articles

img

சத்தத்தால் கொல்லும் ஆடியோ பயங்கரம் - நீடா சுப்பையா

தமிழ்நாட்டில் பெரும்பாலான தனியார் பேருந்து களில் குறைந்த ஆடியோ அதிர்வெண்கள் (Low sound frequencies) கொண்ட அதே சமயத்தில்  அதிக ஒலி (volume) அளவு கொண்ட டொம் டொம் ஊபர் சத்தம் சில் சில் (High audio frequencies) தரமில்லா சத்தம் சகிக்க முடியாத அளவிற்கு பெருகி வருகிறது.  தனியார் பேருந்தில் மாட்டிக்கொண்ட உடல்நல பிரச்சனை உள்ள வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் படும்பாடு சொல்லி மாளாது. இரைச்சல் அளவு எல்லை மீறினால் அதாவது 85 டெசிபல் அளவைத் தாண்டினால் அது இரைச்சல்தான் என்பதும் மேலும் அதிகரித்தால் அது நாராசமாக நரம்பு மண்டலத்தை பாதிப்பதோடு உயர் ரத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் படபடப்பு  மனஅழுத்தத்தை உருவாக்கும் என்றும் ஒலி மாசுபாடு குறித்த அறிவியல் கூறுகிறது.  இந்த இரைச்சல் பேருந்தில் 40, 50 கிமீ. தூர பயணம் செய்துவிட்டு இறங்கி வந்தவர்கள் சம மன நிலைக்கு  மீண்டு வர ஒரு மணி நேரமாவது ஆகும். குறிப்பாக  தொடர்ந்து இந்த பேருந்துகளில் புறநகர் பயணங்கள் மேற்கொள்ளும் இதய நோயாளிகளுக்கு இவை மிகவும் மோசமாக தீங்கிழைக்கும் என மாசு கட்டுப்பாட்டு வாரியத் தைச் சார்ந்த முன்னாள் அலுவலர் ஒருவர்குறிப்பிட்டார். 

பொதுத்தேர்விற்கு செல்லும் மாணவர்கள், அடிக்கடி செல்பேசிகளில் அவசரமாக பேச வேண்டிய  கட்டாயத் தில் உள்ள அரசு அலுவலர்கள், வணிகர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் மரணத்திற்கு செல்பவர்கள் என வாழ்வின் அனைத்து தளங்களிலிருந்தும் பயணம் செல்லும் பொதுமக்களின் மனநிலைக்கு எதிரான இந்த அவலம் ஒரு சமூக பிரச்சனையாக இன்று மாறி வருகிறது.  இதன் விளைவாக அன்றாடம் புறநகர் பேருந்துகளில் பயணம் செய்யும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக் கப்படுகின்றனர். புதிய இருதய நரம்பியல் நோயாளிக ளை உற்பத்தி செய்யும் வதைக் கூடங்களாக மிக உயர்  ஒலி அளவு பாட்டு சாதனங்கள் பொருத்தப்பட்ட தனியார் பேருந்துகள் மாறி வருகின்றன.  ஏற்கனவே இந்த பேருந்துகளில் இச்சாதனங்கள் வைப்பதை தடை செய்யும் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 176(6) மற்றும் 367 முன்பு அமலில் இருந்தன. 1995-ஆம் ஆண்டில் ஒரு நீதிப்பேராணை வழக்கு ஒன்றில் (S.Sengoda Gounder Vs State of TamilNadu and The Regional Transport Authority) இவ்விதிகளை நீக்கி சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வு ஆணை பிறப்பித்திருந்தது. 

தடை விதிக்க மறுப்பு

அந்த ஆணையில் மோட்டார் வாகன  சட்டப்பிரிவு கள் 110 மற்றும் 111-களையும் அதன் வெளிச்சத்தில்    உரு வாக்கப்பட்டிருந்த தமிழ்நாடு மோட்டார் வாகன விதி களை பற்றியும் ஏராளமான சட்ட  தொழில்நுட்பங்களுடன் விவாதித்து முடிவில் இதுபோன்ற மின்னணு சாத னங்களை வைப்பது பொது சுகாதாரத்தை எந்த வகையில் பாதிக்கும் என்பதை மதிப்பிட முடியவில்லை என்றும் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து அமைப்பில்  பய ணத்தை மகிழ்ச்சியாக மாற்றும் இது போன்ற  சாதனங்க ளை வைப்பதை தடை செய்ய  முடியாது  என கருத்து தெரிவித்து தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள்  176(6) மற்றும் 367- ஐ நீக்கியது.  கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இதைப் போன்றே வேறு ஒரு நீதிப்பேராணை வழக்கில் (George vs State Of Kerala) சென்னை உயர்நீதி மன்றத்தின் இந்த நீதிப்பேராணை மனுவின் ஆணை மேற்கோள் காட்டப்பட்டு வாதிடப்பட்டபோது, தமிழ்நாடு விதிகள் கட்டமைக்கப்பட்ட சூழலையும் எஸ்.செங்கோட கவுண்டர் வழக்கின் தன்மையையும் விரிவாக ஆராய்ந்த  கேரள உயர்நீதிமன்ற நீதியரசர் டி.பி.ராதாகிருஷ்ணன், எஸ்.செங்கோட கவுண்டர் வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் கூறியது போல், மோட்டார் வாகன சட்டத்தின் VII அத்தியாயத்தில் உள்ள “ஒழுங்குபடுத்துதல்” என்ற வார்த்தைக்கு கட்டுப்படுத்தப்பட்ட பொருளை வழங்க முடியாது என்று கருதுகிறேன். 

கேரள நீதிமன்றம் ஏற்க மறுப்பு

எஸ்.செங்கோட கவுண்டர் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கூறிய கருத்துக்களுடன்  உடன்படமுடியாத எனது இயலாமையை மரியாதையுடன் தெரிவிக்கிறேன் எனவும் கேரள உயர்நீதிமன்ற நீதியரசர் தனது ஆணை யுரையில் விளக்கியிருந்தார். கேரள மோட்டார் வாகன விதி 289-இன் படி, ஒப்பந்த சொகுசு பேருந்துகளைத் தவிர, பயணிகள் பேருந்துகளில்  ஆடியோ காட்சி சாத னங்கள் நிறுவப்படக் கூடாது என முடிவு செய்து கேரள தனியார் பேருந்து உரிமையாளர்  நீதிப்பேராணை மனுவை டிஸ்மிஸ் செய்தது.  இதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்னவென் றால் கேரளா கொச்சி மாநகரில் 18.3.2019 அன்று ஒரே சமயத்தில் 20 பயணிகள் பேருந்துகளை தடுத்து நிறுத்தி ஆடியோ மின்னணு சாதனங்கள் போக்குவரத்து துறை யினரால் அதிரடியாக நீக்கப்பட்டன. ஆனால் ஒப்பந்த சொகுசு பேருந்துகளில் அனுமதிக்கப்பட்டன. தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 176(6) மற்றும் 367- சென்னை உயர்நீதிமன்றத்தால் நீக்கப்பட்டபோது (1995-இல்)  அதிமுக ஆட்சியில் இருந்தது. இவ்விதிகள் நீக்கப்பட்ட தற்கு மேல் முறையீடு செய்யப்பட்டதாகவோ அல்லது இந்த அவலத்தை தடுக்கக்கூடிய அல்லது கட்டுப் படுத்தக்கூடிய கேரளத்தைப் போல தெளிவான மோட்டார் வாகன விதிகளுக்கான புதிய சட்டவியல் முயற்சி கள்  அப்போதைய ஆட்சியில் துவக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. இன்று ஆட்சி மாறி இரண்டாண்டு ஆகிவிட்டது.  தமிழ்நாட்டு பேருந்துகளில் நிலவும் இந்த ஆடியோ அவஸ்தையை  முடிவுக்கு கொண்டு வர புதிய விதி வரைவை உருவாக்க வேண்டும். இந்த துயர பிரச்ச னைக்கு  முடிவு கட்ட வேண்டும். இதையே   தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக மூத்தகுடிமக்கள், உடல்நலக் குறை பாடு உள்ளவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.