articles

img

ஊட்டிக் குளுமையில் வெப்பமிகு போராட்டங்களில் புடம்போடப்பட்ட தோழர் - ஜி.ராமகிருஷ்ணன்

களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்

தமிழ்நாடு எல்லை மாவட்டங்களில் ஒன்றான நீலகிரி என்றால் குளுகுளு ஊட்டி நகரமும், அது  கோடைக்கால சுற்றுலா தளங்களில் முக்கியமான ஒன்று என்பதும் அனைவருக்கும் தெரியும். நிலத் திற்காக விவசாயிகளும் உரிமைகளுக்காகத் தொழிலாளர்களும் நடத்திய அனல்மிகு போராட்டங்களைக் கண்ட மாவட்டம் அது என்பது, பலருக்கும் தெரியாத ஒன்று. அத்தகைய போராட்டங்களில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர் தோழர் வி.வெள்ளியங்கிரி. 1939-இல் கரூர் நகரில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் கிரி. தந்தை கட்டுமானத் தொழிலாளி. தாயும் கட்டுமான வேலை செய்தவர்தான். எஸ்எஸ்எல்சி படித்து முடித்த கிரியை, குடும்பத்திற்கு போதுமான வருமானம் இல்லாத நிலையில் பெற்றோர்களால் கல்லூரிக்கு அனுப்பிட இயலவில்லை. கிரி ஈரோடு நகரத்தில் சிறிய அளவில் ஒரு சிட்பண்ட் துவங்கினார். அது சரி வரவில்லை என்றான பிறகு பள்ளிப்பாளையத்தில் ஒரு காகித ஆலை யில் வேலைக்குச் சேர்ந்தார். நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி 1966-ஆம் ஆண்டு, ஊட்டியில் இயங்கி வந்த மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் (எச்பிஎஃப்) நிறுவனத்தில் விண்ணப்பித்து, வேலையில் சேர்ந்தார். பொதுத்துறை நிறுவன தொழிலாளியாக வேலையில் சேர்ந்தது அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை.

சிவப்புத் துண்டறிக்கை

சுமார் 6,000 தொழிலாளர்கள் வேலை செய்து வந்த அந்த நிறுவனத்தில் ஐஎன்டியுசி தொழிற்சங்கம் மட்டுமே இருந்தது. சிஐடியு  சங்கம் துவங்குவதற்காக ஐம்பது தொழி லாளர்கள் கொண்ட ஒரு ஆலோசனைக் கூட்டம்  நடந்தது. அதில் சிஐடியு மாநிலத் தலைவர் தோழர் கே.ரமணி கலந்து கொண்டார்.அக்கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில் எச்பிஎஃப் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை எதிர்த்தும், ஐஎன்டியுசி சங்கத்தின் செய லின்மையை விமர்சித்தும் ஒரு சிவப்பு துண்ட றிக்கை கொண்டுவரப்பட்டு, தொழிலாளர் களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதன் மூலம் கிடைத்த ஆதரவைப் பயன்படுத்தி சிஐடியு சங்கம் துவங்கப்பட்டது. சங்கத்தின் பொதுச்செய லாளராகத் தேர்வு செய்யப்பட்டார் தோழர் வி.வி.கிரி. 1972 மே தினத்தன்று தொழிற்சாலை வாயிலில் சிஐடியு சங்கத்தின் கொடி ஏற்றப்பட்டது. தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக சிஐடியு சங்கம் பல உறுதிமிக்கப் போராட்டங் களை நடத்தியது. சங்கத்தை ஒடுக்குவதற்காக 1975-1976 அவசரநிலை ஆட்சிக் காலத்தின் போது நிர்வாகம் சிஐடியு நிர்வாகிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்தது. தொழிலாளர்களின் நலன்களைப் பாது காப்பதில் உறுதியாக இருந்த சிஐடியு 1979-இல் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் வெற்றி பெற்று அங்கீகாரம் பெற்ற சங்கமானது.

வேலை நீக்கம் - தாக்குதல்


நிர்வாகத்தில் புரையோடியிருந்த ஊழல்களை எதிர்த்தும், தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் உறுதியாகப் போராடிய சங்கத் தலைவர்கள் வி.வி.கிரி, பானுதாஸ், டிசோசா, நாராயணன் நாயர் ஆகியோரை 1980ல் நிர்வாகம் வேலைநீக்கம் செய்தது. நிர்வாகத்தின் இந்த பழிவாங்கலை எதிர்த்து பல இயக்கங்கள் நடைபெற்றன. 1981ல் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் அதிகமான வாக்குகளைப் பெற்று சிஐடியு மீண்டும் அங்கீகாரம் பெற்ற சங்கமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 1983ம் ஆண்டு நிர்வாகத்திற்கும், சிஐடியு சங்கத்திற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சங்கத்தின் சார்பாக பொதுச்செயலாளர் வி.வி.கிரி உள்ளிட்ட நிர்வாகிகள் கையெழுத்திட்டனர். ஆனால் நிர்வாகம் அந்த ஒப்பந்தத்தை அமலாக்க மறுத்தது. நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை எதிர்த்து வேலைநிறுத்தம் நடந்தது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தடியடி நடத்தினர். இதில் தோழர் கிரியின் மண்டை உடைந்தது. கே.பரமேஸ்வரன், ஜே.ஆல்தொரை உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் காயமுற்றனர். நூற்றுக்கு மேலான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். 25 நாட்களுக்கு பிறகே பிணையில் விடுதலையானார்கள்.  

1991-ஆம் ஆண்டு வரை லாபத்தில் இயங்கிவந்த எச்பிஎப் நிறுவனம் அரசின் தவறான கொள்கையாலும் நிர்வாகத்தின் அக்கறையற்ற அணுகுமுறையாலும் நஷ்டத்தைச் சந்திக்கத் தொடங்கியது. நிறுவனத்தை லாபகரமாக இயக்கிட தொழிற்சங்கம் பல ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை முன்வைத்தது. ஆனால் அவற்றை நிறுவன நிர்வாகம் ஏற்க மறுத்தது. ஃபிலிம் உற்பத்திக்கு பதிலாக மின்னணு சிப்ஸ் உள்ளிட்டு பல மாற்றுப் பொருள்களைத் தயாரிக்க வாய்ப்பு இருந்தும், அடுத்தடுத்த ஆண்டு களில்  உற்பத்தியை முடக்கி நிறுவனத்தை மூடிவிட அரசு முயற்சித்தது. சிஐடியு தலைவர் களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் தமிழக அரசையும் ஒன்றிய அரசையும் அணுகினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் இப்பிரச்சனையை எழுப்பினார். ஆலையைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பது மாவட்ட மக்களின் ஏகோபித்த கருத்தாகவும் இருந்தது. ஆனால், ஒன்றிய அரசு செவிசாய்க்கவில்லை.  வேலைநீக்கம் செய்யப்பட்ட பிறகும் தோழர் வி.வி.கிரி தொழிலாளர்களின் ஆதரவோடு சங்கத்தின் பொதுச்செயலாளராகச் செயல்பட்டு வந்தார். கிரி உள்ளிட்ட நான்கு தோழர்களும் உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்குத் தொடுத்து 1989ல் நஷ்ட ஈடு பெற்றார்கள்.  வேலைநீக்கம் செய்யப்பட்ட ஆண்டுகளில் எச்பிஎப் சிஐடியு சங்கம் தொழிலாளர்களிடம் நிதி  வசூல் செய்து நான்கு தோழர்களுக்கும் உத வித்தொகை வழங்கியது. கிரியின் துணைவியார் நான்கு பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காகவும் குடும்பத் தேவைகளுக்காகவும் கரூரிலிருந்து படுக்கை விரிப்புகளை வரவழைத்து, விற்பனை செய்து சமாளித்தார்.

கட்சி ஊழியராக...

முன்னதாக, தோழர் கே.ரமணி தொடர்ந்து தோழர் கிரியோடு உரையாடிய பின்னணியில் 1972-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார். அடுத்தடுத்து பகுதிக்  குழு உறுப்பினராக, மாவட்டக் குழு உறுப்பினராக, மாவட்ட செயற்குழு உறுப்பினராக கிரி தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட முழுவதிலும் கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அரங்கப் பணிகளில் கிரி முனைப்பாக ஈடுபட்டார்.  வி.வி.கிரி வேலைநீக்கம் செய்யப்பட்ட அதே ஆண்டிலேயே கட்சியின் மாவட்டக் குழு  முடிவின் அடிப்படையில் முழு நேர ஊழியரா னார். தொடர்ந்து எச்பிஎஃப் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளராகச் செயல்பட்டதோடு நீலகிரி மாவட்டத்தில் பல நிறுவனங்களில் தொழிற் சங்கங்களை உருவாக்கி தலைமையேற்று  வழி காட்டினார். இதன் தொடர்ச்சியாக சிஐடியு மாவட்டக் குழு உருவாக்கப்பட்டது. அதன் மாவட்டத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் கிரி அப்பொறுப்பில் பல ஆண்டுகள் செயல்பட்டார். மேலும், சிஐடியுவின் மாநிலக்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டுப் பணியாற்றினார்.  சிஐடியு எச்பிஎஃப் சங்கத்தின் வளர்ச்சியும் பங்களிப்பும் மாவட்டம் முழுவதும் பிரதிபலிக்க, அதன் தலைவர்களது அனுபவமும் வழிகாட்டு தலும் நீலகிரியில் பல சங்கங்கள் உருவாக இட்டுச் சென்றன. அவ்வாறு பல சங்கங்களை உரு வாக்கி இயங்கிடச் செய்ததில் தோழர் வி.வி. கிரி மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. புதிய தொழிற்சங்கங்கள் உருவான பகுதிகளில் கட்சிக் கிளைகளும் அமைக்கப்பட்டன.

கோவை மாவட்டக் குழுவின் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட கட்சி இயங்கி வந்தது. மாவட்டத் தில் பல பகுதிகளில் இயங்கி வந்த பல கட்சிக் கிளை களை ஒருங்கிணைத்து 1984-ஆம் ஆண்டு ஒரு இடைக்குழு உருவாக்கப்பட்டது. இந்த இடைக் குழுவின் செயலாளராக என்.வாசு தேர்ந்தெடுக்கப்பட்டார். தோழர் வி.வி.கிரி இந்த இடைக் குழு உறுப்பினராக தேர்வானார். 1970-களின் துவக்கத்தில் ஊட்டி நகரத்தில் 5 தோழர்களை கொண்ட ஒரு கட்சிக் கிளை மட்டுமே இயங்கி வந்தது. வி.வி.கிரி உள்பட, எச்பிஎஃப் நிறுவனத்தில் உருவான  கட்சித் தோழர்கள் ஊட்டி நகரத்தில் கட்சியைக் கட்டும் பணியில் ஈடுபட்டு பல கிளைகளை உருவாக்கினார்கள். ஊட்டி நகரக் குழு உருவாக்கப்பட்டது.1988-ஆம்  ஆண்டு கட்சியின் நீலகிரி மாவட்டக் குழு உரு வாக்கப்பட்டது. மாவட்டக் குழு செயலாளராக தோழர் என்.வாசு தேர்வானார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராகத் தோழர் கிரி தேர்வுசெய்யப்பட்டார்.

நஷ்ட ஈடாக கிடைத்த நிதியில்

கோவையிலும், மதுரையிலும் கம்யூ னிஸ்ட் இயக்க வளர்ச்சிக்கு பஞ்சாலைத் தொழி லாளர்கள் அடித்தளமாக இருந்ததைப் போல ஊட்டி உள்ளிட்ட நகர்ப்புறங்களில் கட்சி வளர்ச்சி க்கு அடித்தளமிட்டவர்கள் ஊட்டி ஃபிலிம் ஆலைத் தொழிலாளர்கள்தான் என்றால் அது மிகை யாகாது. கட்சியின் நீலகிரி மாவட்டக் குழு அலு வலகத்திற்காக ஒரு இடம் வாங்க முடிவெடுக்கப் பட்டது. இதற்கு முன்பணமாக ரூ.25,000 தேவைப்பட்டது. தோழர் கிரி தனக்கு நஷ்ட ஈடாகக் கிடைத்த தொகையிலிருந்து அந்த நிதியை நன்கொடையாக வழங்கினார். 1962-ஆம் ஆண்டு கிரி-வசந்தா திரு மணம் நடைபெற்றது. இவர்களுக்கு நான்கு  மகன்கள். இவர்களில் இருவர் கட்சி உறுப்பின ராக உள்ளனர். கிரியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இப்போதும் கட்சிக்கு ஆதரவாக உள்ளனர்.தோழர் கிரியின் குடும்பம் கட்சிக் குடும்பம். ‘‘எங்களுடன் அப்பா எப்போதும் நண்ப ரை போலத்தான் பழகுவார். தோழமையோடு இருப்பார். அப்பாவையும் சேர்த்து எங்கள் குடும்ப த்தில் ஐந்து சகோதரர்களாக வாழ்ந்தோம்’’ என  கிரியின் மூத்த மகன் மன நெகிழ்வோடு கூறு கிறார்.

எட்டு ஆண்டுகள் கணவர் வேலை இழந்து இருந்த சூழலை எப்படி எதிர்கொண்டார் என்று  கிரியின் துணைவியாரிடம் கேட்டபோது அந்தச் சோதனைகள் மிக்க அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதோடு, தமது தந்தை பொன் மலையில் இரயில்வே தொழிலாளியாய் பணி யாற்றியதையும் தெரிவித்தார். தங்களுடைய குடும்பம் திருச்சி பொன்மலையில் வசித்ததைக் குறிப்பிட்டு அதை இப்போதும் பெருமையாக உணர்வதாகக் கருதுவதாகக் கூறினார் வசந்தா. தோழர் பாப்பா உமாநாத் உள்ளிட்ட கட்சித் தலைவர்களோடு பழகியதையும் நினைவுகூர்ந்தார். தோழர் கிரி உடல்நலம் பாதிக்கப்பட்டு 2022 டிசம்பர் 24 அன்று தன்னுடைய 83-ஆவது வயதில் காலமானார். அவருடைய படத்திறப்பு நிகழ்ச்சி அண்மையில் 2023 ஏப்ரல் 20 அன்று ஊட்டியில் நடைபெற்றது. தோழர் வி.வி.கிரி கடந்த 50 ஆண்டுகளுக் கும் மேலாக கட்சி உறுப்பினராக, மாவட்டக் குழு உறுப்பினராக, மாவட்டச் செயற்குழு உறுப்பின ராக, முழு நேர ஊழியராக, தொழிற்சங்க தலைவ ராக, சிஐடியு மாவட்டக் குழு தலைவராக பல பொறுப்புகளில் பணியாற்றித் தடம் பதித்தவர். நீல கிரி மாவட்டத்தில் கட்சி வளர்ச்சியிலும், தொழிற் சங்க வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றியவர். தொழிலாளர்களுக்கான போராட்டங்களுக்காகப் பல வழக்குகளையும், காவல்துறை அடக்குமுறைகளையும் எதிர்கொண்டவர்.அர்ப்பணிப்போடு அவர் ஆற்றிய இயக்கப் பணி முன்மாதிரியானது, பின்பற்றத்தக்கது.