“சார்... இந்த வினாவுக்கு என்ன விடை”
ஆசிரியர் அது என்ன என்று பார்ப்பதற்குள், “இப்புடி வினாவெல்லாம் கேக்குறதுக்கு எப்புடி மனசு வருதுன்னு தெரியல..” சலித்துக் கொண்டார் அந்த மாணவர்.
கூற்று கொடுத்து, அதற்கான காரணத்தைக் கொடுத்து, எது சரி, எது தவறு என்று கேட்டிருந்தார்கள்.
“சார்.. இதையெல்லாம் நீங்களும் எழுதுனீங்களா..?”
“இல்ல... எங்களுக்கு இப்புடி வினாவெல்லாம் கேக்கல”
“எங்களுக்கு மட்டும் ஏன் அப்புடிக் கேக்குறாங்க.”
“ஏன்னா... நீங்கள்லாம் புத்திசாலிங்க.”
“விளையாடாதீங்க, சார்.”
“உண்மையத்தான் சொல்றேன்.. எங்க தலைமுறைய விட உங்க தலைமுறை புத்திசாலித் தலைமுறை.. எங்கள விட உங்களுக்கு அதிகமாத் தெரியும்.”
“எங்கப்பா முன்னாடி மட்டும் சொல்லிராதீங்க சார்... அவ்ளோதான்”
“ஆமா சார்... எங்க வீட்டுக்கு அப்பாவோட நண்பர்கள் நாலு பேரு வருவாங்க.. ஒண்ணா உக்காந்தாங்கண்ணா, இப்பல்லாம் என்ன பசங்கனு ஆரம்பிச்சு ரெண்டு மணி நேரம் திட்டித் தீர்த்துருவாங்க.”
“ஒவ்வொரு தலைமுறையும், அடுத்த தலைமுறையப் பத்தி அப்புடித்தான் பேசிட்டு வருது... ஆனா, ஒவ்வொரு அடுத்த தலைமுறையும் முந்தைய தலைமுறைய விட அதிக அறிவோடதான் இருக்கு.”
“அப்படியா சார்.”
“ஆமா.. முந்தைய தலைமுறைகிட்ட இருந்தும் விஷயங்கள் கிடைக்குது... அதிகத் தொடர்போடயும், கூடுதல் கல்வியோடயும் நீங்க இருக்கீங்க... கொஞ்சம் கூடுதல் வெளிப்படைத்தன்மையும், சகிப்புத்தன்மையும் உங்க தலைமுறைக்கு இருக்கு.”
“எங்கள வெச்சு காமெடி, கீமெடி பண்ணலியே சார்.”
“இப்புடித்தான் ஆய்வாளர்கள் சொல்றாங்க. ஆனா, எங்கிட்ட ஒரு வினா இருக்கு. முந்தைய தலைமுறைக்கு இருக்குறத விட, உங்க தலைமுறைக்கு அதிகமா இருக்குனு சொல்றப்ப, அந்த அதிக அறிவு என் முன்னாடி உக்காந்திருக்குற உங்க கிட்ட இருக்கா..?”
“என்ன சார், இப்புடிக் கேட்டுட்டீங்க.”
“இதுதான் நீங்க வேலை தேடுறப்ப வெக்குற தேர்வுகளோட நோக்கம்.. நாங்க எழுதுறப்ப 200 வினாக்கள் இருந்தா, ஒவ்வொரு வினாவுக்கு நான்கு விடைகளைக் கொடுத்து அதுல எது சரினு தரணும். மிஞ்சிப் போனா பொருத்துக மட்டும்தான் வேற மாதிரி இருக்கும்.”
“பாடத்துக்குப் பின்னாடி இருக்குற வினாக்கள் பல வகையா இருக்கே சார்.”
“ஆமா.. எங்க காலத்துல 200 வினாக்களுக்கு 200 விடைகள் கொடுத்தா போதும். இப்போ 200க்கு எப்புடியும் 250 விடைகள் தேவைப்படுது.”
“ஆமா சார்.. ஒரு வினா குடுத்து, அதுக்கு நான்கு விடைகளைக் கொடுத்து, அந்த நான்கில் 1,2, 4 சரி, 1,3, 4 சரி, 1,2,3 சரி, எதுவுமே சரியில்லைனு தர்றாங்க... வினாவே சரியில்லைனு அடுத்த வினாவுக்குப் போயிர்றோம்.”
“சார்... இதுக்கெல்லாம் விடையை நான் போட்டுர்றேன் என்று ஒரு மாணவி சொன்னதும், மேலும் பல கரங்கள் உயர்ந்தன.”
“ஒரு டி.வி. விளம்பரத்துல கூட உங்கள நல்லாக் காட்டுறாங்க”
“அப்படியா... நாங்க பாக்காத விளம்பரமா அது சார்..?”
“ஒரு பையன் வீட்டுல உக்காந்து படிச்சுட்டு இருப்பான். கொசுத்தொலலை தாங்கல.. கடிச்சுட்டே இருந்துச்சு. அப்போ அப்பா வர்றார். அப்பா.. கொசு கடிக்குதுன்னு சொல்றான். உடனே அப்பா, கண்ணை மூடிக் கடவுள வேண்டிக்கோ... அவரு கொசுவ விரட்டிடுவாருனு சொன்னாரு.. அவனும் கண்ண மூடிக்குவான்... புதுசா வந்திருக்குற பேப்பர் மாதிரி இருக்குற கொசுவர்த்தியக் கொளுத்தி டேபிளுக்கு அடில அப்பா வைப்பாரு.”
“கொசுவெல்லாம் பறந்து ஓடிரும்.. நான் இந்த விளம்பரத்தப் பாத்துருக்கேன் சார்.”
“கண்ணைத் திறனு அப்பா சொல்வாரு... அவன் கண்ணத் திறந்தவுடனே, பாத்தியா, நீ வேண்டிக்கிட்டவுடன கடவுள் கொசுவ விரட்டிட்டாருனு சொல்வாரு.”
குறுக்கே புகுந்த மாணவர், “உடனே பையன், கடவுள் டேபிளுக்கு அடில இருக்காராப்பான்னு கேப்பான்”. வகுப்பு கலகலத்தது.
“அந்தப் பையன்கிட்ட எங்க தலைமுறைக்கு வேண்டிய அறிவு இருக்கு. அப்படித்தான சார்”
“நீங்க எல்லாரும்தான் அந்தப் பையன்” என்றவாறே கிளம்பினார் ஆசிரியர்.