articles

img

இந்துத்துவாவாதிகள் இந்துக்களின் எதிரிகள்! - பேரா.அருணன்

“சனாதனத்தை ஒழிப்போம்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினாலும் பேசினார், பாஜகவின் உண்மை முகம் வெளிப்பட்டுப் போனது. நாட்டின் பிரதமரே “சனாதனி களே ஒன்றுபடுவீர்” என்று அறைகூவல் விடுக்கிறார்!” இந்தியாவின் தேசிய மதம் சனாதன தர்மம்” என்கிறார் உத்தரப்  பிரதேசத்தின் சாமியார் முதல்வர். இவ்வளவு நாட்களாக “இந்துக்களே ஒன்றுபடுவீர்” என்று சொல்லிவந்தது ஏமாற்றுவித்தை, உண்மை யில் இவர்கள் சனாதனிகளை ஒன்றுபடுத்துகிறார்கள் என்பது அம்பலப்பட்டுப் போனது. அப்படியே இவர்கள் கூறும் “இந்து ராஷ்டிரம்” சனாதன ராஷ்டிரமாகவே இருக்கும் என்று நாம் சொல்லி வந்ததும் மெய்யா கிப் போனது. 

வேதங்களில் இல்லை

கேட்டால் “சனாதன தர்மம் என்பது இந்து  மதத்தைக் குறிக்கும், அதை ஒழிக்கப் பார்க்கிறீர்கள்” என்கிறார்கள். அது உண்மைதானா என்பதை அறிய சனாதனத்தின் வேரைத் தேடிப் போக வேண்டி யுள்ளது. தேவ்தத் பட்நாயக் எனும் ஆய்வாளர் செய்துள்ள டுவிட்டர் பதிவு: “நித்தியம் எனும் பொருள் தரும் சனாதனம் எனும் சொல் வேதங்களில் இல்லை. பகவத் கீதைதான் இதைப் பயன்படுத்தத் துவங்கியது. ஆன்மா பற்றிய நித்திய அறிவை அது குறித்தது.” (தி இண்டியன் எக்ஸ்பிரஸ் 6-9-2023) ஆக நித்தியமானது எனப்படும் சனாதனம் மகா நித்தியமானது எனப்படும் வேதங்களிலேயே இல்லை! அதற்கும் ஒரு தொடக்கம் இருந்திருக்கிறது. தொடக்கம் உள்ள அனைத்திற்கும் முடிவும் இருக்கும். கீதை அதை எந்த அர்த்தத்தில் சொன் னது? ஒருவித அறிவு என்று சொன்னதே தவிர, மதம் என்று சொல்லவில்லை.

கீதையில் பயன்படுத்தப்பட்டசொல்

கீதையின் அத்தியாயம் 15 சுலோகம் 7 “ஜீவ-பூதா சனாதன” என்கிறது. அதாவது  உடலில் உள்ள ஆத்மாக்கள் நித்தியமானவை என்று சொல்கிறது. ஒரு கருத்தை சொல்ல சனாதனம் எனும் சொல் பயன் படுத்தப்பட்டுள்ளதே தவிர ஒரு மதத்தைக் குறிக்க அல்ல. மதம் என்பது கடவுள் அல்லது கடவுள் போன்ற ஒருவரை அல்லது ஒன்றை, அதாவது ஓர் அமா னுஷ்யத்தை வழிபடுவது. நான்கு வேதங்களை அமா னுஷ்யமாகக் கருதி, அதன்படி யாகம் வளர்த்து கடவு ளர்களை வழிபட்ட மதம் வேதமதம் எனப்பட்டது.  மணிமேகலையின் “சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை”யில் அத்தகைய வேதவாதியை மணி மேகலை சந்தித்து வாது செய்தாள். நீலகேசியிலும் அத்தகைய வேதவாதி வருகிறார். அந்த மதத்தைக்  குறிக்க சனாதனம் எனும் சொல் பயன்படுத்தப்பட வில்லை. நித்தியமானது எனத் தான் நினைத்த ஒரு  கருத்தைச் சுட்டவே அந்தச் சொல்லை ஸ்ரீகிருஷ்ணன் பயன் படுத்தியதாக கீதையில் வருகிறது. சனாதன தர்மத்தை மதம் எனச் சொல்லுகிற பழக்கம் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் வந்தது. அதற்குக் காரணம் அதற்கு முந்திய நூற்றாண்டில் இந்தியாவைக் கைப்பற்றிய பிரிட்டீ ஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனியார் இங்கிருந்த முஸ்லிம்களுக்கு முஸ்லிம் சட்டம், மற்றவருக்கு இந்துச் சட்டம் என்று கொண்டு வந்திருந்தார்கள். முதல் “இந்து சட்டம்” எனப்பட்டது 1722-1864 காலத்தில் உருப்பெற்றது. இதில் வேத மதத்தவர் மட்டுமல்லாது சைவர், வைணவர் மற்றும் பல நாட்டார் தெய்வங்களை வணங்குகிறவர்களும் சேர்க்கப்பட்டு “இந்துக்கள்” எனப்பட்டனர். இந்த நிலையை வேறுவழியின்றி ஏற்றுக்கொண்ட வேத மதத்தவர் அதேநேரத்தில் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்து சாதித்தனர். அதாவது மநு உள்ளிட்ட தங்களது தர்ம சாஸ்திரங்களின் தொகுப்பா கவே அந்த இந்துச் சட்டம் இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். அப்படியாக சாதியக் கட்டமைப்பிற்கும், பெண்ணடிமைத்தனத்திற்கும் ஆங்கிலேயர் ஆட்சியில் சட்ட அங்கீகாரம் பெற்றனர்.

இந்துப் பெண்களின் எதிரிகள்

தங்களை நாடாளுமன்ற ஜனநாயகவாதிகள் எனச் சொல்லிக்கொண்ட ஆங்கிலேயர்களுக்கு இது சில சிக்கல்களை உருவாக்கியது. உதாரணம் உடன்கட்டை ஏற்றப்படுதல். ராம் மோகன் ராய் வங்காள பிராமண குடும்பத்தில் பிறந்தவர். அங்கே நிலவிய கொடூரமான “சதி” எனப்படும் உடன்கட்டை ஏற்றல் சதியை எதிர்த்துப் போர்க்குரல் கொடுத்தார். அதன் காரணமாகவே 1829-இல் வங்காள கவர்னர் பெண்டிங் பிரபு சதியைத் தடை செய்து சட்டம் கொண்டுவந்தார். நமது பெண்களைப் பாதுகாக்கும் இந்தச் சட்டத்தை எதிர்த்து லண்டன் பிரிவு கவுன்சில் வரை சென்றவர்கள் வேதமதத்தைச் சார்ந்தவர்கள்.  நல்ல வேளையாக அது, 1832-இல் சட்டத்தை உறுதி செய்தது. இப்படியாக பிரிட்டீஷ் இந்தியப் பகுதி களில் இந்தக் காட்டுமிராண்டித்தனம் ஒழிந்தது. இத்தகைய சட்டம் வேண்டும் எனப் போராடிய ராம்மோகன் ராய் இந்து. இதை எதிர்த்துக் கிளம்பிய வர்கள் சனாதனிகள். இப்படியாக இந்துப் பெண்க ளின் எதிரிகளாக இருந்தனர் சனாதனிகள்.

சனாதனி அண்ணாமலை

நாடு சுதந்திரம் பெற்ற பிறகுகூட சனாதனிகள் இந்தக் கொலைக்குற்றச் செயலை ஆதரித்தார்கள். ராஜஸ்தான் தேவ்ராலா கிராமத்தில் ரூப்கன்வார் எனும் 18 வயது இளம் பெண் கணவனின் சிதையோடு எரித்துக் கொல்லப்பட்டார் 1987-இல். அவரை “சதி மாதா” என்று புகழ்ந்தார்கள் சனாதனிகள். போரில் வென்ற எதிரிகளால் தங்கள் கற்புக்கு ஆபத்து என்பதால் பெண்களே இப்படியாக உடன்கட்டை ஏறினார்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அதை இப்போதும் நியாயப்படுத்துகிறார்!  சுதந்திர இந்தியாவில் எந்த வெற்றி பெற்ற எதிரியிடமிருந்து தப்பிக்க ரூப்கன்வர் சிதையில் ஏற்றப்பட்டார்? பெண்ணுக்கு தனித்த வாழ்வு கிடை யாது எனும் மநுதர்ம சாஸ்திரத்தின் கொடூர நீட்சியே கணவனோடு மனைவியும் சாக வேண்டும் என நடத்தப்பட்டது இந்தக் கிரிமினல் குற்றம். அதை ஆத ரிக்கும் அண்ணாமலை ஒரு சனாதனி. இவர்கள் எந்த அளவுக்கு இந்துப் பெண்களுக்கு எதிராக இருந் தார்கள் ... இருக்கிறார்கள் என்பதற்கு இது பளிச் உதாரணம்.

எப்போது வேத மதம்  சனாதன தர்மமானது 

சதியை மட்டுமல்லாது பால்ய விவாகம், பலதார மணம், விதவைத்தனம் போன்ற மனித விரோதச் செயல்பாடுகளையும் எதிர்த்துக் கிளம்பினார் ராம்மோகன் ராய். அனைத்திற்கும் மேலே “பிரம்ம சமாஜம்” எனும் மதச் சீர்திருத்தப் பிரிவையும் 1828-இல் கல்கத்தாவில் தொடங்கினார். இது வேத மதத்த வருக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. இந்தச் சூழலில்தான் தங்களைத் தனித்துக் காட்ட தங்களது வேதமதத்தை சனாதன தர்மம் என்று அழைக்க ஆரம்பித்தனர். பிறகு முழு இந்து மதத்திற்கும் இன்னொரு பெயர் அது என்று ஒரே போடாகப் போட்டனர். “மத்திய இந்து கல்லூரி” எனப்பட்டது வாரணாசி யில் டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரால் 1898-இல் துவங்கப்பட்டது. இதுவே தற்போதைய “பெனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம்” என 1916-இல் பரிண மித்தது. அதற்கான காரணி பண்டித மதன்மோகன் மாளவியா. இரண்டுக்கும் இடைப்பட்ட காலமாகிய 1904-இல் அந்தக் கல்லூரி “சனாதன தர்மம்” பற்றிய ஓர் உயர்நிலை பாடப்புத்தகத்தை வெளியிட்டது. அதில் இந்த விஷயம் பற்றி மாணவர்களுக்கு விலா வாரியாக ஆதாரங்கள் பலவற்றை மேற்கோள்காட்டி விளக்கப்பட்டுள்ளது. இந்த நூல் யாரோ ஒருவர் தனது மனதிற்கு உகந்தபடி எழுதியது அல்ல. வாரணாசி எனும் காசி சமஸ்கிருத பண்டிதர்க ளுக்குப் புகழ்பெற்ற ஊர். அங்கே எழுந்த இந்துக் கல்லூரியின் அதிகாரப்பூர்வ உயர்நிலை பாடப் புத்தகம். அதில் சனாதனம் பற்றி என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பதைக் கேளுங்கள்.

கீதை கூறும் சூத்திரனின் கடமை

இந்த நூலில் “நான்கு சாதிகள்” என்றொரு அத்தி யாயம் உள்ளது. அது கூறுகிறது: “சனாதன தர்மத்தின் தனித்தன்மை என்னவென்றால், யாவருக்கும் பொருந்தும் இந்த நான்கு கட்டங்களையும் (பிரம் மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னி யாசம்) சமூக ஒழுங்கின் அடிப்படையாக ஆக்கியுள் ளது. இவை நான்கு நிச்சயமான புறவய சாதிகளாக அல்லது வகுப்புகளாக பிரதிநிதித்துவப்பட்டுள்ளன. முதல் கட்டமானது சூத்திர சாதியால், இரண்டாவது கட்டமானது வைஸ்ய சாதியால், மூன்றாவது கட்டமா னது ஷத்திரிய சாதியினால், நான்காவது கட்டமானது பிராமண சாதியினால் பிரதிநிதித்துவப்பட்டுள்ளன”. ஒரு மனிதனின் வாழ்வில் நான்கு ஆசிரமங்கள் இருப்பதை, மாணவனாக, குடும்பஸ்தனாக, பொறுப்பைக் கொடுத்து கண்காணிப்பவனாக, முடிவில் ஓய்வு பெறுபவனாக இருப்பதைக் கொண்டுபோய் நான்கு வருணங்களில், சாதிகளில் பொருத்துகிறது. அனைவருக்கும் பணியும் மாணவனாக சூத்திரனை, குடும்பஸ்த வேலை செய்ப வனாக வைஸ்யனை, கண்காணிக்கும் அதிகாரியாக ஷத்திரியனை, அனைவரும் மதிக்கத் தக்கவனாக பிராமணனைச் சித்தரிக்கிறது. அதாவது இந்தப் பிரி வினை இயல்பானது, அதுவே சனாதன தர்மத்தின் தனித்தன்மை என்கிறது.  அதிலும் சூத்திரனின் கடமையைச் சொல்லும்போது அது பெருமையோடு கீதையை மேற்கோள் காட்டுகிறது: “சூத்திரர்களுக்கு மட்டுமே பகவான் ஒரேயொரு கடமையை நிர்ண யித்திருக்கிறார். அது இதர சாதியினருக்கு வெறுப் பின்றி சேவை செய்வது!” 

சுரண்டலுக்கான சூழ்ச்சி

இந்த நால் வருண ஆசிரமம் பிறப்பின் அடிப்படை யிலானது என்பதைப் பின்பகுதியில் சொல்கிறது. அப்போதுதான் இது இயற்கையானது அல்ல, செயற்கையானது, சுரண்டலுக்கான சூழ்ச்சி என்பது அம்பலமாகிறது. சாதிப் பிரிவினையானது மனிதர்க ளின் இயல்பான வாழ்வியல் பிரிவினை என்றால் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தனது திறமையின் மூலமாக மாறிக்கொள்ளும் வசதி ஒருவருக்கு இருக்க வேண்டும் அல்லவா? இந்தக் கேள்விக்கு அந்தப் பாடப்புத்தகம் பதில் தரும் அழகை நோக்குங்கள்: “ஒரே வாழ்விலேயே ஒரு மனிதர் ஒரு சாதியிலி ருந்து இன்னொரு சாதிக்கு மாறும் வாய்ப்பு பற்றி அதிகம் கேள்வி எழுப்பப்படுகிறது. நல்ல நடத்தை யின் மூலம் ஒரு மனிதர் ஒரு சாதியிலிருந்து இன் னொரு சாதிக்கு உயரலாம் என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஆனால் அந்த நடத்தை யின் பலன் அடுத்த பிறவியிலேயே உயர் சாதியில் பிறப்பதன் மூலம் கிடைக்கும் என்றும் பொதுவாகக் கருதப்படுகிறது”.

மறுபிறவியில் உயர்சாதி  அடக்கியாளும் தந்திரம்

சாதிப் பிரிவினையை இயல்பு போலச் சொல்லி வந்த நூல் அதில் உயர்வு தாழ்வு உண்டு என்பதை இப்போது ஒப்புக்கொள்கிறது. நல்ல நடத்தையின் மூலம் ஒரு சாதியிலிருந்து இன்னொரு சாதிக்கு மாற லாம், ஆனால் அது இந்தப் பிறவியில் கிடையாது, அடுத்த பிறவியில்தான் நடக்கும்! அடுத்த நாள் என்ன நடக்கும் என்றே தெரியவில்லை, அடுத்த பிறவியை  யார் அறிவார்? அடுத்த பிறவியில் பலன் உண்டு எனச் சொல்லி இந்தப் பிறவியில் அவர்களை அடக்கி ஆளுகிற தந்திரம் இது.  ஒரு கேள்வி எழலாம். ஷத்திரியரான விஸ்வா மித்திரர் பிராமணராக மாறியதாகக் கூறப்படுகிறதே எனலாம். இது பற்றி இந்தப் பாடப்புத்தகம் கூச்ச மின்றி பதில் சொல்லியிருக்கிறது: “விஸ்வாமித்திரர் மாறியது எவ்வளவு பிரபலமோ அவ்வளவு பிரபலம் அதற்கு அவர் பட்டபாடு. அது மாறுதலில் உள்ள பெரும் கஷ்டத்திற்கு ஒரு சான்று. புராதன காலத்தில் சாதி மாறுதல்கள் நடந்தாலும் அவை அபூர்வமே. நல் நடத்தையின் பலன் பெரும்பாலும் மறுபிறப்பில் உயர்சாதியில் பிறப்பதன் மூலமே கிட்டும்”. விஷயம் முடிந்தது. இந்த வருணாசிரம அமைப்புத்தான் சனாதன தர்மத்தின் தனித்தன்மை என்கிறது நூல். இப்படி இந்துக்களை சாதிவாரியாகப் பிளந்து சுரண்டுவது என்பது அந்த மக்களுக்குச் செய்யும் துரோகம் அல்லவா?

செய்வாரா பிரதமர் மோடி

ஏதோவொரு பழைய புத்தகத்தை வைத்துக் கொண்டு சனாதனத்தை சாதியத்தோடு முடிச்சுப் போடுவது தவறு என்றால், ஒரு விஷயத்தை செய்வதன் மூலம் இதை முறியடிக்கலாம். அது: சங்கராச்சாரியார்கள், ஜீயர்கள் மற்றும் இதர இந்துமதத் தலைவர்களின் மாநாட்டைக் கூட்டி, அதில் நித்தியமான சனாதன தர்மத்தில் அநித்தியமான வருணாசிரமம் இனி கிடையாது, இந்துக்கள் மத்தி யிலான வருண- சாதிப் பிரிவினைகள் இன்று முதல் தொலைந்தன, சாதி பார்க்காது திருமணங்கள், மடாதிபதிகளுக்கான தேர்வுகள், அர்ச்சகர் நிய மனங்கள் செய்யப்படும். அவ்வாறே இந்த நியமனங்களிலும், வாழ்வின் இதர கூறுகளிலும் இந்து ஆண்களுக்கு நிகரான உரிமைகள் இந்துப் பெண்க ளுக்கும் வழங்கப்படும். இப்படியாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

அரசியல் சாசனமே  சனாதனத்தை எதிர்ப்பதுதான்

இறுதியாக ஒன்று. சனாதனத்தை எதிர்ப்பது அரசியல்சாசனத்தை எதிர்ப்பதாகும் என்பதாக பாஜக தேசியத் தலைவர் நட்டா கூறியிருக்கிறார். நமது அரசி யல் சாசனமே சனாதனத்தை எதிர்த்து எழுந்ததுதான். அது மநுதர்ம சாஸ்திரத்தை கணக்கில் கொள்ள வில்லை என்று அந்தக் காலத்திலேயே மிகவும் வருத்தப்பட்டது ஆர்எஸ்எஸ். அரசியல் சாசனமானது இந்தியர்களுக்கு மத உரிமை மற்றும் மனசாட்சி உரிமை தந்துள்ளது. அதேநேரத்தில்  அது “இந்து மத நிறுவனங்களில்” சீர்திருத்தங்கள் செய்ய சட்டம் வகுக்கவும் வழி வகுத்துள்ளது. “இந்துக்கள்” என்பவர்கள் யார் என்பதற்கும் விளக்கம் தந்துள்ளது. (சரத்து 25) அங்கே அது சனாதன தர்மம் பற்றியோ, சனாதனிகள் பற்றியோ பேச வில்லை. எனவே சனாதனத்தை எதிர்ப்பதில் சாஸ்திர விரோதம் இருக்கலாமே தவிர, சாசன விரோதம் இல்லை.

ஆதாரம்: Sanatana Dharma- an advanced 
text book of Hindu Religion and Ethics -Central Hindu College, Benares, 1904