பெய்ஜிங், மே 2- ஏற்றுமதிக் கட்டுப்பாடு மற்றும் தங்களுக்கு எதிராக நிறுவனங்களை மிரட்டுவது ஆகியவை மூலம் விநியோகச் சங்கிலியை நொறுக்க அமெரிக்கா முயல்வதற்கு சீனா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. கணினிகளுக்குத் தேவையான பாகங்களை வழங்கி வந்த அமெரிக்க நிறுவனத்திற்குத் தடை விதித்ததால், சீனாவில் குறிப்பிட்ட பாகங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன் துணை நிறுவனம் ஒன்று தென் கொரியாவில் ஆலை வைத்திருக்கிறது. அந்த நிறுவனம் மூலமாகப் பாகங்களை வாங்க சீனா திட்டமிட்டது. ஆனால், சீனாவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என்று அந்த நிறுவனத்தையும் அமெரிக்கா மிரட்டியிருக்கிறது. இந்த மிரட்டலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீனாவின் வணிகத்துறை செய்தித்தொடர்பாளர் ஷு ஜுட்டிங், “தொடர்ச்சியான பொருளாதார மற்றும் வர்த்தகப் பரிமாற்றங்களை சேதப்படுத்தும் வகையில் அமெரிக்கா நடந்து கொள்கிறது. உலக அளவிலான தொழில் மற்றும் விநியோகச் சங்கிலியின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை இவர்களின் நடவடிக்கை கேள்விக்குள்ளாக்குகிறது” என்றார். சில நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளின் வருவாய் மற்றும் லாபம் பாதிக்கப்பட்டதற்கு அமெரிக்காவின் இத்தகைய முயற்சிகள்தான் காரணம் என்று ஷு ஜுட்டிங் குற்றம் சாட்டியுள்ளார். சீனாவுக்கு எதிராக சர்வதேச வர்த்தகச் சட்டங்களை மீறி அமெரிக்கா செயல்படுவதால், சந்தையை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்படுகின்றன என்றும், சட்டங்கள் மதிப்பிழந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.