world

img

மீண்டெழுந்தது கியூபச் சுற்றுலாத்துறை

கொரோனா பெருற்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த கியூபாவின் சுற்றுலாத்துறை தற்போது மீண்டெழுந்துள்ளது.

கியூபாவின் பல்வேறு இடங்களுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கமானதாகும். தலைநகர் ஹவானா, வாரடேரோ, குவார்டலாவாகா, மேரோன் மற்றும் டிரினிடாட் ஆகிய நகரங்கள் மற்றும் தீவுகள் மிகவும் புகழ்பெற்றவையாகும். இங்குள்ள கடற்கரைகளில் உலாவ ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

கியூபாவின் சுற்றுலாத்துறை அதிகாரபூர்வமாக வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 13 லட்சத்து 96 ஆயிரத்து 921 சுற்றுலாப் பயணிகள் கியூபாவுக்கு வந்துள்ளார்கள். கடந்த ஆண்டின் 12 மாதங்களில் 5 லட்சத்து 73 ஆயிரத்து 944 பேர்தான் வந்து சென்றனர். 2022ல் எஞ்சிய நான்கு மாதங்களில் மேலும் பல லட்சம் பயணிகளை கியூபா எதிர்பார்க்கிறது. வரும் ஆண்டுகளில் 40 லட்சம் அல்லது 50 லட்சம் பயணிகள் ஈர்ப்பது என்ற இலக்கையும் நிர்ணயித்திருக்கிறார்கள்.

கியூபாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் கனடாவில் இருந்துதான் எப்போதுமே அதிகமான அளவில் வருகிறார்கள். 2022ன் முதல் எட்டு மாதங்களில் 9 லட்சத்து 71 ஆயிரத்து 456 பேர் அங்கிருந்து வந்து சென்றுள்ளனர். அமெரிக்காவில் இருந்து 60 ஆயிரத்து 885 பேரும், ஸ்பெயினில் இருந்து 55 ஆயிரத்து 102 பேரும், ரஷ்யாவில் இருந்து 38 ஆயிரத்து 488 பேரும் வந்திருக்கிறார்கள் என்று அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டில் மட்டும் 115 கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு சுற்றுலாத்துறை மூலம் வருமானம் கிடைக்கும் என்று கணித்திருக்கிறார்கள்.

மருத்துவத்துறைக்கு அடுத்தபடியாக, சுற்றுலா மூலம்தான் அதிகமான அளவுக்கு வெளிநாட்டு நாணயங்களை கியூபா ஈட்டி வருகிறது.