ஒமிக்ரான் தொற்று காரணமாக மேற்கு வங்கத்தில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகளை மூட மேற்குவங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று பல நாடுகளிடையே பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் டெல்லி, மகாராஷ்டிரா, அசாம், கர்நாடகா, கேரளா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில் மேற்கு வங்கத்திலும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை மேற்குவங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மறுஉத்தரவு வரும்வரை நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்படும். இரவு 10 மணிமுதல் 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் இந்த நேரங்களில் அனுமதி அளிக்கப்படும். அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், உயிரியல் பூங்கா, சுற்றுலா இடங்கள் மூடப்படும். வணிக வளாகங்கள் மற்றும் சந்தை வளாகங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படும். புறநகர் இரயில்கள் நாளை முதல் 50% பயணிகளுடன் இரவு 7 மணி வரை மட்டும் இயக்கப்படும் என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.