பெரிய பெரிய ஆக்கிரமிப்புகளை விட்டு விட்டு நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி குடிசைகள், சிறுவீடுகளுக்கு நோட்டீசைக் கொடுத்து, குடியிருப்புகளை அகற்ற புல்டோசருடன் வருகிறார்கள். ஏரியை மடக்கி ஆக்கிரமித்து நீதிமன்றங்கள், ஒருங்கிணைந்த திட்ட வளாகங்கள், பேருந்து நிலை யங்கள் கட்டலாம்; தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வீடுகளை கட்டலாம்; ராமச்சந்திரா, எஸ்.ஆர்.எம், மியாட், ஸ்கை வாக், அப்பல்லோ, சாஸ்த்ரா போன்ற பெரும் தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிக்கலாம்; ஏரியை ஆக்கிரமித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிக ளுக்கு வீடு கட்டலாம்; தனியார் முதலாளிகளுக்கு கொடுப்பதற்காக அமைக்கப்படும் பரந்தூர் விமான நிலையத்திற்காக 13 கிராமங்களையும், அங்குள்ள ஏரிகளையும் முற்றாக அழிக்கலாம்; ஆனால் வயிற்றில் ஈரத்துணி கட்டி சேமித்த பணத்தில் இடத்தை வாங்கி, மேடுஉயர்த்தி, இரண்டு மூன்று தலைமுறையாக வாழ்ந்து வருகிறவர்களை, கள நிலவரம் தெரியா மல், ஆவணத்தை வைத்துக் கொண்டு ஆக்கிரமிப்பு என்று நீதிமன்றம் சொன்னால், இடிப்போம் என்பது எந்த வகையில் நியாயம்?
200 அடி சாலையை ஏரி நடுவில் அமைத்தது யார்?
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் ஏரியின் கரைகளுக்கு மேற்கே ரயில்வே தண்டவா ளம், தெற்கே வைஷ்ணவா கல்லூரி, கிழக்கே ஏரிக் கரை, வடக்கே தர்கா ரோடு ஆகியவை எல்லைகளாக இருந்தன. அந்த ஏரி முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு இப்போது இரண்டு சிறிய குட்டைகளாக காட்சிய ளிக்கின்றன. இந்த ஏரியை யார் ஆக்கிரமித்தது? பல்லாவரம் தர்கா ரோடு பகுதியில் பெரியபெரிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், ரயில்வே தண்ட வாளம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளும் எப்படி வந்தன? 2001 ஆம் ஆண்டு பல்லாவரம் - துரைப்பாக்கம் 200 அடி சாலையை ஏரியின் நடுவில் அமைத்தது யார்? இந்த சாலைக்காக பல்லாவரம் ஏரி, மாங்கனி குளம், கீழ்கட்டளை ஏரி, பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளிட்ட நீர்நிலைகளை அழித்தது அரசு நிர்வா கமா? அப்பாவி மக்களா?
மாங்கனி குளத்தின் பெரும்பகுதி 200 அடி சாலை யாக இருந்தது. எஞ்சிய சிறு பகுதியில் (பலகோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தில்) குப்பை மறுசுழற்சி மையம் செயல்பட்டு வந்தது. அந்த குப்பைக் கிடங்கை தற்போது மூடியுள்ளனர். உள்ளூர் அரசியல்வாதிகள் அந்த இடத்தை சரவணா ஸ்டோருக்கு தாரை வார்க்க முயற்சித்து வருகின்றனர். பல்லாவரம் ஏரியின் தெற்குப் பகுதியில் ஒரு பெரிய குப்பைமலை, சதுப்பு நிலத்தில் பரங்கிமலை மாதிரி ஒரு பெரிய குப்பை மலை என நீர்நிலைகளை ஆக்கிரமித்தது அரசு நிர்வா கம் தானே? இவையனைத்தையும் அரசு செய்து விட்டு அப்பாவி மக்களை ஆக்கிரமிப்பாளர்களாக சித்தரிப்பது நியாயம் தானா? நீதிமன்றமும் போகிற போக்கில் தீர்ப்பு எழுதலாமா?
2008 ஒப்பந்தம் என்ன ஆனது?
பல்லாவரம் பெரிய ஏரியையொட்டி உள்ள சஞ்சய் காந்தி நகர், வடக்கு சஞ்சய் காந்தி நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அந்த இடத்தை அவ்வப்போது ஆளும் கட்சியினராக இருந்தவர்கள்தான் விற்றார்கள். அவர்களிடம் வாங்கி நாற்பது ஐம்பது ஆண்டு களுக்கு மேலாக மக்கள் வீடுகட்டி வாழ்ந்து வருகிறார் கள். இவர்கள் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்துகிறார் கள். சாலை, பாதாளச் சாக்கடை, தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை அரசே செய்து கொடுத்துள்ளது. மின் இணைப்பு, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக் காளர் அட்டை உள்ளிட்டவையும் வழங்கியுள்ளது. 2001 ஆம் ஆண்டு 200 அடி சாலை அமைக்கும் போது ரயில்வே தண்டவாளம் அருகில் இருந்த வீடு களை அகற்றி, பல்லாவரம் ஏரியின் நடுப்பகுதியில் அரசு மறு குடியமர்வு செய்தது. இவ்வாறாக, அனைத்தையும் அரசு நிர்வாகமே செய்து விட்டு திடீரென ஆயிரக்கணக்கான குடும்பங்க ளை ஆக்கிரமிப்பாளர்கள் என நோட்டீஸ் கொடுக்க லாமா? இந்த பகுதிகளை அகற்ற 2008 ஆம் ஆண்டு அரசு நிர்வாகம் முயற்சித்தபோது, மக்களை அணி திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் போராட் டத்தை நடத்தியது. அப்போது, தற்போதுள்ள வீடு களை இடிக்க மாட்டோம்; அதேசமயம், நீர்ப்பிடிப்பு பகு தியைசுற்றி கம்பி வேலி அமைக்கிறோம்; அதைத் தாண்டி ஏரிக்குள் வரக்கூடாது என ஒப்பந்தமானது. ஆனால் இதற்கு மாறாக, ஆயிரக்கணக்கான வீடு களை ‘ஆக்கிரமிப்பு’ என அதிகாரிகள் மீண்டும் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதனால் பதறிப்போன மக்கள் 02.03.23 அன்று சட்டமன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர். அப்போது, இனி யாரும் வர மாட்டார்கள். வீடுகளை அகற்ற மாட்டோம் என்று சட்ட மன்ற உறுப்பினர் உறுதி அளித்தார். அவரைப் பார்த்து விட்டு வீடு வந்து சேர்வதற்குள், விடுபட்ட பகுதிக ளுக்கும் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அடுத்தடுத்த நாள் வேறு, வேறு பகுதிக்கு வந்து நோட்டீஸ் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
வேளச்சேரி பெரிய ஏரியின் 210 ஏக்கர் எங்கே போனது?
வேளச்சேரி ஏரிக்கரையில் காந்தி நகர், சசி நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்குள்ள ஆயிரக்கணக் கான வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி பிப்.22 அன்று நோட்டீஸ் வழங்கியுள்ளது நீர்வளத்துறை. யார் ஆக்கிரமிப்பாளர்கள்? வேளச்சேரி ஏரியின் மொத்த பரப்பளவு 265 ஏக்கர். தெற்கே ஏரிக்கரை, வடக்கே மடுவன்கரை சாலை, கிழக்கே இரானே மெட்ராஸ் கம் பெனி, மேற்கே ஆதம்பாக்கம் அம்பேத்கர் சாலை. தற்போது ஏரியின் மொத்த பரப்பளவு 55 ஏக்கர் தான் உள்ளது. அப்படியென்றால் மீதம் உள்ள 200 ஏக்கர் ஏரி எங்கே? வேளச்சேரி ஏரியில் தான் தமிழ்நாடு வீட்டு வசதிக் கழக குடியிருப்பும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் ஒதுக்கப்பட்ட அம்பேத்கர் நகரும், நேரு நகரும், பெரியார் நகரும், கக்கன்நகரும், காமராஜர் நகரும் உள்ளன. இவையனைத்தையும் அரசாங்கமே செய்துவிட்டு வேளச்சேரி ஏரியின் நீர்ப்பிடிப்பிற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத கரையின் மீதுள்ள காந்தி நகர், சசி நகர் மக்களை மட்டும் ஆக்கிரமிப்பா ளர் என வரையறை செய்வது ஏன்?
முந்தைய ஆணையை கிடப்பில் போட்டதேன்?
2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டி கைக்கு முன் ஆக்கிரமிப்பு எனக் கூறி பொதுப் பணித்துறை நோட்டீஸ் வழங்கியது. அன்றைக்கு அந்த மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரவணைத் துக் கொண்டது. மக்களுக்கு நம்பிக்கையூட்டி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என பலகட்ட போராட் டங்களை நடத்தியது. சட்ட ரீதியாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் பி.ஆர்.பி.ராஜேந்திரன் மூலமாக வழக்கு தொடுக்கப்பட்டது அந்த வழக்கில், “25 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களால் நீர் வரத்துக்கோ, நீர்ப்பிடிப்புக்கோ, ஏரிக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை. அதுமட்டுமல்ல; தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள அரசாணை 854-இன்படி இவர்களுக்கு ஏன் பட்டா வழங்கக்கூடாது” என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது தமிழ்நாடு பொதுப்பணித்துறை செய லாளர், இந்த பகுதியை 2005 ஆம் ஆண்டே குடியிருப்புப் பகுதி என வகை மாற்றிவிட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதனடிப்படையில் உயர் நீதிமன்ற நீதிபதி, மக்களுக்கு பட்டா வழங்க ஆவன செய்யுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர், பொதுப் பணித்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவை 14 ஆண்டு கள் கிடப்பில் போட்டுவிட்டனர். இந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதி தானாக முன்வந்து ஒரு வழக்கை விசாரித்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தர விட்டார். ஏற்கனவே, பட்டா கொடுக்க வேண்டும் என்ற தீர்ப்பைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் நீதிமன்றம் சொல்லிவிட்டது எனக்கூறி நோட்டீஸ் கொடுக்கலாமா?
மக்களை அச்சுறுத்தாதீர்!
தமிழ்நாட்டில் 1884 ஆம் ஆண்டு நிலங்கள் வகைப் படுத்தப்பட்டன. அதற்குப் பிறகு 1911இல் தமிழ்நாடு முழுவதும் நிலங்களை சர்வே செய்து நிலவளத் துறை யினர் நிலங்களை வகைப்படுத்தினர். அதற்கு பிறகு 1970களில் நிலங்களை அளந்து நிலவளத்துறை வகைப் படுத்தியது. இந்த மூன்று காலக்கட்டங்களிலும் இருந்த ஒவ்வொரு நிலத்தின் தன்மையும் தற்போது மாறியுள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதி குடியிருப்பாகவும், மேய்க்கால் பகுதி நீர்ப்பிடிப்பாகவும் மாறியுள்ளது. எனவே, மூன்று நான்கு தலைமுறையாக தமிழ்நாடு முழுவதும் வாழ்ந்துவரும், லட்சக்கணக்கான மக்க ளின் குடியிருப்புகளை பாதுகாக்க பட்டா வழங்க வேண்டும்; நீதிமன்றத் தீர்ப்பினை வைத்துக்கொண்டு குடியிருப்புகளை அகற்றுவதை அரசு கைவிட வேண் டும்; உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறுபரிசீலனை மனுவை தாக்கல் செய்ய வேண்டும்; தற்போதைய தீர்ப்பை நிறுத்தி வைக்கவும், கடந்த ஐம்பது ஆண்டுகளில் நிலங்களின் வகைத் தன்மை மாறியுள்ளதை அளவீடு செய்து வகைப்படுத்த வேண்டும்; அதனடிப்படையில், நீர்நிலையினை பாது காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இதுவே மக்களின் எதிர்பார்ப்பு!
கட்டுரையாளர் : தென்சென்னை மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)