articles

img

மொழிகள் பலவாயினும் உணர்வுகள் ஒன்றே! -

புதுதில்லி, ஏப். 6- இந்தியத் தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் அறைகூவலுக்கி ணங்க தொழிலாளர்கள்-விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்களின் மாபெரும் பேரணி/பொதுக் கூட்டம் தலைநகர் புதுதில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் புதன் அன்று நடைபெற்றது. நாட்டின் பல்வேறு முனைகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களும்-விவசாயிகளும்-விவசாயத் தொழிலாளர்களும் இப்பேரணி/பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்களின் மொழிகள் பலவாக இருந்தாலும் உணர்வுகள் ஒரேமாதிரியாக இருந் ததை, தெள்ளத்தெளிவாகவே பார்க்க முடிந்தது. புதன் அன்று செங்கதிரோன் கிழக்கில் உதயமா கிக்கொண்டிருக்கும்போதே, ராம் லீலா மைதா னத்தில் செங்கொடிகளுடன் தொழிலாளர்களும், விவ சாயிகளும் அலை அலையாக அணிவகுத்து வரத் துவங்கிவிட்டனர். இவர்களில் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களும், அங்கன்வாடி மற்றும் ‘ஆஷா’ பெண் ஊழியர்களும், புலம்பெயர் தொழிலாளர்களும் கணிசமாக அணிதிரண்டு வந்திருந்ததையும் பார்க்க முடிந்தது. அனைவருமே ‘தொழிலாளி-விவசாயி மாபெரும் பேரணி’ என்னும் பதாகையின் கீழ் அணி திரண்டு வந்துகொண்டிருந்தார்கள்.

பல்வேறு மாநிலத்தினரும் தங்கள் தங்கள் மாநில மொழியில் முழக்கங்களை எழுப்பி வந்தபோதி லும், ஆட்சியாளர்களின் அநீதிக்கு எதிராகவே அவை இருந்தன என்பதையும், இதனை தொழிலாளர்களும்-விவசாயிகளும் ஒன்றுபட்டு நின்று முறியடித்திடவே அணிதிரண்டு வருகிறோம் என்று கூறியதையும் நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது.     எவரிடம் பேச்சு கொடுத்தாலும், அவர்கள் அனை வருமே ஆட்சியாளர்கள் கார்ப்பரேட்டுகளுடன் சேர்ந்து கொண்டு கொள்ளையடிப்பதன் காரணமாக தான்  எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்ப தைத் தெளிவாகவே தெரிவித்தார்கள். தங்களுடைய துன்பத்துக்குக் காரணம் ஆட்சியாளர்களும், அவர்கள் பின்பற்றிவரும் கார்ப்பரேட் ஆதரவு நாசகரப் பொரு ளாதாரக் கொள்கைகளும் தான் என்பதை நம்மிடம் எவ்விதத் தயக்கமுமின்றி தெரிவித்தார்கள்.

சப்பாத்தியும் உப்பும்தான்  எங்கள் உணவு

எழுபது வயது முதியவர் ஒருவரை நியூஸ்கிளிக் ஊடகத்திற்காகப் பேட்டி கண்டோம். அவர் தங்கள் குடும்பத்தில் மொத்தம் 19 பேர் என்றும் தாங்கள் அனை வருமே மதியம் ஒருவேளை சப்பாத்தியும், உப்பும்  மட்டுமே கடந்த பத்து மாதங்களாக உணவாகக் கொள்கிறோம் என்று கூறினார். அவர் தங்கள் குடும்பத்தின் வறிய நிலை குறித்து நம்மிடம் கூறும்போது, “19 பேர் உள்ள எங்கள் குடும்பத்தில் 5 பேர் மட்டுமே சம்பாதித்துக் கொண்டு வருகிறோம். எங்கள் பகுதியில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாத தால், எவரும் தொழிலாளராக இல்லை. நான் எழுதப் படிக்கத் தெரியாதவன். இது என் குழந்தைகளையும் பாதித்துள்ளது. எனவே நாங்கள் அனைவருமே தினக் கூலிகளாகத்தான் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டி ருக்கிறோம். எங்களுக்கு நிலம் இல்லை, எனவே நிலமிருப்போரின் நிலங்களில் கூலி வேலை செய்து அவர்கள் கொடுக்கும் ஊதியத்தைக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். 100 நாள் திட்டம் வந்தபின் முன்பி ருந்த நிலையைவிட கொஞ்சம் மேம்பட்ட நிலை இருந்தது. அரசாங்கம் கொடுத்திடும் ரேஷனைக் கொண்டுதான் ஜீவித்து வருகிறோம்,” என்றார். முதியோர் ஓய்வூதியத் திட்டம் குறித்தெல்லாம் அவருக்கு எதுவும் தெரியவில்லை. தான் ஒரு பைசா கூட வாங்கவில்லை என்று அவர் கூறினார். இது குறித்து அரசாங்கத்தின் சார்பாக எவரும் என்னிடம் கூறிய தில்லை. “நாங்கள் வாக்களிப்பதற்காக மட்டும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோமா?” என்று ராம் கேட்டார்.

பீகாரில் உள்ள தங்கள் கிராமத்தில் உள்ள நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் அனைவருமே வாழ்வதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதாக ராம் கூறினார். அவர் தில்லிக்கு வந்ததும் அவ்வளவு எளிதாக இல்லை. தங்கள் கிராமத்தில் சிலர் ஓய்வூதியம் பெறுகிறார்கள் என்ற போதிலும், அது மாதத்திற்கு வெறும் 400 ரூபாய் மட்டுமே என்று ராம் கூறினார். இவ்வாறு எவ்வித சமூகப் பாதுகாப்புமின்றிதான் எங்கள் வாழ்க்கை இருந்து வருகிறது என்றும் ராம் கூறினார். “எந்த வேலை கிடைத்தாலும் நாங்கள் செய்யத் தயார்” என்றும், “அவ்வாறு வேலைகிடைக்கவில்லை எனில் நாங்கள் இறந்துவிடுவோம்” என்றும் ராம் கூறினார்.  

“வறட்சி எங்களைக் கொன்றுவிடும்”:  ஆந்திர விவசாயிகள்

தென்னிந்தியாவிலிருந்து வந்துள்ள தொழிலாளர் கள்-விவசாயிகள் தனித்து தெரிந்தார்கள். கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஆந்திராவிலிருந்து தொழிலாளர்களும், விவசாயிகளும் ஆயிரமாயிரமாக செஞ்சட்டை அணிந்து வந்திருந்தார்கள். சிவப்பு சேலைகள் அணிந்து கணிசமான அளவிற்குப் பெண்களும் வந்திருந்தார்கள். பேரணியின் கோரிக் கைகளில் மிக முக்கியமாக இவர்கள் உயர்த்திப் பிடித்த முழக்கம் என்பது “எங்களுக்கு வேலை கொடு” என்பதாகும். நியூஸ்கிளிக் செய்தியாளர், ஆந்திர விவசாயி ஒருவரைப் பேட்டி கண்டபோது அவர் கூறியதாவது: “விவசாயிகளாகிய நாங்கள் நெல், பருத்தி மற்றும் பல பயிர்களைப் பயிர்செய்து வருகிறோம். எங்கள் பிரதான பிரச்சனை நாங்கள் உற்பத்தி செய்திடும் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கவில்லை என்பதேயாகும். இந்த ஆண்டு நான் என் பயிர்களைப் பயிரிட 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தேன். ஆனால் எனக்குக் கிடைத்ததோ 20 ஆயிரம் ரூபாய் மட்டுமேயாகும். இப்போது அர சாங்கம் மின் கட்டணங்களை உயர்த்திட திட்டமிட்டி ருக்கிறது. இது அமல்படுத்தப்பட்டால் செலவினம் மேலும் 4 ஆயிரம் அல்லது 5 ஆயிரம் ரூபாய்களாகி விடும். இதனை எங்களால் கட்டவே முடியாது,” என்று  ஆந்திரா, கர்னூலில் இருந்து வந்துள்ள ரங்கசாமி என்கிற அந்த விவசாயி கூறினார்.

“கடந்த மூன்று ஆண்டுகளாகவே எனக்கு விவசா யம் செய்ததில் நஷ்டம்தான். சென்ற ஆண்டு, பருத்திக்கு குவிண்டாலுக்கு 13 ஆயிரம் ரூபாய் பெற்றோம். இந்த ஆண்டு அது 5 ஆயிரம் ரூபாயா கக் குறைந்துவிட்டது. ஒன்றிய அரசாங்கம் எங்களைக் காப்பாற்ற முன்வரவில்லை என்றால், தற்கொலைகள் எண்ணிக்கை எங்கள் மாநிலத்தில் அதிகமாகிவிடும்,” என்று ரங்கசாமி கூறினார். பேரணியில் மிகப்பெரிய அளவில் பெண்களும் பங்கேற்றிருந்ததும், அவர்கள் தங்கள் கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிக்கொண்டு வந்ததும் அனைவரையும் இனிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய அம்சமாக இருந்தது. அவர்கள் எவ்வித மான முறையான ஏற்பாடுமின்றி பல மைல் தூரம், ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக, தங்கள்  கோபத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில்  முழக்கமிட்டுக் கொண்டே வந்தார்கள். ஒரு மாநிலத்திலிருந்து வந்த பெண்கள், பிறிதொரு மாநிலத்தில் இருந்துவந்த பெண்களுடன் பிரச்சனைகளையும் போராட்ட வடிவங்களையும் பகிர்ந்துகொண்டார்கள். அநேகமாக  அவர்கள் அனைவரும் ‘ஆஷா’ ஊழியர்களாக இருந்தார்கள்.

மைதானத்தின் ஒரு மூலையில் சந்தாலி மாவட்டம் சுல்தான்பூர் கிராமத்திலிருந்து வந்த மதிய உணவு ஊழியர்களில் கைம்பெண்கள் ஒரு குழுவாக அமர்ந்திருந்தார்கள். அவர்கள்தான் அவர்கள் குடும்பத்தில் ஊதியம் பெறும் ஊழியர்களாக இருந்தார்கள். அவர்களிடம் பேசியதில், அவர்கள் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடத்தின் தரைகளைப் பெருக்க வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கும் மதிய உணவு தயார் செய்ய வேண்டும் என்றும், ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்தை விட்டுச்செல்லும்வரை காத்திருந்து, பள்ளியை மூடிவிட்டு வர வேண்டும் என்றும் கூறினார்கள். உண்மையில் இது ஒன்றும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட வேலை கிடையாது. எனினும் இவர்கள் எவரும் அரசு ஊழியர் கிடையாது. ஆஷா என்னும் 39 வயதுடையவர் நம்மிடம் கூறும்போது, தான் கடந்த 15 ஆண்டுகளாக 160 குழந்தை களுக்கு உணவு ஊட்டி வருவதாகவும், இதற்கு அவருக்கு கடந்த பல ஆண்டுகளாகவே மாதம் ஆயிரம் ரூபாய்தான் அளிக்கப்பட்டது என்றும் தற்போதுதான் ஆயிரம் ரூபாய் கூட்டி, இரண்டாயிரம் ரூபாயாக அளிக்கி றார்கள் என்றும் தெரிவித்தார்.

இதுவும்கூட ஒழுங்காக வருவதில்லை. சில சமயம் 2,3 மாதங்களுக்கு சேர்த்து 4 ஆயிரம் ரூபாய் அல்லது 5 ஆயிரம் ரூபாய் என்று அளிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். எங்களை நிரந்தர ஊழியராக்கினால் எங்க ளுக்கு ஒவ்வொரு மாதமும் முறையாக ஊதியம் வழங்கினால் எங்கள் ஊதியம் உயர வாய்ப்பு உண்டு என்றார். நாங்கள் ஆண்டின் 12 மாதங்களும் வேலை செய்தா லும், எங்களுக்கு 10 மாதங்களுக்கான ஊதியம்தான் வழங்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனினும் அவர்களை அணிதிரட்டிவந்த தலைவர் அவர்களை பேரணிக்காக அறைகூவல்விடுத்தபோது, அவர்களின் கண்களில் ஒருவிதமான நம்பிக்கை ஒளிக்கீற்று தெரிந்ததைப் பார்க்க முடிந்தது.  

தவறாமல் பேரணிக்கு  வரும் தோழர்கள்

ரவி தாஸ் என்னும் 37 வயது தோழர் மேற்கு வங்கத்தி லிருந்து ஒவ்வொரு பேரணிக்கும் வந்து கலந்துகொள் வார். இவர் பிறப்பிலிருந்தே ஒரு மாற்றுத்திறனாளி. இவரால் நடக்க முடியாது. இவர் பேரணியில் செஞ்சட்டை அணிந்துகொண்டும், செங்கொடியை ஏந்திக்கொண்டும், மண்டியிட்டுக்கொண்டே வந்த போது, ஒரு செய்தியாளர் அவரிடம் அணுகி அவர் குறித்து விசாரித்தபோது, “நான், என் பள்ளிக்கா லத்திலிருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவா ளன். நான் ஐந்தாம் வகுப்புவரைதான் படித்திருக்கி றேன். நாடு முழுதும் நடைபெறும் அனைத்து இயக் கங்களிலும் நான் பங்கேற்றிருக்கிறேன்,” என்றார் அவர்.  

பேரணியின் நிறைவில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் ஒரு புதுவிதமான நம்பிக்கை ஏற்பட்டிருப்பதை, பஞ்சாப்-ஹரியானா விவசாயிகளு டன் இணைந்து அவர்கள் நடந்துவந்தபோது நாம் ஒன்றும் தனித்துவிடப்படவில்லை என்கிற உணர்வு அனைத்துத் தொழிலாளர்கள் மத்தியிலும் காணப் பட்டதைப் பார்க்க முடிந்தது. இதேபோன்றே பஞ்சாப்-ஹரியானா விவசாயிகள் பீகார் விவசாயி களுடனும், மகாராஷ்டிரா விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகளுடனும் தங்கள் பிரச்சனைகளையும், போராட்டங்களையும் பகிர்ந்துகொண்டதைப் பார்க்க முடிந்தது.

நன்றி: நியூஸ்கிளிக்,
தமிழில் : ச.வீரமணி