துபாய்: நவம்பர் 30, 2023 முதல் இங்கு நடைபெறும் காலநிலை உச்சிமாநாட்டில் (COP28) காலநிலை மாற்றம், கடல்நீர் மட்ட உயர்வு, அமிலமாகும் கடல் போன்ற பாதிப்புகளால் உருவாகும் இழப்பு மற்றும் சேதங்களுக்கு நிவாரணமாக ஏழை நாடுகளுக்கு உதவும் வரலாற்றுப் பெருமைமிக்க இழப்பு மற்றும் சேதம் பற்றிய (Loss&damage agreement) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட், ஜெர்மனி ஆகிய நாடுகள் இதற்காக 100 மில்லியன் பவுண்டு நிதியை வழங்குவதாக அறிவித்துள்ளன. இந்த நிதியின் உலகளாவிய ஒட்டுமொத்த மதிப்பு 429 மில்லியன் டாலர். இதில் ஐரோப்பிய ஒன்றியம் 245 மில்லியன் டாலர், யு கே 75 மில்லியன் டாலர், அமெரிக்கா 24.5 மில்லியன் டாலர் மற்றும் ஜப்பான் 10 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளன.
தொடர்ந்தும் எண்ணெய் மற்றும் வாயு துரப்பணப் பணிகளை மேற்கொள்வதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் அரபு எமிரேட்டின் தலைமைக்கு இது ஒரு முக்கிய வெற்றி என்று கருதப்படுகிறது. 2022இல் மட்டும் எமிரேட்டின் மிகப்பெரிய அரசு எண்ணெய் நிறுவனமான அட்நாக் (Adnoc) எண்ணெய் விற்பனை மூலம் மட்டும் 802 மில்லி யன் டாலர் ஒட்டுமொத்த லாபம் ஈட்டியுள்ளது.
எண்ணெய் விற்பனை லாபத்தின் உச்சம்
இது 2021 லாபத்தை விட 33சதவீதம் அதிகம். சுல்தான் அல் ஜேபெர் (Sultan Al Jaber) அட்நாக் எண்ணெய் நிறுவனம் மற்றும் காப்28ன் தலைவராக இருக்கிறார்.
இது பெரிய முரண்பாடாகக் கருதப்படு கிறது. பணக்கார நாடுகளும் மாசு ஏற்படுத்தும் தொழில் நிறுவனங்களும் இந்த உடன்படிக்கை யை முன்மாதிரியாகக் கொண்டு நிதி வழங்க வேண்டும் என்று பசுமை இயக்கத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கப் பிரிவின் செயல் இயக்குனர் கீவா நக்கத் (Ghiwa Nakat) கூறு கிறார்.
உலக வங்கியின் மேற்பார்வையில் நிதி பகிர்மானம்
உடன்படிக்கைக்கான வரைவறிக்கை உலக வங்கி மேற்பார்வையில் நிதி விநியோகம் நடைபெறும் என்று கூறுகிறது. இது வளரும் நாடுகளிடையில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. பணக்கார நாடுகள், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், வளை குடா நாடுகள், சீனா, எமிரேட் போன்ற முன்னே றிவரும் நாடுகள் வழங்கும் நிதி முதலில் ஏழைநாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
இது கடினமான போராட்டத்துக்குப் பிறகு கிடைத்துள்ள வெற்றி. இழப்பு மற்றும் சேதம் எப்போதோ நடைபெறுவதில்லை. நம் வாழ்நாளிலேயே நிகழ்கிறது. உலக மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் காலநிலை சீர்கேடு களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை ஈடு செய்ய இந்த நிதியுதவி அவசியம் என்று பார்படாஸ் பிரதமரின் ஆலோசகர் அவி பெர்சாத் ( Avi Persaud) கூறுகிறார்.
திறந்தவெளி செயல்முறை
இந்த உடன்படிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும் தேவையானவர்களுக்கு நிதி போய்ச்சேரவேண்டியது முக்கியம் என்று கிறிஸ்டியன் எய்டு நிறுவனத்தின் உலகப் பிரிவின் இயக்கங்களுக்கான தலைவர் மரியானா பவுலி (Mariana Paoli) கூறுகிறார். உலக வங்கியின் நிதி விநியோகம் தொடர்பான செயல்முறைகள் திறந்த மனப்பான்மையுடன் அமைய வேண்டும். தொடர்ந்தும் கண்காணி க்கப்படவேண்டும் போன்ற வளரும் நாடுகளின் கோரிக்கைகள் மற்ற உறுப்பினர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டது.
கடலில் கரைக்கப்படும் பெருங்காயம்
இது மகத்தானது. என்றாலும் உடன் படிக்கையின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதி கட லில் கரைக்கப்படும் பெருங்காயம் போல மிகச்சிறிய தொகையே என்று ஆப்பிரிக்க சக்தி மாற்றத்திற்கான (Power shift Africa) அமைப்பின் இயக்குநர் முகம்மது அடோ (Mohamed Adow) கூறுகிறார். உடன்படிக்கை யின் இறுதி அம்சங்களை உள்ளடக்கிய விரி வான அறிவிப்பு டிசம்பர் 12 அன்று நிறைவு பெறும் மாநாட்டின் இறுதியில் வெளியிடப்படும்.
காப்28 -இல் 160க்கும் மேற்பட்ட நாடு களின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டை ஐநா தலைவர் அந்தோனியோ குட்டெரஸ் இங்கிலாந்து (யு.கே) அரசர் சார்ல்ஸ் மற்றும் அரபு எமிரேட் அதிபர் ஆகியோர் உரையாற்றி தொடங்கிவைத்தனர். 2023 வெப்பமான ஆண்டாக மாறியுள்ள நிலையில் மாநாட்டின் வரும் நாட்களில் தலைவர்கள், ஆய்வாளர்கள் புவி வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்துவது பற்றி தீவிரப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவர்.
சூடாகும் பூமி
பூமி தொடர்ந்தும் சூடாகிறது. இது மனித குலத்திற்கு வலியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. அதனால் வெப்ப உயர்வைக் கட்டுப்படுத்தவேண்டும். இது மிக அவ சரம் என்று ஆண்டிகுவா பிரதமர் கேஸ்ட்டன் ப்ரவுன் (Gaston Browne) கூறுகிறார்.
காலநிலை மாற்றத்தின் பாதிப்பினால் அவதிப்படும் ஏழை மற்றும் சிறிய தீவு நாடு களுக்கு இந்த உடன்படிக்கை ஒரு வரப்பிர சாதமாக அமையும் என்று நம்பப்படுகிறது. காப்28 இதுபோல வெப்ப உயர்வைக் குறைப்பதி லும் புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டைக் குறைப்பதிலும் வரலாறு படைக்குமா? பொறுத்திருந்து காண்போம்.