world

img

மடகாஸ்கர் ஸ்டேடியத்தில் கூட்ட நெரிசல் – 13 பேர் பலி

மடகாஸ்கர் நாட்டின் பரியா ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

மடகாஸ்கர் நாட்டில் அன்டானாநாரிவோவில், இந்தியப் பெருங்கடல் தீவு போட்டிகள் வருகிற செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக அந்நாட்டின் பரியா ஸ்டேடியத்தில் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரசிகர்கள் பலர் திரண்டனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடிய நிலையில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 7 பேர் குழந்தைகள். இதுதவிர இந்த சம்பவத்தில் சிக்கி, 80 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இதனை அந்நாட்டுப் பிரதமர் கிறிஸ்டியன் சே உறுதிப்படுத்தி உள்ளார். இதுபற்றி தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மடகாஸ்கர் நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா தொலைக்காட்சியில் உரையாற்றும்போது, ஒரு நிமிடம் அமைதி காக்கும்படி கேட்டு கொண்டார் என அல் ஜசீரா தெரிவித்து உள்ளது.