articles

img

அதிகாரக் குவிப்புக்கு அணை போடுவோம்! மாநில உரிமை காக்க அணி சேருவோம்! - கே.பாலகிருஷ்ணன்

மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நீண்ட நெடிய போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியோடு பயணிக்கிறது. அதே போல தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் மாநில உரிமைக் குரலை வலுவாக எழுப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பின்னணியில்தான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மாநில உரிமைகளுக்காக திமுகவும் மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ‘இரட்டை குழல் துப்பாக்கி’ போல் எழுப்பிய குரல் இந்திய துணைக் கண்டம் முழுவதிலும் எதிரொலிக்கிறது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குரலை இரு கட்சிகளும் இன்னும் வலுவாக எழுப்புவோம்.

இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என அரசியல் சட்டம் தெளிவாக வரையறுத்துள்ளது. ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை என்பதையே அனுபவம் காட்டுகிறது. ஒன்றிய அரசு நினைத்தால் ஒரு மாநிலத்தை சிதைக்க முடியும் என்பதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை கலைக்க முடியும் என்பதும் எந்தளவுக்கு ஒன்றிய அரசிடம் அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளது என்பதற்கு உதாரணங்கள் ஆகும். தோழர் இ.எம்.எஸ் ஒருமுறை கூறினார் - நாடு விடுதலை பெற்றபோது நிகழ்ந்த இந்திய. பாகிஸ்தான் பிரிவினையும் அதனால் ஏற்பட்ட மத மோதலில் பல்லா யிரக்கணக்கான மக்கள் பலியானதும் கவலை யளிக்கும் நிலைமை எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக ஒன்றிய அரசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள் ளதாகக் கூறப்பட்டது. ஆனால் இந்த அடிப்படையில் மாநிலங்களின் அதிகாரம் தொடர்ந்து பறிக்கப்பட்டு வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

பாஜக ஆட்சியில் இது பலமடங்கு அதிகரித் துள்ளது என்பது மட்டுமல்ல அரசியல் சாசனம் அங்கீ கரித்துள்ள மதச்சார்பின்மை கூட்டாட்சி, பன்மைத்து வம் என அனைத்து விழுமியங்களும் துடைத்தெறி யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மாநிலங்கள் என்பது வெறும் நிர்வாக அமைப்பு மட்டுமல்ல, பல தேசிய இனங்கள், பல மொழிகள், பண்பாடு கலாச்சாரம் கொண்ட மக்கள் இணைந்து வாழும் நாடு இந்தியா. ஒருவர் தன்னை எந்தளவு இந்தியர் என்று உணர்கிறாரோ அதே அளவு தமிழர், மலையாளி, வங்காளி, மராத்தி என தனது அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும். அதே நேரத்தில் அனைவரும் இந்தியர் என்றும் உணர முடியும். 

மொழி வழி மாநிலங்களை முன்மொழிந்தவர்கள்

விடுதலைக்கு முன்பே மொழிவழி மாகாணங்கள் அமைக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியது. கம்யூனிஸ்டுகள் இதற்காக வலுவாக குரல் கொடுத்தனர். ஆனால் நாடு விடுதலை பெற்ற பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் இதற்கு உடன்பட வில்லை. மொழிவழி மாநிலங்கள் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும் கிளர்ச்சிகள் நடை பெற்றன. அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. மக்கள் எழுச்சி காரணமாக இந்த கோரிக்கை வெற்றிபெற்று மொழிவழி மாநிலங்கள் அமைக் கப்பட்டன. மாநிலங்கள் மொழி மற்றும் இன அடிப்படை யில் அமைக்கப்பட்டன. இந்தியாவின் பன்மைத் துவத்தை பறைசாற்றுவதாகவும் அதே நேரத்தில் ஒரு மைப்பாட்டை வலியுறுத்தவதாகவும் இது அமைந்தது.  இந்த அடிப்படையில் மாநிலங்களின் உரிமை கள் உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மத்திய பட்டியல், மாநிலப் பட்டியல் இரண்டுக்கும் அதிகாரம் உள்ள ஒத்திசைவுப் பட்டியல் என மூன்று பட்டியல்கள் உருவாக்கப்பட்டன.

ஆனால் நடைமுறையில் ஒன்றிய அரசு அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே குவித்துக் கொண்டே வந்தது. ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள துறைகள் குறித்து ஒன்றிய அரசு மாநில அரசுடன் ஆலோசித்து சட்டம் இயற்றலாம் என கூறப்பட்டாலும் இறுதியில் ஒன்றிய அரசின் அதிகாரமே செல்லுபடியாகும். மேலும், மாநிலப் பட்டியலில் உள்ள துறைகள் தொடர்பாக ஒன்றிய அரசு மாநில அரசுகளுடன் ஆலோ சித்த பிறகே சர்வதேச அளவிலான உடன்பாடுகளில் கையெழுத்திட முடியும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை.  உலக வர்த்தக நிறுவனத்துடன் ஒன்றிய அரசு மேற் கொண்ட உடன்பாடுகளின்போது மாநில அரசுகளின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவில்லை. வேளாண் துறை மாநிலப் பட்டியலில் உள்ள நிலை யில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களும் ஒன்றிய அரசு தன்னிச் சையாக நிறைவேற்றியவையே ஆகும்.

மாநிலங்களையே  ஏற்காதவர்கள்

ஆர்எஸ்எஸ் அமைப்பினால் வழிநடத்தப்படுகிறது. ஆர்எஸ்எஸ் தொடக்கக் காலம் முதல் மொழிவழி மாநிலங்களை எதிர்த்தே வந்துள்ளது. இந்தியாவின் ஒரே மொழியாக சமஸ்கிருதம் தான் இருக்க வேண்டும் என்பது அதனுடைய விருப்பம். இடைக்காலத்தில் இந்தி இருக்கலாம் என்று கூறியது. மாநிலங்கள் என்ற கட்டமைப்பையே ஆர்எஸ்எஸ் துவக்கம் முதல் ஏற்றுக் கொள்ளவில்லை. இது பிரிவினைக்கு வழிகோலும் என்பதே அதனுடைய கருத்து. எனவேதான் தற்போது ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே வரி, ஒரே தேர்தல் என ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்க முயற்சி செய்கிறது. இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை, பல மொழி, பல இனங்கள், பல மாநிலங்கள் என்ற அனைத்தையும் கேள்விக்குறியாக்குகிறது. ஒன்றிய ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள பாஜக தன்னுடைய வழிகாட்டியான ஆர்எஸ்எஸ்சின் நிகழ்ச்சி நிரலை அனுதினமும் முன்னெடுத்துக் கொண்டுள் ளது. இதில் முக்கியமான ஒன்று உரிமைகளைப் பறித்து மத்தியில் அதிகாரங்களை குவிப்பது ஆகும். 

மாநில அரசுகளின் நிதி ஆதாரத்தை வெட்டிச் சுருக்குவதிலேயே பாஜக கூட்டணி அரசு குறியாக உள்ளது. 15ஆவது நிதிக்குழு அறிக்கையின்படி மொத்த வரி வருவாயில் 67.2 சதமானத்தை ஒன்றிய அரசு உறிஞ்சிக் கொள்கிறது. ஆனால் 37.6 சதவீதமே மாநிலங்களின் செலவினங்களுக்கு ஒதுக்குகிறது. மறுபுறம் மாநிலங்களுக்கு 37.3 சதவீதம் தான் வருவாய் கிடைக்கிறது. ஆனால் 62.4 சதவீதம் செலவினப் பொறுப்புகளை மாநில அரசுகள் தங்கள் தோளில் சுமக்க வேண்டியுள்ளது.  அரசியல் சாசனத்தில் மத்திய மாநில அரசுகளின் நிதி மற்றும் செலவினப் பங்கீடு குறித்து எதுவும் கூற வில்லை. மத்திய அரசு வசூலிக்கும் வரியை மாநிலங்க ளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு நிதிக்குழு அமைக்க வேண்டும் என்றுதான் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மாறாக கல்வி, சுகாதாரம், விவசாயம், ஊரக வளர்ச்சி போன்ற பல்வேறு துறைகளில் ஒன்றிய அரசு திட்டங்களை உருவாக்கி அதற்கான ஒரு பகுதி செலவினத்தை மாநில அரசுகளின் மேல் திணிக் கிறது. இதேநேரத்தில் ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரி பகிர்வில் மாநிலங்கள் கூறிய தொகையைத் தர மறுக்கிறது. உள்ளாட்சி அமைப்புகள் உட்பட பல்வேறு துறைக ளுக்கு தரவேண்டிய நிதி மற்றும் மானியத்தையும் ஒன்றிய அரசு தர மறுக்கிறது. 

மொத்தமாக சுருட்டும்  ஒன்றிய அரசு

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு தரவேண்டிய ரூ.25000 கோடி தொகை யினை உடனடியாக  விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி மூலம் ஒன்றிய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில் மாநிலங்களுக்கு பிரித்துத் தரப்படுவது இந்த மே மாதத்துடன் நிறுத்தப்படவுள்ளது. இது மாநிலங்களின் நிதி ஆதாரத்தில் மேலும் ஒரு பேரிடியாக இறங்க உள்ளது. மேலும் ஒன்றிய அரசு தன்னுடைய வரிவருவாயிலிருந்து மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுப்பதை தவிர்ப்பதற்காக சர்சார்ஜ், செஸ்வரி என பல்வேறு குறுக்கு வழிகளை பின் பற்றுகிறது. இவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பைசாவைக் கூட மாநில அரசுகளுக்கு தரவேண்டி யது இல்லை. அப்படியே ஒன்றிய அரசு சுருட்டிக் கொள்ளலாம்.

கடந்த காலங்களில் செஸ் மற்றும் சர்சார்ஜ் மூலம் கிடைத்த தொகை மொத்த வரி வருவாய் 10 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது. ஆனால் தற்போது இது 19.9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதன்மூலம் 4.5 லட்சம் கோடி ஒன்றிய அரசு வருவாய் பெற்றுள்ளது. வரும் ஆண்டில் இது 7 லட்சம் கோடிக் கும் அதிகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு பைசா கூட மாநில அரசுகளுக்கு கிடைக்காது. மாநில அரசுகள் ஒன்றிய அரசிடம் தனது திட்டங்க ளை எடுத்துக்கூறி நிதி ஒதுக்கீடு பெறுவதற்காக திட்டக்குழு செயல்பட்டு வந்தது. ஆனால் அந்த அமைப்பு கலைக்கப்பட்டு நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஒன்றிய அரசு ஒதுக்கும் தொகையை மட்டுமே மாநில அரசு கள் பெறக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. மாநிலங்களின் தேவை மற்றும் கோரிக்கைகள் கேட்கப்படுவதேயில்லை.

மாநில அரசுக்கு வருவாய் அளிக்க ஒரு சில துறைகள் மட்டுமே உள்ளன. பெட்ரோலியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியில் பெரும் பகுதி ஒன்றிய அரசுக்கே செல்லும். சிறு பகுதியே பெட்ரோலியப் பொருட்கள் மூலம் மாநில அரசுகளுக்கு கிடைக்கும். மது விற்பனை வரிகள் மற்றும் சொத்து வரி உள்ளிட்ட வைகள் மட்டுமே மாநில அரசின் வரி வருவாயாக உள்ளன. இதையும் பறித்திட ஒன்றிய அரசு திட்ட மிட்டு தற்போது ஒரே நாடு, ஒரே பத்திரப் பதிவு என ஆரம்பித்துள்ளது. பத்திரப்பதிவு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்கு சென்றால் அதன் மூலம் கிடைக்கும் வருவாயையும் மாநில அரசுகள் இழக்க நேரிடும். கடந்த ஆண்டு தமிழக அரசுக்கு பத்திரப் பதிவு மூலம் 12 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வருவாய் கிடைத் தது. அதையும் பறிக்க ஒன்றிய அரசு திட்டமிடுகிறது.  புதிய கல்விக் கொள்கையைத் திணிப்பதன் மூலம் கல்வித்துறையை ஒட்டுமொத்தமாக தன்னுடைய  கட்டுப்பாட்டில் ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ள முயல்கி றது. இதன் மூலம் ஆர்எஸ்எஸ் அமைப்பினுடைய பிற்போக்குக் கருத்தியல்களையும் பெண்ணுரிமைக்கு எதிரான சிந்தனைகளையும் புராணப் புனைவுகளையும் அறிவியல் விரோதக் கருத்தோட்டங்களையும் பாடத் திட்டங்களில் திணிக்கத் துடிக்கிறது. இதற்கு மாற்றாக தமிழக அரசு மாநிலத்திற்கென்று கல்விக்கொள்கை யை உருவாக்க முடிவு செய்து அதற்கென நிபுணர் குழுவை அமைத்திருப்பது சரியான முன்னெ டுப்பாகும்.

கார்ப்பரேட்டுகளுக்கு  கரசேவை

ஒன்றிய பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளை பாதுகாக்கும்  நோக்கத்துடன் மாநில அரசுகளின் உரிமைகளைத் திட்டமிட்டுப் பறித்து வருகிறது. அதாவது முதலாளிகள் மீதான நேர்முக வரியை குறைத்து மக்கள் மீதான மறைமுக வரியை தொடர்ந்து  உயர்த்திக் கொண்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வரும் முன்பு வரை நேர்முக வரி 19 சதவீதம் அளவுக்கு,  அதாவது ரூ.78 ஆயிரம் கோடியிலிருந்து 5 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆனால் கடந்த 8 ஆண்டில் நேர்முக வரி 7.8 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி கடந்த எட்டு ஆண்டுகள் மோடி அரசு ரூ.10.75 லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடன்களை வராக் கடன் என தள்ளுபடி செய்துள்ளது. கார்ப்ப ரேட் கம்பெனிகள் கடன்களை தள்ளுபடி செய்வது, வரிச் சலுகை அளிப்பது தொடர்கிறது. ஆனால் மாநி லங்களின் வரி வருவாயை வெட்டிச் சுருக்குவதோடு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வரிப்பங்கீட்டையும் மறுக்கிறது. மாறாக கொரோனா காலத்தில் கூட மாநில அரசுகளுக்குத் தேவையான நிதியை தர மறுத்தது. தமிழகத்திற்கு தரவேண்டிய வரிப் பாக்கி யை தர மறுத்தது மட்டுமின்றி, தேவையானால் கடன் பெற்றுக்கொள்ளுமாறு ஒன்றிய நிதியமைச்சர் கூறினார். மின்வாரியத்தை தனியார்மயமாக்க வகை செய்யும் உதய் மின்திட்டத்தை ஏற்றுக்கொண்டால் தான் இந்தக் கடன் தொகையைக் கூட பெற முடியும் என அவர் கூறினார். ஒன்றிய அரசு மாநில அரசுகளை எந்த அளவுக்கு கொத்தடிமைகளைப் போல கருது கிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

கூட்டுறவுத்துறை தற்போது மாநில அரசுகளின் கீழ் உள்ளது. கேரளம் போன்ற மாநிலங்களில் கூட்டு றவுத்துறை மிகச்சிறந்த பணியை ஆற்றி வருகிறது. ஆனால் மோடி அரசு கூட்டுறவுக்கென்று மத்திய அமைச்சகம் ஒன்றை உருவாக்கி அதற்குப் பொறுப் பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நியமித்துள்ளது. காலப்போக்கில் கூட்டுறவுத்துறையை யும் மாநிலங்களிடமிருந்து கபளீகரம் செய்யும் திட்டத்துடன் தான் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு ரூ.7000 கோடி பாக்கித்தர வேண்டியுள்ளது. இந்த தொகையை அளிக்க வேண்டுமானால் சொத்து வரியை உயர்த்த வேண்டுமென மாநில  அரசைக் கட்டாயப் படுத்துகிறது. இதன் காரணமாகவே தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதாக நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  மாநிலங்களை பலவீனப்படுத்தி, ஒன்றிய அளவில் அதிகாரத்தைக் குவிப்பது எதேச்சதிகாரத்தை நோக்கி யே இட்டுச்செல்லும். மேலும் கூட்டாட்சி அமைப்பு என்ற அரசியல் சாசனத்தின் நெறிமுறையை நீர்த்துப் போகச் செய்யும். 

மாநிலங்களின் குரல்  ஓங்கி ஒலிக்கட்டும்

மாநில சுயாட்சிக்காக அறிஞர் அண்ணா காலத்திலி ருந்து தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளது திமுக. கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது மாநில சுயாட்சிக்காக ராஜமன்னார் குழுவை அமைத்த தும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் குறிப்பிடத்தக்க ஒன்று. தற்போதைய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மாநில சுயாட்சிக் கொள்கை குறித்து விவாதிக்க பாஜக அல்லாத மாநில முதல்வர்களின் கூட்டத்தை கூட்டப்போவதாக அறிவித்துள்ளதோடு மாநில சுயாட்சிக்காக பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார்.  மாநிலங்களின் அதிகாரங்களை பாதுகாக்க வளமான பங்களிப்பினை செய்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறும் மாநில சுயாட்சிக் கருத்தரங்கில் அவர் பங்கேற்பது பொருத்த மானது. இந்தக் கருத்தரங்கம் மாநில சுயாட்சிக்கான குரலை ஓங்கி ஒலிக்கும். இந்தியாவின் மாநிலங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் முன்னெடுப்புகளுக்கு இது ஒரு திறப்பாக அமையும் என்பது உறுதி.