பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்வது தொடர்பாக ஸ்காட்லாந்து மக்களிடம் கருத்து கேட்கும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்தப் போவதாக அந்த நிர்வாகத்தின் முதன்மை அமைச்சரான நிகோலா ஸ்டர்ஜன் அறிவித்துள்ளார்.
பிரிட்டனின் ஒரு பகுதியாக இருந்து வரும் ஸ்காட்லாந்து பிரிந்து தனிநாடாக மாற வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. அரசியல் கட்சிகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் சுதந்திர நாடாக மாறுவதற்கான பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். மக்கள் மத்தியிலும் கணிசமான பகுதியினர் ஆதரவு தெரிவிப்பதால் பிரிவதற்கான ஆபத்து எப்போதுமே இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் முதன்மை அமைச்சரான நிகோலா ஸ்டர்ஜன் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதியன்று பொது வாக்கெடுப்பு நடக்கும் என்று அறிவித்துள்ளார். அவர் பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரிந்து தனிநாடாக மாறுவதை ஆதரிக்கும் ஸ்காட்டிஸ் தேசியக்கட்சியைச் சேர்ந்தவராவார். இதற்கான மசோதாவை விரைவில் முன் வைக்கப்போவதாக அறிவித்துள்ள அவர், இதைத் தடுப்பதற்கு பிரிட்டன் அரசு ஏதாவது தடைகளை ஏற்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு செல்லப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் ஒரு விஷயத்தைச் செய்ய விரும்பவில்லை. அதை ஒருபோதும் செய்ய மாட்டேன். ஸ்காட்லாந்தின் ஜனநாயகத்தை போரிஸ் ஜான்சனிடமோ அல்லது வேறு எந்த பிரதமரிடமோ சிறைக்கைதியாக இருக்க அனுமதிக்க மாட்டேன். பொது வாக்கெடுப்புக்கான அனுமதி கோரி போரிஸ் ஜான்சனுக்கு எழுதியுள்ளேன். ஆனால் வாக்கெடுப்புக்கான வேலைகளைத் தொடங்கி விட்டோம்" என்று கூறியுள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கான அடுத்த தேர்தலில் ஸ்காட்லாந்துக்கு விடுதலை என்ற கோரிக்கையை முன்வைத்துப் போட்டியிடப் போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.
55 லட்சம் மக்களைக் கொண்டுள்ள ஸ்காட்லாந்தில் பிரிட்டனில் இருந்து பிரிந்து போவது தொடர்பாக 2014 ஆம் ஆண்டில் ஒரு பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் பிரிந்து செல்வதற்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். இதனால் இந்தக் கோரிக்கை கிடப்பில் இருந்தது. யூரோ மண்டலத்தில் வெளியேறுவது பற்றிய வாக்கெடுப்பில் பிரிட்டன் மக்கள் வெளியேறலாம் என்று வாக்களித்ததால் தற்போது அதில் பிரிட்டன் இல்லை. ஆனால் இந்த வாக்கெடுப்பில் ஸ்காட்லாந்து மக்களில் பெரும்பாலானவர்கள் வெளியேறக்கூடாது என்று வாக்களித்தால், மீண்டும் தனி நாடு என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள். பிரிட்டனுக்கு நெருக்கடி முற்றிக் கொண்டிருக்கிறது.