பெர்லின், நவ.21- வரும் குளிர்காலத்தில் கடுமையான மின்சார பற்றாக்குறை இருக்கும் என்றும், அதை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் தன் நாட்டு மக்களுக்கு ஜெர்மனி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேரழிவு மேலாண்மைப் பிரிவின் தலைமை அலுவலரான ரால்ஃப் டீஸ்டர், "குளிர்காலத்தில் பெரும் அளவில் மின்வெட்டு இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டியுள்ளது. மின் விநியோகத்தில் பல இடங்களில் தடைகள் ஏற்படும். ஒட்டுமொத்தத் தேவைகளைக் கணக்கில் கொண்டு அவ்வப்போது மின்தடைகள் நடைமுறைக்கு வரவிருக்கிறது. போதுமான அளவு எரிபொருள் இல்லாததால் இந்த நெருக்கடியை நாம் எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்" என்றார்.
ஆனால், இந்த மின்வெட்டுகள் இப்போதைக்கு குறுகிய நேரத்திற்கே இருக்கும் என்றும், நீண்ட நேரத்திற்கான மின்தடைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம் என்று உறுதி அளித்திருக்கிறார்கள். ஒருவேளை நிலைமை கைமீறிப் போய்விட்டால், அதை எதிர்கொள்வதற்கும் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும், உணவு, தண்ணீர் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைத்துக் கொள்வது அவசியம் என்றும் டீஸ்டர் எச்சரித்துள்ளார்.
புவியரசியலில் ஏற்படும் பதட்டங்கள் வருங்காலத்திலும் பல்வேறு சிக்கல்களை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது என்று சுட்டிக்காட்டும் டீஸ்டர், "இதில் வருத்தத்துக்குரிய அம்சம் என்னவென்றால் இப்படியெல்லாம் சிக்கல்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் வெளிப்படையாக சொல்லாமல் இருப்பதாகும்" என்கிறார். அக்டோபர் மாதத் தொடக்கத்திலேயே மின்சாரப் பற்றாக்குறை பற்றி ஜெர்மனியின் மின்துறை நிறுவனங்கள் எச்சரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.