articles

img

எழுச்சி பெறும் தொழில்கள் - பி.ராஜீவ் ,தொழில், சட்டம் மற்றும் கயிறு துறை அமைச்சர்

சமூக வளர்ச்சியில் நாட்டை வழிநடத்தும் வளமான பாரம்பரியத்தை கொண்டுள்ளது கேரளம். சுகாதாரம், கல்வி, பாலின சமத்துவம் தொடர்பான நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் கேரளா எப்போதும் முன்னிலையில் உள்ளது.  உலகளவில் அங்கீகரிக்க ப்பட்டதும் பாராட்டத்தக்கதுமான சாதனைகளின் தொடர்ச்சியாகவும் அதே நேரத்தில் பொறுப்புள்ள தொழில்துறை முதலீட்டு மையம் என்ற நிலையில் முக்கியமான மாநிலமாக கேரளம் மாற உள்ளது. தொழில் மற்றும் வர்த்தகத் துறையால் ஊக்குவிக்கப்பட்ட விரிவான மற்றும் தொலைநோக்கு அணுகுமுறை கேரளாவை முதலீட்டுக்கு ஏற்ற தொழில்துறை இடமாக மாற்றும்.

பொதுத்துறை நிறுவனங்கள் நவீனப்படுத்தப்பட்டன. நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொழில் தொடங்குவதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. தொழில்முனைவோருடன் நேரடி தொடர்பின் மூலம் உலகத்தரம் வாய்ந்த தொழில்துறை உட்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் கேரளா முன்னேறி வருகிறது. பாரம்பரியத் துறைகளை வலுப்படுத்துவதன் மூலம் ஒரு தனித்துவமான தொழில்துறை மாதிரியையும்  உருவாக்குகிறது.  கேரளா பேப்பர் புரொடக்ட்ஸ்  கோட்டயம் மாவட்டம் வேலூரில் கேரளா பேப்பர் புராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தை முதல்வர் பினராயி விஜயன் 2022 மே 19 அன்று திறந்து வைத்தார். வணிக ரீதியான உற்பத்தி நவம்பர் 1- ஆம் தேதியே துவங்கியது. மங்களம், தி இந்து நாளிதழ்கள் கேரளா பேப்பர் புராடக்ட்ஸ் லிமிடெட் தயாரித்த காகிதத்தில் அச்சிடப்படுகின்றன. ஒன்றிய அரசின் தனியார்மயமாக்கல் கொள்கையின் ஒரு பகுதியாக கைவிடப்பட்ட  ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் லிமிடெட் நிறுவனம் மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டது. மறுசீரமைக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனம் கேரளா பேப்பர் புராடக்ட்ஸ் லிமிடெட்.  இங்கிருந்து தற்போது, 25க்கும் மேற்பட்ட நாளிதழ்களுக்கு காகிதம் வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2023 இல் டைனிக் பாஸ்கரிடம் இருந்து 10,000 டன் காகிதத்துக்கான ஆர்டர் பெறப்பட்டது. 3,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனமாக வளர்வதே தற்போதைய இலக்கு. இதன் மூலம் 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆண்டுக்கு ஐந்து லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட அமைப்பாக கேபிபிஎல் மாறும். 1000 கோடி ரூபாய் செலவில் நான்கு கட்டங்களாக சீரமைப்பு பணிகள் திட்டமிடப்பட்டு 46 மாதங்களில் முடிக்கப்படும். முதல் இரண்டு கட்டங்கள் முடிந்துள்ளன.  கேரளா ரப்பர் லிமிடெட்

தொழில் துறையின் புதிய முயற்சியான கேரளா ரப்பர் லிமிடெட் மே 9 அன்று வேலூரில் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது தூர்வாரும் பணி நடந்து வருகிறது. ரப்பர் அடிப்படையிலான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட தொழில்களை ஊக்குவிப்பது மற்றும் வேலூரை ரப்பர் அடிப்படையிலான பொருட்களின் மையமாக மாற்றுவதை மாநில அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. 3 கட்டங்களாக முடிக்கப்பட்டும் இத்திட்டத்திற்கு 1,050 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளா ரப்பர் லிமிடெட் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி ரப்பர் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும்.  ரப்பர் துறையில் விவசாயிகள், தொழில்முனைவோர், அமைப்பு பிரதிநிதிகள் போன்றோரின் ஆதரவுடன் இந்நிறுவனம் செயல்படுகிறது. தரமான ரப்பர் உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவியும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய தொழில்முனைவோருக்கு பொது வசதிகளும் செய்து தரப்படும். தொழில்முனைவோருக்கு ரப்பர் சோதனை, பயிற்சி, நிதி நிறுவனங்களின் ஆதரவு ஆகியவை உறுதி செய்யப்படும். நிறுவனத்தின் செயல்பாடுகள் இயற்கை ரப்பர் மற்றும் தொழில்துறை ரப்பர் பொருட்களின் உற்பத்திக்கு மிகவும் பொருத்தமான ஒன்றாக இருக்கும். கேஇஎல்  எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் லிமிடெட் ஒன்றிய அரசு தனியார்மயமாக்க முயற்சித்த காசர்கோடு கேஇஎல் எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் லிமிடெட் நிறுவனத்தை  2022 ஏப்ரல் 1 முதல் மாநில அரசின் கீழ் பொதுத்துறை அமைப்பாக செயல்படுத்த தொடங்கியது. முதலமைச்சர் பினராயி விஜயன் இந்நிறுவனத்தை திறந்து வைத்தார். பிஎச்இஎல் எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பிஎச்இஎல் வைத்திருந்த 51 சதவிகித பங்குகளை கேரள அரசு வாங்கியது. அதன் மூலம்  முழுவதுமாக மாநில அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனமாக மாற்றியது. 

பல ஆண்டுகள் தொடர் நட்டத்தை ஏற்படுத்திய இந்நிறுவனத்தை மீட்டெடுக்க தேவையான தொகையும், கடந்த காலத்தில் அந்த நிறுவனம் ஏற்படுத்திய நட்டத்தையும் சேர்த்து சுமார் ரூ.77 கோடி செலவழித்து பொதுத்துறை நிறுவனமாக மாற்றி இருக்கிறது கேரள அரசு. இதில்  இரண்டு வருடங்களாக வேலை, சம்பளம் இல்லாமல் தவிக்கும் ஊழியர்களின் ஊழியர்களின் சம்பள பாக்கி ரூ.14 கோடியும் அடங்கும். பின்னர் முறையான திட்டமிடலுடன் கட்டடம் மற்றும் இயந்திரங்களை அரசு கையகப்படுத்திய பின், தொழிற்சாலையை புதுப்பித்து செயல்பட வைக்க முடிந்தது.  கேரளாவின் தற்போதைய வணிக நட்பு சூழலில் லாபகரமாகவும் நிலையானதாகவும் தனித்துவமான தயாரிப்புகளுக்கு கூடுதலாக ரயில்வேக்கு தேவையான டிராக்ஷன் மோட்டார்கள், கன்ட்ரோலர்கள், ஆல்டர்னேட்டர்கள், டிராக்ஷன் ஆல்டர்னேட்டர் மோட்டார்கள், பாதுகாப்புக்கு தேவையான சிறப்பு மின்மாற்றிகள், மின்துறைக்கு தேவையான தெருவிளக்கு கன்ட்ரோலர்கள் போன்றவற்றை தயாரித்து மாநில அரசு முன்மாதிரி பொதுத்துறை நிறுவனமாக மாற்ற முனைகிறது. செயல்பாடுகளைத் தொடங்கி 10 மாதங்களுக்குள், ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புள்ள 6 125kVA ஜெனரேட்டர்களைத் தயாரிப்பதற்கான சர்வதேச ஆர்டர்களையும் பெற்றுள்ளது. தொழில்முனைவோர் ஆண்டு திட்டம் தொழில்துறையின் தலைமையில் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் தொழில்முனைவோர் ஆண்டு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2022-23 நிதியாண்டில் ஒரு லட்சம் நிறுவனங்களைத் தொடங்க அரசு முயற்சித்து, 245 நாட்களில் 1 லட்சம் நிறுவனங்களைத் தொடங்க முடிந்தது.  இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.8,417 கோடி முதலீட்டில் 1,39,828 நிறுவனங்கள் மற்றும் 2,99,932 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.