறது; அதேவேளையில் நாளைய விடியலுக்காக வீதிமன் றங்களிலும் களம் காண்கிறது. தோழர் இ.எம்.எஸ். குறிப்பிட்டது போல அடிப்படை அரசியல் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பை மாற்றாமல்; முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையின் அடித்த ளத்தைத் தகர்க்காமல் பாட்டாளி வர்க்கத்திற்கு நீதி கிடைக்காது.  இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் நீதியை நிலைநாட்ட, வெண் மணித் தியாகிகளின் நினைவு நாளில், அவர்கள் எந்தச் செங்கொடியை உயர்த்திப்பிடிப்பதற்காக இன்னுயிரை ஈந்தார்களோ, அந்தச் செங்கொடியை மேலும் உயர்த்திப் பிடித்து, முதலாளித்துவ நிலப் பிரபுத்துவ அடித்தளத்தை தகர்க்கும் உறுதியோடு இன்று 54 ஆம் ஆண்டு நினைவு நாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். தஞ்சை மண்ணில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைபெற்ற நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் அடையாளமாக தஞ்சை பெரிய கோவில் நிற்கிறது என்றால், ஒரு நூறு ஆண்டாக வெடித்தெழுந்த பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அடையாளமாக அதே கீழத் தஞ்சை மண்ணில் கம்பீரமாக எழுந்து நிற்கும் சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு எழுப்பிய ‘வெண்மணி நினைவாலயம்’, வரப்போகும் இந்தியப் புரட்சிக்கு இடிமுழக்க பாடல் இசைத்து பாடியவாறு, அந்த மக்களை வாரி அணைத்துக் கொள்கிறது.