தாத்தா நல்ல தாத்தா
தங்க மான தாத்தா!
ஆத்தா போல அன்பை
அளிப்பார் எங்கள் பாட்டி!
கதைகள் சொல்வார் பாட்டி
கல்வி தருவார் தாத்தா!
புதைய லாக அவரைப்
போற்று வாரே அப்பா!
அம்மா அன்புத் தெய்வம்
அவரே வீட்டைக் காப்பார்!
தங்கை யோடே என்னைத்
தாங்கு வாரே அம்மா!
தாத்தா பாட்டிக் கான
கடமை எல்லாம் செய்வார்
மூத்த மக்கள் எங்கள்
வீட்டுத் தெய்வம் என்பார்!
கண்ணைப் போலக் காப்பார்
காலை பகலும் இரவும்
உண்ண உணவும் தருவார்
உடைகள் துவைத்துத் தருவார்!
வேளை தோறும் மருந்தை
விரும்பி அம்மா தருவார்
காலை மாலை நானும்
கையைப் பிடித்துச் செல்வேன்!
சுமையா தாத்தா பாட்டி?
சொர்க்கம் சொர்க்கம் சொர்க்கம்!
இமையாய் நாமும் காத்தால்
எதற்கு முதியோர் இல்லம்?