பிரேசிலியா, மார்ச் 14- இடதுசாரி ஜனாதிபதி லூலா பொறுப்பேற்றதில் இருந்து பிரேசிலில் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான பல்வேறு புதிய நடவடிக்கைகள் தொடங்கப்பட்டும், நிறுத்தப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டும் வருகின்றன. சர்வதேச பெண்கள் தினத்தை ஒரு வார கால நிகழ்வுகளாக அந்நாட்டில் கொண்டாடி வருகிறார்கள். அதையொட்டி, “வன்முறையில்லாமல் வாழலாம்” என்ற திட்டத்தை லூலா தொடங்கி வைத்தார். பல்வேறு கொள்கை அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். ஊதிய அசமத்துவத்தை முடிவுக்குக் கொண்டு வருதல், பாலின ரீதியான வன்முறைக்கு எதிரான போராட்டம் மற்றும் சுகாதார நலவாழ்வுக்கு உறுதி ஆகியவை அந்தக் கொள்கை அறிவிப்புகளில் முக்கியமான அம்சங்களாகும். “பிரேசில் பெண்கள் வீடுகள்” என்ற திட்டத்தின் கீழ் 40 கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இதற்கு 7 கோடியே 30 லட்சம் அமெரிக்க டாலர்களை ஒதுக்கப்போவதாக லூலா அறிவித்துள்ளார். பாலின ரீதியான வன்முறை மற்றும் பாகுபாடுகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் இங்கு தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு அனைத்து வகையான வழிகாட்டுதல்களைச் செய்ய சிறப்புப் பயிற்சி தரப்பட்ட வல்லுநர்கள் அமர்த்தப்படுவார்கள். “பெண் என்பதாலேயே பிரேசிலில் கொலை செய்யப்படுகிறார்கள். 2022 ஆம் ஆண்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் ஆறு பேர் கொல்லப்பட்டனர். இத்தகைய கொலைகளை எதிர்த்து அவசரமாக அரசியல் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. பெண்கள் மீதான வன்முறை வெறியாட்டங்கள் இயற்கையானதாக மாறுவதை அனுமதிக்கக்கூடாது “ என்று பிரேசிலின் பெண் அமைச்சர்களில் ஒருவரான அபரிசிடா கொன்சால்வஸ் தெரிவித்துள்ளார்.