செங்கொடியின் தலைமையிலான விவசாய இயக்கம்தான் சாதிய அடிப்படையிலான சமூக இழிவுகளை எதிர்த்திடவும் கிராமப்புற நிலக்குவியலை உடைத்திடவும் எண்ணற்ற இயக்கங்களை நடத்தியுள்ளது; தியாகங்களையும் செய்துள்ளது. இது தமிழ்நாட்டின் வரலாற்று உண்மை யாகும். இதன் தொடர்ச்சியாக சமூக ஒடுக்குமுறையில் இருந்தும் பொருளாதாரச் சுரண்டல் முறையில் இருந்தும் விடுபட வேண்டுமென்ற சிந்தனை தற்பொழுது மேலோங்கி இருப்பது நவீன வளர்ச்சியின் நம்பிக்கைக் கீற்றாக உள்ளது. மனிதனாக வாழ்ந்திட மனித உரிமை வேண்டும். விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உயிர்வாழ உரிய கூலிவேண்டும். கிராமப்புறச் சுரண்டல் கொடுமை யிலிருந்து விடுபட நிலமற்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிலம் வேண்டும். 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் கூலிக்கான உத்தரவாதம், சாகுபடி உரிமை உள்ளிட்ட சில உரிமைகள் கிடைக்கப்பெற்றாலும் சமூக ஏற்றத்தாழ்வு என்பது அசைக்க முடியாத பாறாங் கல்லாய் நிலைத்து நீடிக்கிறது. தரமான கல்வி, முறையான மருத்துவம், குடிமனை, வீடு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு, குடும்ப அட்டை, மயானம், அதற்கான சாலைகள் என அத்தியாவசிய தேவைகள் ஏழைகளுக்கு எட்டாக் கனவாய் நீடித்துக்கொண்டே இருக்கிறது.
நிலமற்றவர்களுக்கு நிலம், வீடற்றவர்களுக்கு பட்டா
அடிப்படைத் தேவை, அன்றாடத் தேவை என இரண்டையும் நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. தொடர்ச்சியான வேலையும், குறைந்தபட்ச சட்டக்கூலியும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு மிக அவசியம். சாகுபடிக்கு லாயக்கான அரசுப் புறம்போக்கு நிலங்களை நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவசமாக பிரித்து வழங்க அரசு முன்வர வேண்டும். குடிமனைப் பட்டாக்கூட கிடைக்காமல் கிராமப்புறங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் அவல நிலையில் வாழ்ந்து வரு கின்றனர். பல்வேறு பெயர்களில் புறம்போக்கு நிலங்களுக்கு பெயர் சூட்டி அகம் மகிழாமல், புதிய விதிகளை உருவாக்கி வீடற்றவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் யுகம் போற்றும் ஆட்சியாக இது மாறவேண்டும். நியாயக்கூலிச்சட்டம், குறைந்தபட்ச கூலிச் சட்டம் இரண்டையும் இணைத்து ஒரே சட்டமாகக் கொண்டுவர வேண்டும். ஆண், பெண் வித்தியாசமின்றி சமவேலைக்கு சமகூலி சட்டமாக்கப்பட வேண்டும். இன்றைய வாழ்வியல் நிலை, விலைவாசி உயர்வு போன்றவற்றை கணக்கில் கொண்டு காலம் கடத்தாமல் இதை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச கூலி விகிதத்தை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆண்டுக்கு ஒருமுறை மாற்றி அறிவிக்க வேண்டு;ம். விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வினை மேம்படுத்திட அரசு துணை நிற்கிறது என்ற நம்பிக்கை உருவாகும் போதுதான் வேளாண்மைத் தொழில் மேம்படும். உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியும். வேளாண்மைத் தொழில் ஒன்றையே வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு 85 லட்சத்துக்கும் மேலான விவசாய கூலித் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இதைக் கணக்கில் கொண்டு அரசு இவர்களுக்கென விவசாயத் தொழிலாளர் நலத்துறையை தனியாக ஏற்படுத்த வேண்டும்.
ஒன்றிய அரசின் தாக்குதல்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது ஒன்றிய அரசு ஏழைகள் மீது தொடுத்துள்ள தாக்குதலாகும். இவற்றிலிருந்து ஏழைகளை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். குடும்ப அட்டை வழங்கியுள்ளதில் உள்ள குளறுபடிகளைக் களைய வேண்டும், வயது முதிர்ந்த விவசாயத் தொழிலார்கள் ஆண், பெண் அனை வருக்கும் நிபந்தனையின்றி ஓய்வூதியம் வழங்கு வதை உறுதிப்படுத்த வேண்டும். விவசாயத் தொழி லாளர்களுக்கு வேலையற்ற நாட்களில் மாற்று வேலையும், அத்தகைய வாய்ப்பு ஏற்படுத்த முடியாத போது உரிய நிவாரணமும் வழங்க வேண்டும். சுதந்திர இந்தியா நூற்றாண்டை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், விவசாயத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாக கடைக்கோடிக் கிராமங்களில் கண்ணீரோடு உழன்று கொண்டிருக்கின்றனர். சமூக ஒடுக்குமுறைகள், அடக்குமுறைகள், பொருளாதாரச் சுரண்டல் எனக் கொடுமைகளின் புதைகுழியில் தள்ளப்பட்டுள்ளனர். உழவர் பாதுகாப்புத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டம் போன்ற விவசாயத் தொழி லாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், பயன்கள் முடக்கப்படுகின்றன. அதற்கு ஒதுக்கப்படும் நிதிகள் மடைமாற்றம் செய்யப்படுகின்றன.
பாராமுகமாய்...
விவசாயத் தொழிலாளர்ளின் நிலைமைகளைப் பற்றி தெரிந்தும், அறிந்தும் ஆட்சியாளர்கள் பாராமுகமாய் இருப்பது மிகுந்த வேதனைக்குரியது. எதிர்வரும் காலம் பெரும் சாவல் நிறைந்ததாக மாறப்போகிறது. இதில், முதலில் பாதிக்கக்கூடிய வர்க்கமாக விவசாயத் தொழிலாளர்கள் காணப்படுவார்கள். ஒவ்வொரு வருவாய்க் கிராமத்திலும் ஆண், பெண் பெயர் பட்டியல் தயார் செய்து வைக்க வேண்டும். அந்த பட்டியல் அடிப்படையில் உறுதியான தலையீட்டை செய்யாமல் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கான உரிமை களையோ, சலுகைகளையே பெற்றுத்தர முடியாது. விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாத்திட விவசாயத் தொழிலாளர் சங்கம் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறது. அதே நேரத்தில் கிராமப்புறங்களில் சிதறிக்கிடக்கிற உழைப் பாளிகளை ஒன்றுபட விடாமல் செய்யும் காரியத்தை ஆட்சிக்கு வரும் கட்சிகள் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்துகொண்டு இருக்கின்றன. தடையைமீறி கிராமப்புற விவசாயத் தொழிலாளர் களை ஒன்று திரட்டுவதில் உரிய முன்னெடுப்பை செய்ய வேண்டும். அதற்கு புதுக்கோட்டை மண்ணில் நடைபெறும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு வழிகாட்டட்டும்.