articles

நீ பஞ்சமப்பெண் ஆனால் என்ன? - நவகவி

நீ பஞ்சமப் பெண் ஆனா என்ன?
காதல்- படுத்துதடி பாடா என்ன!

தொடைச்சி வச்ச சிலையே!
மனசில் பெய்யும் மழையே!
மணம் புரிவோம் கிளியே!

    ஒண்ட வந்த சாதிப் பேயை 
    ஓட்டலாண்டி நாட்டுக்கு வெளியே!
                (நீ பஞ்சம)

நீ - நின்ன எடம் நெய்யூறும்!
பார்த்த எடம் பாலூறும்!
என்-வீட்டுக்கு நீ விளக்கானா
விறகு கூட கரும்பாகும்!

    ஆண்டை இன்னு நினைக்காதே
    அடிமை நான் உனக்கு!
    சாட்டை வாரு பூச்சரமா
    மாறித்தானே இருக்கு!

சாணிப் பாலு தந்த ஜாதி 
காதல் பாலுதர வருது அருந்து!
                          (நீ பஞ்சம)    
அடி - விளைந்து நிற்கும் விடலைப் பெண்ணே
அடிச்ச ஜாதி அணைக்கும் வந்து!
இங்கே- புது வசந்தம் துளிர்க்க வைக்கும்
வேப்பங்கிளையில் மரிக்கொழுந்து!

    மேடையிலே ஏறி நானு
    தாலி கட்டும் போதே
    பாடையிலே ஏறி சாதி
    பயணம் போகும் மாதே!

உன் - மடிக்குள் நீ என்னைப் புதை 
இல்லாட்டி மண்ணில் புதை மானே!

                (நீ பஞ்சம)

எங்க - ஊருக்குள் தோண்டும் கிணற்றில்
ஊறுதாடி தாய்ப்பாலு?
உங்க -சேரிக்குள் தோண்டும் கிணற்றில்
ஊறுதாடி நாய்ப்பாலு?

    ரண்டிலுமே தண்ணி தானே
    ஊறிவரும் பெண்ணே?
    ராத்தூக்கம் போச்சுது என்
    கண் ஆச்சு புண்ணே!

புதுப்பாதை போடும் காலின்
ரணம் கூட ரத்தினம் பார் கண்ணே !
                (நீ பஞ்சம)