articles

யோகா பில்டப்பும் மரக்கறி உணவு கித்தாப்பும் – சுபொஅ

     எழுபதுகள், எண்பதுகளில் நங்கநல்லூர் இலக்கிய வட்டத்தில் நண்பரான சிலபேர் இன்னும் என் தொடர்பில் இருக்கின்றனர். எதிரெதிர் சித்தாந்த முகாம்களில் இருந்த போதும்; அவ்வப்போது மோதிக்கொண்ட போதும் அது எம் தனிப்பட்ட பகையாய் மாறவில்லை. அப்படிப்பட்ட ஓர் நண்பர் சில தினங்கள் முன்பு அலைபேசியில் அழைத்தார்.

     “என்ன தோழா! நான் காலையில் புள் மீல்ஸ் சாப்பிட்டுவிடுவேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். மாலை மூன்று மணிக்கு ஏதாவது இட்லி /தோசை தேடி அலைகிறேன். எங்கும் பீப் பிரியாணியும் சிக்கன் பிரியாணியும்தான் நிறைந்து கிடக்கிறது. சைவ ஹோட்டலைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். இனி என் போல் சைவ பட்சிணிகள் அருகிவிடுவார்களோ? அபூர்வ ஜந்துவாகி விடுவார்களோ?” என அங்கலாய்த்தார்.

   “அதுவும் உண்மை ‘அக்கிரஹார ஹோட்டல்; சுத்த சைவம்’ [சென்னையில் ஓர் ஹோட்டலின் பெயர்] என இயங்குவதையும் பார்க்கிறோம். ஏ2பி போன்ற ஹோட்டல் ஏழைக்கு அல்ல என்றாகிவிட்டது.

     கையேந்தி பவன்கள், சாலையோர உணவங்கள், இட்லி கடைகள், தள்ளுவண்டி பீப் பிரியாணி ஸ்டால், சிக்கன் மட்டன் பிரியாணிக் கடைகள். இவை எல்லாம் இல்லாவிடில் சாதாரண மக்கள் திண்டாடிவிடுவார்களே?” என்றேன்.

   “அதுவும் சரிதான்... சைவம் அசைவம் இரண்டிலும் மலிவு விலை உணவங்களும் உண்டு; மணி [பணம்] இருப்பவருக்கான உணவகங்களும் உண்டு. இதுதான் இந்தியா…” என்றார்.

    “ஆமாம், ஆனால் சோறு இல்லைன்னு யாரும் வருந்த வேண்டாம். அப்படி பிரச்சனையே இல்லை. சுவிக்கில ஆர்டர் பண்ணினா எங்கிருந்தாலும் எந்த மூலையில் இருந்தாலும் உணவு வரும்னு பொறுப்பற்று பேசின ஸ்மிருதி ராணி  நம்ம மந்திரி…” இதை பேசி முடிக்கும் முன் நண்பர் குறுக்கே பாய்ந்தார், “அரசியல் வேண்டாம் பிளீஸ்… சைவ உணவு பழக்கம் அருகிவருகிறதே..!!!” என புறப்பட்ட இடத்திற்கே வந்தார்.

  நான் சொன்னேன், “இந்தியாவில் புலால் உண்பவரே அதிகம், அதிலும் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளாவில் முக்கால் பங்குக்கு மேல் அவங்கதான்… இங்கும் வீட்டில் சைவம் வெளியில் அசைவம் என்கிற உத்திராட்சப் பூனைகள் அதிகமாகிறது”

     “அது… அது… மெய்தான் ஆனால்…” என இழுத்தார். “சைவம் திணிக்கப்படுகிறது. பீப் எதிர்க்கப்படுகிறது. விளைவு பீப் உண்போர் சத விகிதம் அதிகரிக்கிறது. சைவம் பெருமைக்கு பீற்றுவதாக ஒரு புறம்; மறுபுறம் நடைமுறை யில் புலால் ஈர்ப்பு. அவர் வழக்கம் போல் யோகா, தியானம் எனத்தாவினார்; உரை யாடலின் சாரம்.

   “பள்ளி சிறார்கள், பணிக்கு செல்லும், இளம்பெண்கள், ஆண்கள் என கணிசமானோர் கையில் கக்கத்தில் யோகா மேட் [yoga mat] கிடுக்கியபடி திரிந்ததை பெங்களூரில் 2015 காலகட்டம் முதல் பார்த்திருக்கிறேன். எங்கள் அடுக்ககத்தில் இல்லத்தரசி களுக்கு யோகா பயிற்சி என ஒரே பில்டப். எங்கள் அடுக்ககம் மட்டுமல்ல வளாக குடி யிருப்புகளில் [gated community] எல்லாம் இதே நிலைதான்.

   மரக்கறி உணவு அதுதான் சைவ உணவே ஆகச் சிறந்தது என ஆரோக்கிய உடுக்கையடி வேறு”என்றேன். “அது ஒரு நல்ல முன்னெடுப்பு ஆனால் அமல்படுத்தும் போது சில பிழைகள் நேர்ந்து இருக்கலாம் …

   ” என்று இழுத்தார் சோகமான குரலில். “பெரும்பாலான மத்தியதர வீடுகளில் டிவி சானல்களில் யோகா பயிற்சிதான் காலை நேர நிகழ்வானது. சைவ உணவு போதனை ஃபுள் கியரில்  முடுக்கிவிடப் பட்டது.

    யோகா செய்தால் மருத்துவ செலவே கிடையாது.சர்க்கரை, இரத்தக் கொதிப்பு அண்டாது. சிறுநீரக நோய், இதய நோய், வயிற்று நோய், சுவாச நோய், புற்று நோய் வரவே வராது. தன்னம்பிக்கை ஓங்கும்.. கோபமே வராது. ஆத்திரம் பொங்காது, கெட்ட எண்ணம் தோன்றாது. பாசிட்டிவ் என்ர்ஜி கிடைக்கும். வாழ்வில் இன்பம் பொங்கும். அப்பப்பா...

      அவிழ்த்துவிட்ட ரீல்கள் இப்போது அறுந்து தொங்குகின்றன” என மீண்டும் நான் யதார்த்தத்தை விவரிக்க நண்பர் கடுப்பானார். “யோகா மேட்”கள் பெரும்பாலான வீடுகளில் பரணுக்கு போய்விட்டன. சிறார்கள், இளம்பெண்கள், ஆண்களுக்கு யோகா மீதான ஈர்ப்பு குறைந்து கொண்டே போகிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

    அதனால் யோகாவே தவறு என சொல்ல முடியுமா?” எனக் கேட்டார் நண்பர். “யோகா மூச்சு பயிற்சி. அது உடற்பயிற்சியின் ஒரு கூறு. என்பதுவரை சரி! அந்த வகையில் அதற்கு ஓர் இடம் என்பதும் சரி ஆயின், அதற்கும் மேல் அதன் மீது சுமத்தப்பட்ட தெய்வீக, புனித, சர்வரோக நிவாரணி போன்ற பில்டப்புகள் உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. நொறுக்கப்பட வேண்டும். ஏன் நீச்சல்கூட சிறந்த மூச்சுப் பயிற்சியும் உடற்பயிற்சியும் ஆகுமே!.. அதைப் பேசலாமே….” நண்பன் சொன்னான்,

    “யோகா, தியானம் ஓவர் பில்டப்பால் மதிப்பிழந்து கொண்டிருக்கிறது. சைவ கித்தாப்பு முகமூடி கழன்று விழுந்து கொண்டிருக்கிறது.நல்லவற்றைகூட ஓவர் பில்டப்பு கெடுத்துவிடும்…” என அவர் பார்வையில் சமாதானம் சொன்னார்.

    “கோபம், வன்மம், வெறுப்பு அரசியல், வன்புணர்வு, கூட்டுவன்புணர்வு, கும்பல் கொலை, சகிப்பின்மை போன்ற அனைத்து மனிதவிரோத கொடுஞ்செயல்களிலும் கடந்த பத்து ஆண்டுகளில் ஈடுபடுவோர் யாரென பட்டியலிட்டால் “யோகா, தியானம், பக்தி, சைவ உணவு” என வாய்ப்பறை கொட்டுவோர் ஈடுபட்டுள்ளதையும் அவதானிக்கலாம்.

    மகாத்மா படுகொலை தொடங்கி இன்றுவரை அதுவே மெய். ஆக யோகாவோ தியானமோ பக்தியோ சைவ உணவோ ஒழுக்கத்தை மனிதத்தை நிலைநாட்டிவிடாது. மனிதம் போற்றும் சமத்துவம், சமூகநீதி, பாலின பேதமற்ற வாழ்க்கைமுறை போன்ற உயர் விழுமியங்களும்; சமூகத்தை வாழ்வைக் குறித்த அறிவியல் பார்வையும் மக்களின் மூளையில் விதைக்கப்படும் போது மட்டுமே நல்ல பயிர் வளரும்.” நான் பேசி முடிக்கும் முன் டக்கென நண்பர் அடுத்ததுக்குத் தாவினார் .

    “பேலியோ டயட் உணவுகள் [Paleo Diet], மரச்செக்கு எண்ணை, ஆர்கானிக் புட்ஸ் இப்படியெல்லாம் பேசப்படுபவை நல்லது இல்லையா? இவைகூட அந்தந்த காலத்தில் வந்து காணாமல் போகும் பேஷன்களாகி விட்டனவே. உயர் மத்தியதர டிரெண்டாகிவிட்டதே… ஏன்?”இதுவும் நண்பர் வினாதான். “முதலில் போலி அறிவியல் மூலம் தூக்கி நிறுத்தப்படும் எதுவும் நிலைக்க முடியாது.

   வாட்ஸ் அப் யூனிவர்சிட்டியில் பிஎச்டி வாங்கினாலும் வாழ்க்கை யதார்த்தத்தோடு அது நெருங்கவே இல்லை. மிகப்பெரிய மக்கள் தொகைக்கு மிகக்குறைந்த விலையில் எளிதில் கிடைக்கும் எல்லோராலும் பின்பற்றத்தக்க உணவும் உடையும் வீடும் தருவது எப்படி? இதுவே ஆதாரமான கேள்வி.இதனை விடுத்து தாவித்தாவிச் செல்லும் எதுவும் வேலைக்கு ஆகாது” என்றேன்.

  “நீங்கள் சொல்வது சரிதான்… பில்டிங் ஸ்டிராங் பேஸ்மட்டம் வீக்ன்னா எப்படி தாக்குப்பிடிக்கும்…? என்னுள்ளும் இந்த கேள்வி இப்போது எழத்தான் செய்கிறது…” என்றவர் மீண்டும் வேறு ஒன்றுக்கு தாவினார்.