ஒன்றிய அரசின் சிறு குறு நடுத்தர அமைச்ச கத்தின் ஆண்டு அறிக்கையின்படி, இந்தி யாவில் 6 கோடிக்கும் மேல் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. இவை தொழில்துறை மதிப்பு கூட்டலில் (Gross Value Addition) 33.5 சத விகிதம் பங்களிக்கின்றன. குறு தொழில்கள் மட்டும் (Micro Sector) இந்தியாவின் ஒட்டு மொத்த தொழிலா ளர் எண்ணிக்கையில் 23 சதவிகிதம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்றன.
தாமதமான பண வரவுகள்
நீண்ட காலமாக, சிறு குறு தொழில்கள் சந்திக்கும் மிக முக்கியமான, அடிப்படையான இன்னல் தாமதிக் கப்பட்ட பணவரவுகள் (delayed payments ) ஆகும். சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி சட்டத்தின் படி (MSMED ACT 2006 CHAPTER) பெரிய நிறுவ னங்கள், சிறு நிறுவனங்களின் பில் தொகையை 45 நாட்களுக்குள்ளும், குறு நிறுவனங்களின் பில் தொகையை 30 நாட்களுக்குள்ளும் கொடுத்து விட வேண்டும். அப்படி கொடுக்காவிட்டால் தாமதமான காலத்திற்கு, ரிசர்வ் வங்கி வட்டியைப் போல் 3 பங்கு வட்டியும் சேர்த்து பில் தொகையை கொடுக்க வேண்டும். ஆனால் இந்த சட்டத்தை பல்வேறு பெரிய நிறுவனங்களும் இன்று வரை மதிப்பதே இல்லை. பெரிய நிறுவனங்கள் (அரசு நிறுவனங்கள் உள்பட) உரிய காலத்தில் கொடுக்காத பில் தொகை கள், ஆண்டுக்கு 10.7 லட்சம் கோடி ரூபாய் என Dun & Bradstreet நிறுவனம் கடந்த மே 2022ல் அளித்த ஆய்வறிக்கை கூறுகிறது. இது ஒட்டு மொத்த தொழிற்துறை மதிப்பு கூட்டலில் (GVA) கிட்டத்தட்ட 6 சதவீதம் ஆகும். இதில் 80 சதவீதம் அதாவது 8.55 லட்சம் கோடி ரூபாய், சிறு தொழில்களுக்கு தாமதமாக கொடுக்கப்பட்ட தொகைகள் ஆகும். இதில், ஒன்றிய அரசின் மகாரத்னா நிறுவனங்கள் 73 சதவிகிதம், நவரத்தின நிறுவனங்கள் 54சதவிகிதம், பொதுப்பணித்துறை, நகராட்சி அமைப்புகள் 69 சத விகிதமும், நிப்டி 50இல் இடம் பெற்றுள்ள கார்ப்ப ரேட் நிறுவனங்கள் 31 சதவிகிதமும் உரிய காலத்தில் பணம் கொடுப்பதில்லை. தனியார் நிறுவனங்களை விட அரசு நிறுவனங்கள், மோசமான நிலையில் உள்ளன. தாமதமான காலத்திற்கு கூடுதலாக வட்டி தர வேண்டு மென்ற சட்டத்தை யாரும் மதிப்பதில்லை.
தாமதமான பணவரவு - நாட்டின் பொருளாதார சீர்குலைவு
சிறு குறு தொழில்களுக்கு பில் தொகைகள் உரிய காலத்தில் வந்து சேராத போது, பணப் புழக்கம் (cash flow) தடைப்படுகிறது. இதனால் கந்து வட்டிக் காரர்களி டம் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படு கின்றன. முறை சாராக் கடன் மற்றும் அதிக வட்டி காரணமாக உற்பத்திச் செலவு கூடுகிறது. உரிய காலத்தில் பணம் வராத போது உரிய காலத்தில் அடுத்த ஆர்டர்களை நிறைவேற்ற முடிவதில்லை. இதனால் அபராதத் தொகை செலுத்த வேண்டும். சமயத்தில் ஆர்டர் இழப்பும் ஏற்படும். வங்கிகளுக்கு கடன் தவணைகளை உரிய காலத்தில் செலுத்த முடிவதில்லை. இவர்களின் கடன் சார் மதிப்பு (credit rating) குறைகிறது. வாங்கிய கடன்கள் ‘செயல்படா சொத்துக்கள் (NPA)’ ஆகின்றன. அதிக வட்டியால் இவர்கள் தயாரிக்கும் பொருட்களின் விலை கூடுகின்றது. பணம் வராதபோது தற்காலிக வேலை நிறுத்தம். பின்னர் தொழிற்சாலை மூடப்படு தல், விரிவாக்கத்தில் உற்சாகமின்மை மற்றும் இய லாமை இவை அனைத்தும் சேர்ந்து நாட்டின் ஒட்டு மொத்த ‘உற்பத்தி (GDP) வளர்ச்சி’யை பாதிக்கின் றன. தொழில்முனையும் ஆர்வம் தேய்கின்றது. எனவே, தாமதமான பணவரவு என்பது சிறுகுறு தொழில்களின் சாபக்கேடு மட்டுமல்ல; ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் செயலாகும்.
அடிமேல் அடி
சிறு குறு நிறுவனங்கள் பணம் வந்தாலும் வராவிட்டா லும் ஜிஎஸ்டி தொகையை மாதந்தோறும் 20ம் தேதி செலுத்தியே ஆகவேண்டும். ஜிஎஸ்டி விதிமுறைகள், சிறுகுறு தொழில்களுக்கு வர வேண்டிய பணம் வந்ததா என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஜிஎஸ்டி கட்டாவிட்டால் அபராதம், ஜிஎஸ்டி பதிவு ரத்து ஆகிய வற்றை எதிர்கொள்ள வேண்டும். ‘செயல்படா சொத்துக் கள்’ பற்றிய வங்கிகளின் விதிமுறைகள், அனைவ ருக்கும் ஒன்றே. 3 மாதங்கள் தவணை தவறினால் கணக்கு ‘செயல்படா’ ஒன்றாக ஆகிவிடும். D&B நிறுவன ஆய்வறிக்கையின்படி, குறுந் தொழில்கள் தங்கள் விற்பனையில் 66 சதவிகிதம் அளவுக்கும் சிறு தொழில்கள் 31 சதவிகிதம் அளவுக்கும் நடுத்தர தொழில்கள் 25 சதவிகிதம் அளவிற்கும் உரிய காலத்திற்கும் மேல் 60 நாட்கள் கடந்தே பணத்தைப் பெறுகின்றன. சிறு குறு தொழில்களுக்கு ஆண்டுக்கு 8.55 லட்சம் கோடி ரூபாய் தாமதமாக கொடுக்கப்படுவதால், 1.26 லட்சம் கோடி ரூபாய் வட்டி இழப்பு ஏற்படுகிறது. இது தொழிற்துறை மதிப்பு கூட்டலில் (GVA) 1.8 சதவிகிதமா கும். நிறுவனத்தின் அளவு எவ்வளவு சிறியதோ அதற்கேற்ப அடிவிழுவது பலமாக இருக்கும்.
அச்சமூட்டும் பெரு நிறுவனங்கள்
யு.கே.சின்ஹா கமிட்டி 2019ல் அளித்த ஆய்வ றிக்கையில், “குறித்த காலத்தில் பில்களுக்கு பணம் கொடுப்பதற்கு பெரிய நிறுவனங்கள் முன்னுரிமை அளிப்பதே இல்லை” என்று வெட்ட வெளிச்சமாக சொல்கிறது. உரிய காலத்தில் பணம் கொடுக்க வேண்டும் என்பது நம்முடைய பெரிய நிறுவ னங்களின் கலாச்சாரத்தில் அவசியமில்லாத ஒன்று. இந்த கலாச்சார குறைபாட்டைப் பற்றி புரிதலோ, பரவலான விழிப்புணர்வோ இல்லை. எத்தனையோ கலாச்சார, பாரம்பரியங்களைப் பற்றி வலியுறுத்தும், நமது பிரதமர் மோடிஜி கூட தனது கடந்த 98 மன்கிபாத் உரைகளில் ஒன்றில் கூட இந்த கலாச்சார குறைபாட்டையோ, இதை களைய வேண்டிய அவசியத்தையோ ஒரு தடவை கூட குறிப்பிட்டதில்லை. அவர் தனது 100 வது உரையி லாவது இது குறித்து பேச வேண்டும். தவறிழைக்கும் பெரு நிறுவனங்களுக்கு இசை வாக சிறு குறு நிறுவனங்களும், காலதாமதத்தை இயல்பாக எடுத்துக் கொள்கின்றன. எப்படியோ பணம் வந்தால் போதும் என்ற மனப்பான்மை நீடிக்கிறது.
பெரிய நிறுவனங்களிடம் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்கவும் நன்னடத்தையை காண்பிக்கவும், மேலும் ஆர்டர்கள் இழப்பு குறித்த அச்சத்தின் காரணமாகவும் சிறு குறு நிறுவனங்கள் தங்கள் உரிமையைப்பற்றி நினைப்பதே இல்லை. பெரு நிறுவனங்கள் பெரும் அதிகாரத்துடன் பலமிக்கவையாக உள்ளன. நம் நாட்டின் பல முக்கிய தொழிற்துறை பிரிவுகள் விரல் விட்டு எண்ணக்கூடிய பெரு நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன. இவற்றில் அரசுத் துறை நிறுவனங்களும் அடங்கும். உரிய காலத்தில் பில் தொகைகளை ஏன் கொடுக்க முடிவதில்லை என கேட்கும் போது பெரு நிறுவ னங்கள், தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட கார ணங்களால் முடியவில்லை என்று கூறுகின்றனர். உண்மையில் பல பெரு நிறுவனங்கள் காலதாமத மாக பணம் கொடுப்பதை ஒரு வியாபாரத் தந்திரமா கவே கடைப்பிடிக்கின்றன. சிறு குறு தொழில்களுக்கு வட்டி இழப்பு இவர்களுக்கு வட்டி மிச்சம், பல பெரிய நிறுவனங்கள் உரிய காலத்தில் பில் தொகைகளை கொடுக்காமல் தங்களது விரிவாக்க நடவடிக்கைகளுக்கு பணத்தை திருப்பி விடுவதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
தீர்வுகள்
அரசாங்கம் அளிக்கும் தீர்வுகள் எல்லாம், “பெரு நிறுவனங்கள் உரிய காலத்தில் பணம் கொடுத்து விட வேண்டுமென்று உண்மையிலேயே விரும்புகின்றன” என்ற அடிப்படையை வைத்தே உருவாக்கப்படுகின் றன. மூல காரணங்கள் தகர்க்கப்படுவதில்லை. தாமதித்து பணம் கொடுக்கும் கலாச்சாரம் நாட்டிற்கே கேவலம் என்று பரவலாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை நிதி அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும். நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொரு ளாதார விவகாரங்கள் துறை (Department of econo mic affairs) தனது மாதாந்திர பொருளாதார சீராய்வில், கம்பெனி வாரியாக காலந்தவறும் பணப்பட்டுவாடா குறித்து புள்ளி விபரங்களை அளிக்க வேண்டும்..
நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கையில், தாமதமாகும் பண வரவுகளை குறைப்பதற்கான இலக்கை நிர்ண யிக்க வேண்டும். ஒவ்வொரு காலாண்டுக்கும் அந்த இலக்கின் மீது பரிசீலனை வேண்டும். ஒன்றிய அரசு 100 பெரிய நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அவற்றை உரிய காலத்தில் பில் தொகைகளை கொடுப்போம் என்று பகிரங்கமாக உறுதிமொழி அளிக்க ஊக்கப் படுத்த வேண்டும். சிறு குறு நிறுவனங்கள் உரிய காலத்தில் பணம் வராமல் ஜிஎஸ்டி கட்ட முடியாமல் போனால் அபராத விலக்கு மற்றும் கட்டுவதற்கு கருணை நாட்களும் அளிக்க விதி முறைகள் வகுக்க வேண்டும். வங்கிகளின் ‘செயல்படா சொத்து’ பற்றிய விதிமுறைகள் சிறு குறு தொழில்களுக்கு என்று தனி யாக இருக்க வேண்டும். தவணைகளை முறைப் படுத்த, குறைந்தபட்சம் 6 மாதகால அவகாசம் கொடுக்க வேண்டும். 2017ல் ஒன்றிய அரசால் ஏற்படுத் தப்பட்ட MSME சமாதான் இணையதளம், மற்றும் இடர்பாடுகளை எளிதாக்கும் கவுன்சில் (Facilitaiton Council) செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு மாவட்டம் மற்றும் தொழில் நகரங்களுக்கும் தனி அதிகாரி மற்றும் அலுவலர்கள் நியமிக்க வேண்டும். இந்த அமைப்பு இருப்பது குறித்து பரவலாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.
2018ல் ரிசர்வ் வங்கியால் துவங்கப்பட்ட TReDS திட்டம் இன்றும் வலுப்பெறவில்லை, பெரு நிறுவ னங்கள் (Buyers) இதில் பங்கெடுக்காமல் சிறு குறு நிறுவனங்கள் மட்டும் இதில் சேருவதால் ஒரு பயனும் இல்லை. ரூ.500 கோடிக்கு மேல் வணிகம் செய்யும் நிறுவனங்களில் 20 சதவிகிதம் கூட இதில் பங்கெடுக்க வில்லை. ரயில்வே உள்ளிட்ட அனைத்து அரசு நிறு வனங்களும் இதில் இணைய வேண்டும். ரூ.500 கோடிக்கு மேல் வணிகம் செய்யும் நிறுவனங்கள் இதில் சேருவதை கட்டாயமாக்க வேண்டும். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 23-24 நிதி நிலை அறிக்கையில் (பட்ஜெட்), பெரிய நிறுவனங்கள் சிறு குறு நிறுவனங்களுக்கு பில் தொகைகளை செலுத்திய பின்னர்தான் அந்த தொகையை செலவு கணக்கில் கொண்டு வரமுடியும் என்று வருமான வரிச் சட்ட விதிமுறையை அறிவித்துள்ளார். இந்த விதிமுறை எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பது நடைமுறை யில்தான் தெரியவரும்.
இவை அனைத்திற்கும் மேலாக சிறு குறு நிறுவ னங்களின் சங்கங்கள் உரிய காலத்தில் பணம் பெறு வதற்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். இந்த பிரச்சனையை கையாளுவதற்காக சங்கத்திற்குள் ஒரு சிறப்புப் பிரிவை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு நிறுவனங்களுக்கு உதவ வேண்டும்.
கட்டுரையாளர் : தலைவர், கோயம்புத்தூர் கம்ப்ரசர் இண்டஸ்டிரிஸ் அசோசியேசன் (கோசியா), கோவை