நேபாள நாட்டின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. 5பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நேபாள நாட்டின் மேற்கே நேற்றிரவு 9.07 மணியளவில் ரிக்டரில் 5.7 அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதே பகுதியில் இரவு 9.56 மணியளவில் ரிக்டரில் 4.1 அளவிலான மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன்பின்னர் இன்று அதிகாலை 2.12 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.6 ஆக பதிவானது. இதில் வீடு இடிந்து 3 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் கைராகாவன் பகுதியில் ஏற்பட்டு உள்ளது. இதனை பூர்பிசவுக்கி கிராம கவுன்சில் தலைவர் ராம் பிரசாத் உபாத்யாய் உறுதிப்படுத்தி உள்ளார்.
மேலும் நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து வடகிழக்கே 155 கி.மீ. தொலைவில் நேற்று காலை 4.37 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியது.
இந்நைலயில் நேபாளத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்ட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை உத்தரகாண்டிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. காலை 6.27 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் புது தில்லி, நொய்டா மற்றும் ஹரியானா ஆகிய பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.