“லேண்ட்”(LAND)
(நெட்ஃபிளிக்ஸ்) - (2021)
இசைநிகழ்ச்சி ஒன்றில் தாறுமாறான துப்பாக்கிச் சூட்டில் எடியின் கணவனும் மகனும் பலியாகின்றனர். ஆறாத் துயரத்தில் அமைதியும், தனிமையும் தேடி வனவாசம் மேற்கொள்கிறாள் எடி. யார் முகத்தையும் பார்க்க விரும்பாமல் தன் ஒரே ரத்த உறவான தங்கையையும் கூட விட்டு விலகுகிறாள். உலகத் தொடர்பையும் அறுத்துக் கொள்ளும் விதமாக செல்பேசியையும் வீசிவிடுகிறாள். எடி வசிக்கும் கானகத்தை ஒட்டியுள்ள சிறு நகரத்தில் வாழ்பவர் மிகல். மிதமிஞ்சிய போதை யில் காரோட்டிச் செல்கையில் நேர்ந்த விபத்தில் மிகலின் மனைவியும் மகளும் உயிரிழக்கின்ற னர். தனித்து விடப்பட்ட மிகல் மனைவியின் தங்கை குடும்பத்துடன் வாழ்கிறார். ஒரே வகைப்பட்ட துயரத்தை எடியும் மிகலும் எவ்வாறு அணுகுகிறார்கள்; எவ்வாறு ஆற்றுப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை கதை இரு வேறு கோணங்களில் முன்வைக்கிறது.
இருளடர்ந்த கானகத்தில், துயரடர்ந்த நெஞ்சின் பாரத்தோடு, தூக்கமின்றித் தவிக் கிறாள் எடி. உறவுகளின் நினைவுகள் உறுத்த, விலங்குகள் அச்சுறுத்த, அவள் தேடிவந்த தனிமையும் கிடைக்கவில்லை; அமைதியும் கிடைக்கவில்லை. விரக்தியில் தற்கொலைக்கு முயல்கிறாள். இந்நிலையில் பனிப்புயலில் சிக்கு கிறாள். நாட்கணக்கில் நினைவிழந்து உயிர் ஊசலாடிய நிலையில் கிடக்கும் எடியை வேட்டைக்காக வந்த மிகல் காப்பாற்றுகிறார். மேல் சிகிச்சைக்கு, நகர மருத்துவமனைக்கு வர மறுக்கிறாள் எடி.எனவே செவிலியரைக் காட்டுக்கே அழைத்து வந்து எடிக்கு சிகிச்சை யளித்து அவளை முழுமையாகக் காப்பாற்று கிறார் மிகல். அத்துடன் காட்டில் வேட்டையாடும் விதத்தை யும், இயற்கைச் சூழலுடன் இயைந்து வாழும் நுட்பங்களையும் எடிக்குக் கற்றுக் கொடுக்கிறார். அவ்வப்போது காட்டுக்கு வந்து எடிக்கு மன திடத்தை ஊட்டுகிறார். ஒரு நிலையில் தான் செல்லமாக வளர்த்துவரும் நாயை எடியிடம் ஒப்படைத்துவிட்டுத் திரும்புகிறார். திரும்ப வரும் நாளை அவர் எடிக்குச் சொல்லாமல் பிரி கிறார். ஏனெனில் மிகலுக்கு தொண்டையில் புற்று நோய். இதை அவர் எடிக்குத் தெரியப்படுத்த வில்லை. குளிர்காலம், வசந்தகாலம் என பருவகாலங் கள் பல கடக்கின்றன. ஒரு நிலையில் பரிவு மிக்க மிகலின் வருகைக்கு எடியின் மனம் ஏங்கத் தொடங்குகிறது. தனிமை சலிக்கிறது. இந்த உணர்வு மாற்றம் கதையின் கவித்துவமான திருப்பமாக, முடிவாக அமைகிறது.
பார்வையாளர்களுக்கு மன நிறைவு தரும் பல அழகிய காட்சிகள், படம் நெடுகிலும் வருகிறது. உயிர் வதை செய்வதை விரும்பாத எடி யிடம், மிகல், முதலில் முயல், அணிலை, வலை வைத்து பிடிக்கும் வேட்டை நுட்பத்தை எடிக்கு கற்பிக்கிறார். வேட்டையாடப்பட்ட சிறிய விலங்குகளை முதலில் சமைத்து சாப்பிட வலி யுறுத்துவார். “ஏனென்றால் இதுதான் அடுத்த மான் வேட்டைக்கான ஊக்கம்” என்று மிகல் அறிவுரை வழங்குவது, வாழ்வு குறித்த நேர்மறை யான கணிப்பாகும். எடி, மிகல் உரையாடலின் போது, “ஸ்டார் வார்ஸ்” படத்தில் வரும் பாத்திரமான “யோடா” போன்று வலிமையான, சக்திவாய்ந்த, புத்தி சாலியானவர் என மிகல்-ஐ ஒப்பிட்டு பேசுவாள். அப்போது “யோடா” குறித்து எதுவும் தெரியாது என மிகல் பதிலளிப்பார். பின் மரணப் படுக்கையில் மிகலினை, எடி சந்திக்கும் போது, சமீபத்தில்தான் “ஸ்டார் வார்ஸ்” படம் பார்த்து, யோடாபாத்திரம் குறித்து தான் அறிந்ததாகவும்; யோடா போல் தான் இல்லையென்றும்; ஏனெனில், தன்னால் தான் மனைவியும் மகளும் விபத்தில் இறக்க நேர்ந்ததென்று மிகல் குற்றவுணர்வுடன் வருந்துவது நெகிழ்ச்சியாக இருக்கும். சாவின் விளிம்பை நோக்கி நெட்டித் தள்ளும் புற்றுநோய்; மனைவி, மகளை இழந்து மொட்டை மரமாய் நிற்கும் அவல நிலையிலும், மனிதர்களு டன் கலந்துறவாடி அமைதி கொள்ளும் மிகல்-இன் வாழ்க்கையில், எடி பாடம் கற்கிறாள்; என்பதே திரைப்படத்தின் செய்தியாக இருக்கிறது.
மனம் என்பது மனித உறவுகளால் பூத்துக் கனிவது; ஆகவே தனிமையில் அமைதி என்பது சாத்தியமற்றது. எடியின் மகன் வரைந்த ஓவியமும் மிகலின் மைத்துனி மகள் வரைந்த ஓவியமும் அமைதிமிக்க வாழ்க்கை மீதான வேட்கையின் குறியீடுகள். துப்பாக்கிகள் தாறுமாறாய் வெடிக்கக் காத்திருக்கும் சூழலில், துய்ப்புக் கலாச் சாரத்தின் ஆரவார வாழ்க்கையில் சலிப்பு கொண்ட அமெரிக்கர்களின் அடிமன வேட்கை யின் குறியீடாகவும் கொள்ளலாம். தனிமைத் துயரம், மகிழ்ச்சித் தருணம் ஆகிய மனநிலைகளை தனது பின்னணி இசையில் தந்து கிறங்க வைக்கிறார் பென்ஷோலினி. கெலின் “KELIN” என்ற கஜகிஸ்தான் நாட்டுப் படத்தில் வரும் பின்னணி இசையை நினைவூட்டுகிறது. கானக எழிலையும், பருவகால மாற்றங்களை யும், கண்ணைக் கவரும் வண்ணம் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ள வயோமிங் மாநிலத்திலுள்ள ஷோஷோன் (Shoshone) தேசிய பூங்காவிலே கானகக்காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட் டுள்ளன. தொலைதூரக் காட்சிகளாக பனிபடர்ந்த மலைத் தொடர்கள் விரிந்த நிலப்பரப்புகள், அடர்வனங்கள், அல்பைன் மரங்கள் சூழ்ந்த ஏரிகள் என்று ஒளிப்பதிவு பிரமிப்பூட்டுகிறது. இயக்குநர் ராபின் ரைட் எடியாகவும் நடித்துள் ளார். படிப்படியான எடியின் மனமாற்றத்தைத் தன் முகபாவனையில் கொண்டுவந்து அசத்தி விடுகிறார். மிகலின் மரணப் படுக்கையில் எடி உரையாடுகின்ற இறுதி காட்சியில் நடிப்பின் உச்சம் தொட்டு கலங்கடித்துவிடுவார். மிகலாக நடித்துள்ள டேமியன் பிஷிரின் நடிப்பும் பிரமாதம். ஆக, இப்படம் மனித மனம் குறித்த ஒரு உரையாடலுக்கு வித்திடும் ஒரு பேரனுபவத்தையும் தருகிறது.