articles

புரிந்து கொள்! - கோவி.பால.முருகு

உடம்பில் ஓடும் குருதி எல்லாம்
   ஒன்றுதான் தம்பி-அதில்
அடங்கும் பிரிவு வகைகள் எல்லாம்
    அறிவியல் தம்பி!

வர்ணம்  பார்த்து குருதி தன்னை
     வகுக்க முடியுமா?-தம்பி
கர்ணம் போட்டால் கூட சாதி
      கண்ணில் தெரியுமா? 

வழிந்து ஓடும் கண்ணீர் அதனில்
         வர்ணம் தெரியுமா?-தம்பி
இழிந்த சாதி உயர்ந்த சாதி
           இனத்தைக் காட்டுமா?

உறுப்பை வைத்து வர்ணம் தன்னை
        உணர முடியுமா?-தம்பி
வெறுப்பை விதைக்கும் சாதி மதங்கள்
        விளங்கத் தெரியுமா? 

மக்கள்  தன்னில்  பேதம் பார்க்கும்
          மடமை வேண்டுமா?-தம்பி
ஈக்கள் மொய்க்கும் சாதி மதங்கள்
          இங்கு வேண்டுமா?

இரண்டு வர்க்கம் மட்டும்  உண்டு
         இதனை  அறிந்துகொள்!-தம்பி
சுரண்டும் வர்க்கம் உழைக்கும் வர்க்கம்
        சூழல்   புரிந்துகொள்!