articles

img

அறிவியல் கதிர் - ரமணன்

அறிவியல் கதிர்

பல் கூச்சமும் பல்வலியும்  

வலி ஏற்படும்போதும் சரி அல்லது குளிர்பானங்கள் குடிக்கும்போதும் சரி, நமது பற்கள் ஏன் கூருணர்வு கொண்டதாக உள்ளன? ஏனென்றால் அவை 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியபோது அவை வாயிலும் தோன்றவில்லை; உணவை அரைப்பதற்காகவும்  தோன்றவில்லை. மாறாக வெளித்தோலில் உணர்வுகளை கடத்துவதற்காக தோன்றின என ஒரு ஆய்வு கூறுகிறது. இன்றைக்கும் சுறாக்களும் திருக்கை மற்றும் கெளுத்தி மீன்களும் தங்கள் தோலில் நுண்ணிய பற்களைக் கொண்டிருக்கின்றன.இவை ஓடோன்டோட்ஸ் (odontodes) என்றழைக்கப்படுகின்றன. மீன்களுக்கு தாடை தோன்றியபோது இவை கூர்மையாக மாறுவதுவும் பின்னர் வாய்க்குள் இருப்பதும் சாதகமான அம்சமாக இருந்தன. ‘பல்வலி என்பது உண்மையில் நமது மீன் மூதாதையர்களுக்கு பிழைத்திருக்க உதவிய ஒரு புராதான உணர்வு அம்சம்’ என்கிறார் ஆய்வாளர் யாரா ஹாரிடி.

குழந்தைப் பருவத்திலேயே தோன்றும் மறதி நோய்

 டெம்னீசியா எனப்படும் மறதி நோய் பெரும்பாலும் மனிதர்களின் வாழ்நாளின் பிற்பகுதியிலேயே கண்டறியப்படுகிறது. ஆனால் அதன் வேர்கள் குழந்தைப் பருவம் அல்லது மழலைப் பருவத்திலிருந்தே தொடங்குகிறதா என்று ஒரு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்னவென்றால் நமது மூளை ஆரம்ப காலம், வளர் பருவத்தில் நிலைத்த தன்மை மற்றும் முதிர்வில் சில இயக்கத்தில் தேய்மானங்கள் என மூன்று முக்கிய கட்டங்களை கடக்கிறது. பெரும்பாலான ஆய்வுகள் கடைசி கட்டத்திலேயே கவனம் செலுத்துகின்றன. ஆனால் மறதி நோயோடு தொடர்புடைய மாற்றங்கள் குழந்தைப் பருவத்திலேயே தோன்றிவிடுகின்றன என்பதற்கு ஆதாரங்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக ஆயுட்காலம் முழுவதும் ஒருவரது அறிதிறன்(cognitive) எவ்வாறு உள்ளது என்பது குறித்து நடத்தப்பட்ட  நீண்ட கால ஆய்வுகளில் ஒருவரது 70 வயதில் இருக்கும்  அறிதிறனுக்கு ஒரு முக்கியக் காரணி அவரது 11 வயதில் இருந்த அறிதிறன் என்று தெரிய வந்துள்ளது. அதாவது முதுமையில் குறைவாக இருக்கும் அறிதிறனுக்கு இளமையில் இருந்த குறைபாடே அதிகம் காரணம் அன்றி வயது முதிர்வின் காரணமாக ஏற்படும் தேய்மானம் மட்டுமே அல்ல.  மூளையில் ஏற்படும் சிதைவுகள் குறித்த ஸ்கேன்களும் ஆரம்ப காலத்தில் தோன்றிய அபாய காரணிகள் இதோடு நெருக்கமாக தொடர்புடையவை என்று காட்டுகின்றன. எனவே இவற்றையெல்லாம் சேர்த்துப் பார்க்கும்போது மறதி நோய் சிகிச்சை என்பது முதுமையின்போது மட்டுமே கவனம் செலுத்தப்பட வேண்டியது அல்ல; வாழ்நாள் தொடக்கத்திலிருந்தே செய்யப்பட வேண்டிய ஒன்று ஆகும். இதற்கு செய்ய வேண்டியது குறித்து 33 பன்னாட்டு  ஆய்வாளர்கள் பரிந்துரை பட்டியல் ஒன்றை அளித்துள்ளார்கள். இது தனி நபர், சமூகம் மற்றும் தேசிய அளவில் செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகும்.  சாத்தியமான எண்ணிக்கையில் பலருக்கும் இந்த சிகிச்சை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால் ஆரோக்கியமான சூழல், சிறந்த கல்வி மற்றும் அரசின் திறனான கொள்கை ஆகிய ஒருங்கிணைப்பினால் மட்டுமே சாதிக்க முடியும் என்கிறார் ஐக்கிய குடியரசை சேர்ந்த மறதிநோய்  ஆய்வாளர் ஸ்காட்  சையீசா, சிக்காக்கோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மகப்பேறு ஆய்வாளர் பிரான்செஸ்கா பரினா மற்றும் லீட்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சமூக மூப்பியல் ஆய்வாளர் லவுரா பூயி. சீனாவின் புதிய அணுச் சேர்க்கை ஆற்றல் மய்யம்  தென் மேற்கு சீனாவில் மியாங்யாங் நகருக்கு அருகில் நட்சத்திர வடிவ சோதனைச் சாலை ஒன்றை அமெரிக்க செயற்கைக்கோள் கண்டுபிடித்தது. சாதாரண அறிவியல் கட்டடம் போல் தோற்றமளிக்கும் அது அடுத்த தலைமுறை அணுக்கரு இணைப்பு சோதனைச் சாலையாகும். சூரியனுக்குள்  நடக்கும் வேதிவினைகளை ஒத்தவற்றை இங்கு நடத்தி, சுத்தமான அளவற்ற ஆற்றலை உண்டுபண்ணும் சாத்தியத்தை பரிசோதிக்கும் நிலையம் அது. அமெரிக்காவிலுள்ள அணுக்கரு இணைப்பு மையத்தை விட இது 50% பெரியது. இந்த துறையில் நடக்கும் போட்டியில் முன்னணியில் இருப்பதில் சீனா எவ்வளவு மும்முரமாக இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.  ஹைடிரஜன் அணுக்களை இணைத்து ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த தொழில்நுட்பம் அறிவியலாளர்களுக்கு ஒரு பெரும் கனவாகும். அணுப்பிளப்பில் கதிரியக்கக் கழிவுகள் உண்டாவதைபோல் அல்லாமல் இது ஒரு மாசற்ற ஆற்றல் ஆதாரமாகும். 2022இல் அமெரிக்க ஆய்வாளர்கள்  அணுச்சேர்க்கை உண்டாவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆற்றலைவிட அதிக ஆற்றலை அதிலிருந்து பெற்றார்கள். இது ஒரு பெரும் சாதனையாக இருந்தது. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்ட சீன ஆய்வகம், இந்தப் போட்டியை சீனாவிற்கு சாதகமானதாக மாற்றிவிட்டது. அது வெற்றிகரமானால், அணு இணைப்பு சக்தியை வீடுகளுக்கும் நகரங்களுக்கும் பயன்படக்கூடிய ஒரு நடைமுறை ஆற்றல் ஆதாரமாக மாற்றிய முதல் நாடாக சீனா இருக்கும். இதை அணு ஆயுத தயாரிப்பிற்கும்  பயன்படுத்தலாம் என்கிற அச்சமும் இருக்கிறதாம். ஆனால் நீண்ட கால தரவுகள் இல்லாமல் அது அவ்வளவு எளிதல்ல என்கிறார்கள் நிபுணர்கள்.  

அதிக நேரம்  அமர்ந்திருப்பது ஆபத்து

 சும்மா உட்கார்ந்து இருக்கும் நேரத்தை குறைக்கும்போது அல்செமியர்ஸ் நோய் ஏற்படும் சாத்தியம் குறைகிறது என ஒரு ஆய்வு காட்டுகிறது. 404 தன்னார்வலர்களின் அன்றாட நடவடிக்கைகளை பதிவு செய்து பின் ஏழு ஆண்டுகளுக்கு அவர்களின் அறிதிறனும் மூளை ஸ்கேன் பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டன. அவர்களில் 87% மத்திமமான உடற்பயிற்சிகள் செய்தபோதிலும் அதிக நேரம் அமர்ந்திருந்தவர்கள் மோசமான அறிதிறனை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு  நினைவாற்றலுடன் தொடர்புடைய ஹிப்போகேம்பஸ் எனும் மூளை பகுதியில் தேய்மானமும் காணப்பட்டது. எனவே உடற்பயிற்சி மட்டும் போதாது. அமர்ந்திருக்கும் நேரத்தை குறைக்க வேண்டுமாம்.