articles

img

எங்கப்பன் எட்டாம் நம்பர் குதிருக்குள் இல்லை

‘லஞ்சம் கொடுப்பதும் குற்றம், பெறுவதும் குற்றம்’ என்பது அரசு அலுவலகங்களில் காணப்படுகிற அறிவிப்பு.  தேர்தல் பத்திரமும் லஞ்சமாகத்தான் செயல்பட்டிருக்கிறது என்பதால்தான் அதைக் கொடுத்திருக்கிறவர்களும் அஞ்சுகிறார்கள். அதனால்தான், கம்பெனிகளின் சங்கங்களாகிய ஃபிக்கி, அசோசெம் ஆகியவை தேர்தல் பத்திரங்களின் வரிசை எண்கள் போன்ற விபரங்களை வெளியிடுவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளன. அவற்றின் இந்த நடவடிக்கைக்குப் பின், தேர்தல் பத்திரங்கள் என்ற வடிவத்திலான லஞ்சத்திற்கு, கைம்மாறாக தாரைவார்க்கப்பட்ட இந்திய நாட்டின் சொத்துகள், இந்திய மக்களின் நலன்கள் ஆகியவற்றின் அளவு மிகப்பெரியதாக இருக்கும் என்று அச்சம் ஏற்படுகிறது. 

மருந்துக் கம்பெனிகளின் தாராளம்

அமைச்சர் போன்றவர்களுக்கு நெருக்கமான வர்களின் மருந்துக் கம்பெனிகளிலிருந்து, காலாவதியான மருந்துகளை நோயாளிகளுக்குச் செலுத்தி மக்கள் உயிரிழப்பதான காட்சிகளைத் திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் என்றுதான் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால்,  பாஜகவின் ஆட்சியில், நடக்க முடியாத முறைகேடு என்று எதுவுமே இல்லை என்பதைத்தான், தரமற்ற, கேடான மருந்துகளை உற்பத்தி செய்த நிறுவனங்கள் வாங்கியிருக்கிற தேர்தல் பத்தி ரங்களும், அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் உணர்த்துகின்றன. மருந்து நிறு வனங்கள் வாங்கியிருக்கிற தேர்தல் பத்திரங்கள்தானே, பாஜகவின்மீது எப்படிக் குற்றம் சுமத்தலாம் என்று கேட்கலாம். தேர்தல் பத்திரங்களாகப் பெறப்பட்ட நிதியில் பெரும்பகுதி பாஜக விற்கே வழங்கப்பட்டுள்ளது ஒருபுறம் என்றால், இந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய ஒன்றிய அரசு மட்டு மின்றி, தவறிய மாநிலங்களில் ஆள்வதும் பாஜகவே என்பது, இந்தத் தொகைகள் பாஜகவுக்குத்தான் சென்றிருக்கின்றன என்பதை மறுக்க முடியாததாக ஆக்குகிறது.

இருமல் மருந்துகளால் நேர்ந்த இறப்புகள்

கடந்த ஆண்டுகளில், உலகின் பல பகுதிகளிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளால் இறப்பு உள்ளிட்டவை நேரிட்டு, கடுமையான விமர்ச னங்கள் எழுந்ததை மறந்திருக்க முடியாது. பல வெளிநாடுகள் அந்த மருந்துகளைத் தடை செய்ததுடன், உலக சுகாதார அமை ப்பும்  அந்த மருந்துகள் ஆபத்தானவை என்று எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அந்த மருந்து களைத் தயாரிக்கிற நிறுவனங்கள்மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும், அவை பல கோடி ரூபாய்களுக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி யிருக்கின்றன என்பதும், காசுக்காக பாஜக அடகு வைத்தது இந்திய மருந்துத்துறையின் மானத்தை மட்டுமல்ல, இன்னும் தயாரிக்கப் படும் அந்த மருந்துகளால் இந்திய மக்களின் உடல் நலனையும் அடகு வைத்துள்ளது பாஜக என்பது வெளிப்பட்டிருக்கிறது.

நிறமற்ற மருந்து  மஞ்சளாக மாறிய போதும்...

அது மட்டுமல்ல, கொரோனா சிகிச்சை யின்போது பெரிதும் பயன்படுத்தப்பட்ட மருந்து ரெம்டெசிவிர். உயிர் காக்கும் மருந்தாக நம்பப்பட்ட இந்த மருந்துக்காக மக்கள் வரிசையில் நின்றதும், பல மடங்கு அதிகமான விலை, பல  ஆயிரம் ரூபாய்கூடத் தரத் தயா ராக இருந்ததும் இன்னும் மறக்க முடியாதவை. இந்த மருந்தைத் தயாரித்த நிறுவனங்களில் ஹெட்டிரோ லேப்ஸ் அண்ட் ஹெட்டிரோ ஹெல்த்கேர் நிறுவனமும் ஒன்று. அது தயாரித்த இந்த மருந்துகள், தெளிவான நிற மற்ற திரவமாக இருப்பதற்கு பதிலாக மஞ்சள் நிறமாக இருந்தது, மருந்தின் அளவு சிகிச்சைக்குத் தேவை யானதைவிடக் குறைவாக இருந்தது, தரமற்றதாக இருந்தது போன்ற குறைகள் கண்டுபிடிக்கப்பட்டு, இந்த நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டும், எச்சரித்தும் ஆறு முறை அறிவிப்புகள் தரப்பட்டுள் ளன. அவற்றைத் தொடர்ந்து இந்த நிறுவனம் மூன்று தவணைகளில் ரூ.60 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. 

நஞ்சைத் தேனாக்கிய ‘பத்திரங்கள்’

ஸைடஸ் நிறுவனம் தயாரித்த இதே ரெம்டெசிவிர் மருந்துகளில் பாக்டீரியா நச்சுகள் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மருந்து செலுத்தப்பட்ட நோயாளிகளுக்கு வேறு பல புதிய உடல் நலக்குறைவுகள்  ஏற்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் அந்த நிறுவனத்தின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுடன், இந்தப் பிரச்சனைக்குப்பின் அந்த நிறுவனம் ரூ.29 கோடிக்குத் தேர்தல் பத்திரங்களை வாங்கியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கவை. இதே மருந்தினை சிப்லா  நிறுவனம் தயாரித்ததில் அளவுக்குறைவு போன்ற குறைபாடு கள் கண்டுபிடிக்கப்பட்டதும் அந்த நிறுவனம் ரூ.25.2 கோடிக்குத் தேர்தல் பத்திரங்களை வாங்கியிருக்கிறது. இதற்கு முன்பும் இதே சிப்லா நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து தரமற்றதாக இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட போதும், அது ரூ.14 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியிருக்கிறது. இந்தத் தவறுகளுக்கெதிராக அறிவிப்புகள் அளிக்கப்பட்டாலும், சிப்லா நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மருந்துக்கு பதிலாக பணம்

க்ளென்மார்க் நிறுவனம் தயாரித்த இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள், தரச் சோதனைகளில் தோல்வியுற்றதைச் சுட்டிக்காட்டி, 4 முறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அதே காலகட்டத்தில்  அந்த நிறுவனம் ரூ.9.75 கோடிக்குத் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளதும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் ‘எங்கப்பன் எட்டாம் நம்பர் குதிருக்குள் இல்லை’ என்று விளக்குகின்றன. ஐபிசிஏ லேபரட்டரீஸ் தயாரித்த ஒரு மருந்தில் உள்ளடக்கமாக இருக்க வேண்டிய மருந்துகளில் ஒன்று தேவையான அளவுக்கு இல்லை என்பது ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த மருந்து பயன் தராது என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அந்த நிறுவனமும் ரூ.13.5 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கியிருக்கிறது. நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இதைப்போலவே, இண்ட்டாஸ் ஃபார்மசூட்டிகல் நிறுவனம் தயாரித்த மாத்திரையும் தரச் சோதனைக ளில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, அந்த நிறுவனமும் ரூ.20 கோடிக்குத் தேர்தல் பத்திரங்கள் வாங்கி, நடவடிக்கையைத் தவிர்த்திருக்கிறது.

மக்களின் உயிர்மீதும் பாஜக அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே இந்த உதாரணங்கள் தோலுரித்துக் காட்டுகின்றன. இடிந்து விழும் பாலங்களைக் கட்டுகிற நிறுவனத்திற்கு ஒப்பந்தம், மக்களைக் கொல்லும் மருந்துகளைத் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு அனுமதி என்றெல்லாம் வெளிப்படும் என்பதால்தான், பத்திரங்களின் வரிசை எண் போன்ற அடையாளம் காணும் தகவல்களை வெளியிடாமல் தடுக்க எல்லா முயற்சிகளும் செய்யப்படுகின்றன. அது மட்டுமே அல்ல, தேர்தல் பத்திரங்களில் எண் இருக்கிறது என்று கண்டுபிடித்த செய்தியாளர் பூணம் அகர்வால் அதற்காக வாங்கிய பத்திரங்கள், ஸ்டேட் வங்கி வெளியிட்ட பட்டியலில் தொடர்பே இல்லாத வேறு தேதிகளில் காணப்பட்டிருக்கின்றன என்பதும், வெளியிடப்பட்ட, வெளிவரவிருக்கிற தகவல்களும் ‘அரசின் தேவைக்கேற்ப’ மாற்றியமைக்கப்பட்டவையாகவே இருக்கும் என்று தோன்றச் செய்திருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முழுமையாக ஆய்வு செய்யப்பட்டால் மட்டுமே, இந்த உலகமகா ஊழலின் உண்மையான ஆழம் வெளிவரும்!

-அறிவுக்கடல்