பாலஸ்தீன ஆதரவு குழுவுக்கு இங்கிலாந்தில் பயங்கரவாத முத்திரை
இங்கிலாந்து அரசு பாலஸ்தீன ஆதரவு குழுவை பயங்கரவாத ஆதரவு குழுவாக முத்திரைக் குத்தி தடை செய்ய திட்டமிட்டுள்ளது. இதனை அந்நாட்டின் உள்துறை செயலாளர் யெவெட் கூப்பர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு மனித உரிமை அமைப்புகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலுக்கு இங்கிலாந்து தொடர்ந்து உதவி வரும் நிலையில் அந்நாட்டு மக்கள் அதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை டிரம்ப் தகவல்
வரும் வாரம் அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக டிரம்ப் கூறியுள்ளார். நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பிறகு தி ஹேக்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய டிரம்ப், அடுத்த வாரம் ஈரானுடன் நாங்கள் பேசப் போகிறோம். நாங்கள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என்றும் கூறினார். மேலும் இருவருக்கும் இடையிலான போர்நிறுத்தம் “மிகவும் நன்றாகச் செயல்படுகிறது “ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
297 மில்லியன் டாலர் மதிப்புள்ள போதைப் பொருட்கள் அழிப்பு
சர்வதேச போதைப்பொருள் தடுப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தன்று நாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட 297.95 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போதைப்பொருட்களை மியான்மர் அழித்துள்ளது. ஹெராயின், ஓபியம், போதை மாத்திரைகள், மெத்தம்பேட்டமைன், கஞ்சா, கெட்டமைன், எக்ஸ்டசி ஆகியவை இந்த பட்டியலில் அடங்கும். கடந்த ஆண்டு மூன்று இடங்களில் 349 மில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் மீது மெக்சிகோ சட்ட நடவடிக்கை
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் கழிவுகளால் எலான் மஸ்க் மீது வழக்கு தொடர மெக்சிகோ அரசு முடிவு செய்துள்ளது. எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் ஆளில்லா விண்கலங்களை விண்ணுக்கு ஏவி சோதனை செய்து வருகிறார். கடந்த மே மாதம் விண்ணில் ஏவப்பட்ட விண்கலம் வெடித்து சிதறி அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லை யருகே அதன் பாகங்கள் குப்பைகளாக விழுந்துள்ளன. இதையடுத்து மெக்சிகோ ஜனா திபதி கிளாடியா ஷீன்பாம் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளார்.
ஷாங்காய் மாநாட்டு கூட்டறிக்கை: இந்தியா கையெழுத்திட மறுப்பு
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்து ழைப்பு மாநாட்டின் கூட்டறிக்கையில் கையெ ழுத்திட இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுப்பு தெரிவித்துள் ளார். கூட்டறிக்கையில் பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்படாததா லும், பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் தீவிரவாத தாக்குதல் நடைபெறுவதாகக் கூறி கண்டனம் தெரிவிக்கப்பட்டதையும் ஏற்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை இக்கூட்டமைப்பு கண்டித்தபோது அதில் இந்தியா கையெழுத்திடாதது குறிப்பிடத்தக்கது.
ராணுவச் செலவை அதிகரிக்க நேட்டோ உத்தரவு : முடிவை ஏற்பதில் ஐரோப்பிய நாடுகளிடையே பிளவு
ஹேக்,ஜூன் 26- அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் அழுத்தத்திற்குப் பிறகு, நேட்டோ நாடுகள் தங்களின் ராணுவத்திற்கான செலவுகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக உயர்த்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இருப்பினும் ஸ்பெயின் உள்ளிட்ட சில நாடுகள் இந்த இலக்கை அடையும் வகையில் ராணுவத்திற்காக செலவு செய்ய முடியாது என தெரிவித்துள்ளன. நேட்டோவின் முடிவுகள் 2035 க்குள் ஒவ்வொரு நேட்டோ உறுப்பினரும் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் வரை ராணுவத்திற்காக செலவிடுவது; நேட்டோவில் உறுப்பினராக உள்ள ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மற்ற அனைத்து நாடுகளின் மீதான தாக்குதல் என்பதை மீண்டும் உறுதியாக ஏற்றுக்கொள்வது; அனைவரும் இரும்புக்கரம் போல இணைந்து பணியாற்றுவது; 2029 இல் ராணுவச் செலவின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வது - உள்ளிட்ட மாநாட்டின் முக்கிய முடிவுகளை நேட்டோவின் 32 உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டன. ராணுவத்திற்கான செலவு இலக்கை அடைய வேண்டும் என்றால் ஒவ்வொரு நாடும் தன் நாட்டு மக்கள் நலனுக்கு தேவையான அடிப்படை அத்தியாவசியத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, மருத்துவக் காப்பீடுகள், ஓய்வுக்கால பணப் பலன்கள், சுகாதார, கல்வித்துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை வெட்ட வேண்டிய சூழல் உருவாகும். பல ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே நிதி வெட்டுக்களை அமல்படுத்தியுள்ளன. பல ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன. மேலும் டிரம்ப்பின் வரியும் அவர்களை அதிக நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. இந்நிலையில் மேலும் அதிக நிதி வெட்டுக்கள் நாட்டின் நெருக்கடியை தீவிரமாக்கிவிடும் என சில ஐரோப்பிய நாடுகள் அச்சத்தில் உள்ளன. இது போன்ற நெருக்கடிகளின் காரண மாகவே ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த 2 சதவீதம் என்ற இலக்கை ஸ்பெயின் உள்ளிட்ட 9 நாடுகள் அடையவில்லை. தற்போதும் 5 சதவீத இலக்கிற்கு ஸ்பெயின், பெல்ஜியம், ஸ்லோவாகியா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 2 சதவீத இலக்கே போதுமானது என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். பெல்ஜியமோ இந்த இலக்கை எட்ட முடியாது என மாநாட்டுக்கு முன்பாகவே தெரிவித்துள்ளது. ஸ்லோவாகியா தனது நாட்டின் ராணுவ செலவு எவ்வளவு இருக்க வேண்டும் என தாங்களே தீர்மானிக்கும் உரிமையை வலியுறுத்தியுள்ளது.