articles

img

ஒரு இயந்திரம் போல் மனிதன் இருக்க முடியுமா? - ச.லெனின்

ஒரு இயந்திரம் நெடுநேரம் இயங்கும்போது அதைச் சற்று நேரம் நிறுத்தி  வைத்துவிட்டு மீண்டும் இயக்குவது அந்த இயந்திரத்திற்கான ஓய்வு. அதை அதற்கான தூங்கும் நேரம் என்றே குறிப்பிடலாம். ஆனால், மனிதன் இயந்திரம் அல்லவே.  ஓய்வு நேரத்தில் தூங்கி எழுந்த வுடன் உடல் சோர்வு நீங்கலாம், அதேநேரம் மனத்தின் சோர்விற்கு ஓய்வு இல்லையே. வேலைக்குச் செல்வது, தூங்குவது, மீண்டும் வேலைக்குச் செல்வது என ஒரு இயந்திரம் போல் மனிதன் இருக்க முடியுமா?  தூங்கும் நேரம்போகப் பொழுதுபோக்கும் நேரம் என்று ஒன்று  இருந்தால்தான் மனிதர்கள் தங்கள் குடும்பத்துடன் நேரம் செல வழிக்க முடியும். தனக்கு விருப்பமான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியும். படிப்பது, எழுதுவது, விளையாடுவது, ஓவியம் தீட்டுவது என்பன போன்ற மனத்தைப் புத்துணர்ச்சி கொள்வதற்கான நேரம் தேவை என்பதையே 8 மணி நேர பொழுதுபோக்கு என்பது உள்ளடக்குகிறது. உற்பத்தி கருவிகளின் வளர்ச்சி ஏற்படும் போது உற்பத்தி  உயரும். உற்பத்தி உயரும்போதும் முதலாளித்துவம் மனிதனின் உழைப்பு நேரத்தைக் குறைப்பதில்லை. மாறாக, வேலை நேரத்தை உயர்த்துகிறது. உண்மையில் முதலாளித்துவ சமூகம் தொழிலாளியை இந்திரத்தின் ஒரு பகுதியாகவே மாற்றுகிறது. இதையே, முதலாளித்துவ  சமூகத்தில், தொழிலாளி “எத்திரத்தில் பொருத்தப்பட்ட ஒரு துணையுறுப்பாய் ஆகிவிடுகிறார்“ என்று “கம்யூனிஸ்ட் அறிக்கை” யில் மார்க்சும் ஏங்கெல்சும் குறிப்பிடுகின்றனர்.

அவசிய உற்பத்தி நேரத்தைத் தாண்டி எவ்வளவு நேரம் ஒரு வேலை நாளை நீட்டிக் கொண்டு போகலாம்? என்றே மூலதனம் சிந்திக்கும். “உழைப்புச் சக்திக்கு (தொழிலாளிக்கு) சில மணி நேரம் ஓய்வு கொடுக்காமல் அவர் தன்னை புதுப்பித்துக் கொள்ள முடியாது. எனவே,  ஓய்வுக்கான அந்தச் சில மணிநேரம் தவிர்த்து, இருபத்தி நான்கு மணி நேரத்தில் மீதமுள்ள நேரமெல்லாவற்றையும் ஒரு வேலைநாள் என்றே மூலதனம் கருதுகிறது” என்று விளக்கியுள்ளார் மார்க்ஸ். உபரி மதிப்பை உருவாக்கி லாபத்தைக் குவிக்க வேண்டும் என்பதை மட்டுமே பிரதானமாகக்கொண்ட முதலாளித்துவம், வேலைநாளின் அளவை நீட்டிக்கும் போது, அது அனைத்துவிதமான தார்மீக வரம்பையும் மீறுவதோடு, தொழிலாளியின் உடலினுடைய தாங்கும் சக்தியின்  அதிகபட்ச வரம்பையும் மீறுகிறது. உழைப்பு சக்தியின் (தொழிலாளியின்) வாழ்வு காலம் இத்தகைய உழைப்புச் சுரண்டலின் காரணமாகக் குறைவது பற்றி மூலதனம் கவலைப்படுவதில்லை. இதன் மூலம் தொழிலாளி விரைவாக நலிவுற்று இறந்து போகும் நிலையை உருவாக்குகிறது. வேலை நேரத்தை நீட்டிப்பதென்பது தொழிலாளியின் ஆயுட் காலத்தைக் குறைக்கும் செயலாகும் என்கிறார் மார்க்ஸ்.

தொழிலாளியின் இறுதி சொட்டு உழைப்பு சக்தி வரை கட்டற்ற முறையில் மூலதனம் சுரண்டிக் கொழுக்கிறது. “இதன் விளைவாகத்  தொழிலாளிகள் கூட்டு எதிர்ப்பை கையாளும் நிலைக்கு வருகிறார்கள். வர்க்கத்திற்கும் வர்க்கத்திற்கும் போராட்டம் என்கிற வகையில் ஒன்று சேர்ந்த கூட்டான முதலாளிகளுக்கும், அதேபோல ஒன்று சேர்ந்த கூட்டான தொழிலாளர்களுக்குமிடையே போராட்டம் துவங்குகிறது.” ஒரு வேலைநாளின் உழைப்பு நேரத்தை இப்படியான போராட்ட வரலாறே தீர்மானித்தது. அதுவே வேலை நேரத்தை எட்டு மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கையாக எழுந்து, தொழிலாளர்களின் ரத்தச் சுவட்டில்தான் மே தினம் உருவெடுத்தது. அதன் தொடர்ச்சியாகவே வேலைநேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. தீர்மானிக்கப்பட்ட இந்த வேலை நேரத்திலும், தொழிலாளி தனது சொந்த வாழ்க்கைக்கு அவசியமாக மேற்கொள்ள வேண்டிய உழைப்புடன், உற்பத்தி சாதனங்களின் உடைமையாளனாக இருக்கும் முதலாளியின்  லாபத்திற்காகவும் சேர்த்தே கூடுதலாக உழைக்க வேண்டியுள்ளது. “தங்களையும், தங்கள் குழந்தைகளையும் அடிமைத்தனத்திற்கும், சாவிற்கும் விற்று விடாமல் தடுப்பதற்கான ஒரு பொதுச்சட்டமாக” இது அமைவதால்தான் இந்த ஒப்பந்தமும் அவசியமாகிறது. இந்த வேலைநேரமும்கூட போராட்டத்தின் விளைபொருளே ஆகும் என்கிறார் மார்க்ஸ். 

கூலி உயர்வுக்கான போராட்டங்கள் மற்றும் வேலை நேரத்தைக் குறைப்பதற்கான போராட்டங்கள் மூலம்தான் முதலாளித்துவத்திற்கு எதிராகத் தொழிலாளர்களை அணிதிரட்ட முடியும். அதேநேரம், தொழிலாளர்களின் போராட்டம் தங்களின் உழைப்பின் மதிப்பைத் தக்க வைத்து கொண்டு தங்களின் உழைப்பை விலைக்காக விற்கும் நிலையைத் தொடர்வதாகவே இருந்துவிட முடியாது. நியாயமான கூலிக்கான போராட்டம் என்பது ஒட்டுமொத்த கூலி அமைப்பு முறையை ஒழிப்பதற்கான இலக்கை உள்ளடக்கியது. கூலி உயர்வு என்பதற்கான போராட்டம் என்பதோடு நின்றுவிடாமல் சுரண்டலின் வடிவமாக உள்ள முதலாளித்துவத்தின் ‘கூலி அமைப்புமுறை ஒழிக’ எனும் புரட்சிகர முழக்கத்தைத் தொழிலாளி வர்க்கத்தினர் தங்கள் பதாகையில் பொறித்துக் கொள்ள வேண்டும் என்றார் மார்க்ஸ்.