உடம்பில் ஓடும் குருதி எல்லாம்
ஒன்றுதான் தம்பி-அதில்
அடங்கும் பிரிவு வகைகள் எல்லாம்
அறிவியல் தம்பி!
வர்ணம் பார்த்து குருதி தன்னை
வகுக்க முடியுமா?-தம்பி
கர்ணம் போட்டால் கூட சாதி
கண்ணில் தெரியுமா?
வழிந்து ஓடும் கண்ணீர் அதனில்
வர்ணம் தெரியுமா?-தம்பி
இழிந்த சாதி உயர்ந்த சாதி
இனத்தைக் காட்டுமா?
உறுப்பை வைத்து வர்ணம் தன்னை
உணர முடியுமா?-தம்பி
வெறுப்பை விதைக்கும் சாதி மதங்கள்
விளங்கத் தெரியுமா?
மக்கள் தன்னில் பேதம் பார்க்கும்
மடமை வேண்டுமா?-தம்பி
ஈக்கள் மொய்க்கும் சாதி மதங்கள்
இங்கு வேண்டுமா?
இரண்டு வர்க்கம் மட்டும் உண்டு
இதனை அறிந்துகொள்!-தம்பி
சுரண்டும் வர்க்கம் உழைக்கும் வர்க்கம்
சூழல் புரிந்துகொள்!