அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரில் ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், ஸ்டெலாண்டிஸ் ஆகிய நிறு வனங்களைச் சார்ந்த ஒன்றரை லட்சம் தொழிலா ளர்கள், செப்டம்பர் 14 முதல் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். 85 சதமான தொழிலாளர்கள் பங்கேற்று உள்ளனர். பிக் த்ரீ (BIG THREE) என்று மேற் குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களும் அழைக்கப்படு கின்றன. யுனைடெட் ஆட்டோ ஒர்க்கர்ஸ் (UAW) என்ற கூட்டமைப்பு இந்த போராட்டத்தை வழி நடத்தி வருகிறது. மூன்று பெரிய நிறுவனங்களிலும் ஒரு சேர இது போன்ற வேலைநிறுத்தம் நடந்தது இல்லை என்கின்றனர். 2008 பொருளாதார பெருமந்தத்தில் இருந்து தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு, ஆட்குறைப்பு, கதவடைப்பு போன்றவை அடிக்கடி நடந்து வருகிறது. ஆனால் மேற்குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களுக்கான லாபம் 250 பில்லியன் டாலர் (20,50,000 கோடி ரூபாய்) ஆக நடப்பு ஆண்டில் மட்டும் உயர்ந்துள்ளது. இதுவே தொழிலாளர்களின் போராட்டத்திற்கு பிரதான காரணம்.
கோரிக்கைகள் என்ன?
கடந்த 15 ஆண்டுகளாக, தொழிலாளர்களுக்கான ஊதியத்தில், அன்றாட வாழ்க்கைத் தேவைக்காக சிறு உயர்வுகள் வழங்கி சரிக்கட்டப்படுவது நிறுத்தப் பட வேண்டும். உண்மை ஊதியம் உயர வேண்டும். கடந்த கால பென்சன் திட்டம் அமலாக வேண்டும். வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் ஆகியவை முக்கிய கோரிக்கைகள் ஆகும். இந்த கோரிக்கைகள் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு பொருந்தக் கூடியது தான். ஆனாலும் வளர்ந்த நாடு களில் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படிப்பட்ட போராட்டங்கள் அண்மைக் காலத்தில் நடக்கவில்லை என்பதை கணக்கில் கொண்டால், இது மாபெரும் உத்வேகம் அளிக்கும் ஒரு வேலை நிறுத்தம் என்பதை உணர முடியும். ஃபோர்டு நிறுவனம் அமெரிக்காவில் தொழிலாள ருக்கான கூலியாக ஒரு மணி நேரத்திற்கு 69 டாலர் (5658 ரூபாய்), வழங்குவதாக கூறுகிறது. இதே போல் ஜெனரல் மோட்டார், ஸ்டெலாண்டிஸ் நிறுவனங்களும் கூறுகின்றன. இந்த வாதத்தை வேலை நிறுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கும் யுஏடபுள்யூ (UAW) சங்க நிர்வாகிகள் ஏற்கவில்லை. சங்க ஒருங்கிணைப்பாளர் ஷான் ஃபைன், ‘ஸ்டெலாண்டிஸ் நிறுவனம் 12.1 பில்லி யன் டாலர் (99,220 கோடி ரூபாய்) லாபத்தை 2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் அடைந்துள்ளது. மூன்று நிறுவனங்களும் இணைந்து, 2023-இன் பாதி நிலையில், 23 பில்லியன் டாலர் (1,88,000 கோடி ரூபாய்) லாபம் பெற்று இருப்பதாகவும் கூறுகின்றனர். ஸ்டெலாண்டிஸ் தனது சி.இ.ஒ விற்கு ஊதியமாக 25 மில்லியன் டாலர் (20.5 கோடி ரூபாய்) வழங்கு கிறது. ஃபோர்டு நிறுவன சி.இ.ஓ 21 மில்லியன் டாலர் (17.22 கோடி ரூபாய்), ஜெனரல் மோட்டார் சி.இ.ஓ 29 மில்லியன் டாலர் (23.78 கோடி ரூபாய்) என ஊதியம் பெறுகின்றனர். இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டால் 40 சதவீதம் உயர்வு ஆகும்’’ என கூறு கிறார். அதுமட்டுமல்ல, மேற்குறிப்பிட்ட ‘பிக் திரீ’ நிறுவனங்களின் லாபம் 92 சதவீதம் எகிறும் போது தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு, வெறுமனே விலைவாசியை ஈடு செய்யும் வகையிலேயே உள்ளது, என்பது பெரும் துயரம் நிறைந்தது என்கிறார்.
நியாயமான பங்கிற்காக...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக, ஜன நாயகக் கட்சி வேட்பாளராக முயற்சி செய்த பெர்னி சாண்டர்ஸ், போராட்டக் களத்தில் தொழிலாளர்களு டன் இருக்கிறார். அவர், ‘‘கடந்த 15 ஆண்டுகளில் தொழி லாளர்களுக்கான ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு 15 டாலரில் இருந்து, 32 டாலராக உயர்ந்து இருந்தா லும், பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு காரண மாக, 30 சதவீதம் உண்மை மதிப்பில் குறைந்துள்ளது என குறிப்பிடுகிறார். இதற்குக் காரணம் ஏறும் விலை வாசிக்கு ஏற்ப ஊதியம் சரிக் கட்டப் படுகிறதே ஒழிய, உண்மையில் உயரவில்லை என்பதாகும்.
கட்சிகள் என்ன செய்கின்றன?
ஜனாதிபதி பைடன் போராட்டக் களத்திற்கு சென்று வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களிடம் பேசி உள்ளார். கடந்த 26 செப்டம்பர் அன்று பைடன் பேசும் போது, நாட்டை வால் ஸ்ட்ரீட் கட்டி அமைக்கவில்லை, நடுத்தர வர்க்கத்தினரே கட்டமைக்கின்றனர். தொழிற் சங்கம் நடுத்தர வர்க்கத்தை உருவாக்குகிறது. ஆட்டோ நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு 40 சதவீத ஊதிய உயர்வு என்பது மிக அவசியமானது என்பது உள்ளிட்ட கருத்துக்களை முன் வைத்துள்ளார். அமெ ரிக்காவில், தொழிற்சங்க வரலாறு குறித்து பேசிக் கொள்வோர், அமெரிக்க வரலாற்றில், நடப்பில் உள்ள ஜனாதிபதி, வேலை நிறுத்தம் நடக்கும் காலத்தில், தொழிலாளர்களை வேலைநிறுத்தக் களத்தில் சந்திப்பது, இதுவே முதல் முறை என்கின்றனர். இந்தச் சம்பவத்திற்கு முன்னதாக, மீண்டும் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களம் காண கட்சி அணிகளிடம் பிரச்சாரம் செய்து வரும் டிரம்ப், போராட்டம் நடைபெறும் மிச்சிகன் மாநி லத்தில், தொழிற்சங்கம் அல்லாத ஆட்டோ தொழிலா ளர்களிடம், கிளிண்டன் நகரில் இது குறித்து பேசியுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு, டிரம்ப் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, மிச்சிகன் மாநிலத்தில் தொழிலாளர்களின் வாக்குக ளில் கணிசமாக தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டார். அது டிரம்பின் வெற்றிக்கு பெரிதும் உதவி யது. அது அமெரிக்க ஊடகங்களில் அதிசயிக்கத்தக்க செய்தியாக வெளியானது. ஏனென்றால், எப்போ தும் அமெரிக்க வரலாற்றில், ஆட்டோ தொழிலாளர்க ளின் வாக்குகள், ஜனநாயக கட்சிக்கு சாதகமாகவே இருக்கும். ஆனால் 2016ஆம் ஆண்டு டிரம்ப் அதில் பிளவை ஏற்படுத்தி, வெற்றி பெற்று இருந்தார்.
நம் நாட்டிலும் இது போன்ற அரசியலை தொழி லாளி வர்க்கம் சந்தித்தாலும், வலதுசாரி கண்ணோட் டத்தில் எப்படி தொழிலாளர்கள் ஈர்க்கப்படுகின்றனர் என்பதற்கு, டிரம்ப்பின் அணுகுமுறை கவனிக்கத்தக்க தாக உள்ளது. யுஏடபுள்யூ (UAW) சங்க தலைவர் ஷான் ஃபைன், டிரம்ப்பின் செயல்களை விமர்சித்து இருக்கிறார். நீண்ட நெடுங்காலமாக ஆட்டோ தொழி லாளர்களின் ஊதியத்தில் உயர்வின்மை மற்றும் பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படாமைக்கு காரணம் டிரம்ப் பின்பற்றும் கொள்கைதான் என குறிப்பிட்டுள் ளார். எனவே டிரம்ப் அழைத்தாலும் அவரை சந்திக்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் 2016 தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதி யான பின், ஜெனரல் மோட்டார் தொழிலாளர்கள் 2019-ல் வேலை நிறுத்தம் செய்தனர். 2 மாத காலம் நடந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தொழிலாளர் கோரிக்கைகளின் நியாயத்தை பேசிட, டிரம்ப் ஒரு போதும் முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
200 வேலைநிறுத்தங்கள்
அமெரிக்காவின் தொழிலாளர் உறவு குறித்த அமைப்பு, போராடும் பலதரப்பட்ட தொழிலாளர் அமைப்புகளின் தரவுகளை சேகரித்து, வெளியிட்டு வருகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் 200க்கும் மேற்பட்ட வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன. குறிப்பாக இளம் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்துகின்றனர். உலக அளவில் பெரும் நிறுவனங்களாக பேசப்படும், ஸ்டார் பக்ஸ் உள்ளிட்டு, தொலைக்காட்சி, பல்கலைக்கழ கங்கள், தொலைக் காட்சி எழுத்தாளர்கள் என பலரும் நடத்தியுள்ள வேலை நிறுத்தங்கள் அமெரிக்க மக்களிடம் பேசும் பொருளாக மாறி வருகின்றன. இந்தப் பின்னணியில் அமெரிக்காவின் நெடிய பாரம்பரியம் கொண்ட யுஏடபுள்யூ (UAW) தொழிலா ளர்கள், வேலை நிறுத்தம் செய்து வருவது, அமெரிக்க பெரு முதலாளிகளின் உழைப்புச் சுரண்டலை எதிர்த்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று ஆகும். நம் ஊரிலும், வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களிடம், அதிகாரிகளும், அரசு பிரதிநிதிகளும், இவ்வளவு அதிக மாக கோரிக்கை வைக்கலாமா? என்று தான் கேட்கின்ற னர். இந்த குரல் முதலாளித்துவத்தின் கொள்ளை லாபக் குரல் என்பதை நாம் உணர வேண்டும். மேலும் அமைப்பு சார்ந்த துறையினர் இது போல் மிக அதிக கோரிக்கை வைப்பதாக பேசும் நபர்கள், அந்த தனியார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பெறும் ஊதியத்துடன் ஒப்பிட்டால், துளியளவு ஊதியமே தொழிலாளர்கள் பெறுகின்றனர் என்பதை பார்ப்பதில்லை. எனவே அமெரிக்கத் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெறுவது, உலகத் தொழிலாளி வர்க்கத்தின் போ ராட்டத்தை, பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்தும்.
கட்டுரையாளர் : சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர்