இஸ்ரேலிய ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரைப் பகுதியில் பாலஸ்தீனச் சிறுவன் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்திற்குச் சொந்தமான மேற்குக்கரைப்பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேலிய மக்களைக் குடியேற்றம் செய்யும் வேலை நடக்கிறது. சர்வதேச விதிகளின் கீழ் இந்த ஆக்கிரமிப்பு மற்றும் குடியேற்றம் ஆகியவை சட்டவிரோதம் என்றாலும் அமெரிக்காவின் உதவியோடு இந்தப் பணிகளை இஸ்ரேல் செய்து வருகிறது. குடியேற்றத்திற்கு இடையூறாக இருக்கும் கட்டிடங்களை மட்டும், மக்களையும் அப்புறப்படுத்தி வருகிறார்கள்.
2022 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரையில் 70க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெண்களும், சிறுவர்களும் அடங்குவார்கள். இத்தகவலை கொலைசெய்யப்பட்டோர் குடும்பத்தினரின் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைவரான முகமது ஷேஹட், "இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட 18 வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 13 ஆகும். ஏழு பெண்களும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவார்கள்" என்றார்.
17 வயதான ஓடே முகமது ஓரேயின் கொலை மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையை பாலஸ்தீன சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியது. இஸ்ரேலிய ராணுவத்தின் குண்டுகளால் துளைக்கப்பட்ட அவர் ரமல்லாவில் உள்ள பாலஸ்தீன மருத்துவ வளாகத்திற்குக் கொண்டு வரப்பட்டார். மார்பைக் குண்டு துளைத்ததால் பல்வேறு முயற்சிகளைக் கையாண்டும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. கடந்த ஏழு நாட்களில் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப்படும் நான்காவது பாலஸ்தீனியர் ஓடே முகமது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொலைகளைத் தொடர்ந்து, "இஸ்ரேலின் சட்டவிரோத, கொடூர நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டும்" என்று சர்வதேச சமூகத்திற்கு பாலஸ்தீனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் மேற்கொள்ளும் போர்க் குற்றங்களுக்கு எதிராகத் தலையிட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். தனிப்பட்ட முறையில் இந்தக் குற்றங்களுக்கு இஸ்ரேலிய பிரதமர் நப்டாலி பென்னட்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாலஸ்தீன பிரதமர் முகமது ஸ்டயே குற்றம் சாட்டியிருக்கிறார்..