மாஸ்கோ, மே 4- ரஷ்யாவின் ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் மீது நடந்த ஆளில்லா விமானத் தாக்கு தல், உக்ரைனின் பயங்கரவாதத் தாக்குதல் என்று ரஷ்யாவும், ரஷ்யாவே நடத்திக் கொண்ட வெறும் நாடகம் என்று உக்ரைனும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியுள்ளன. ஆளில்லா விமானத்தின் பாகங்கள் கிரெம்ளின் பகுதியில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. ஆனால், உயிர்ச்சேதமோ அல்லது பொருட் சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்று கிரெம்ளின் வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன. புதன்கிழமையன்று இரவில் ஜனாதிபதி விளாடிமீர் புடினைக் கொலை செய்யும் நோக்கத்துடன் ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டன. இந்தத் தாக்குதல்களில் இரண்டு ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இரண்டுமே, மின்னணு கருவிகளின் உதவியால் செயலிழக்கச் செய்யப்பட்டு விட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜனாதிபதி மாளிகையின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில், “புடினுக்கு எந்தவிதக் காயமும் ஏற்படவில்லை. ஜனாதிபதி மாளிகைக்கும் எந்தவிதச் சேதமும் இல்லை. இது ஒரு திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதல் என்றும் ரஷ்யக் கூட்டமைப்பின் ஜனாதிபதி விளாடிமீர் புடினின் உயிரை எடுப்பதற்கான முயற்சி” என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு, பயங்கரவாதத் தொடர்பு பற்றிய விசாரணையையும் முடுக்கி விட்டுள்ளனர். இந்த விசாரணை விரைவில் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளனர்.
ரஷ்யாவில் கடுமையான குரல்களும் எழுந்துள்ளன. ரஷ்ய நாடாளுமன்றத்தின் சபா நாயகர் வியாசெஸ்லேவ் வோலோடின் பேசுகை யில், “கீவ் நகரின் ஆட்சியைத் தகர்த்தெறிய வேண்டும். அங்குள்ள பயங்கரவாத ஆட்சியைத் தடுக்கும் மற்றும் அழித்தொழிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்துமாறு நாங்கள் கோரு வோம். வோலொடிமீர் செலன்ஸ்கி தலைமை யிலான ஆட்சியுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது” என்று தெரிவித்தார். இவர் நாடாளுமன்றத்தில் புடின் கட்சியின் கூட்டணிக் கட்சி ஒன்றின் தலைவர் ஆவார். இந்நிலையில், எங்களுக்கும் அந்த ஆளில்லா விமானங்களின் தாக்குதல்களுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்று உக்ரைன் கூறியுள் ளது. மேலும், இது நெருக்கடியைத் திசைதிருப்ப ரஷ்யாவே மேற்கொண்ட நாடகம் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உரிய எதிர்த்தாக்குதல்களை எப்போது, எங்கே தருவது என்ற உரிமையை ரஷ்யா வைத்துக் கொள்கிறது என்று ரஷ்யத் தரப்பு கூறியுள்ளது. ரஷ்யா எத்தகைய எதிர்த் தாக்குதல்களை நடத்தப் போகிறது என்று அரசியல் நோக்கர்கள் கவனித்து வருகிறார்கள்.
மேலும் இரு தாக்குதல்கள்
ரஷ்யாவின் தென் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் திடீரென்று தீப்பிடித்தது. இந்தத் தீ பிடிப்புக்கு, ஆளில்லா விமானம் ஒன்றால் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டதே காரணமாகும். கிராஸ்நோடர் மாகாணத்தில் உள்ள இந்தச் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டாலும், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அதை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும், அவசர நிலை ஊழியர்களும் போராடிக் கொண்டி ருக்கிறார்கள். இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் அருகில் குடியிருப்பவர்களுக்கு எந்தவித ஆபத்து மில்லை என்று அந்த மாகாணத்தின் ஆளுநர் வெனியாமின் கோண்டிரடாயேவ் சமூக வலை தளத்தில் எழுதியுள்ள தனது பதிவில் தெரிவித்துள் ளார். இந்த வாரத்தில் நடைபெறும் இரண்டாவது ஆளில்லா விமானத்தாக்குதல் இதுவாகும். ஏற்கெனவே டெம்ரியுக் மாவட்டத்தில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கின் மீது நடந்த தாக்குதலில் 1,200 சதுர கி.மீ. அளவுக்கு தீப் பிடித்து எரிந்தது.