articles

img

பெண் உயிரினமா? உணவுப்பொருளா - ஆர்.ஹரிஹரன் கோவை

    பாலியல் பலாத்காரம் என்றால் இபிகோ 376 பிரிவின்படி வழக்கு பதிவு செய்யப்படும். கடந்த சில ஆண்டுகளாக அது 376 (G) என்று பதிவிடப்படுகிறது! அதாவது கூட்டு பலாத்காரம். உறவினர்கள் உணவுகளை பகிர்ந்து உண்பது போல, ஒரு பெண்ணை நண்பர்களும் கூட்டாளிகளும் சேர்ந்து பலாத்காரம் செய்வது தற்போது வாடிக்கையாகிவிட்டது. இதுதான் நாகரிகத்தின் உச்சமா அல்லது காமத்தின் பரிணாம வளர்ச்சியா தெரியவில்லை! பேசாத விலங்குகளை விட, பேசும் விலங்குகளான மனிதர்கள் புதுவகையான மிருகஜாதி என்று டார்வின் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் தனது ஆய்வில் கண்டுபிடித்திருப்பார்!

    2003ஆம் ஆண்டு ஜூலை 8இல் கண்ணகி எரிக்கப்படுகிறாள். ஜுலை 7 இரவு முழுவதும் அவள் அவளது சமூகத்தாராலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறாள் என்று ஒரு ஊடகப்பேட்டி மூலம் அறியப்பட்ட போது சப்த நாடியும் அடங்கிவிட்டது!  

   அவளது கணவன் முருகேசனும் எரிக்கப்படுகிறான்! அவன் தனது மரண வேதனையில் கண்ணகியை விட்டுவிடுங்கள். அவளுக்கு வேறு திருமணம் வேண்டுமானாலும் செய்யுங்கள். என்னை மட்டும் கொன்று விடுங்கள் என்று சொன்னதாக சொல்லப்பட்ட அவனது மரண உயிலின் வார்த்தை நெஞ்சில் மின்னலாகச் பாய்ந்தது! காதுகளே இல்லாத குப்பநத்த ஜாதி வெறி கும்பலுக்கு அந்த முனகல் எப்படி கேட்டிருக்கும்? இந்த இரு உயிர்கள் எரித்து கொல்லப்படுவதை பார்த்து கண்டு களிக்க கட்டணமில்லா எரியூட்டு நிகழ்ச்சியில் முன்னூறு பிணங்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டார்கள் என்ற செய்தி மனிதாபிமானத்திற்கு விட்ட சவாலாகும்!

     குற்றச்சாட்டு என்னவெனில் கண்ணகி சற்றே உயர்ந்த ஜாதி, அவளது கணவன் கீழ்ஜாதியாம்! சட்டம் இவர்களது திருமணத்தை அங்கிகரித்துள்ள போதும், ஜாதி வெறியர்கள் இச்சட்டத்தையும் சேர்த்து பொசுக்கியுள்ளனர்! ராமபிரான் காட்டுவாசி குகனையும், குரங்கினத்தவான சுக்ரீவனையும், அரக்க இனத்தவனான வீபிஷனையும் தனது சகோதரர்களாக ஏற்றுக்கொண்ட ராமாயண இதிகாசத்தை போற்றும் நமது நாட்டில், மனிதர்களிடையே நடைபெற்ற திருமணத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளாதது ஏன் என்று ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய கேள்வி எழுகிறது!

    2012இல் டில்லியில் நிர்பயா என்ற பெண் ஓடுகிற பேருந்தில் ஆறு மனித மிருகங்களால் தொடர் பலாத்காரம்! அவளது உடல் பாகங்கள் முழுவதும் சிதைத்து அவர்களது ஆண்மையின் சினத்தை தணித்துக்கொண்டு கொன்று விட்டனர்! காஷ்மீரில் ஆசிபா என்ற எட்டு வயது சிறுமியை பனிப்பிரதேச கரடிக்கும்பல், கோவில் வளாகத்திற்குள் கடவுளின் சிலை முன்னிலையில் ஒரு வாரம் கிடத்தி தவணை முறையில் தன் காமவெப்பத்தை தீர்த்துக் கொண்டு கொன்று விட்டது! ஆசிபாவின் தந்தை, “எல்லா இடத்திலும் என் மகளை தேடினேன். அந்த கோயிலை தவிர ஏனெனில் அங்கிருந்தால் கடவுள் அவளை காப்பாற்றியிருப்பார்!” என்று சொன்னவார்த்தை ஒட்டுமொத்த மனித இனத்திற்கே விடப்பட்ட ஆறாத வடுவாகும்!

    2021-இல் அதே டெல்லியில் சாபியா என்ற பெண் காவலர் தலைநகர காலிகளால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்தபின், தாய்மையின் சின்னமான மார்பகங்களை அறுத்தும் அவர்களது தாய்களையே கேவலப்படுத்திய அவலம் சற்று உச்சத்திற்கே சென்று விட்டது! உத்தரபிரதேசத்தில் மனிஷா என்ற பெண் இயற்கை உபாதைக்காக வெளியில் சென்ற போது, சாதி ஆதிக்க நாய்கள் அவளை குதறிக்கொன்றது! அரசின் காவலர்கள் அவளது உடலையும் கூட பெற்றோர்களுக்கு தராமல் எரித்து சாம்பலாக்கிக்கினார்கள்!! இப்படி நாடு முழுவதும் அவள்களின் துயரங்கள் அவன்களால் தொடர்கதை நிகழ்வாக அரங்கேறி வருகிறது!

    நமது உச்சநீதிமன்றம் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் பலாத்காரம் நடைபெறுகிறது என்று குறிப்பிட்டுள்ளது, ஜனநாயக்கத்தின் தாயான இந்தியாவிற்கு இதைவிட தண்டனையான சொல் இல்லையென்றெ கூறலாம்! வலுவான ஒன்றிய அரசு முப்பது மாநில அரசுகள், மாவட்டந்தோறும் ஆட்சியாளர்கள், நகரந்தோறும் காவல்நிலையங்கள் நாலு லட்சம் துணை ராணுவம் (CRPF) போன்ற அரசு இயந்திரங்கள் இயங்குகிறதா? துருப்பிடித்து போனதா? மக்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதுதான் அரசின் முதல் கடமை ! அது ஏன் நடைபெறுவதில்லை!

     இந்தியாவில் எப்போதெல்லாம் ஜாதி - மதக்கலவரம் நடக்கிறதோ, அப்போது முதலில் பலிகடா ஆவது பெண்கள்தான்! பாலியல் பலாத்காரம் செய்கிற போது மட்டும் பாகுபாடு பார்ப்பதில்லை! தீண்டாமை அந்நேரத்தில் ஆவியாகப் போய் விடுகிறது! சற்று ஆய்வுக்குட்படுத்தினால் கலவரங்கள் தூண்டப்படுவது பாலியல் பலாத்காராத்திற்காகவே! ஆண் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகவே! பெண்களை பண்டமாகப் பார்க்கும், பழமைவாத சித்தாந்தத்திற்காகவே! ஆட்சியாளர்களின் அவலச்சட்டங்களை எதிர்த்து நடக்கும் போராட்டங்களை திசை திருப்புவதற்காகவே என்று எண்ணத் தோன்றுகிறது! சில வழக்குகளுக்கு நீதிமன்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்று சொல்லிக்கொள்வது நமக்கு நாமே கூறிகொள்ளும் ஆறுதல் சொல்லே! தீர்ப்புக்கு அல்ல தீர்வுக்குத்தான் பாடுபடவேண்டும்!!

   முப்பது வருடத்திற்கு முன் நமது அருமை மகள் ரூப்கன்வார், ராஜஸ்தான் மாநிலத்தில் சதி என்னும் சடங்கால் தன் கணவனின் சிதையோடு சேர்த்து எரிக்கப்பட்டாள். நாடே அதிர்ந்தது! ஒருவேளை அவளும் நம் தமிழக கண்ணகி போலவே இரவு முழுவதும் ரஜபுத்திர காமுகர்களால் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பாளோ என்ற அச்சமும் ஐயமும் நம் இதயத்தை துளைத்தெடுகிக்கிறது!

    காதலுக்கு மரியாதை என்பது கம்யூனிச சமூதாயத்தில் மட்டும் தான்! ஏனெனில் அச்சமுதாயத்தில் ஜாதி- மதம் இருக்காது! இருந்தாலும் அது மனிதர்களை தாக்காது, எரிக்காது! எதனால் தெரியுமா? அந்த அரசு விவசாயிகளின் ஆதரவோடு இயங்கும் தொழிலாளர்களின் தலைமையிலான அரசு என்பதாலே!!