articles

img

தமிழ்நாடும் சீத்தாராம் யெச்சூரியும் சில நினைவலைகள் - கே.பாலகிருஷ்ணன்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், மார்க்சியத்தை இந்திய மண்ணுக்கு ஏற்றவாறு மெரு கூட்டிய மாமேதை தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் காலமாகிவிட்டார் என்ற  துயரச் செய்தி நம் எல்லோரையும் உலுக்கி எடுத்துவிட்டது. நாம் சற்றும் எண்ணிப் பார்க்காத அந்தப் பெரும் துயரம் செப்டம்பர் 12 அன்று நேர்ந்துவிட்டது. இந்தியாவில் சுமார் 10 லட்சம் உறுப்பினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருடனும் உணர்வுப்பூர்வமாக, மிகவும் நெருக்கமாக இருந்தவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி என்று சொன்னால் மிகையல்ல.அவர் மறைந்த செய்தி அறிந்து ஒட்டுமொத்த கட்சியும் துடித்துப்போனது. நம் கால்களுக்குக் கீழே பூமியே நகர்ந்து சென்று விட்டதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. அந்த அளவிற்கு அவர் மீது பற்றும் தோழமையும் நம்பிக்கையும் கொண்டிருந்தது இந்த இயக்கம். கட்சி உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல துயரத்தின் பிடியில் சிக்கினார்கள். இப்போதும் கூட தோழர் சீத்தாராம் இல்லை என்று எண்ணிப் பார்க்க முடியவில்லை.  தோழர் சீத்தாராம் யெச்சூரியுடன் எனக்கு தனிப்பட்ட முறையில் 25 ஆண்டு காலத்திற்கு மேலாக தோழமை உறவு உள்ளது. கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாடு மாநிலக் குழுவுக்கு எல்லா பிரச்சினைகளிலும் தீர்க்கமாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வழிகாட்டிய தருணங்களில் அவரோடு உரையாடவும் விவாதிக்கவும் மிக நெருக்கமான முறையில் இருந்து பணியாற்றவும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன். அந்த நினைவுகள் என்றென்றும் நெஞ்சில் இருந்து கொண்டே இருக்கும். 

தமிழ்நாட்டிற்கு மிக நெருக்கமானவர்

தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தாலும் தமிழ்நாட்டு தோழர்களுக்கு மிக நெருக்கமானவர். அவர் தான் சென்னையில் பிறந்ததை எப்போதுமே பெருமிதத்துடன் சொல்லிக்கொண்டே இருப்பார். அதனால்தானோ என்னவோ தமிழ்நாட்டுடன் அவருக்கு மிக நெருக்கமான பிணைப்பு இருந்து கொண்டே இருந்தது. தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் தலைவர்களாலும், அரசியல் இயக்கங்களின் தொண்டர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டவர் சீத்தாராம் யெச்சூரி. கலைஞர், மூப்பனார் வைகோ, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களோடும், தமிழ்நாட்டின் பல எம்.பி.க்களோடும் நெருக்கமான உறவினைப் பேணியவர்.

விதவிதமான உரைகள்

அனேகமாக தமிழ்நாட்டில் தான் மிக அதிகமான பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று இருப்பார் என கருதுகிறேன்.  தமிழகத்தின் ஏராளமான நகரங்களில் கட்சியின் பல்வேறு பொதுக் கூட்டங்களில்,  கூட்டணிகள் சார்பாக நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்றுள்ளார். இந்த கூட்டங்களில் ஒவ்வொன்றிலும் அவர் ஆற்றிய உரைகள் மிகவும் அற்புதமானவை, ஆக்கபூர்வமானவை.  அகில இந்திய அளவில் மிகப்பெரிய மாநாடுகளில், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகளை எப்படி எல்லோரும் ஆவலோடு ரசித்துக் கேட்டார்களோ அதேபோல தமிழ்நாட்டில் சீத்தாராம் யெச்சூரி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என்றால் அதைக் கேட்பதற்காகவே கட்சியின் தோழர்கள் மட்டுமல்ல, பல்வேறு அரசியல் இயக்கங்களின் நிர்வாகிகளும் ஆவலோடு வந்து கலந்து கொள்வார்கள். அவரது உரை மிகவும் அர்த்தச் செறிவும் அரசியல் முதிர்வும் தத்துவார்த்த தெளிவும் நிறைந்தவை. அந்த உரைகள் மார்க்சிய இயக்கத்திற்கு மட்டுமல்ல, திராவிட இயக்கம்,  அம்பேத்கரிய இயக்கம் உள்ளிட்ட தோழர்களுக்கும் கூட வழிகாட்டியாக இருக்கும் என்ற ஆவலுடன் அவர்கள் இந்தக் கூட்டங்களுக்கு வருவார்கள். அவர் நாடாளுமன்றத்தில் பேசினால் அதன் தன்மை வேறு; மாநாடுகளில் பேசினால் அதன் தன்மை வேறு; கமிட்டிக் கூட்டங்களில் பேசும் தன்மை வேறு; பொதுக்கூட்டங்களில் எளிய மக்களும் புரிந்து கொண்டு கைதட்டும் விதத்தில் பேசுவார். ஒவ்வொன்றும்

ஒரு ரகம்; ஆனால் அனைத்துமே கேட்பதற்கு சுகமான பேச்சுக்கள். சிந்திக்க வைக்கும் பேச்சுக்கள். கடைசியாக அவர் திருச்சியில் விசிக மாநாட்டில் உரையாற்றிய போது உற்சாக ஆர்ப்பரிப்பு எழுந்தது. அந்த அளவிற்கு ஆங்கில உரையையே மிகவும் எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் விதத்தில் அவர் பேசுவார். இத்தகைய உரைகளின் போது சில குட்டிக்கதைகளையும் அவர் சொல்லும் போது மொத்தக் கூட்டமும் சுவாரஸ்யமாக அதை கேட்டு ரசிக்கும். மேற்கண்ட கூட்டத்தில், மோடி அரசு மக்கள் பணத்தை பல்வேறு வகைகளில் கொள்ளையடிப்பதை, பேருந்தில் பொதுமக்களிடம் பிக்பாக்கெட் அடிக்கும் திருடன் பணத்தை அடித்துவிட்டு அவனே திருடன் திருடன் என்று சொல்லி கூப்பாடு போடுகிற கதையாக சொல்லுவார். அதேபோல, பணமதிப்பு நீக்கம் அமலாக்கப்பட்ட சமயத்தில் நாடு முழுவதும் ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக டிஜிட்டல் வடிவத்தில் பணம் புழக்கம் செய்யுமாறு மோடி அரசு சொன்ன போது ஒரு சிக்கலான பொருளாதாரத்தைக் கூட எளிய நடையில் விவரித்தார். நூறு ரூபாய் பணம் காகித வடிவத்தில் இருக்கும் போது, அது ஆயிரம் பேரிடம் கைமாறினாலும் அந்த தாளின் மதிப்பு நூறு ரூபாய்தான்; ஆனால் டிஜிட்டல் வடிவத்தில் நூறு ரூபாய் பணம் கைமாறும் போதும், ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கமிஷனாக எடுத்துக் கொள்வார்கள். அப்படி எடுக்கப்படும் போது சில நூறு பேரைத் தாண்டும் போது அந்தப் பணமே இல்லாமல் போய்விடும் என்று விவரிப்பார். 

துல்லியமான இலக்கு

2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, அதன் அபாயத்தை மிகத் துல்லியமாக உணர்ந்து நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைவரையும் ஓரணியில் திரட்டுவது இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத, மிக முக்கியமான பணி; அதுவே இடதுசாரிகளின் முதன்மையான பணி என்று அறைகூவல் விடுத்தார். அந்த அறைகூவல் தான் அடுத்தடுத்த ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைவரையும் ஒன்றுதிரட்டி 2024 மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி எனும் மாபெரும் அணி சேர்க்கையை உருவாக்குவதற்கு அடித்தளமிட்டது என்று சொன்னால் மிகையல்ல. தமிழ்நாடு, பீகார், மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இடைவிடாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசியல் இயக்கங்களின் தலைவர்களை நேரில் சந்தித்து ஒரு மாபெரும் அணி சேர்க்கையை பாஜகவிற்கு எதிராக உருவாக்குவதில் மிக மிக முக்கியப் பங்கு ஆற்றினார் தோழர் சீத்தாராம் யெச்சூரி. அதன் ஒரு பகுதியாகத்தான் அவர் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டினை கட்சி மேற்கொள்வதற்கு தீர்க்கமான முறையில் வழிகாட்டினார்.  இதுதொடர்பான பல்வேறு கட்ட விவாதங்கள் கட்சியில் நடைபெற்றபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படையான கோட்பாடு இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பது; கடந்த 10 ஆண்டுகாலமாக இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் முதன்மை எதிரியாக ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜகவும் அதன் ஆட்சியும் உருவாகியிருக்கின்றன; அந்த ஆட்சி ஒருபுறம், பெரும் மூலதனத்தை கையில் வைத்துக்கொண்டு கோடானுகோடி மக்களின் உழைப்பை உறிஞ்சி ரத்தம் குடித்துக்கொண்டிருக்கிற பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமைச் சேவகம் செய்கிறது; மறுபுறத்தில் பாட்டாளி வர்க்கம் ஒன்றுபட்டு எழுந்து மூலதனத்திற்கு எதிராக, பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிராக மிகப் பெரும் எழுச்சிகளில் ஈடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்துடன் மத ரீதியாக, சாதி ரீதியாக,

இன ரீதியாக, மொழி ரீதியாக மக்களை பிரித்தாளும் கொடூரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஆகவே நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி என்பது ஏற்கனவே இந்தியாவில் நடந்துகொண்டிருந்த ஆட்சிகளைப் போன்றது அல்ல,  இது கார்ப்பரேட் மற்றும் மதவெறி இரண்டும் இணைந்த ஒரு கொடூர கூட்டணி; இதுவே இன்றைக்கு இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் முதன்மை எதிரியாக மாறி இருக்கிறது. எனவே இந்த முதன்மை எதிரியை வீழ்த்துவதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பெரும் கடமை என்று துல்லியமாக இலக்கை நிர்ணயித்தார் தோழர் யெச்சூரி.  அந்த அடிப்படையில்தான் கட்சியின் மாநிலக் குழு விவாதித்து தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகாலமாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், பின்னாளில் இந்தியா கூட்டணி என பெயரிடப்பட்ட கூட்டணியில் உறுதியாக நின்று பணியாற்றியது. தமிழ்நாட்டில் கடந்த தேர்தலில் 40க்கு 40 என்று ஒரு இடத்தில் கூட பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வர முடியாத நிலையை உருவாக்கி ஒரு மகத்தான வெற்றியை , இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வெற்றியை சாதித்து காட்டிய இந்த அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியோடு நிற்பதற்கு அடித்தளமிட்டவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி. அதே வேளையில் தொழிலாளி வர்க்கத்தின் குரலை, கோரிக்கைகளை உரத்து ஒலிக்க வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக நின்று வழிகாட்டினார். 

பட்டியலின மக்கள்  உரிமை மாநாட்டில்...

தோழர் சீத்தாராம் யெச்சூரி தமிழ்நாட்டில் எண்ணற்ற நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பட்டியலின மக்கள் உரிமை மாநாட்டை நடத்தியது. அந்த மாநாட்டில் பங்கேற்று சுமார் ஒரு மணிநேரம் அவர் ஆற்றிய உரை,  இந்தியாவில் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எத்தனை அளப்பரிய போராட்டங்களை - தியாகங்களை செய்திருக்கிறது என்பதை மிக விரிவாக எடுத்துரைத்தது.  “இந்திய சமூகம் நிலப்பிரபுத்துவமும் முதலாளித்துவமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த சமூகமாக இருக்கிறது. இந்த சமூக அமைப்பில் மிக நீண்ட நெடும் காலமாக வளர்ந்து கெட்டிப்பட்டு உள்ள சாதிய அமைப்பு முறையை ஒழிப்பது என்பது, அதன் அடித்தளமாக இருக்கக்கூடிய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு முறையை முற்றாகத் தகர்ப்பதில் தான் அடங்கியிருக்கிறது. அதே வேளையில் ஒருபுறம் நிலபிரபுத்துவ முதலாளித்துவ சமூக அமைப்பு முறைக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தை வலுவாக நடத்திக்கொண்டே, சாதிய கொடுமைகளுக்கு எதிராக - தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக சமூக நீதிக்கான போராட்டங்களையும் ஒரு சேர நடத்த வேண்டியது அவசியம். 

சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது இறுதியில் நாம் வெல்வதற்காக நடத்திக் கொண்டிருக்க கூடிய மாபெரும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதி; எனவே சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் இன்றி வர்க்கப் போராட்டம் என்பது முழுமை பெறாது,  அதேவேளையில் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மட்டுமே. இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முழு விடுதலை பெற்றுத் தந்துவிடாது;  எனவே இந்த இரண்டு போராட்டங்களும் ஒரே காலத்தில் ஒரே வீச்சோடு நடைபெற வேண்டியது அவசியம்” என்று மிக நுட்பமான முறையில் விளக்கினார். அதே போல, மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய ‘மாநில உரிமைகள் மாநாட்டில்’ பங்கேற்று, கூட்டாட்சி மீதான தாக்குதலுக்கு எதிராக முழங்கினார்.

யோசனை கேட்ட தொழிலதிபர்கள்

இதுபோல தமிழ்நாட்டில் அரசியல் பொதுக்கூட்டங்களில் மட்டுமல்ல, கட்சியின் நிகழ்வுகளில் மட்டுமல்ல,  சீத்தாராம் யெச்சூரி அவர்களை கல்லூரிகள் நேரடியாக அழைத்து தங்களது மாணவர்களிடையே உரையாற்றுமாறு கேட்டுக் கொண்ட நிகழ்வுகள் நடந்துள்ளன. கோவையில், திருச்சியிலுள்ள கல்லூரிகளின் நிர்வாகிகள் மிகவும் விரும்பி சீத்தாராம் யெச்சூரி அவர்களது சொற்பொழிவை அரங்கேற்றி இருக்கிறார்கள்.  அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் ஏற்படுகிற பிரச்சனைகளை தோழர் சீதாராம் யெச்சூரியோடு பல தருணங்களில் நேரில் பகிர்ந்து கொண்டு, அதை ஒன்றிய அரசாங்கத்திடம் மார்க்சிஸ்ட் கட்சிதான் மிக வலுவான முறையில் எழுப்ப முடியும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த ஆண்டு கோவைக்கு அவர் வருகை தந்திருந்த போது தொழிலதிபர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது. அந்த சந்திப்பில் தோழர் சீத்தாராம் யெச்சூரி தலையிட்டால் பல பிரச்சனைகள் அரசின் கவனத்திற்கு வலுவாக கொண்டுசெல்லப்படும் என்ற நம்பிக்கையோடு தொழிலதிபர்கள் தங்களது பிரச்சினைகளை முன்வைத்தார்கள்.  அதேபோல சென்னையில் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்றுள்ளார். கடந்த 35 ஆண்டு காலமாக இந்தியாவில் அமுலில் இருக்கின்ற நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளின் விளைவாக நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மிகப்பெரும் அழிவின் பிடியில் சிக்கியுள்ளன. மிகப்பெரும் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் மோடி அரசு கொடுக்கும் ஊக்கத்தால் அவர்களுக்கு கீழே உள்ள பல தொழில்களை, பல நிறுவனங்களை விலை பேசி விழுங்குகிறார்கள். எனவே சிறு குறு தொழில் அதிபர்கள் மட்டுமல்ல,  ஓரளவு பெரிய நிறுவனங்களை நடத்தும் தொழிலதிபர்களும் கூட கம்யூனிஸ்ட் இயக்கத்திடம், அதன் தலைவர் சீத்தாராம் யெச்சூரியிடம் ஆலோசனை கேட்டார்கள். தங்கள் தொழிலைப் பாதுகாப்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.

செம்மொழி மாநாட்டில்...

தோழர் சீத்தாராம் யெச்சூரி ஒரு பன்மொழி வித்தகர். ஆங்கிலம், இந்தி, உருது, வங்காளி, தெலுங்கு ஆகிய மொழிகளில் சரளமாக உரையாற்றக் கூடியவர். ஆனால் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழித் திணிப்பு எனும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக மிக வலுவாக குரல் கொடுத்தவர்.  அந்த அடிப்படையில்தான்  தமிழ்நாட்டில் கலைஞர் முதல்வராக இருந்தபோது நடத்திய செம்மொழி மாநாட்டில் உரையாற்றுவதற்காக கலைஞரால் மிகவும் விரும்பி அழைக்கப்பட்டவர்  சீத்தாராம் யெச்சூரி .அதை நிரூபிக்கும் விதத்தில் அங்கு அவர் ஆற்றிய சொற்பொழிவு இன்றைக்கும் மொழிப் பிரச்சனையில் மிகத்துல்லியமான நிலைபாட்டை நமக்கு எடுத்துச் சொல்கிறது.

இடஒதுக்கீடு வழக்கு

மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி  இடங்களில் 15 சதவீதம் ஒன்றிய அரசின் ஒதுக்கீடாக சென்றுவிடுகிறது. மிக நீண்ட காலமாகவே, இப்படி எடுக்கப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 27சதவீத இடஒதுக்கீடு அமலாகவில்லை. இந்த வகையில் பல நூற்றுக்கணக்கான இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஒதுக்கீடு இல்லாததால் அவர்களது வாய்ப்பு பறிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 27சதவீத இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கட்சியின் சார்பில் வழக்கு தொடர வேண்டும் என்று கோரிய போது, தமிழ்நாட்டிலிருந்து எழும் இந்த கோரிக்கை நியாயமானது, அதுதொடர்பாக வழக்கு தொடர்வது சரியானது என்று பொதுச் செயலாளராக இருந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி அனுமதி அளித்தார். அந்த வழக்கில் 27சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பின் படிதான் இன்றைக்கு மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றிய அரசின் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அமலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது, இடஒதுக்கீடு வரலாற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்த மகத்தான சாதனை ஆகும். இப்படியாக தமிழ்நாட்டில் நீண்டகாலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எண்ணற்ற நடவடிக்கைகளுக்கு, முடிவுகளுக்கு, போராட்டங்களுக்கு வழிகாட்டியாய் துணைநின்ற மகத்தான தலைவர் சீத்தாராம் யெச்சூரி, அவரது மறைவு எப்போதுமே ஈடுசெய்ய முடியாத ஒரு பெரும் இழப்பு.

தற்போது கட்சியின் மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த முறை தமிழ்நாட்டில் மாநாட்டை நடத்த வேண்டும் என்பதில் அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். அந்த மாநாட்டை மதுரையில் நடத்துவது என்று ஆலோசித்த போது அவர் மிகவும் உற்சாகமாக வரவேற்றார். 2025 ஏப்ரலில் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் அவர் பொதுச்செயலாளர் என்கிற முறையில் பங்கேற்று அறிக்கைகளை முன்மொழிந்து, பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிற அந்தக் காட்சிகளை எல்லாம் நாம் பார்க்க முடியாத விதத்தில் இயற்கை அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது.  தோழர் சீத்தாராம் யெச்சூரி நம்மோடு இருந்து வழிகாட்டும் போது எத்தகைய உத்வேகத்தோடு நாம் பணியாற்றினோமோ அதே அளவிற்கு அவரது நினைவுகளைச் சுமந்து கொண்டே வெற்றிகரமாக செங்கொடியை உயர்த்திப் பிடிப்போம். செவ்வணக்கம் தோழர் யெச்சூரி!