பாலஸ்தீனம் - இரு பகுதியினரும் இரு தேசங்களாக வாழ முடியாதா?
பாலஸ்தீனம்/ இஸ்ரேல் என இரு தேசங்கள்தான் தீர்வு. தொடக்கத்தில் இரு தேச தீர்வை பாலஸ்தீன தரப்பு ஏற்கவில்லை. ஏனெனில் அவர்களது நிலம் பறிக்கப்பட்டது. பின்னர் பாலஸ்தீன மக்களில் ஒரு பிரிவினர் இரு தேச தீர்வை ஏற்க முன்வந்த பொழுது இஸ்ரேலின் வலதுசாரி இயக்கங்கள் அதனை ஏற்கவில்லை. பாலஸ்தீன மக்களை விரட்டிவிட்டு அந்த பகுதி முழுவதையும் இஸ்ரேல் என மாற்றிட அந்நாட்டின் வலதுசாரிகள் முயல்கின்றனர்.
- அனைத்து யூதர்களும் பாலஸ்தீன விரோதிகளா?
அப்படி சொல்ல முடியாது. யூதமும் ‘ஸியோனிசம்’ என சொல்லப்படுகிற யூத இனவெறியும் ஒன்றல்ல. இந்து மதமும் இந்துத்துவாவும் எப்படி ஒன்றல்லவோ அப்படி யூதமும் யூத இனவெறியும் ஒன்றல்ல. எனினும் இன்றைய சூழலில் யூத மக்கள் பெரும்பாலானோர் ஓரணியில் நிற்கின்றனர் என்பது உண்மை
- ஹமாஸ் பாலஸ்தீன மக்களின் போராளி குழுவா?; அல்லது இஸ்ரேலும் அமெரிக்காவும் கூறுவது போல பயங்கரவாத அமைப்பா?
1987ம் ஆண்டு ஹமாஸ் இயக்கம் “முஸ்லீம் சகோதரத்துவம்” எனும் அமைப்பின் ஒரு பிரிவாக தொடங்கப்பட்டது. அப்பொழுது பாலஸ்தீன மக்களின் மகத்தான அமைப்பாக இருந்தது ‘PLO’ எனப்படும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஆகும். இந்த அமைப்பில் பாலஸ்தீன கம்யூனிஸ்ட் கட்சியும் இடம் பெற்றிருந்தது. பிஎல்ஓ தலைவராக யாசர் அராபத் இருந்தார். பிஎல்ஓ அமைப்புடன் மோதல் போக்கையே ஹமாஸ் கடைபிடித்தது. நேரடி ராணுவ நடவடிக்கை மூலம்தான் பாலஸ்தீனத்தின் விடுதலையை பெற முடியும் என்பது ஹமாஸ் நிலைப்பாடு.
நாளடைவில், குறிப்பாக யாசர் அராபத் மறைவுக்குப் பின்னர் காசா பகுதியில் ஹமாஸ் தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டது. ஹமாசுக்கு கத்தார் போன்ற தேசங்கள் மட்டுமல்ல; இஸ்ரேலின் நெதன்யாஹூ உட்பட உதவினர். பாலஸ்தீன விடுதலை இயக்கம் வலுவாக உருவாகாமல் இருக்க ஹமாசுக்கு நிதி உதவி உட்பட செய்ய வேண்டும் என 2019ம் ஆண்டு நெதன் யாஹு பகிரங்கமாக கூறினார். 2006ம் ஆண்டு காசா பகுதியில் நடந்த தேர்தலில் ஹமாஸ் பெரும் வெற்றி பெற்றது. இதன் மூலம் மக்களின் அங்கீகரத்தை ஹமாஸ் பெற்றது. அதற்கு பின்னர் தன்னைத் தவிர வேறு எந்த அமைப்பும் உருவாகாமல் காசா பகுதியில் ஹமாஸ் செயல்பட்டது. அதே சமயம் மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் நிர்வாகம் செய்கிறது.
தற்போது, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலிய பகுதியில் நடத்திய தாக்குதலில் ஒரு இரவு கேளிக்கை விருந்தில் இருந்த சுமார் 270 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அல்ல. அப்பாவி மக்கள். இவர்களில் ரஷ்யர்கள்/ சீனர்கள்/ அமெரிக்கர்கள்/ பிரான்ஸ் தேசத்தவர்/ ஜெர்மானியர்கள் ஆகியோரும் இருந்தனர். ஹமாசின் இந்த செயலை எவரும் நியாயப் படுத்த இயலாது. அதே சமயத்தில் இன்றைய சூழலில் காசா மக்கள் தமது பாதுகாப்புக்கு ஹமா சையே நம்பும் சூழல் உள்ளது. எனவே ஹமாசை பயங்கரவாத அமைப்பு என வகைப்படுத்த முடியாது. எனினும் அதன் அனைத்து நடவடிக்கைகளையும் அங்கீகரிக்கவும் இயலாது. - தொடரும்