“பன்முக ஆளுமை” என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாய் டி.டி.கோசம்பியைச் சொல்லலாம். யாருக் கேனும் ஐயம் இருந்தால் மூ.அப்பணசாமி எழுதிய “வரலாறு – பண்பாடு- அறிவியல்: டி.டி.கோசம்பியின் வாழ்க்கையும் ஆய்வு களும்” என்கிற நூலை கட்டாயம் வாசியுங்கள். நீங்களும் வழிமொழிவீர்கள்.
இடதுசாரி பதிப்பகங்கள் மொழி யாக்கம் செய்து வெளியிட்ட டி.டி.கோசம்பி யின் நூல்களை முன்பே வாசித்திருக் கிறேன். கடினமான மொழிநடையால் உள்வாங்க சிரமப்பட்டிருக்கிறேன். அவர் குறித்து சில கட்டுரைகளையும் முன்பே வாசித்திருக்கிறேன். ஆயினும் அவரைப் பற்றி ஓர் முழுமையான சித்திரத்தை இந்நூலில் கண்டுணர்ந்தேன். தோழர் அப் பணசாமிக்கு மிக்க நன்றி! பாராட்டுகள்!
இந்நூல் மூன்று பகுதிகளை உடையது என்றே எல்லோரும் சொல்கிறார்கள். நான் மறுக்கிறேன். நான்கு பகுதிகளைக் கொண்டது. முதல் நாற்பது பக்கங்களில் ஆ.சிவசுப்பிரமணியன், ந.முத்துமோகன், செள. குணசேகரன், க.காமராசன் ஆகி யோர் எழுதிய அணிந்துரைகளும், “தென் கோடியிலிருந்து கோசாம்பியை நோக்கி..” என மூ.அப்பணசாமியின் பொருள் பொதிந்த முன்னுரையும் இடம் பெற்றுள் ளன. இந்த முதல் பகுதியை வாசிப்பது, பின்னால் தொடரும் 19 அத்தியாயங்கள டங்கிய மூன்று பகுதிகளை வாசிக்க முன் னோட்டமாக அமையும். ஆகவேதான் நான்கு பகுதிகளைக் கொண்ட நூல் என்றேன்.
முதல் பகுதி “வரலாறு எழுதுதலில் கோசம்பி” என்பதாகும். இரண்டு அத்தியா யங்களைக் கொண்ட இப்பகுதில் முதலில் ‘கோசம்பியின் வாழ்க்கை வரலாறு’ பேசப் படுகிறது. முதலில் தந்தையின் வரலாற்றை சுருக்கமாகச் சொல்லிவிட்டே மகன் வரலாறு வருகிறது. 1907 ஜூலை 31இல் பிறந்து 1966 ஜூன் 28இல் மறைந்த கோசம்பியின் வாழ்நாள் என்பது வெறும் 59 ஆண்டுகளே. அதில் முன்றில் ஒரு பகுதி பள்ளி கல்லூரி படிப்பில் கழிந்தது. சுமார் நாற்பதே ஆண்டுகளில் அவர் பயணப்பட்ட பெருவெளியை, சேகரித்த அறிவுப் புதை யலை சொல்லும் வாழ்க்கை வரலாறுதான் முதல் பகுதி. இவர் பெயர் தாமோதர் தர்மானந்தா கோசம்பி. இவரது தந்தை பெயர் தர்மானந்தா தாமோதர் கோசம்பி. ஆக இருவரையும் டி.டி.கோசம்பி என்றே குறிப்பிடுவர். கோவாவில் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை புத்த மதத்தையும் பாலி மொழியையும் மீட்டுரு வாக்கம் செய்வதில் ஈடுபட்ட பேரறிஞர். ஹார்வர்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பணி யாற்றியவர். எனவே மகன் தாமோதர் கோசம்பி வெளிநாடுகளில் பயிலும் வாய்ப்பு பெற்றவர்.
படித்தது பொறியியல். ஆர்வத்தோடு ஈடுபட்டது கணிதத்தில். தெற்காசியாவின் மிகச் சிறந்த கணித அறிவியலாளர். புள்ளி யியலாளர், மொழி ஆர்வலர், வரலாற்றை புதிய கோணத்தில் மக்கள் வாழ்விலிருந்து கட்டி எழுப்ப முயன்றவர், அதற்கென தடம் பதித்தவர், பண்பாட்டில் கூர்மையாக கவனம் குவித்தவர், மார்க்சிய சிந்தனை யாளர், உலக அமைதி செயல்பாட்டாளர், அறிவியல் குறித்த சமூகப் பார்வையை வழங்கியவர் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
“இயற்பியல், புள்ளியல், நாணயவி யல், கட்டிடக் கலை, தொல்லியல் உள்ளிட்ட பலதுறைகளில் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக புள்ளியல், நாணயயியல் துறை களில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பலனாக அந்த இரு துறைகளையும் அறிவி யல் துறையாக மேம்படுத்திப் புதிய தடங் களை உருவாக்கினார். இன்றும் அவரது கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அந்த இரு துறைகளும் இயங்குகின்றன” என நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
ஆங்கிலம், சமஸ்கிருதம், பாலி, ஜெர் மனி, இத்தாலி உட்பட பல மொழிகளைக் கற்றவர். சமஸ்கிருத கவிஞர் பர்த்ருகிரியின் ‘சுபஷிதா’ காவியத்தின் செம்பதிப்பை வெளியிட்டார். ‘ஷாதகாத்ரயீ’ சமஸ்கிருத நூலின் சிதைந்த சுவடிகளை இந்தியா முழுவதும் தேடி அலைந்து சேகரித்து விமர்சனக் குறிப்புகளுடன் செம்பதிப்பாக வெளியிட்டார். “பர்த்ருகிரி மக்கள் கவிஞரல்ல; அரசவைக் கவிஞர்.
அவரது அனுபவங்கள் கபீர், துக்காராம், துளசிதாஸ் போன்று நேர்மையாக இல்லை. பர்த்ருகிரி மக்கள் மனதில் இடம் பிடிக்கத் தவறிய கவிஞர். இன்றைய நடுத்தர மக்கள் மனதில் காணப்படும் அறிவிஜீவித்தனமே அவர் கவிதைகளில் வெளிப்படுகிறது.” என்றார் கோசம்பி.
அவர் தன் மனதுக்கு சரி எனப் பட்டதை எந்தச் சூழ்நிலையிலும் சொல்லத் தயங்கியவர் அல்ல. அவரது வாழ்க்கையும் படைப்புகளுமே அதன் சாட்சி. எந்த நூலையும் விமர்சனப்பூர்வமாக படிக்கும் மார்க்சுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய் திருப்பார்.
“ஜவஹர்லால் நேரு எழுதிய ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ நூலுக்கு கோசம்பி…. எழுதிய விமர்சன மதிப்புரை வெளிவந்தி ருந்தது. அந்த விமர்சனத்தில் நேரு புத்த கத்தில் இந்திய வரலாறு தொடர்பாக சில பிழைகளைக் கடுமையாக கோசம்பி சுட்டிக் காட்டி இருந்தார்.
ஆனால் இந்த விமர்சனம் இருவரின் தனிப்பட்ட நட்பில் எந்தப் பாதிப் பையும் ஏற்படுத்தவில்லை என்பதை இந்திய அறிவியல் மாநாட்டின் கணிதவியல் அரங்கின் பொறுப்பு கோசம்பிக்கு தரப்பட்டதன் மூலம் அறியலாம். மாநாட்டினை சுமூகமாக நடத்துவது குறித்த சில ஆலோசனைகளையும் தனிப்பட்ட கடிதம் மூலம் நேருவுக்குத் தெரிவித்திருந்தார்.
இவற்றில் பல ஆலோசனை கள் ஏற்கப்பட்டன.” என்கிறார் நூலாசிரியர். [நேருவின் அந்த குறிப்பிட்ட நூலை விமசித்த இன்னொரு அறிவியலா ளர் மேக்நாட் சாகா என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் நேரு இவரோடு நட்பாக இருந்தார், பின்னர் சர் சி.வி.ராமன், ஹோமிபாபா போன்ற அறிவியலாளர் களால் தலித் என்பதால் மேக்நாட் சாகா ஒதுக்கப்பட்டது வரலாறு]கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ.டாங்கே வேத காலம் குறித்து எழுதியதை கடுமையாக எதிர்த்தவர் கோசம்பி என்பதும் கவனத்துக்கு உரியது.
இவரது இந்த இயல்பு காரணமாகவே பணி இடத்தில் தொல்லைகளையும் நெருக்கடிகளையும் சந்தித்தவர். பல இடம்மாறியவர். ஊதியத்தைவிட பணியின் தன்மைக்கே முக்கியத்துவம் அளிப்பவர். ஆயினும் தன் ஆர்வமான ஆய்வுகளில் எப்படியும் ஈடுபட்டுவிடுவார். இந்தப் பகுதியின் இரண்டாவது அத்தியாயமான ‘இந்திய வரலாற்று ஆய்வில் கோசம்பி’ எனும் கட்டுரை முக்கியமானது.
ஏனெனில் அவரது வழியில் பலவற்றை இன்றைய வரலாற்றாசிரியர் கட்டுடைப்பதையும்; அவரோடு முரண்படுவதையும் நூலாசிரியர் இணைத்தே சொல்கிறார். “கோசம்பி மார்க்சியத்தை ஒரு ‘மூடுண்ட அமைப்பாக’ பார்க்கவில்லை. அவரது மார்க்சியம் என்பது மனித குல வரலாற்றினைத் திட்டவட்டமான ஆய்வுக்கு உட்படுத்தும் அறிவியல் முறையாகும். மார்க்சியம் ‘திறந்த நிலையில்’ இருப்பது அவசியமாகிறது என்றார் கோசம்பி” இவ்வாறு நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
“இந்தியாவில் பொருளியல் மாற்றங்கள் தேவைப்படும் போதெல்லாம் மதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் இறையியல் குறிகளுடன் இணைந்தே உருவாக்கப்படுகின்றன” என்கிறார் கோசம்பி. ஆரியமயமாக்கல், வேதக்கதையாடல்களை கட்டவிழ்த்தல், கிருஷ்ணன் யார்? பலராமன் யார்? பகவத் கீதையின் காலம் எது? அவைதிக மதங்களின் வீழ்ச்சி, பார்ப்பனிய மறு எழுச்சி, சமஸ்கிருத பாலி மொழிகளின் ஒப்பீடு போன்றவற்றில் கோசம்பியின் பார்வை என்ன என நாம் அறியமுடிகிறது.
ஆழமான பார்வை வியப்பேற்படுத்துகிறது. “சமஸ்கிருதம் [அடித்தட்டு மக்களின்] புலனுணர்வு சார்ந்த அன்றாட வாழ்விலிருந்து தன்னைத்தானே துண்டித்துக் கொண்ட மொழியாகியது. மேட்டிமைச் சமூ கத்தின் கருவியாகவும் அதிகாரத்தை சட்டபூர்வமாக்கும் கருவியாக்கவும் சமஸ்கிருத மொழி மாறியது” என்கிறார்.
“ஒருங்கிணைந்த முறைமைகள்”, “தொன்மமும் நடப்பும்” என இரு அத்தியாயங்களைக் கொண்ட “பண்பாட் டின் முறைமை” எனும் இரண்டாம் பகுதி வரலாற்றில் கோசம்பியின் முக்கிய பங்களிப்பை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது. கோசம்பி கருத்துகளோடு உடன்படு வோரும் உண்டு .முரண்படுவோரும் உண்டு.. ஆயினும் மன்னர்களைச் சுற்றிவந்த வரலாற்றை மக்களைச் சுற்றிவர கால்கோள் இட்டவராகிவிட்டார் கோசம்பி. “குறிப்பாக, முகலாயர் வருகைக்கு முன்வரை எந்த வொரு வரலாற்று நபர் குறித்த துல்லியமான காலவரம்பும் நமக்குக் கிடையாது. வரலாறு குறித்த மேலோட்டமான தகவல்கள்கூட பொதுபுத்தியில் பதியப்படவில்லை.”
இப்போது மோடி ஆட்சியில் சங்கிக் கூட்டம் வரலாற்றை பின்னுக்கு தள்ள வேதகாலத்தை புனிதப்படுத்த இதிகாச கற்பனைகளையே ஆதரப்பட்டு நிற்கிறது. ஆர்எஸ்எஸ் வரலாற்றுப் பிரிவின் பெயரே பாரதிய இதிகாஸ் சங்கலன் சமிதி [Bharatiya Itihas Sankalan Samiti] என இதிகாச ஒட்டோடுதான் இருக்கும். அறிவியலையும் வரலாற்றையும் மோடி அரசு இதிகாச கற்பனைக் கதை போல் பேசிக்கொண்டிருக்கிறது. துல்லியமான வரலாற்றுப் பதிவு நம்மிடம் கிடையாது என்கிற கோசம்பி தொடர்கிறார்,
“இவற்றையெல்லாம் கணக்கிடுப் பார்த்தால் தொல் வரலாற்றிலிருந்து நம் காலம் வரை தொடரும் பழங்குடிகளிடம் காணப்படும் மிச்ச சொச்ச பழக்க வழக்கங்கள் சடங்குகள் மட்டுமே இன்று நம்முன் வாழும் சான்றுகள் ஆகும். இன்றைய கணக்குப்படி [1967] இந்திய மக்கள் தொகையில் 6 விழுக்காடாக உள்ள சுமார் மூன்று கோடி பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள் . அவர்கள் மட்டுமே தொல்வரலாற்று கால வாழ்வைத் தம் பண்பாட்டுக்குள் புதைபடிவங்களாகத் [Fossil] தக்கவைத்துள்ளனர் என்கிறார். பசுவை பார்ப்பனர் கொண்டாடுவதைக் குறிப்பிட்டு கங்கைச் சமவெளிச் சேற்றில் நீர் எருமையே நன்கு வளர்ந்திருக்க முடியும் என்கிறார்.
தேங்காய் பண்டைய ஆவணம் எதிலும் இல்லை, நான்காம் நூற்றாண்டு வாக்கில் மலேசியா போன்ற தென்கிழக்கு நாடுகளில் இருந்து வந்ததாகக் கூறுகிறார். ஆரியம் எப்படி எல்லாம் தொல்குடி பண்பாட்டை விழுங்கி ஏப்பம் விட்டது என்பதை பல உதாரணங்கள் மூலம் எடுத்துரைக்கிறார். பல தொல்குடி நாயகன் /தெய்வங்கள் எப்படி ஆரிய கற்பனை கதையில் பிசையப்பட்டது என சுட்டுகிறார். “சிவ – பார்வதி திருமணம் மூலம் பார்வதியை சிவன் மனைவியாக்கி. அர்த்தநாரீஸ்வரர் மூலம் பாதி உடல்கள் இணைக்கப்பட்டதைப் போல, மஹிசாசுர மர்த்தினி போல, நாகர் பண்பாடு அகற்றப்பட்டு நாகத்தை சிவன் கழுத்தில் சுற்றிவிட்டதைப் போல, முன்னர் கூறிய வேறு உதாரணங்களையும் நினைவில் கொள்ளவும் [அந்த அத்தியாயத்தை வாசித்தால் அறியலாம்] புனைவிலக்கியத் திறன்கள் கொண்டு இணைக்கப்பட்டு. முரண்பாடுகளை பக்தி என்ற சிமெண்ட்கொண்டு பூசப்பட்டுள்ளது” என்கிறார் கோசம்பி.
தமிழ்நாட்டில் முருக வழிபாட்டை சுப்பிரமணியனோடு முடிச்சுப்போட்டு வள்ளிக்கு சக்களத்தியாக தேவயானை யைக் கொண்டு வந்து சேர்த்து, பின் வள்ளியையே சக்களத்தி ஆக்கிவிட்டதைப் போல, ஆடுகோழி பலியிட்ட கிராம கோயிகளில் பிள்ளையாரையோ அனுமாரையோ பிரதிஷ்டை செய்துவிட்டு அங்கு மொத்தமாக பொங்கல், சுண்டல் என மாற்றியதைப் போல காலங்காலமாக ஆரியர் செய்த திருகுதாளங்களை கோசம்பி பேசுகிறார். பகவத் கீதையின் மைய நோக்கத்தை நச்சென சொல்கிறார் கோசம்பி,
“வன்முறையைப் பயன்படுத்தாமல் பார்ப்பனியத்தை ஏற்கச் செய்வது; ஆளும் வர்க்க ஒரு பிரிவினரால் ஏற்க இயலாத சமூகச் செயல்பாடுகளுக்கு அறபோதனை வழியாக செல்வாக்கினைத் திரட்டுவது.” அத்தியாயத்தின் இறுதியில் ஆரியர் ஆரியல்லாதார் பற்றி பேசுகிறார். இந்த இடத்தில் மூ.அப்பணசாமியின் முன்னுரையில் இருந்து ஒரு நெடிய மேற்கோள் தவிர்க்க முடியாதது. “...ஆமாம். அவர் தக்காணத்தைச் சேர்ந்தவராக இருந்ததால்தான் சிந்துவெளிக்கும் தென்னிந்தியாவுக்கும் இடைப்பட்ட தொல்லியல் இடங்களில் ஆராய்ச்சி செய்ய நேர்ந்தது. அங்கிருந்துதான் அவர் பார்ப்பனிய பண்பாட்டு ஆக்கிரமிப்பின் எச்சங்களைக் கண்டுபிடித்தார். பார்ப்பனிய பண்பாட்டுக்கு முந்தைய தொல் திராவிட பண்பாட்டு மரபை மீளுருவாக்கம் செய்யவும் ஆரம்பித்தார்.” “அதே சமயத்தில், தென்னிந்தியாவின் திராவிட மரபின் தொன்மை குறித்து ஒன்றிரண்டு இடங்களில் ஆயினும், அழுத்தமாக வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்மொழி வழி வாழ்வியல், சென்னை வட்டாரக் கற்கருவிகள், ஆதிச்ச நல்லூர், சங்க இலக்கியங்கள் குறித்தும் கோசம்பி அதிகம் கவனம் செலுத்தவில்லை.” “இதற்கும் அவர் பெரும்பாலும் தக்காணத்தை மையமாகக் கொண்ட கள ஆய்வுகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தது காரணமாக இருக்கலாம்.மேலும் விடுதலைக்குப் பின்னர் தென்னிந்தியாவில் தொல்லியல் ஆய்வு ஏறத்தாழ கைவிடப்பட்டிருந்ததும், புதிய வெளிச்சங்களைப் பாய்ச்ச முடியாமல் போனதற்கு காரணம் ஆகலாம். தனது அறிவுப் பயணம் குறித்த கட்டுரையில், ‘ஒவ்வொரு வட்டாரத்திலும் மேற்கொள்ளப் படும் தொல்லியல் ஆய்வுகளே, துணைக்கண்ட வரலாற்றைத் தலைகீழாகப் புரட்ட உதவும்’ என்கிறார் கோசம்பி. தமிழ்நாட்டில் அண்மையில் நடந்துள்ள தொல்லியல் ஆய்வுகள் ,குறிப்பாக கீழடிக்கு பிறகான இன்றையச் சூழலில் கோசம்பியின் வரலாற்று அணுகு முறை நமது தொன்மையின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுவதை வாசகர்கள் உணர்வார்கள்.” இப்படி மூ.அப்பணசாமி சொல்லியிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியச் செய்தியே! பதினைந்து அத்தியாயங்களைக் கொண்ட “வரலாறும் அறிவியலும்” எனும் மூன்றாம் பகுதி வெவ்வேறு சந்தர்ப்பத்தில் கோசம்பியால் எழுதப்பட்ட கட்டுரைகளின் மொழியாக்க தொகுப்பு ஆகும். ஒவ்வொன்றும் நாம் அறிய வேண்டிய ஏராளமான தகவல் களை, செய்திகளை, கேள்விகளைத் தாங்கி நிற்கிறது. உலக அமைதிக்கும் மானுட முன்னேற்றத்திற்கும் அழைப்பு விடுகிறது. அறிவியலில் இந்தியா பின் தங்குவது ஏன்? அறிவியலின் சமூகச் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும்? இந்த மண்ணுக்கு எத்தகைய அறிவியல் பார்வை வேண்டும்? அணு ஆற்றலை ஏன் எதிர்க்க வேண்டும்? சூரிய ஆற்றலே இந்தியாவுக்கு ஏற்ற மாற்று ஏன் ? உலக சமாதானத்தின் தேவை ஏன்? சோவியத் யூனியனின் பங்களிப்பு என்ன? இப்படி நாம் அறிய வேண்டிய சிந்திக்க வேண்டிய விவா திக்க வேண்டிய செய்திகளை இந்த அத்தியாயங்கள் நெடுகப் பேசுகிறார். இங்கு அறிவுஜீவி வர்க்கத்தின், நடுத்தர வர்க்கத்தின் இரட்டை நிலை குறித்து வேதனைப்படுகிறார். மார்க்சிஸ்ட் சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிக்கிறார். “நம்மிடம் நமக்கான சிறப்புமிக்க அறிவியல் ஒன்றும் கிடையாது. அரபு அறிவியல், இந்திய அல்ஜீப்ரா அவ்வளவுதான். இவை இரண்டும் ஒரு காலத்தில் தலை சிறந்த அறிவியல் ஒழுங்குகளாக விளங்கின; ஆனால் இன்று காலாவதி ஆகிவிட்டன. ஆப்பிரிக்க வேதியியல், தெற்காசிய பொறியியல் குறித்துகூட பேச ஒன்றுமில்லை. அறிவியல், அறிவியல் தொழில்நுட்பம் தேச எல்லைகளை அறியாது. எனவே அது எங்கு தொழிற்படப் போகிறதோ அதன் பின்புலம் நமக்கு மிகவும் முக்கியத்துவம் கொண்டதா கிறது” என்கிறார். கூர்மையான பார்வை இது. அவரது கூரிய விமர்சனத்துக்கு இன்னொரு சாட்சி. 1966 ஆண்டு செமினார் இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரையில் இருந்து; “இங்கே நவீன ஆசிரியரும் தவறான கொள்கையில் விழுந்தவராக உள்ளார். அந்நிய ஆட்சியின்போது திணிக்கப்பட்டு எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் கல்வி அமைப்பின் அதிகார வர்க்க இயந்திரத்தின் நடுவே பணியாற்றுகிறார். அந்நிய ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்கள் வழங்கிய கல்வியைக் கற்று ஆசிரியராகி உள்ள ஒருவரது தாத்தா, தனக்குப் பிடித்த புரியாத சமஸ்கிருத சுலோகங்களை மனப்பாடம் செய்து அர்சித்துக் கொண்டிருப்பார். பேரன் ஆசிரியர் வகுப்பறையில் விஞ்ஞானக் கோட்பாடுகளைக் கற்றுக்கொடுப்பார்; வகுப்பறைக்கு வெளியே யோகா கற்றுக்கொண்டால் அப்படியே வானத்தில் பறக்கலாம்; உள்ளொளி மூலம் அணுப்பொருட்களையும் கிருமிகளையும் காண முடியும் என்று பிரசங்கம் செய்வார். தாம் நம்பும் மூடநம்பிக்கை கள் மீது தாம் கற்ற அறிவியல் கல்வியைச் செலுத்தி ஆய்வு செய்ய மாட்டார். உச்சிக் குடுமியும் பட்டை அல்லது நாமத்துடன் பள்ளிக்கு வருவார்.
இந்த மூடநம்பிக்கைகள் ஏன் உருவானது? இந்திய பஞ்சாங்கம் இதுவரை ஏதாவது பயனுள்ளதாகச் சாதித்துள்ளதா? இல்லையானால் அதை ஏன் கட்டியழ வேண்டும்?” 1966ல் கோசம்பி கேட்டார். மிகச் சரி! மோடியின் புதிய கல்விக் கொள்கை அந்த மூடநம்பிக்கைகளையே கல்வி என அதிகார பூர்வமாகப் போதிக்க முனைகிறதே .இச்சூழலில் இவரது ஒவ்வொரு கட்டுரையும் ஆழ்ந்து வாசிக்கத் தக்கன. செய்வீர் !
கோசம்பியின் எச்சரிக்கை ஒன்றை இங்கு பொருத்த மாக நினைவூட்டுவோம்; “கம்பி வலைச் சிறைக்குள் அறிவியல் மலராது. அறிவியல் என்பது தேவையை அதிகரிப்பதாகும்.அறிவியல் என்பது பரிசோதனை, பகுப்பாய்வு மற்றும் தேவை அறிதல் ஆகும். அறிவியலும் சுதந்திரமும் முன்னோக்கி மட்டுமே பயணிக்கும்.சுதந்திரத்தை அழிக்கும் போர்வெறி அறிவியலையும் அழிக்கும்.”
“இந்நூலின் தாக்கத்தால் கோசம்பியின் வரலாற்று நூல்களின் வாசிப்புத் தளம் விரிவடைவதுடன் அவரது வரலாற்று முறையியலை அடியொற்றி தமிழ்ச் சமூகத்தின் வரலாறு எழுதப்படும் என்று நம்புகிறேன்” இவ்வாறு முன்னுரையில் ஆ.சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ள நம்பிக்கையை நானும் வழிமொழிகிறேன். இறுதியாக ஒரு சொல்: மூன்று அத்தியாயங்களையும் தனித்தனி நூலாகக் கொணர்ந்தால் இன்னும் பரவலாகச் செல்லுமோ? அப்பணசாமி யோசிப்பாராக! வாழ்த்துகள்!