காத்மண்டு, நவ.22- நேபாளத்தில் நாடாளுமன்றத்திற்கும், ஏழு மாகாண அவைகளுக்கும் நடைபெற்ற தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில், முழுமையான நிலவரம் தெரிய டிசம்பர் 8ஆம் தேதி வரையில் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்திற்கு மொத்தம் 275 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 165 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தொகுதிகளில் இருந்தும், 110 பேர் கட்சிகள் பெறும் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். முந்தைய தேர்தல்களோடு ஒப்பிடுகையில் இந்த முறை வாக்குப் பதிவு குறைவாகவே இருந்திருக்கிறது. தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் வெவ்வேறு கூட்டணிகளில் போட்டியிடுகின்றன. நேபாள காங்கிரசுடன் இணைந்து மாவோயிஸ்டு மையம் மற்றும் ஐக்கிய சோசலிஸ்டு ஆகிய கட்சிகள் தேர்தலைச் சந்தித்தன. மற்றொரு அணிக்கு நேபாள கம்யூனிஸ்டு கட்சி(ஐக்கிய மார்க்சிஸ்டு லெனினிஸ்டு) தலைமை தாங்கியுள்ளது. அந்த அணியில் ஜனதா சமாஜ்வாதி கட்சி மற்றும் ராஷ்டிரிய பிரஜாதந்திரக் கட்சி ஆகியவை உள்ளன.
வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி 31 விழுக்காடு வாக்குகளும், நேபாள காங்கிரஸ் 26 விழுக்காடும், ராஷ்டிரிய சுதந்திரக் கட்சி 13 விழுக்காடும், மாவோயிஸ்டு மையம் 12 விழுக்காடும், ராஷ்டிர பிரஜாதந்திரக் கட்சி 7 விழுக்காடும் பெற்றுள்ளன. ஆனால், மிகக் மிகக் குறைவான வாக்குகளே இதுவரையில் எண்ணப்பட்டுள்ளன. முழுமையான முடிவுகள் டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் என்று நேபாள தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.