மியான்மரின் பல பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மியான்மரில் கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த நாட்டின் நாடாளுமன்றம் கூடவிருந்த நிலையில், ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டனர்.
இதையடுத்து, மியான்மர் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஆனால் அங்கு ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டதை அந்த நாட்டின் ராணுவ தளபதி மின் ஆங் ஹலேங் நியாயப்படுத்தினார். அதிகாரத்தைத் தக்கவைக்க இராணுவம் கடும் அடக்குமுறையை பயன்படுத்தியது. அதன் ஜனநாயக ஆதரவாளர்களுடன் மோதலை அதிகப்படுத்தியுள்ளது,
பாதுகாப்புப் படையினரால் சுமார் 1,500 பேர் கொல்லப்பட்டதாகவும், 8,800 பேர் சித்ரவதை செய்யப்பட்டு காணாமல் போயுள்ளனர். எதிர்ப்பை கட்டுப்படுத்த ராணுவம் கிராமங்களை இடித்துத் தள்ளியதால் 3,00,000-க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அவர்கள் ராணுவத்துக்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் 12 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் யங்கூன், பாகோ, மற்றும் மைட்கினா உள்ளிட்ட பல இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பில் இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலிஎண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.