நீ பஞ்சமப் பெண் ஆனா என்ன?
காதல்- படுத்துதடி பாடா என்ன!
தொடைச்சி வச்ச சிலையே!
மனசில் பெய்யும் மழையே!
மணம் புரிவோம் கிளியே!
ஒண்ட வந்த சாதிப் பேயை
ஓட்டலாண்டி நாட்டுக்கு வெளியே!
(நீ பஞ்சம)
நீ - நின்ன எடம் நெய்யூறும்!
பார்த்த எடம் பாலூறும்!
என்-வீட்டுக்கு நீ விளக்கானா
விறகு கூட கரும்பாகும்!
ஆண்டை இன்னு நினைக்காதே
அடிமை நான் உனக்கு!
சாட்டை வாரு பூச்சரமா
மாறித்தானே இருக்கு!
சாணிப் பாலு தந்த ஜாதி
காதல் பாலுதர வருது அருந்து!
(நீ பஞ்சம)
அடி - விளைந்து நிற்கும் விடலைப் பெண்ணே
அடிச்ச ஜாதி அணைக்கும் வந்து!
இங்கே- புது வசந்தம் துளிர்க்க வைக்கும்
வேப்பங்கிளையில் மரிக்கொழுந்து!
மேடையிலே ஏறி நானு
தாலி கட்டும் போதே
பாடையிலே ஏறி சாதி
பயணம் போகும் மாதே!
உன் - மடிக்குள் நீ என்னைப் புதை
இல்லாட்டி மண்ணில் புதை மானே!
(நீ பஞ்சம)
எங்க - ஊருக்குள் தோண்டும் கிணற்றில்
ஊறுதாடி தாய்ப்பாலு?
உங்க -சேரிக்குள் தோண்டும் கிணற்றில்
ஊறுதாடி நாய்ப்பாலு?
ரண்டிலுமே தண்ணி தானே
ஊறிவரும் பெண்ணே?
ராத்தூக்கம் போச்சுது என்
கண் ஆச்சு புண்ணே!
புதுப்பாதை போடும் காலின்
ரணம் கூட ரத்தினம் பார் கண்ணே !
(நீ பஞ்சம)