லண்டன், ஜூலை 19- பல ஐரோப்பிய நாடுகளில் வெப்பம் கடுமையாக அதிகரித்து அதன் சீற்றத்துக்கு நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். ஐரோப்பியக் கண்டத்தின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைத் தொட்டிருக்கிறது. ஏற்கனவே நெருக்கடியில் இருந்த மக்கள் சுருண்டு விழுந்து செத்துக் கொண்டிருக் கிறார்கள். மக்களைப் பாதுகாக்க அரசுகள் தவறிவிட்டதாக தொழிற்சங்கங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். தொடர் எச்சரிக்கை களை மீறி வெப்பமயமாதல் பிரச்சனைகள் குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மாறாக, அதற்கான காரணிகளை உற்சாகப் படுத்தும் வகையில்தான் கொள்கைகள் வகுக்கப்பட்டன என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. லண்டனில் உள்ள ஜேபி மோர்கன் அலுவலகத்தைக் குறிவைத்து தாக்குதலும் நடந்திருக்கிறது. சுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டங்களுக்கு இந்த நிதி நிறுவனம் பெரும் அளவில் நிதியை வழங்கிக் கொண்டிருப்பதைக் கண்டித்தே இந்தத் தாக்குதல் நடந்தது. இயற்கைப் பாதுகாப்புக் காகப் போராடும் மருத்துவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். 2016 ஆம் ஆண்டில் போடப்பட்ட பாரீஸ் சுற்றுச்சூழல் உடன்பாடு நடைமுறைக்கு வர வேண்டிய இந்தக் காலகட்டத்தில் 3 லட்சத்து 94 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதியை ஜேபி மோர்கன் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொழிற்சங்கங்கள் மும்முரம்
தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் தொழிற்சங்கங்கள் இறங்கியுள்ளன. வெப்பத்தின் உக்கிரத்தால் பணியாற்ற இயலாத இடங்களில் பணிப் பாதுகாப்புக்கான சட்டரீதியான ஏற்பாடு களை செய்து வருகிறார்கள். அதோடு, நெளிவு சுழிவான வேலை நேரம், பணி செய்து கொண்டிருக்கும்போது தேவையான இடைவேளைகள், குளிர் படுத்தும் உடைகள் அணிய அனுமதி மற்றும் போதிய போக்குவரத்து ஏற்பாடுகள் ஆகிய வற்றை உத்தரவாதப்படுத்தும்படி தொழிற் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான லின்சி மான், ‘‘பணியிடங்களை குளிருடன் வைத்திருக்கத் தங்களால் எவ்வ ளவு முயற்சிகள் மேற்கொள்ள முடியுமோ, அவ்வளவு முயற்சிகளை முதலாளிகள் எடுக்க வேண்டும்’’ என்றார். அவரின் கருத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரான்சிஸ் ஓ கிராடி, ‘‘வேலை செய்யும் இடத்தில் அதிக பட்ச வெப்பம் என்ற வரம்பை நிர்ணயிக்க வேண்டும். சொல்லப்போனால், இத்தகைய ஏற்பாடு முதலாளிகளுக்கு நல்லது. அதிக வெப்ப சூழலில் பணிபுரியும் தொழிலாளியால் தன்னுடைய சிறந்த உழைப்பைத் தர முடி யாது’’ என்று சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவ வல்லுநர்களும் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கப் போகிறது என்று எச்சரிக்கும் மருத்துவ வல்லுநரான டிரேசி நிகோல்ஸ், ‘‘வெளிப்புறங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் தொடர்ச்சியான இடைவேளைகள், திரவ உணவுகள், சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பசைகள் மற்றும் உடைகள் ஆகியவற்றிற்கு முதலாளிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார்.
வரலாறு காணாத அளவில் வெப்பம் உக்கிரமடைந்துள்ளதால், மக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று துணைப் பிரதமர் டொமினிக் ராப் கேட்டுக் கொண்ட பிறகுதான் டிரேசி நிகோல்ஸ் தனது கருத்தைக் கூறியிருக்கிறார். யார் அடுத்து வர வேண்டும், யாரைக் கொண்டு வர வேண்டும் என்ற அரசியல் சண்டையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இருப்பதால் இந்தப் பிரச்சனையில் அக்கறை காட்டவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துவிடும் ஆபத்து உள்ளது என்று பிரிட்டனின் சுகாதாரப் பாதுகாப்பு முகமை எச்சரிக்கை விடுத்திருந்தும், அது குறித்த ஆலோசனையை மேற்கொள்ள ஏற்பாடு செய்திருந்த உயர்மட்ட, அவசரக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.
போர்ச்சுக்கல்
வழக்கமான இறப்பு விகிதத்தை விட வெப்ப அலை வீசுவதால், மரணங்கள் அதி கரித்துள்ளன. போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயி னில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள் ளனர். போர்ச்சுக்கலின் வெப்பம் 47 டிகிரி செல்சியசைத் தொட்டுள்ளது. இது எதிர்பாராத ஒன்றல்ல என்று வல்லுநர்கள் சுட்டிக்காட்டி யுள்ளனர். வெப்ப அலைகளின் சீற்றத்தால் போர்ச்சுக்கலில் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ள னர் என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரி விக்கின்றன. உண்மையில் இது அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வல்லுநரான முனைவர் அமீர் கிவாடி, ‘‘2022 ஆம் ஆண்டின் கோடைக் காலம் வழக்கமான வெப்பத்தை விட அதிக மானதாகவே இருக்கும் என்று ஆண்டின் துவக்க கட்டத்திலேயே முன்னறிவிப்புகள் வந்தன. உண்மை நிலை அதையும் விட மோச மாக இருக்கிறது. கணித்ததைவிட வெப்பம் கடுமையாக உள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்ப அலை வீசிக் கொண்டிருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ்
பிரான்சில் ஆயிரக்கணக்கான மக்கள் இதுவரையில் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கிரீஸ், மொரோக்கோ, இத்தாலி ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.