around-world

img

அமேசானில் எரிவது லாபத்தீ- எஸ்.பி.ராஜேந்திரன்

“கடவுள் சித்தம், எல்லாம் நன்றாக நடக்கும். சுரங்கத் தொழில் உட்பட அனைத்தும் தொடர்ந்து நீடிக்கும். நான் தேர்தலின் போது கூறிய கொள்கைகள் தொடரும்.” - உலகின் நுரையீரல் என்றும் இதயம் என்றும் வர்ணிக்கப்படும் மிகப் பிரம் மாண்டமான அமேசான் காடுகள் முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிற பயங்கரத்தைத்தான், கடவுள் சித்தம் என்று ஒற்றை வார்த்தையில் நியாயப்படுத்தியிருக்கிறார் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சானரோ.  பிரேசில் நாட்டு ஜனாதிபதி இவர். ஆட்சிக்கு வந்தால் அமேசான் காடுகளை வர்த்தகத்திற்கு திறந்து விடுவேன் என்று பகிரங்கமாக சொல்லி விட்டுத்தான் வந்தார். அதனால் தான் இப்போது, அமேசான் காடுகள் பற்றியெறிவதைப்பார்த்து உலகமே பதறினாலும், அவர் பதறவில்லை.  தீ வைத்தவரே எப்படிப் பதறுவார்?

                                                                                                                                                         ♦♦♦

அமேசானில் பற்றியெறிந்து கொண்டிருப்பது வெறும் காட்டுத்தீ அல்ல, அது ஏகாதிபத்தியத்தின் லாபத் தீ. அதை புரிந்து கொள்ளாவிட்டால் தீயை அணைப்பதற்கான வழி தெரியாமலே அம்பலமாகிவிடும்.  1971ல் எட்வர்டோ கலியானோ என்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் எழுதினார்: “எங்க ளது மாபெரும் செல்வங்கள் மற்றவர்களை வள மிக்கவர்களாகவும் செல்வம் கொழித்தவர்க ளாகவும் மாற்றுவதற்காக எங்களது வறு மையை உற்பத்தி செய்தது.”  லத்தீன் அமெரிக்க நாடுகளின் - தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளின் - பிரம்மாண்டமான செல்வ வளங்களை, பூமிக்க டியில் புதைந்து கிடக்கும் கனிமவளங்களை, உலகின் எல்லா வளங்களையும் தனக்குள்ளே பொதிந்து வைத்திருக்கும் காடுகளை, கடலோ ரத்திலும் காடுகளிலும் கொட்டிக் கிடக்கும் மண்ணை - என எல்லா வளங்களையும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த ஏகாதிபத்திய சக்திகள் தான் காலம் காலமாக கைப்பற்றி, கடத்திச் சென்று கொண்டிருக்கின்றன.  இந்த மாபெரும் வளங்களின் மையமாக இருப்பதுதான் அமேசான் காடுகள். அடர்ந்த மலைக்காடுகள் என்று சொல்லப்படும் அமேசான், இந்த பூமிப்பந்தின் பிரதானமான உயிரி - மரபியல் ஆதாரமாக திகழ்கிறது. சொல்ல முடியாத அளவிற்கு வளங்கள் இங்கு புதைந்து கிடக்கின்றன. நீங்கள் அமேசானை அழித்தால் பூமியை அழிப்பதற்கு சமம்.  அமேசான் காடுகளில் பெரும் பகுதி பிரேசில் நாட்டிற்குள் இருக்கிறது. அதாவது அமேசானின் 61 சதவீதம் பிரேசில் எல்லைக்குள் இருக்கிறது. இடைவிடாமல் மழை பெய்யும் காடுகள் இவை.

இதன் காரணமாக உலகில் உற்பத்தியாகும் புதிய தண்ணீரில் 5ல் ஒரு பகுதி  அமேசான் காடுகளில்தான் உருவாகிறது. கொலம்பியா, பெரு, வெனிசுலா, பொலிவியா, ஈக்வடார், இனியா, சுரிநா ஆகிய நாடுகளிலும் அமேசான் காடுகள் பரந்து விரிந்து கிடந்தாலும் பிரேசில் எல்லைக்குள் இருக்கிற பகுதிகள்தான் இப்போது ஆபத்தின் பிடியில் சிக்கியுள்ளன.  பிரேசில் எல்லைக்குள் வருகிற அமேசான் காடுகளில் மட்டும் 170 வகையான பழங்குடி இனங்கள் வசிக்கின்றன. அடர் மழைக் காடுகளுக்குள் இம்மக்கள் வாழ்கிறார்கள். இவர்களது வரலாறு 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்குகிறது. இவர்கள் தவிர, கி.பி. 1532 முதல் 1888 வரை ஆப்பிரிக்க நாடுகளில் பிரிட்டிஷ் உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளால் கருப்பின மக்கள் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டு அடிமைகளாக்கப்பட்ட சமயத்தில், அங்கிருந்து தப்பி பல்வேறு குழுக்களாக கடல் கடந்து வந்து அமேசான் மழைக் காடுகளுக்குள் குடியேறிய இனங்களில் இன்றைக்கும் 357 இனக்குழுக்களை சார்ந்த மக்கள் அமேசானில் வசித்து வருகிறார்கள்.  இவர்கள்தவிர அமேசான் காடுகளுக்குள் ஓடும் எண்ணற்ற ஆறுகளையொட்டி பழங்குடி மக்கள் ரப்பர், தென்னை உள்ளிட்ட விவசாயத்து டன் வாழ்ந்து வருகிறார்கள். மனிதர்கள் மட்டு மின்றி, உலகில் வேறெங்கும் இல்லாத பன்முக உயிரி சூழல் பரந்து விரிந்து கிடக்கிறது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                ♦♦♦

முதலாளித்துவம் என்பது எப்போதுமே அதி பயங்கர மான நெருக்கடியை தன்னகத்தே கொண்டது. 1870ஆம் ஆண்டு முதலாளித்துவம் பெரும் நெருக்கடியில் சிக்கியது. பின்னர் 1950ல் உலகப் பெரு மந்தம் ஏற்பட்டது. அதன் பின்னர் 2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் மையம் கொண்ட நெருக்கடி உலகம் முழுவதும் பரவி, பத்தாண்டுகளாகியும் இன்னும் மீள முடியாமல் ஒட்டுமொத்த உலகமும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஒவ்வொரு நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு முதலாளித்துவம் இன்னொரு நெருக்கடியை உருவாக்கும். அதாவது, மேலும் மேலும் செல்வ வளங்களை குவிப்பதன் மூலம், தனக்கு ஏற்பட்ட நெருக்கடியை தீர்த்துக் கொள்ள முதலாளித்துவம் முயற்சிக்கிறது; அப்படி செல்வ வளங்களை குவிப்பதற்காக, உலகெங்கிலும் உள்ள இயங்கை வளங்களை அழித்தொழிக்கிறது; அந்த வளங்களை கையில் வைத்திருக்கிற அல்லது அந்த வளங்களின் காப்பாளர்களாக உள்ள உழைப்பாளிகளை, பழங்குடி மக்களை தயக்கமில்லாமல் வேட்டையாடு கிறது. இதைத்தான் மார்க்சிய புவியியல் அறிஞர் டேவிட் ஹார்வி, “வளங்களை சூறையாடுவதன் மூலம் செல்வங்களை குவிப்பது” என்று குறிப்பிட்டார். அமேசான் காடுகள் என்ற இப்பூவுலகின் மிக பிரம்மாண்டமான சொத்து. அது முதலாளித்துவத்தின்  செல்வ லாபக் குவிப்புக்காக ஈவிரக்கமின்றி வேட்டை யாடப்படுகிறது. அந்த வேட்டைக்காக அவர்க ளது கைக்கூலி ஜனாதிபதி பொல்சானரோ வைத்த தீயில்தான் அமேசான் பற்றியெறிந்து கொண்டிருக்கிறது.                                                                                                                                                                                      ♦♦♦

2016ல் பிரேசிலில் ஜனாதி பதியாக இருந்த இடதுசாரி தலைவர் டில்மா ரூசெப்பிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் என்ற பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியக் கைக்கூலிகள், மைக்கேல் டிமெர் என்ற வலதுசாரி அரசியல்வாதியின் தலைமையில் அராஜகமான கண்டனத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து, சில நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, தீர்மானத்தை நிறைவேற்றினர். டில்மா, அநியாயமான முறையில் பதவியிலி ருந்து வெளியேற்றப்பட்டார்.  ஏற்கெனவே பல்லாண்டு காலமாக அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளால் சூறையாடப்பட்ட அமேசான் காடுகள் உள்ளிட்ட பிரேசிலின் வளங்கள், டில்மா காலத்திலும் அவருக்கு முன்பு ஆட்சியிலிருந்த மகத்தான இடதுசாரி தலைவரான பிரேசில் தொழிலாளர் கட்சித் தலைவர் லூலா காலத்திலும் பாதுகாக் கப்பட்டன. ஏகாதிபத்திய சக்திகளின் கார்ப்பரேட் கம்பெனிகளின் வசமிருந்து அமேசானை பாதுகாப்பதற்கான தீவிர முயற்சிகள் இவர்களது ஆட்சிகளில் மேற்கொள்ளப்பட்டன. இது ஒட்டுமொத்த அமேசானையும் கொள்ளையடிப்பதற்கு திட்டம் போட்ட ஏகாதிபத்திய சக்திகளுக்கும் கார்ப்பரேட் கும்பல்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. லூலாவையும் டில்மாவையும் குறி வைத்து காய் நகர்த்தினார்கள். டில்மாவின் பதவியைப் பறித்தார்கள். லூலாவை ஊழல் குற்றவாளியாக்கி சிறையில் அடைத்தார்கள்.

இரண்டாண்டு காலம் ஆட்சியில் இருந்த மைல்கேல் டிமெர் என்ற கைப்பாவையை விட 2018 ஜனாதிபதி தேர்தலில் ஜெய்ர் பொல்சானரோ என்ற அப்பட்டமான கைக்கூலி அவர்களுக்கு கிடைத்தார்.  பொல்சானரோ 2018 தேர்தல் பிரச்சா ரத்தில், அமேசான் காடுகளை சுரங்க வணி கத்திற்கும் விவசாய தொழில் வர்த்தகத்திற்கும் முழுமையாக திறந்துவிடுவேன் என்று கொக்கரித்தான். உலகெங்கிலும் இடதுசாரி இயக்கங்கள் பலவீனப்படுத்தப்பட்ட நிலையில், மற்ற நாடுகளின் மக்களைப் போலவே பிரேசில் மக்களும் வேறு பல காரணங்களுக்காக பொல்சானரோவை தேர்வு செய்தனர்.  ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே பொல்சா னரோ செய்தது பிரேசிலின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையினை ஒழித்துக் கட்ட தீர்மானம் போட்டதுதான். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தவுடனே, வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை இருக்கும் என்று அறிவித்துவிட்டு, அந்த துறையை உயிரற்ற ஒன்றாக மாற்றி னான் பொல்சானரோ. துறை இருக்கும், அது செயல்படாது.                                                                                                                                                                                                                                                                                                     ♦♦♦

இப்போது கார்ப்பரேட்டுகளுக்கு கொண்டாட்டம்.  அனைத்துவிதமான கனிமங்கள் வெட்டியெடுப்பு, கார்ப்பரேட் உயிரி எரிபொருள் உற்பத்திக்கான மூலப்பொருள் சோயாபீன்ஸ் உற்பத்தி மற்றும் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகள் அமேசான் காடுகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடிகளின் அறிவுச் சுரங்கத்தை முற்றிலும் கார்ப்பரேட் லாபத்திற்காக கைப்பற்றுவது என்ற மெகா திட்டங்களுடன், ஈவிரக்கமற்ற லாபவெறியுடன் அமேசானுக்குள் இறங்கியிருக்கிறது ஏகாதிபத்தியம்.  அமேசானில் முதன் முதலில் மாங்கனீசு 1945ல் கண்டுபிடிக்கப்பட்டது. மாங்கனீசு கனிம வளம் குவிந்துகிடப்பதை அறிந்த அமெரிக்க பன்னாட்டு கார்ப்பரேட் இரும்பு நிறுவனமான பெத்லகேம் ஸ்டீல் நிறுவனம், அமேசானில் ஒரு சுரங்க கம்பெனியை துவங்கியது. அன்று துவங்கிய சுரங்கங்கள் படிப்படியாக அமேசானில் இருந்து எண்ணற்ற வளங்களை கொள்ளையடிக்கத் துவங்கின. 1967ல் பிரேசில் ராணுவ சர்வாதிகாரத்தின் கைகளில் சிக்கியது. இதற்கு பிறகு பாக்சைட் தாது உட்பட எதை வேண்டுமானாலும் அள்ளிச் செல்லுங்கள் என்று அமெரிக்க கம்பெனிக ளுக்கு தாராள அனுமதி கிடைத்தது. சுரங்கங்களை இயக்குவதற்காக அமேசா னுக்குள் சாலைகள் போடப்பட்டன. மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டன. அப்பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி மக்கள் பலவந்தமாக துரத்தப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். இதற்கிடையே இத்தனை ஆண்டு காலங்க ளில் அமேசானுக்குள் சுரங்கத் தொழிலில் ஈடுபட பிரேசில் அரசு சார்பில் சிவிஆர்டி என்ற பெயரில் ஒரே ஒரு நிறுவனம்தான் துவக்கப்பட்டது.

அந்த நிறுவனமும் 1997ல் அமெரிக்க கார்ப்பரேட் கம்பெனியிடம் வெறும் 3.3 பில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. விற்கப்பட்ட போது அந்த கம்பெனியின் வளாகத்தில் 12.9 மில்லியன் டன் இரும்புத் தாது இருப்பு இருந்தது. இது முழுவதும் அமேசானின் சொத்து, பிரேசில் மக்களின் சொத்து. ஆனால் அது இலவசமாகவே அமெரிக்க கம்பெனிக்கு தாரை வார்க்கப்பட்டது.  இருந்த ஒரேயொரு அரசுத்துறை சுரங்க நிறுவனமும் விற்கப்பட்டு விட்ட நிலையில் அமேசான் காடுகள் முழுக்க முழுக்க அமெரிக்க, பிரிட்டன் மற்றும் கனடாவைச் சேர்ந்த மிகப் பெரும் கார்ப்பரேட் சுரங்க கம்பெனிகள் கைகளில் சிக்கின. இன்றைக்கும் வாலே, ஹைட்ரோ நோர்டே, மக்னீசியா, ஆங்லோ அமெரிக்கன், அல்பராஸ், அல்கோ, மராக்காஸ் மைன்ஸ், ஹைட்ரோ பராகோமின் போன்ற நிறுவனங்கள்தான் அமேசானில் மிகப் பெரும் சுரங்கங்களை நடத்தி வருகின்றன. அளவில்லாத மாங்கனீசும், பாக்சைட்டும், தாமிரமும் வெட்டியெடுக்கப்படுகிறது. இதைவிட மிக முக்கியமானது தங்கம். 67 தங்க சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. உலகளவில் எந்தவொரு தங்கச் சுரங்கத்திலும் ஒரு டன் பாறையை வெட்டினால் 7.4 கிராம் அளவிற்கு தங்கம் கிடைக்கும். ஆனால் அமேசானில் மட்டும் ஒரு டன் பாறையை வெட்டினால் 21.2 கிராம் தங்கம் கிடைக்கிறது. விட்டு வைப்பார்களா இந்த பிரம்மாண்டமான சுரங்கங்களை? இவை மட்டுமல்ல, வைர சுரங்கங்கள், இரும்பு சுரங்கங்கள், குரோமியம், டன்டாலம், டின், கோபால்ட், நியோபியம் உட்பட ஏராளமான கனிமவளங்களை வெட்டியெடுக்கும் சுரங்கங்களை இந்த நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.  லூலாவும் டில்மாவும் அமேசானைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த பன்னாட்டு கார்ப்ப ரேட் கம்பெனிகளுக்கு கடிவாளம் போட்டனர். அந்த கடிவாளத்தை பொல்சானரோ அகற்றி னார்.

 சுரங்கங்கள் மட்டுமல்ல, சோயாபீன்ஸ், மக்காச் சோளம், கோதுமை, எண்ணெய் வித்துக்கள் விவசாயம்.  கார்ப்பரேட் மயமாக்கப்பட்ட இந்த விவசாயம், முழுக்க முழுக்க பசுமை மட்டுமே நிலவுகிற அமேசான் காடுகளை, பசுமைப் புரட்சி என்ற பெயரில் அழித்துக் கொண்டிருக்கி றது. இதை மார்க்சிய அறிஞர் விஜய் பிரசாத், “பசுமை முதலாளித்துவம்” என்கிறார்.  பசுமை  முதலாளித்துவம் என்ற பெயரில் அமேசா னுக்குள் கார்ப்பரேட் விவசாயத் தொழிலை மேலும் மேலும் விரிவுபடுத்துவதற்கான சக்தி வாய்ந்த நவீன கருவிகளை கார்ப்பரேட் கம்பெனிகள் இறக்கிய வண்ணம் உள்ளன. சமீபத்திய விபரங்களின்படி அமேசானுக்குள் 350 மில்லியன் ஹெக்டேர் அளவுக்கு (1 மில்லியன் = 10 லட்சம்) கார்ப்பரேட் கம்பெனி களின் விவசாயம் நடக்கிறது. இதில் 64 மில்லியன் ஹெக்டேரில் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. 159 மில்லியன் ஹெக்டே ரில் கார்ப்பரேட் கம்பெனிகளால் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. எஞ்சியுள்ள நிலங்களில் இதர பல்வேறு உற்பத்திகள் நடக்கின்றன.  இவையெல்லாவற்றுக்குமே ஆதாரம் தண்ணீர். அபரிமிதமான அளவில் தண்ணீர் இருக்கிறது. கார்ப்பரேட்டுகள் முழுமையாக உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். 

                                                                                                                                                ♦♦♦

பழங்குடிகள் இதை எதிர்த்தார்கள். விவசாயிகள் அணி திரண்டார்கள். தொழிலாளர்கள் சங்கம் அமைத் தார்கள். ஏகாதிபத்திய கைக்கூலிகள் இவர்களை யெல்லாம் குறி வைத்தார்கள். எத்தனை எத்தனை படுகொலைகள். அந்த படுகொலை களின் உச்சம்தான் டில்மாவையும், லூலாவை யும் ஆட்சியிலிருந்து வீழ்த்தி பிரேசிலில் பொல்சானரோ தலைமையில் அரங்கேற்றப் பட்ட ஜனநாயகப் படுகொலை. இப்போது பொல்சானரோ அதிதீவிர வலதுசாரி பிற்போக்கு வாத ஆட்சியை நடத்துகிறார். அமேசானை அழிப்பது, ஏகாதிபத்திய பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளின் லாபவேட்டைக்கு அமேசானை அர்ப்பணிப்பது என்பதுதான் அவரது முழு நேரப் பணி.  அவர் சொல்வது போல அமேசானை கடவுள் பாதுகாக்க மாட்டார்.  இப்பூவுலகின் உயிர் அமேசானில் இருக்கிறது. அமேசானின் உயிர் பிரேசில் மக்களது எழுச்சியில் அடங்கியிருக்கிறது.