world

img

காலத்தை வென்றவர்கள்.... தோழர் ஹோசிமின் நினைவு நாள்....

அமெரிக்க வல்லரசை மண்ணைக் கவ்வச் செய்த வியட்நாம் விடுதலைப்போர்த் தலைவர் தோழர் ஹோசிமின்அவர்களை “ஹோமாமா” என வியட்நாம் மக்கள்அன்புடன் அழைத்ததிலிருந்தே அம்மக்கள் அவர்மீது வைத்திருந்த அளப்பரிய அன்பையும் மதிப்பையும் உணரலாம்.  உலகத்தின் அசைக்க முடியாத வல்லரசு எனக் கருதப்பட்ட அமெரிக்கா வியட்நாம் மக்களிடம் படுதோல்வியைச் சந்தித்தது. 30 லட்சம் மக்களின் உயிர்த் தியாகத்தில் வியட்நாம் வெற்றியை ஈட்டியது. அமெரிக்காவின் படையில் 58000 பேர் கொல்லப்பட்டனர். 

ஆசிய ஆப்ரிக்க நாடுகளைக் கைப்பற்ற பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையில் நடந்த போட்டியில்வியட்நாம்,லாவோஸ்,கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்ஸ் தேசத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டன. எனினும் வியட்நாம் மக்கள் ஆக்கிரமிப்புக்கெதிரான போரைத் தீரமுடன் நடத்தினர். விடுதலைக்கான போரை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஒன்றிணைந்து வீச்சாகக் கொண்டு சென்றனர். அதன் விளைவாக பிரான்ஸ் வடபகுதியிலிருந்து வெளியேறியது. வியட்நாமின் தெற்கு பகுதி அதன் பிடியில் இருந்தது. இதனால் ஹனோயைத் தலைநகராகக் கொண்ட வட வியட்நாமும் சைகோனைத் தலைநகராகக் கொண்டு தென்வியட்நாமும் உருவாகின. 

ஐ.நா.சபை வெகுமக்களின் வாக்கெடுப்பை நடத்தாத நிலையில் தென்வியட்நாம் வடவியட்நாம் மீது தாக்குதலைத் தொடங்கியது. 1955ல் மீண்டும் போர் ஆரம்பமானது. அமெரிக்கா தென்வியட்நாம் அரசுக்கு ஆதரவாக 1964ல் வடவியட்நாம் மீதுவிமான குண்டுத் தாக்குதல் நடத்தியது. நச்சு ரசாயனநாபாம்குண்டுகளை ஏவி வீடு,வயல்,நிலங்களை  அழித்தது அமெரிக்கா. எத்தகைய தாக்குதலுக்கும்அஞ்சாமல் வியட்நாம் மக்கள் போராடி 1975ல் அமெரிக்காவை விரட்டி அடித்தனர். 58000 போர் வீரர்களை இழந்து அமெரிக்கா அவமானத்துடன் வெளியேறியது.

வியட்நாமிய மக்களை அடி பணிய முயற்சி செய்த ஆணவத்திற்கும், அடங்காபிடாரிதனத்திற்கும் மொத்தமாக ஆப்பு வைத்து, வெறும் முங்கில் கழிகளையும், குச்சிகளையும் வைத்தே கொரில்லாயுத்தத்தின் மூலம் பீரங்கிகளையும், விமானங்களையும், நவீன குண்டுகளையும் கொண்ட அமெரிக்காவைப் புறமுதுகிட்டு ஒட வைத்தனர் வீர வியட்நாம் மக்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 1975 வரை நடத்திய கொரில்லா யுத்தத்தின் வீர நினைவுகளை இன்றும் பாதுகாத்து வைத்து வருகின்றனர். குச்சி என்ற பகுதியில் ஆண்களும், பெண்களும் 4, 6, 10 மீட்டர் ஆழத்தில் பூமியில் குழிகளையும், பட்டறைகளையும் உருவாக்கி அதில் பதுங்கி இருந்து போரை நடத்தினார்கள். கையில் வெறும் கட்டைதுப்பாக்கியும், மூங்கில் குச்சிகளையும் வைத்துக் கொண்டு நவீன விமானங்களையும், பீரங்கிகளையும் வைத்து ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்திய அமெரிக்காவை மண்ணை கவ்வ வைத்தனர்.  அந்த மகத்தான சாதனை செய்த வீரர்களின் நினைவுகள் இன்றும் அங்கு போற்றப்படுகிறது. தொடர்ந்து அந்த வரலாறை இளம் தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்து தேச இறையாண்மை கட்டியமைக்கப்படுகிறது.

வியட்நாமிய விடுதலைக்கான போராட்டத்தையும், மேற்கத்திய காலனிய ஆதிக்கத்திற்கெதிராகவும் 30 ஆண்டுகளுக்கு மேலாகவும் வீரமிகு போராட்டத்தை நடத்தியவர்கள்.  இதன் பின்னணியிலேயேவியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சி  தேச மறு கட்டுமானம், நவீனமயமாக்கல், தொழில்மயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் வழியில் அரசும் வீறுநடை போடுகிறது.சோவியத்நாட்டில் நடைபெற்ற நவம்பர் புரட்சியின் தாக்கமே வியட்நாமிய புரட்சியின் அடிநாதமாகும். தோழர் ஹோசிமின் ஒவ்வொரு நிமிடமும் மார்க்சிய லெனினிய பாதையில் செல்வதன் அவசியம் குறித்து தெளிவான பார்வையோடும், சொல்லிலிருந்து செயலை நோக்கி ஒவ்வொரு படியாக வியட்நாமின் வளர்ச்சிக்கு வித்திட்டார். அவரின் வழியில் இன்று வியட்நாமின் சோசலிச அரசு 2020க்குள் வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் வியட்நாமும் வந்துவிடும் என்றுஅறிவித்து அதற்கான திட்டங்களை அமலாக்குவதில் உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.வியட்நாமில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஆரம்பக்கல்வி முழுமையாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இன்றைய தினம் வரை மேல்நிலைக்கல்வி வரை 95 சதவீதத்திற்கும் அதிகமான கிராமப்புறமக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். பள்ளிக்கல்வி அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டிலேயே பராமரிக்கப்படுவதால் ஏற்றத்தாழ்வற்று சமத்துவமான கல்வி வழங்கப்படுகிறது. உயர் கல்வி கற்க வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக தேசப்பற்று, சுதந்திரப் போராட்ட வரலாறு, லெனினியம், மார்க்சியம் குறித்தும் கற்பிக்கப்படுகின்றன. 

அதே போல் சுகாதாரம் முழுமையாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுகாதாரத்தின் கூறுகளான  குடிநீர், ஊட்டச்சத்துமிக்க உணவு,  மருத்துவம், கழிப்பறை,தூய்மையான வீடு, குப்பைகளற்ற சுற்றுப்புறச்சூழல்இவைகளை விரைவில்  அனைவருக்கும் வழங்கிடுவோம் என்று நம்பிக்கையோடு அரசு நடைபயின்று வருகிறது.அதனால் தான் வெட்டுக்கிளிகளால் யானையின் குடலைப்  பிடுங்கி எறிய முடியும் என்று நம்பிக்கையோடு யுத்தகாலத்திற்கு மட்டுமல்ல எதிர்காலத்திற்கும் சேர்த்து சொன்னார்ஹோசிமின். ஆம்,..

“நம் மலைகள் எப்போதும் நம்மோடுதான்
நம் ஆறுகள் எப்போதும் நம்மோடுதான்
நம் மக்கள் எப்போதும் நம்மோடுதான்
அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள்    தோற்கடிக்கப்படுவர்

நம் நாட்டை நாம் மீண்டும் உருவாக்குவோம்  புதிதாய்
இன்னும் பத்துமடங்கு அழகாக.,’’

புரட்சியாளர் தோழர் ஹோசிமின் 1969ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் நாள் மறைந்தார். 

பெரணமல்லூர் சேகரன்

;