3800 கோடி ரூபாயின் விலை என்ன?
‘மில்லெண்ணியம் சேலஞ்சர் கார்ப்பரேஷன் (MCC)’ என்பது அமெரிக்க அரசால் 2004 இல் உருவாக்கப்பட்ட சுயேச்சையான அன்னிய உதவி வழங்கும் ஏஜென்சி ஆகும். எம்சிசி நிறுவப்பட்ட காலம் முதல் 30 நாடுகளுடன் 37 உடன்படிக்கைகளை ஏற்படுத்தியுள்ளது. 2019 இல் இலங்கை அரசு எம்சிசியுடன் உடன்படிக்கை செய்தது. ஆனால் 2020-ல் ரத்து செய்தது. எம்சிசியுடன் உடன்படிக்கை செய்யும் நாடுகளில் வறுமை குறைப்பு, வளர்ச்சி உருவாக்கம் என்பதற்காக எம்சிசி நிதி உதவி வழங்கும். நேபாள அரசு தெற்கு ஆசியாவில் முதன் முதலாக எம்சிசியுடன் 2017இல், வளர்ச்சி நிதிக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. இதன்படி நேபாளத்தின் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு பராமரிக்கப்படும். 187 மைல் நீல மின்சார விநியோக லைன் மூலம் கூடுதல் மின்சாரம் மக்களுக்கு கிடைக்கும் என்றார்கள். நேபாள காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமராக இருந்த ஷெர் பகதூர் துபா தான், 2017-இல் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். 50 கோடி டாலர் எம்சிசி நிதி உதவி சில நிபந்தனைகளுடன் கூடியது. உடன்படிக்கை அமுலானால் நேபாளத்தில் இறையாண்மை கேள்விக்குறியாகிவிடும். உடன்படிக்கை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக 2022 பிப்ரவரி 27 இல் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து முன்னதாக பிப்ரவரி
20-ல் பெருந்திரளான மக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் காத்மண்டுவில் நடைபெற்றது. காவல்துறை கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீச்சி அடித்தது. 100 பேர் காயமுற்றனர். மாணவர், விவசாயிகள் மற்றும் நேபாளத்தின் பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர். நேபாளத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் இத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான செய்திகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டது. இந்த ஆண்டு நவம்பரில் நேபாளத்தில் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. எம்சிசி உடன்படிக்கை குறித்த சர்ச்சை தேர்தலில் தீர்மானகரமான பங்கு வகிக்கும். 2017-இல் உடன்படிக்கை கையெழுத்தானது முதலே நேபாளத்தின் இடதுசாரி இயக்கம் இதை எதிர்த்து வந்துள்ளது. சீனாவுடன் பட்டு வணிகப் பாதை திட்டத்தின் கீழ் காத்மண்டு நகரை மத்திய ஆசியாவுடன் இணைக்க ரயில்பாதை திட்டத்திற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை விஸ்தரிக்க அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உடன் இணைந்து கூட்டு ராணுவ ஒப்பந்தம் செய்துள்ளது. ‘சீனாவை சுற்றி வளைப்பது’ என்ற அமெரிக்க அரசின் திட்டத்திற்கு நேபாளமும் பயன்படுத்தப்படுமா என்ற அபாயத்தை நேபாள இடதுசாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். எம்சிசியின் நிபந்தனைகளில் ஒன்று, உதவி பெறும் நாடு அமெரிக்காவின் கேந்திரமான அரசியல் நலன்களை காக்க வேண்டும் என்பதாகும். எம்சிசி உடன்படிக்கையை நேபாள மக்களும் இடதுசாரிகளும் எவ்வாறு வாபஸ் பெற வைக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 50 கோடி டாலர் - அதாவது 3800 கோடி ரூபாய் நிதி உருவாக்க நேபாள நாட்டின் இறையாண்மை சுயநிர்ணய உரிமை பலிகடா ஆக வேண்டுமா?
இடதுசாரிகளே நியாயம் வழங்குவார்கள்
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் ஈவோ மொரேல்ஸ் ஜனாதிபதியாக 2019 வரை இருந்தார். இவரின் இடதுசாரி ஆட்சி 2019 நவம்பரில் அமெரிக்க சதி மூலம் கவிழ்க்கப்பட்டது. ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ஜெனின் அனீஸ் ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வந்தார். அதன் மூலம், அவரது ஆட்சிக்கு எதிராக போராடுபவர்கள் மீது ராணுவ படைகள் எத்தகைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம். அதன்படி, இராணுவம் கையாண்ட மிருகத்தனமான ஒடுக்குமுறையில் 37 பேர் கொல்லப்பட்டனர். ராணுவத்திற்கு கொடுக்கப்பட்ட இத்தகைய அதிகாரங்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் அமெரிக்க நாடுகளின் மனித உரிமை நீதிமன்றத்தை நாடினர். சுயேச்சையான ஆய்வுக்குழு ஒன்றை நீதிமன்றம் அமைத்தது. அது தயாரித்த 470 பக்க அறிக்கை வெளிவந்துள்ளது. 2020 அக்டோபரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் ஈவோ மொரேல்ஸின் சோசலிசத்திற்கான இயக்கம் சார்பில் போட்டியிட்ட லூயி ஆர்க் வெற்றி பெற்றார். அர்ஜெண்டினாவில் தஞ்சமடைந்திருந்த ஈவோ மொரேல்ஸ் 2020 நவம்பரில் மாபெரும் வரவேற்புடன் நாடு திரும்பினார். 470 பக்க அறிக்கை மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தியுள்ளது. 2019 இல் சதி நடத்திய ஜெனின் அனீஸ் தடுப்புக் காவலில் உள்ளார். அவரது அமைச்சர்கள் பலர் வெளிநாடுகளுக்கு ஓடி விட்டனர். கொலம்பியா நாட்டில் சென்ற ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்தத்தின் போது 80 பேர் கொல்லப்பட்டனர். அந்நாட்டிலுள்ள தீவிர வலதுசாரி ஆட்சியில் இதற்கு நீதி கிடைக்காது. ஆனால் கடந்தகால சர்வாதிகாரியின் சட்டவிரோதமான அநீதியான வன்முறைகளால் பாதிக்கப்பட்டோருக்கு பொலிவியா இடதுசாரி ஆட்சியில் நியாயம் கிடைத்துள்ளதை வரவேற்போம்.
3 டிகிரி உயர்ந்தால்...
ஐநா சபையின் அமைப்புகளில் ஒன்று பருவநிலை மாறுதல் குறித்த சர்வதேச குழு (Inter-governmental panel on climate change). இக்குழு சமீபத்தில் பிப்ரவரி 28-ல் 3675 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஐ.நா பொது செயலாளர் அந்தோணியா குட்டெரெஸ் ‘எனது வாழ்நாளில் ஏராளமான விஞ்ஞான அறிக்கைகளை பார்த்துள்ளேன். ஆனால் இது மாதிரி அறிக்கையை நான் பார்த்ததில்லை. மனிதகுலம் சந்திக்கும் அபாய எல்லைகளை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது” என்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள 195 நாடுகளால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்ட இந்த அறிக்கையை ஆயிரம் விஞ்ஞானிகள் கூட்டுமுயற்சியில் உருவாக்கியுள்ளனர். உலகம் தொழில்மயம் ஆவதற்கு முன்பு இருந்ததைவிட 1.1 டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலை உயர்ந்து உள்ளது. தொடர்ந்து கார்பன்-டை-ஆக்சைடு போன்ற கரியமில வாயுக் கழிவுகள் உலகை மாசுபடுத்தி வருகின்றன .உலக வெப்பநிலை 1.5 டிகிரி சென்டிகிரேட் வரை உயர் அனுமதித்தால் ஏற்படும் பருவநிலை மாறுதல்களை பின்னுக்கு தள்ள முடியாது. இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் கூடிய பருவநிலை மாறுதல் குறித்த மாநாட்டில் பங்கேற்ற பல அரசு பிரதிநிதிகள் கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப் போவதாக பொறுப்பேற்று பேசினார்கள் .உலக வெப்பநிலை ஒன்றரை டிகிரிக்கு மேல் உயர்ந்தால் கோடிக்கணக்கான மக்கள் வாழும் இடங்கள் தண்ணீரில் முழுகி அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். பல தீவுகள் கடல் மட்ட உயர்வால் மறைந்துவிடும். 2 டிகிரி வெப்பநிலை உயர்ந்தால் 80 கோடி முதல் 300 கோடி மக்கள் கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்திப்பர். ஆப்பிரிக்க நாடுகளில் 14 லட்சம் குழந்தைகள் கடும் போசாக்கின்மையால் அவதிப்படுவர். 3 டிகிரி வெப்பநிலை உயர்ந்தால் உலகம் சர்வ நாசத்தை சந்திக்கும். உலக நாடுகள் தங்கள் மக்களுக்கு, பருவநிலை சீர்கேடு அடைவதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. சூரிய ஒளி மின்சாரம், பெட்ரோல் டீசலுக்கு பதிலாக மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் உபயோகத்தை உயர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. முதலாளித்துவ அமைப்பில் பருவநிலை சீர்கேட்டை தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இல்லை. புவி வெப்பமயமாகி வருவதை தடுத்து நிறுத்த உரிய கவனம் செலுத்தப்படவில்லை. சர்வதேச குழு தனது அறிக்கை மூலம் மனிதகுலம் சந்திக்க உள்ள அபாயகரமான நிலைகளை நன்றாகவே விளக்கியுள்ளது .