போரிஸ் ஜான்சனின் இடத்தில் அமரப் போகிறவர் யார் என்ற போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், பிரிட்டனின் முன்னாள் நிதியமைச்சருமான ரிஷி சுனாக் பின்தங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆளும்கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான பல சுற்றுகள் நடந்து இறுதிச் சுற்றில் ரிஷி சுனாக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் களத்தில் இருக்கிறார்கள். இதுவரை நடந்த சுற்றுகளில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். அவர்கள் மத்தியில் ரிஷி சுனாக்கிற்கு ஆதரவு அதிகம் இருந்தது. தொடர்ந்து முதலிடத்தில் அவர் இருந்தார். ஆனால், தற்போது நடைபெறவிருக்கும் இறுதிச் சுற்றில் கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர். அதில் லிஸ் டிரஸ்சுக்கு வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டது.
அதோடு, கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு முக்கியமான தலைவர்கள் தங்கள் ஆதரவை லிஸ் டிரஸ்சுக்கு அளித்துள்ளனர். இந்தப் போட்டி தொடங்கியதில் இருந்து வாயே திறக்காமல் இருந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் பென் வாலஸ், தற்போது தனது ஆதரவு லிஸ் டிரஸ்சுக்கு என்று கூறியுள்ளார். தற்போதைய சூழலில் பிரிட்டன் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளை சமாளிக்க அவர்தான் பொருத்தமானவர் என்றும், வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு பன்னாட்டு உடன்பாடுகளுக்கான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றவர் என்ற முறையில், பெரும் அனுபவம் கொண்டவர் என்றும் தெரிவித்தார்.
ஜி-7, நேட்டோ மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பிரிட்டனின் பிரதிநிதியாக லிஸ் டிரஸ் பணியாற்றியிருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். நெருக்கடியான நேரத்தில் பிரிட்டனுக்காகக் குரல் கொடுப்பவராக லிஸ் டிரஸ் இருப்பார் என்று கூறப்படுகிறது. தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்று ரிஷி சுனாக்கே கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் புதிய தலைவருக்கான போட்டியில் இருந்தவரும், ஆளும்கட்சியின் செல்வாக்குள்ள தலைவர்களில் ஒருவருமான டாம் டுகென்தாட் திடீரென்று லிஸ் டிரஸ்சுக்குதான் தனது ஆதரவு என்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.