articles

img

அக்.6 ஆளுநர் மாளிகைகள் முற்றுகை

சென்னை, செப். 11 - நாடு முழுவதும் அக்.6 அன்று ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அகில இந்திய சாலை போக்குவரத்து சம்மேளன பொதுச் செய லாளர் ஆர்.லட்சுமய்யா தெரிவித்தார். அகில இந்திய சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் பொன்விழா (50 ஆண்டு) கருத்தரங்கம் ஞாயிறன்று (செப்.  10) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் நடத்தியது. இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து  பேசிய ஆர்.லட்சுமய்யா, “மோட்டார் தொழிலை ஒன்றிய அரசு கார்ப்பரேட்மயமாக்கி வருகிறது. பயனாளிகள், ஓட்டுநர்களிடம் இருந்து ஓலா, உபேர் போன்ற செயலி நிறு வனங்கள் கொள்ளையடிக்கின்றன. தென்னை மரத்தில் ஏறி புல் இருக்கிறதா எனப் பார்த்தேன் என்ற கதையாக, செயலி நிறுவனங்களால் சாலை விபத்துக்கள் குறையும் என்று கதை யளக்கின்றனர்” என்றார். “

மோட்டார் தொழிலில் அரசு சார்ந்து 7 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அதை தவிர்த்த வேறு எந்த கணக்கும் ஒன்றிய அரசிடம் இல்லை. இந்தியாவில் சுமார் 10 கோடி பேர் மோட்டார் வாகன தொழிலில் உள்ள னர். அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 விழுக்காடு பங்களிப்பு செய்கின்றனர். பெட்ரோல், டீசல் விற்பனை வாயிலாக 4.92 லட்சம் கோடி ரூபாய் ஒன்றிய அரசு லாபம் ஈட்டுகிறது. ஆனால், மோட்டார் வாகன தொழி லாளர்களுக்கு எந்த ஒரு சமூகப் பாதுகாப்பு திட்டத்தையும் செயல்படுத்த மறுக்கிறது. இந்த லாபத்திலிருந்து 30 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி, எண்ணெய் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு, நாடு முழுமைக்குமான சமூகப் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த முடியும்” என்றும் அவர் கூறினார். “மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும், சமூகப் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.6  அன்று ஆளுநர் மாளிகைகளை முற்றுகை யிட்டு போராட்டம் நடைபெறும்” என்றும் அவர் தெரிவித்தார்.

ஒர்க் ஷாப் தொழிலே இல்லாமல் போகும் அபாயம்

பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டு பேசிய சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், “ஒரு வாகனத்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் உதிரி பாகங்களையே பயன்படுத்த வேண்டும். அந்த நிறுவனத்தின் பழுதுபார்க்கும் மையத்தில்தான் (சர்வீஸ் சென்டர்) பழுதுபார்க்க வேண்டும் என்று இருச்சக்கர வாகனம் பழுதுபார்க்கும் தொழி லை அழிக்கும் வகையில் அரசு சட்டங்களை திருத்தி உள்ளது. இதனால் அடுத்த சில ஆண்டு களில் இருச் சக்கர வாகனம் பழுதுபார்க்கும் சுயதொழிலே இல்லாமல் போகும். இதே நிலையைத்தான் அனைத்து துறைகளிலும் அரசு ஏற்படுத்தி வருகிறது” என்றார். “மின்சாரத்தை நவீன முறையில் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது. சென்னை தி.நகர் பகுதியில் மின்சாரத்தை கணக்கிட திறன் மிகு அளவி (ஸ்மார்ட் மீட்டர்) பொருத்தப் பட்டுள்ளது. நாடு முழுவதும் திறன்மிகு அளவி களை தனியார் மூலம் மாற்றுகின்றனர். இதற்கு 35 லட்சம் கோடி ரூபாய் செலவாகிறது. இந்த  பணத்தை மக்களிடம் இருந்து தவணை முறையில் வசூலிக்க உள்ளனர். ரயில்வேயில் தண்டவாளம் மட்டும் அர சிடம் இருக்கும். ரயில், ரயில் நிலையங்கள்  உள்ளிட்டவை தனியாரிடம் கொடுக்கின்ற னர். தனியாரை கவர்ந்திழுக்க 20 ரூபாய்  கட்டணங்களை 150 ரூபாயாக மாற்றி வரு கின்றனர். இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை மறைக்க ஒன்றிய அரசு புதுப்புது பிரச்சனைகளை எழுப்பி மக்களை திசை திருப்பி வருகிறது. இவற்றையெல்லாம் மக்களை திரட்டி முறியடிப்போம்” என்றார்.

திறனுக்கேற்ற ஊதியம் இல்லை

கருத்தரங்கை நிறைவு செய்து பேசிய சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், “இந்தியாவில் திறன்மிகுந்த, திறமையான மோட்டார் தொழிலாளர்களுக்கு, அதற் கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை. தற்காலத்திற்கு ஏற்ப மோட்டார் வாகன தொழி லாளர் சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டும். வேலை நேரத்தை கறாராக அமல்படுத்த வேண்டும். பணியிடங்களில் ஓய்வறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்” என்றார். “நவீன தொழில்நுட்பங்கள் தொழிலா ளர்களின் பணிகளை இலகுவாக்க வேண்டும்.  அதுதான் வளர்ச்சி. மாறாக, ஆட்குறைப்பு, வருமான இழப்பை ஏற்படுத்துவதை வளர்ச்சி யாக கருத முடியாது. உலக நாடுகளில் உள்ளது போல், வேலை நேரத்தை வாரத்திற்கு 35 மணி நேரமாக குறைக்க வேண்டும். முறைசாரா தொழிலாளர்களாக உள்ள மோட்டார் வாகன தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து, கொடுக்கும் அழுத்தம்தான் ஆட்சியாளர்களை மாற்றி சிந்தித்து செயல்பட வைக்கும்” என்றும் அவர் கூறினார்.

சுங்கக் கட்டணக் கொள்ளை

நிகழ்வுக்கு தலைமை தாங்கி பேசிய மாநில சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார், “பெட்ரோல் - டீசல்  விற்பனையின் மூலம் 27 ஆயிரம் கோடி ரூபாயை சாலைப் பராமரிப்பு வரியாக வசூலிக்கிறது. இதற்கு மேலும், சுங்கக் கட்டணம் (டோல்கேட்) வசூலித்து கொள்ளை யடிக்கிறது. மோட்டார் தொழிலும், தொழில் நிலைமையும் மோசமான நிலையில் உள்ளது. வாகன உரிமையாளர்கள் அனைவரும் கடனாளிகளாக உள்ளனர். இந்த தொழிலில் கடுமையான சுரண்டலும் நடைபெறுகிறது. இவற்றை சரி செய்ய அனைத்து வகை மோட்டார் தொழிலாளர்களும், சங்கங்களும், ஒரே அமைப்பாக ஒன்று திரண்டு பெரும் போராட்டத்திற்கு தயாராவோம்” என்றார்.

சாலை விபத்துக்கள்

சாலை போக்குவரத்து நிறுவனத்தின் (ஐஆர்டி) முன்னாள் இணை இயக்குநர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “கடந்தாண்டு சாலை விபத்துகளில் சீனாவில் 2 லட்சம் பேரும், இந்தியாவில் 1.50 லட்சம் பேரும் இறந்துள் ளனர். இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் இறப்போரில் 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. 85 விழுக்காடு விபத்துக்கள், சாலை யை உபயோகிப்பவர்களின் ஒழுங்கின்மை யால் நிகழ்கிறது. குறிப்பாக, நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகளால் 33 விழுக்காடு விபத்துகள் நிகழ்கிறது. இதனை தவிர்க்க கவனமுடன் சாலையை பயன்படுத்த வேண்டும்” என்றார்.

அரசு அழைத்துப் பேசுமா?

“சாலை பாதுகாப்பு தொடர்பாக கடந்த 15 வருடங்களில் ஒருமுறை கூட மோட்டார் வாகன தொழிலில் உள்ளவர்களை அரசு அழைத்து பேசவில்லை. தமிழக அரசின் ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’ மணி நேர திட்டத்தால் மோட்டார் வாகன தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நடைபெறும் விபத்துகளில் 56 விழுக்காடு இருச்சக்கர வாகனங் களால் நிகழ்கிறது. இதனை தடுக்க நெடுஞ்சாலைகளில் இருச்சக்கர வாகனங் களுக்கு தனிப்பாதையை ஏற்படுத்த வேண்டும்” என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையார் பெடரேஷன் தலைவர் எஸ்.யுவராஜ் குறிப்பிட்டார். இந்நிகழ்வில்  மாநில சம்மேளன பொதுச் செயலாளர் வி.குப்புசாமி, பொருளாளர் பி.பார்த்தசாரதி, துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன், மத்தியசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.முருகேஷ், செயலாளர் ம.உதயகுமார், பன்னாட்டு போக்குவரத்து நிபுணர் முனைவர் வி.அமுதன், தமிழ்நாடு ஓட்டு நர் பயிற்சி பள்ளி உரிமையாளர் கூட்டமைப்பு தலைவர் ஆர்.முரளிதரன், தமிழ்நாடு இருச் சக்கர வாகன பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.ஜானகிராமன் உள்ளிட்டோர் பேசினர். (ந.நி.)