நூறாண்டு வரலாற்றில் முதன்முறையாக நோபல் பரிசை இரண்டு முறை வென்றவர் மேரி கியூரி. அதுவும் இயற்பியல் மற்றும் வேதியல் என இரண்டு வெவ்வேறு துறைகளில், அந்தச் சாதனையை நிகழ்த்தியவர் ஒரு பெண் என்பதே அந்தச் சாதனைக்கு தனிச்சிறப்பும் பெருமையும் சேர்க்கிறது. ஏனெனில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படாத அந்த கால கட்டத்தில் கலை, அறிவியல் போன்ற துறைகளில் பெண்களால் சாதிக்க முடியாது என்று கருதப்பட்ட காலத்தில், அறிவியல் ஆண்களின் தனிச்சொத்து என்று இறுமாப்புடன் இருந்த காலத்தில் அந்த மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டது. வாய்ப்பு வழங்கப்பட்டால் ஆண்களுக்கு நிகராக சாதிப்போம் அல்லது ஆண்களையும் மிஞ்சுவோம் என்று ஒவ்வொரு பெண்ணையும் நிமிரச் செய்தவர்தான் அறிவியல் மேதை மேரி கியூரி.சிறுவயது முதலே பெண்களை அடக்கி வைக்கும் பொதுப் புத்திக்கு எதிராக யோசிப்பவராக இருந்தார் கியூரி.
போலந்து நாட்டில் 1867, நவம்பர் 7 ஆம் நாள் வார்சாவில், “மரியா ஸ்க்லடவ்ஸ்கா” என்னும் பெயருடைய மேரி கியூரி ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை வ்லேடிஸ்லாவா ஓர் ஆசிரியர் மற்றும் கடவுள் மறுப்பாளர். அன்னை பிரோநிஸ்லாவா. இவரும் ஆசிரியர். போலந்தின் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் மரியாவின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டதனால் மரியா மற்றும் அவரது மூத்த சகோதர சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை வாழ மிகவும் அல்லல் பட்டனர். பட்டினி கிடந்தனர்; வாழ்க்கைக்கான போராட்டம் வெல்ல முடியாமல் இருந்தது. அம்மாவுக்கு காசநோய் இருந்ததால் பிள்ளைகளை தொட்டு தூக்கவே மாட்டார். மேரி கியூரிக்கு 12 வயது ஆனபோது, அன்னை உயிர் துறந்தார். உறைவிடப் பள்ளியில் இருந்தே படித்தார். சிறுவயதில் மேரிக்கு அற்புதமான நினைவுத்திறனும் அறிவுத்திறனும் இருந்தது. அப்போது போலந்து நாடு ரஷ்ய ஜார் மன்னனுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தது. போலிஷ் மொழியை ரகசியமாகவே படிக்க வேண்டிய கட்டாயம். அப்பொழுதெல்லாம் போலந்து தேசத்தின் விடுதலைக்காக மாணவர் இயக்கங்களில் மேரி இணைந்து பணியாற்றிஇருக்கிறார். வீட்டில் வறுமை வாட்டவே வேலைக்காரியாக பணிசெய்து குடும்பத்தின் துயரைத் துடைத்தார். மேரி தனது 15 ஆவது வயதில், ரஷ்ய பள்ளியில், பள்ளி இறுதி நிலையில் தங்கப் பதக்கம் பெற்றார். தொடர்ந்து அறிவியல் படிக்க எண்ணினார். அவரின் குடும்ப சூழல் அதற்கு இடம் தரவில்லை. அவர் முன்னே இரு பெரும் பிரச்சனைகள் பூதமாக நின்றன. 1.மேரி ஆசைப்படும் பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்க தந்தையிடம் போதுமான பணம் இல்லை. 2. மேலும் பெண்களுக்கான மேற்படிப்பு போலந்து நாட்டில் இல்லை. என்ன செய்ய ? ஒரு முடிவு எடுத்தாக வேண்டும்; தமக்கையும் படிக்க வேண்டும். தீவிர சிந்தனைக்குப் பின்னர் ஒரு முடிவு எடுத்தார். அதுதான் தமக்கையை தான் படிக்க வைப்பது. மேரி , தனிக்குடும்பங்களில் வாழும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது என தீரமான முடிவு எடுத்தார். அதன்படி. அவரது அக்கா, புரோன்யா (Bronya ) பாரிசுக்குப் போய் மருத்துவம் படித்தார். .ஆனால் மேரியால் தான் விரும்பியபடி அவரால் உயர்கல்வியை எளிதாகப் படிக்க .முடியவில்லை. ஆனா லும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், படித்து தீர்த்தார். அறிவுப் பசி தீர்க்க கணிதம், இயற்பியல் மற்றும் வேதியல் என படித்து தள்ளினார். ஏராளமாய் படித்தார்.
வாழ்க்கை தந்த பிரான்ஸ்
இப்படியே தமக்கைக்காகவும், எதிர்கால தனது படிப்புக்காக வும், மேரி இரண்டு வருடங்கள் பணி புரிந்து பணம் சேர்த்தார். பின்னர் அங்கேயே போலிஷ் மாணவர்களுக்கு நடத்தப்படும் , ஒரு சட்டத்திற்கு புறம்பான ஒரு சுதந்திர பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கேயே, அறிவியல் உரைகளைக் கேட்டார். ஆய்வக செயல்முறைகளையும் செய்து பார்த்தார். போலிஷ் கலாச்சாரம் கற்றுக் கொள்வதும், ஆய்வக அறிவியலையும் செய்வது. இரண்டுமே ரஷ்ய அதிகாரிகளுக்கு பிடிக்காது. எனவே யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே இவற்றை மேரி செய்தார். பின்னர் 1891, நவம்பர் மாதம், 24 ஆம் வயதில் பிரான்ஸ் நோக்கி மேற் படிப்புக்கு போனார். அங்கேயும் இவரது வறுமை துரத்தியது. பசியோடும், பட்டினியோடும், வறுமையோடும் போராடிக் கொண்டே ஆய்வுகள் செய்தார். அவர் படித்த பல்கலைக்கழகம் மிகவும் மதிப்பு பெற்ற பல்கலைக்கழகம். அங்கே வேதியல், இயற்பியல், மற்றும் கணிதம் இவைகளை பிரெஞ்சு மொழி யிலேயே போதித்தனர். மேரியின் திறமையால், அவர் வெகு விரைவில் பிரெஞ்சு மொழியைக் கற்றுக் கொண்டு, கையாண்டார்.
பனியிலும் பசியிலும் படிப்பு
பாரிசில் கொஞ்ச காலம் தமக்கை மற்றும் அவரின் கண வருடன் இருந்தார். பின்னர் மேரி, தனியாக வீடு எடுத்து தங்கினார். ஐரோப்பாவில் எப்போதும் குளிர்கால பனிப் பொழிவு வாட்டி வதைத்து விடும். வறுமை மிகுந்த மேரிக்கு குளிர்காலமும் கொடுமை இழைத்தது. சூடாக்கப்படாத அறை அவரின் எலும்புக்குள் குளிரை ஈட்டியாய் பாய்ச்சியது. உடல் விறைத்தது. சில நேரங்களில் அவர் மயங்கியும் விழுந்தார். பசியினாலும் கூட. அங்கே காலையில் படித்து மாலைகளில் பயிற்சி வகுப்பு எடுத்தார். 1893 கோடையில், தனது 26 ஆம் வயதில், அந்த பல்கலையில் மேரி முதல் மாணவராக வந்து சாதனை படைத்தார். அவரின் கிரீடத்தில் இன்னொரு வெற்றிச் சிறகு குடிஏறியது. 1894ல் வேதியல் மேற்பட்ட படிப்பை முடித்தார். போலந்துக்கு விடுப்பு எடுத்து செல்லும்போதெல்லாம் வேலை தேடினார். போலந்து மேரிக்கு படிப்பும் தரவில்லை. பணியும் தரவில்லை.
3 மணி நேரம் தண்ணீர் இல்லை
மேரி கியூரி மீண்டும் பாரிஸ் திரும்பினார். ஆராய்ச்சிக்கு பதிவு செய்தார். முதன்முதலில் ஈயத்தின் காந்த சக்தி பற்றி Ph.D., ஆய்வு. பேராசிரியர் பியரியை சந்தித்தார்; அப்போதே பியரி கியூரி (1859-1906,) மேரியின் மனத்திலும் வாழ்க்கையிலும் நுழைந்தார். பியரி மேரியிடம் தன் அன்பை பகிர்கிறார். தான் போலந்து போய் அங்கேயே வாழப் போவதாக பியரியிடம் சொல்கிறார். பியரி தானும் அவருடன் போலந்து வந்து வாழ்வதாக வாக்களிக்கிறார். இடையில் மேரி போலந்துக்கு சென்று வேலை தேடுகிறார். அங்கே அவர் பெண் என்பதாலேயே அவருக்கு அந்த பல்கலை.யில் பணி தர மறுப்பு வருகிறது. வேதனையுடன் பாரிஸ் திரும்புகிறார் மேரி .
பிரான்சின் முதல் முனைவர்
பாரிசுக்கு வந்த மேரியின் ஒரே ஆதரவு பியரிதான். பியரிக்கு காந்தவியலில் கட்டுரை எழுத உதவுகிறார்.அந்த கட்டுரை தான், பியரி ஆய்வு முனைவர் பட்டம் பெற பெரிதும் உதவு கிறது. பியரி முனைவர் பட்டம் பெற்று, பேராசிரியர் ஆகிறார். இருவருக்கும் கொள்ளை மகிழ்ச்சி. இருவருக்கு இடையில் எல்லா வேதியலும் ஒத்திருந்தன. அறிவியல் ஆர்வமே இருவருக்கான் இணைப்பு. எளிமையாக திருமணம் நடந்தது. வாழ்க்கையில் காதல் பரிணாமமும் பரிமாணமும் போட்டி யிட்டன. அவர்கள் இருவருக்கும் இரண்டு விருப்பமான பொழுது போக்குகள். மிதிவண்டி பயணமும், நீள் நெடிய பயணங்களும், இருவரின் இஷ்டமான பொழுதுபோக்குகள். இவை இருவரின் நெருக்கத்துக்கு அதிக நெருப்பூட்டியது. காதல் மிகுந்தது. ஆனாலும் மாட்டு தொழுவம் போலிருந்த ஒழுகிக் கொண்டு இருந்த ஆய்வகத்தில்தான் இருவரும் ஆய்வுகள் செய்தார்கள். அங்கிருந்து தான் மேரி முனைவர் பட்டம் பெற்றார். பிரான்சில் முதல் முனைவர் பட்டம் பெற்ற பெண் மேரி கியூரி தான். இன்னொரு விஞ்ஞானி பெக்கொரல், யுரேனிய உப்பில் இருந்து கதிர்வீச்சு வருவதை உலகுக்கு சொன்னார்.. முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக்கு யுரேனியத்தின் கதிர்கள் எதிலிருந்து வருகின்றன என்று மேரி ஆய்வு செய்தார்.அவருக்கு உதவ தன்னு டைய பிற ஆராய்ச்சிகளை பியரி ஒதுக்கினார். அணுக்கருவில் இருந்தே கதிரியக்கம் வருகிறது என்று சொல்லி உலகை வியப்பில் ஆழ்த்தினார். இந்த மூவருக்கும்தான் 1903ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.
போலந்து பொலோனியம்
பிட்ச்ப்ளேண்டே எனும் வேறொரு உப்பிலும் கதிரியக்கம் இருப்பதை மேரியும் கியூரியும் கண்டறிந்தனர் .அதை உண்டாக் கும் ஒரு புதிய தனிமத்தையும் கூட கண்டறிந்தனர். அதற்கு மேரி தான் பிறந்த நாட்டின் மேலுள்ள காதலால் “பொலோனியம்” என பெயரிட்டார். பின் கதிரியக்க பொருட்களிலிருந்து ரேடியம் எனும் தனிமத்தை கண்டறிந்தனர். ஆனால் நோபல் கமிட்டி, முதலில் பியூரி கியூரி மற்றும் பெக்கொரல் இருவருக்கு மட்டுமே நோபல் தருவதாக சொன்னது. ஆனால் பியூரி, மேரிக்கும் நோபல் பரிசு தரப்பட வேண்டும் என்று வாதாடி அவருக்கு வாங்கித்தந்தார். 1903ல் மேரிக்கு முனைவர் பட்டமும், நோபல் பரிசும் ஒருங்கே கிடைத்தன. நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி மேரி கியூரி தான். அதை வாங்கக்கூட மேரி கியூரி தம்பதியருக்கு நேரமில்லாமல் ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். பின்னர் ஆய்வின் மூலம் கேன்சர் சிகிச்சைக்கு ரேடியத்தை பயன்படுத்தலாம் என்றும் மேரி தெரிவித்தார். முதலாம் உலகப்போரின்போது மேரி கியூரி கண்டுபிடித்த ரேடியம், கதிர்வீச்சு ஆகியவை காயம்பட்ட போர்வீரர்களைக் காப்பாற்றப் பெரிதும் பயன்பட்டன. போர்முனையில் அவற்றைப் பயன்படுத்தி நடமாடும் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டன. மேரியின் கணவர் பியரி. ஒரு விபத்தில் இறந்து போனார். அதன்பின் மேரி தனியே ஆய்வில் ஈடுபட்டு ரேடியத்தை பிரித்து காண்பித்தார். அதற்கும் வேதியியலில்1911ல் நோபல் பரிசு கிடைத்தது. நோபல் பரிசு பணத்தில் ஏழைப்பிள்ளைகள் பயன்பெறுமாறு ஆய்வகம் கட்டிக்கொள்ள அப்படியே கொடுத்தார் மேரி. கணவரின் பேராசிரியர் பொறுப்பை மேரி ஏற்றுக்கொண்டார். .பிரான்சில் பேராசிரியர் பதவி பெற்ற முதல் பெண் மேரி கியூரி. பிறகு மேரி கியூரிக்கு படிக்க, பணிபுரிய இடம் தரமாட்டேன் என்று சொன்ன போலந்து பல்கலைக் கழகம், மேரி கியூரியின் சிலையை கல்லூரி யில் நிறுவியது. இப்படி நிறுவப்பட்ட முதல் சிலை மேரியுடை யதுதான். ரேடியத்துக்கு பலர் காப்புரிமை பெறச்சொன்ன போதும், அதனை மறுத்து எளிய மக்களின் வாழ்க்கையை காப்பாற்றும் மருந்தில் நான் பொருளீட்ட விருப்பமில்லை என்று தெளிவாக சொன்னார் மேரி.
மேரிக்கு இரண்டு பெண்கள். இளைய பெண் ஈவா கியூரி ஒரு பத்திரிகையாளர்.102 வயது வரை வாழ்ந்து இறந்தார். மூத்த பெண் ஐரீன் ( 1897 -1956) அம்மாவைப் போலவே பெரும் விஞ்ஞானியாக இருந்தார். கதிரியக்கத்தின் ஆபத்தான சூழலில் மேரியும் ஐரீனும் பணியாற்றினர்.அம்மாவை பாதித்த கதிரியக்கம் ஐரீனையும் பாதித்தது. ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மேரிகியூரி இறந்தார். அம்மா இறந்த அடுத்த வருடத்தில் ஐரீன் ஜோலியட்-கியூரி தனது கணவர் பிரெடரிக் ஜோலியட்-கியூரி யோடு இணைந்து 1935ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசினை வென்றார். இன்றுவரை ஒரு குடும்பத்திலிருந்து மிகக்கூடுதலான நோபல் பரிசுகளை வென்ற பெருமை மேரி கியூரியின் குடும்பத்துக்கு மட்டுமே கிடைத்துள்ளது. இவரது மகள்கள் ஹெலன் மற்றும் பியரியும் கூடப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள். மேரி கியூரி வாழ்ந்த காலத்தில் பரவிய நாஜிசத்துக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்த அவர் சோசலிச அரசியலுக்கு ஆதரவானவராக இருந்தார். 67 வயதில் 1934ம ஆண்டு மேரி இறப்பை தழுவினார்.. அவரின் மரணத்திற்கு காரணம் எந்த பாதுகாப்பும் கொள்ளா மல் கதிர்வீச்சுக்கு உள்ளானது தான் ;ஆனால் அதன் மூலம் பல கேன்சர் நோயாளிகளின் உயிர் காப்பாற்றும் செம்பணியை முடித்து இருந்தார் தன்னையே அர்ப்பணித்து பலர் உயிர் காத்த சமூகப் போராளி.
ஆணாதிக்கம், சட்டதிட்ட இடையூறு, சமுதாயக் குறைபாடு, நோபல் கமிட்டியின் ஒரவஞ்சனை எனப் பல தடைகள் இருந்தாலும் அவற்றை மறக்கடிக்கும் வகையில் ஒரு கதை நோபல் வரலாற்றில் உண்டு. அதுதான் மேரி கியூரியின் பெரும் சாதனை. இருவேறு அறிவியல் துறைகளுக்காக விருது பெற்ற இவரது சாதனை இன்னும் முறியடிக்கப்படவே இல்லை “மேரியின் ஆய்வு அவரது வாழ்நாளில் அப்பழுக்கற்றது, எல்லையற்றது. அவர் மனித சமுதாயத்துக்கு மட்டும் அவரது பணியை அர்ப்பணிக்கவில்லை, அவர் தனது எல்லா வேலை ஆய்வுகளையும், ஓர் நியாய தர்மத்தின் அடிப்படையிலேயே தார்மீக தரத்துடன் இருந்தது. இவ்வளவையும் மேரி ஆத்மார்த்த உணர்வுடனும், நல்ல உடல் மற்றும் உள்ள வலுவுடனும், நீதி உணர்வுடனும், செய்து முடித்தார். இப்படி அனைத்துவித அரிய நல்ல குணங்களும் ஒருவரிடம் அமைதல் அரிது” என்று புகழ்ந்து ரைத்தார் ஐன்ஸ்டீன்.